Social Icons

Pages

Tuesday, January 20, 2009

ஏழாம் ஜெயவர்மனின் தந்தைக்கோர் ஆலயம் Preah Khan

"sacred sword" என்று அர்த்தம் கொள்ளப்படும் Preah Khan என்ற ஆலயம் ஏழாம் ஜெயவர்மனால் கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுப்பட்டதாகும். "sacred sword" என்பது Nagara Jayasri (holy city of victory) என்ற மூலத்தில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகின்றது.இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பு Bayon என்ற ஆலயத்தினை ஒத்ததால் Bayon வகைக்குள் அடக்குகின்றார்கள் தொல்பொருள் வல்லுனர்கள். இந்த Bayon ஆலயத்தினை முன்னர் என் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேனே.

முன்னர் நான் கம்போடிய அரசர்கள் பட்டியலில் குறிப்பிட்டது போல இந்த ஏழாம் ஜெயவர்மன் தனது மனைவி ஜெயதேவி இறந்தபின் அவளின் சகோதரி இந்திரதேவியை மணம் முடித்தான். இரண்டாவது மனைவியான இந்திரதேவி பெரும் புத்த பிரச்சாரகி. எனவே ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் முன்பை விட பெளத்த மதத்தின் ஆதிக்கம் பெரும் எழுச்சி கொண்டு விளங்கியது. அதன் தாக்கம் இன்று வரை தொடர்கின்றது. இவன் காலத்தில் மஹாஜன பெளத்தம் என்ற பிரிவே பின்பற்றப்பட்டது. எனவே ஏழாம் ஜெயவர்மன் இப்படியான பெளத்த ஆலயங்களின் திருப்பணிகளில் ஈடுபட்டது வியப்பேதும் இல்லைத்தானே?


Preah Khan ஆலயம் மிகவும் பிரமாண்டமான மடாலய அமைப்பில் நீண்டதொரு கட்டிட அமைப்பைக் கொண்டது. முழுமையான சித்திரச் செதுக்குவேலைகள் நிரம்பிய கட்டிடங்களும், பாதைகளுமாக கொள்ளை அழகினைப் பொத்தி வைத்திருக்கும் ஆலயம் இது. ஆயிரத்துக்கு மேற்பட்ட பெளத்த துறவிகளுக்கான பாடசாலையும், மடாலயத்தையும் ஒருங்கே கொண்டு இது அமைக்கப்பட்டிருக்கின்றது. Angkor Thom பகுதியில் தனது அரண்மனையை அமைக்கும் காட்டத்தில் மன்னன் ஏழாம் ஜெயவர்மனின் வாசஸ்தலமாகவும் சிறிது காலம் இந்த Preah Khan இருந்ததாம்.

முன்னர் நான் சொன்ன Ta Prohm ஆலயத்தினை ஏழாம் ஜெயவர்மன் தன்னுடைய தாய்க்கு அர்ப்பணித்தது போன்று இந்த Preah Khan ஆலயத்தை இவன் தந்தைக்காக அர்ப்பணித்திருக்கின்றான். பின்னாளின் வந்த இந்து மத ஆதிக்கத்தினால் இங்கே இருக்கும் புத்தர் சிலைகள் பதம்பார்க்கப்பட்டிருக்கின்றன. கட்டிடத்தின் மத்திய பகுதியில் அமைத்திருக்கும் புத்தர் சிலைகளும் நாசகார செயல்களால் உருக்குலைந்திருக்கின்றன.

உருளையான தூண்களைக் கொண்ட கட்டிடமொன்று இந்த ஆலயத்தின் மேற்குப் புறத்தில் இருக்கின்றது. இந்தக் கட்டிடம் எதற்காக எழுப்பப்பட்டது என்பது இன்று வரை புரியாத புதிர். இந்தக் கட்டிடம் கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டின் இரண்டாவது காலகட்டத்தில் எழுப்ப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

தூண்களில் காணப்படும் சிங்க உருவங்கள், போதிசத்துவர், பெரிய அளவிலான கருடன், ஆடும் அப்ஸராக்கள், தேவதைகள், விஷ்ணுவின் சாய்ந்த நிலைச் சிற்பம், கட்டிட மேற்புறத்தில் வளைந்திருக்குமாற்போல நிற்கும் கருடன் என்று விதவிதமான சிற்ப வேலைப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு அழிந்தும் அழியாது, ஒரு கிழட்டுச் சிங்கம் போன்று கம்பீரமாக நிற்கின்றது இந்த Preah Khan.


உசாத்துணை:
கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புகள்
Ancient Angkor by Michael Freeman & Claude Jacques

Thursday, January 15, 2009

நீர்த்தேக்கம் நடுவே East Mebon சிவன் கோயில்

Eastern Baray என்னும் பெரும் வாவியின் நடுவே குடி கொண்டிருப்பது East Mebon என்னுமோர் சிவனாலயம். இன்றோ நீர் வற்றிய திடலாகவே இந்த வாவி ஒப்புக்கு மட்டும் இருக்கிறது. யசோதபுர/அங்கோர் (Yashodapura/Angkor) என்ற பிரதேசத்தை ஆட்சி செய்த இரண்டாம் ஜெயவர்மனின் காலத்திலேயே இவ்வாலயம் எழுப்பப்பட்டிருக்கின்றது. அதாவது கி.பி பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி என்று சொல்லப்படுகின்றது. மூன்று அடுக்குகள் கொண்டு ஐந்து கோபுரங்கள் தாங்கிய பிரமிட் வடிவை ஒத்த இவ்வாலயம் சிவனுகே உரித்தான மேரு மலையினைப் பிரதிபலிக்கும் வண்ணம் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

ஒரு காலத்தில் யசோதபுர என்னும் இராசதானிக்கே நீர்வழங்கும் ஆற்றல் கொண்டதாக இருந்த Eastern Baray 7.5 கி.மீ தூரமும் 1830 மீட்டர் அகலமும் கொண்டது. 55 மில்லியன் கியூபிக் மீட்டர் நீர் வழங்கலை கொண்ட ஆற்றல் படைத்திருந்ததாம் இது. அத்தோடு "யசோதரதத்தக" (யசோதர நீர்த்தேக்கம்) என்றும் பெயர் வழங்கப்பட்டதாம். இந்தப் பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும் சமஸ்கிருத எழுத்துக்கள் "புனித கங்கையின் பாதுகாப்பின் பிரகாரம்" என்று சொல்லுகின்றன. எனவே இந்தியாவின் கங்கை நதியை ஒத்த வகையில் இது கருதப்பட்டிருக்கின்றது.

East Mebon ஆலயத்தினை முற்று முழுதான சிவனுக்குரிய ஆலயமாக அர்ப்பணித்து இவ்வாலயத்தின் கட்டிட அமைப்பை Pre Rup என்ற வகைக்குள் அடக்குகின்றார்கள். காரணம் முன்னர் நாம் பார்த்த Pre Rup ஆலயத்தை ஒத்த கட்டிட அமைப்பைக் கொண்டதாகவே இது சொல்லப்படுகின்றது. Pre Rup என்பதற்கு 'turning the body' என்று அர்த்தம் கொள்ளப்பட்டு பாரம்பரிய சடங்குகள் பிரகாரம் Pre Rup ஆலயத்தில் இறந்தவருக்கு ஈமைக்கிரிகைகள் செய்வதாக முன்னர் சொல்லியிருந்தேன். இவ்விரண்டு ஆலயங்களுமே சிவபக்தனான இரண்டாம் இராஜேந்திர வர்மனால் எழுப்பப்பட்டிருப்பது சிறப்பு.


யானைச் சின்னம் கண்டால் அது East Mebon (இரண்டாவது அடுக்கில் இருக்கிறது)

கோயிலின் உட்புறம் நீர்ப்பரப்பில் இருப்பதால் நில மட்டத்துக்கு மேல் நடைபாதையும் நடுவே நீர் தேங்க வசதியும்

ஐந்தாம் ஜெயவர்மன் தன்னுடைய ராஜதானியை அங்கோரில்(Angkor) இருந்து Koh Ker என்ற பகுதிக்கு கி.பி 928 இல் மாற்றிக் கொண்டான். பதினாறு வருஷங்கள் கழித்து ஆட்சிக்கு வந்த இரண்டாம் இராஜேந்திரவர்மன் மீண்டும் அங்கோரினை(Angkor) தனது இராஜதானியக்கி விட்டு Eastern Baray என்ற வாவிக்கு நடுவே எழுப்பினான் இந்த East Mebon ஆலயத்தைக் கட்டியெழுப்பினான். தன்னுடைய பெற்றோர்கள் சிவபெருமானைக் கெளரவிக்கும் முகமாக என்ற அர்த்தத்திலேயே இவ்வாலயத்தைக் கட்டியெழுப்பினான் என்று சொல்லப்படுகின்றது. கம்போடியக் கோயில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில்

அத்தோடு கல்வெட்டுச் சாசனங்களின் பிரகாரம் அங்கோரில் (Angkor) இருந்து Koh Ker இற்கு மாற்றி ஸ்திரமற்ற அரசாட்சி முன்னர் நிலவிய நிலை இன்னும் தொடராது அங்கோரில் (Angkor) மீண்டும் நிலையான ஆட்சி தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டவனின் அருளை வேண்டியும் இது எழுப்பப்பட்டதாகச் சான்று பகிர்கின்றன. மேலும் கல்வெட்டுக் குறிப்புக்களின் அடிப்படையில் இது கி.பி 947 இல் இவ்வாலயத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டாலும் கி.பி 952 இலேயே இது முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

கோயிலின் தரிசனம் முடிந்து வருகின்றேன். வழியில் வாவியினை ஊடறுத்துப் போகும் பயணப்பாதையின் இருமருங்கும் வாசுகி என்னும் மலைப்பாம்பை மத்தாய் உபயோகித்து தேவர்களும் அசுரர்களும் கடையும் பாற்கடல் காட்சியை நினைவாக்கி எழுந்திருக்கின்றன தலை களவு போன சிற்பங்கள் பென்னாம் பெரியதாய் நீண்ட தூரத்துக்கு.

உசாத்துணை:
கம்போடிய சுற்றுலாக் குறிப்புக்கள் கையேடு
Ancient Angkor by Michael Freeman & Claude Jacques

Sunday, December 28, 2008

இரண்டாம் சூர்யவர்மன் எழுப்பிய Banteay Samré ஆலயம்

Banteay Srey ஆலயத்தைத் தரிசித்து விட்டு நாம் காரில் பயணித்துக் கொண்டே அடுத்த ஆலயத்தைப் பார்க்கப் போனோம். வழியில் என் காமிராக் கண்களில் சிறைப்பிடிக்கப்பட்டது கம்போடியக் கல்யாணம் ஒன்று. இன்றும் நம்மூரில் காணும் கல்யாணங்களில் குலை தள்ளிய முழு வாழை மரங்களை முகப்பில் நட்டுப் பந்தர் போட்டு ஊரையே கூட்டி நடத்தும் வழக்கம் இருக்கின்றது. என்னதான் காலம் தன் கோலத்தை மாற்றி இந்து கலாசாரத்தில் இருந்து கம்போடிய மண்ணைப் பிரித்து வைக்க எண்ணினாலும் அங்குள்ள மதச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஏன் பழக்கவழக்கங்களுமே இந்தியப் பண்பாட்டுப் பின்னணியில் இருந்து விலக முடியாமல் இருக்கின்றன என்பதற்கு என் பயண வழியில் தென்ப்பட்ட ஒரு கம்போடியக் கல்யாணமும் உதாரணமாக இருந்தது.

உயிருள்ள வாழையை வெட்டி செயற்கையான தங்கக் குலைகளை அந்த வாழைக் கழுத்தில் செருகி முகப்பில் நிறுத்திப் பந்தல் போட்டு அயலார் புடைசூழக் கம்போடியக் கல்யாணம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. என் சுற்றுலா வழிகாட்டியிடம் நான் பேச்சுக் கொடுக்கவும், வீடு குடிபுகுதல், இறந்தவர்களுக்கான ஈமைச் சடங்குகள், நோய்வாய்ப்பட்டோரைக் குணமாக்கும் நேர்த்திக்கடன், திருமணச் சடங்குகள் எல்லாமே இந்துமதப் பிரகாரம் இன்றும் கைக்கொள்வதாகச் சொன்னார். என்னதான் பெரும்பான்மை சமூகம் பெளத்தமதத்துக்குத் தாவினாலும் இன்றும் இந்த திரிசங்கு நிலை தொடர்வதாகவும், கம்போடிய மக்கள் இப்படிக் கண்மூடித்தனமாக ஆங்கில மருந்துவகைகளில் நம்பிக்கை இன்றி நேர்த்திக்கடன் மூலமே நோய்களுக்கான பரிகாரம் தேடுவதைக் கண்டு கவலை அடைந்த கம்போடிய அரசு கவலை அடைந்து புதுமாதிரியான தொலைக்காட்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாம். அந்தப் பிரச்சாரப் படத்தில் தேவதூதன் மருந்துப்புட்டியுடன் வந்து மக்களைப் பார்த்து "இதுதான் நான் உங்களுக்குப் பரிந்துரை செய்யும் நோய்ப் பரிகாரம்" என்னுமளவுக்கு தீவிர மத நம்பிக்கைகள் இருப்பதாகச் சொல்லிச் சிரித்தார்.


நம் கார் Banteay Samré ஆலயத்தைக் கண்டதும் தன் ஓட்டத்தை நிறுத்தி நின்று நிதானித்தது. Banteay Samré ஆலயம் இரண்டாம் சூர்யவர்மனால் கி.பி 12 ஆம் நூற்றாண்டின் மத்தில் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இரண்டாம் சூர்யவர்மன் கைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான். இவ்வாலயத்தின் கட்டிடப்பணி இரண்டாம் யசோவர்மனாலேயே நிறைவுற்றது. Samré என்பது இந்தோசீனாவின் பூர்வீகக் குடிகளின் பெயராகும். முழுமையாக விஷ்ணு ஆலயமாகவே எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டிடமுறையை Angkor Wat என்னும் வகைக்குள் ஆராய்ச்சியாளர்கள் வகைபடுத்தியிருக்கின்றார்கள். நீண்டதொரு சமநிலைப்படுத்தப்பட்ட கட்டிட அமைப்போடு Angkor Wat ஆலயத்தின் கட்டிடங்களை நினைவுபடுத்தும் கட்டிட அமைப்போடும், கலை அமைப்போடும் உருவாக்கப்பட்டிருப்பதை ஒப்பு நோக்க முடிகின்றது.

Anastylosis ("to erect (a stela or building)") is an archaeological term referring to a reconstruction technique where a ruined monument is restored after careful study and measurements using original architectural elements where possible - wikipedia)என்ற கட்டிடநுட்பத்தின் பிரகாரம் பெரும் சீர்திருத்தங்களுக்கு இவ்வாலயம் உட்பட்டிருக்கின்றது. அங்கோர் வாட் ஆலயம் எழுப்பப்பட்ட அதேகாலகட்டத்திலேயே இவ்வாலயமும் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. கட்டிடத்தின் தூண்கள் மற்றும் balustrades(small posts which support the upper rail of a railing)ஆகியவை அங்கோர்வாட்டின் தூண்களோடு பொருதி நோக்கும் அதேவேளை தாய்லாந்து நாட்டின் Phimai என்ற கைமர் ஆலயத்தோடும் ஒப்பு நோக்கப்படுகின்றது. பெரும்பாலான சித்திரவேலைப்பாடுகள் அதே தரத்தோடு இருக்கின்றன.

உசாத்துணை: கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புக்கள்

Monday, December 15, 2008

Banteay Srei என்னுமோர் அழகிய சிவனாலயம்

கம்போடியா உலாத்தல்களில் எண்ணற்ற அதியசங்களை கண்டு கொண்டே போவது உள்ளுக்குள் உவகையையும் பிரமிப்பையும் உண்டு பண்ணிக் கொண்டே இருந்தது. புத்தகங்களில் வரும் செய்திகளையும் ஒரு சில படங்களையுமே கண்டு வந்த எனக்கு அந்தப் பிரமாண்டங்களைக் கண்ணெதிரே காணும் போது நான் எங்கே கனவுலகிலா நிற்கின்றேன் என்று என்னையே அடிக்கடி உள்ளுரக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படியானதோர் அதிசயம் தான் Banteay Srei என்ற சிவனாலயத்தைக் கண்டபோதும் வந்தது.
முன்னர் நான் கம்போடிய வரலாற்றுப் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ராஜேந்திரவர்மன் என்ற மன்னனால் எழுப்பப்பட்ட சிவாலயமே Banteay Srei ஆகும். யசோதபுர/அங்கோர் (Yashodapura/Angkor) என்ற இடத்தை இந்த மன்னன் தன் ஆட்சியில் தலைநகராக அமைத்து கி.பி 944 - 968 ஆண்டு வரை தன் ஆட்சியை நடாத்தியவன். இந்த ராஜேந்திரவர்மன் என்ற மன்னன் மகேந்திரவர்மன், மகேந்திர தேவியின் மகனாகக் கொள்ளப்படுகின்றான். ராஜேந்திர வர்மனின் தளபதியாக இருந்த கவிந்திரவிமதன (Kavindravimathana) பெளத்த அமைச்சராகவும் கொள்ளப்பட்டிருக்கின்றான். இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

Banteay Srei என்றால் "Citadel of Women" என்று அர்த்தப்படும் இந்த ஆலயம் கி.பி பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. கைமர் பேரரசு எழுச்சியோடும் செழிப்போடும் இருந்த காலப்பகுதியில் எழுப்பப்பட்ட இந்த ஆலயத் திருப்பணி இராஜேந்திரவர்மனின் பிரதம ஆலோசகராக இருந்த வேதியரால் முன்னெடுக்கப்பட்டுப் பின்னர் ஐந்தாம் ஜெயவர்மன் காலத்தில் நிறைவுற்றதாகச் சொல்லப்படுகின்றது. கட்டிட அமைப்பைப் பொறுத்தவரை இந்த ஆலயத்தின் பெயரான Banteay Srei என்ற பெயர் கொண்டே கட்டியவியல் நிபுணர்களால் வகைப்படுத்தப்பட்டிருகின்றது. இந்தக் கோயிலின் ஒவ்வொரு சிற்பவடிவமும், கட்டிட அமைப்பும் முழுமையானதொரு சிவாலயம் இது என்ற தீர்க்கமான முடிவை எடுக்க வழிகோலுகின்றன.

Banteay Srei ஆலயத்தின் சுவர் செதுக்கு வேலைப்பாடுகள் கைமர் பேரரசின் முதல் தர சித்திர வேலைப்பாடுகளைக் காட்டி நிற்கின்றன. நுட்பமான சுவர் செதுக்கு வேலைப்பாடுகள் ஒருபுறம் இருக்க, கட்டிட உபயோகத்துக்கான கற்கள் கூட மற்றைய ஆலயங்களில் இருந்து வேறுபட்டு pink sandstone எனுமோர் வகையான சலவைக்கற்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆலயத்தின் கட்டிட உபயோகத்துக்குப் பயன்பட்ட சலவைக்கல் கொடுக்கும் சிறப்பைக் காண காலை 10.30 மணிக்கு முன்னரோ அல்லது மதியம் 2 மணிக்குப் பின்னரோ செல்வதோ உகந்தது என வழிகாட்டப்படுகின்றன.


வரலாற்றில் தொன்மை மிகு ஆலயமான Banteay Srei எவ்வளவு தான் கலையழகோடும், நேர்த்தியான சிற்பவேலைப்பாடுகளோடும் இருந்தாலும் வரலாற்றின் துயர் தோய்ந்த பக்கங்களில் உருக்குலைந்து, உருத்தெரியாமல் மறைந்திருந்து, இந்த நாட்டினைத் தமது காலணித்துவ நாடாக வைத்திருந்த பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் வல்லுனர்களால் 1914 ஆம் ஆண்டே கண்டு பிடிக்கப்பட்டு உலகுக்கு மீண்டும் தரிசனம் கொடுத்தது. இந்தவேளை இன்னொன்றையும் சொல்லி வைக்க வேண்டும். இங்கே நான் பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் வல்லுனர்கள் தான் இந்த ஆலயத்தைக் கண்டு பிடித்து அளித்த பிதாமகர்கள் என்று ஏகத்துக்கும் புகழ முடியாது. அவர்கள் சும்மா ஒன்றும் செய்துவிடவில்லை. இவ்வாறான பல ஆலயங்களைத் தம் ஆட்சியாளர்களின் கட்டளைப் பிரகாரம் தேடிப்பிடித்து அந்தந்த ஆலயங்களில் இருந்த செல்வங்களையும், தெய்வத் திருவுருவச் சிலைகளையும் களவாடி பிரான்ஸுக்கு கொண்டு போகவே இந்தக் காரியங்களைச் செய்தார்கள். இது போன்ற எத்தனையோ ஆலயங்களில் சிலைகளின் தலை முதலான அங்கங்கள் கொய்யப்பட்டுக் காணாமற் போனதன் சூத்திரதாரிகள் இந்த பிரென்சுக்காரர்கள் தான். இந்து முறைப்படி ஆலயக்கருவறையில் தங்கம் முதலான செல்வங்களைப் புதைத்து அதன் மேல் தெய்வ விக்கிரகங்களை வைத்ததை அறிந்து அவற்றிலும் கன்னம் வைத்து வெறும் குழியாக மட்டும் விட்டுச் சென்றிருக்கின்றார்கள் இந்த மேற்குலகத்தார்.

நரசிம்ம அவதாரம் இரண்யகசிபுவை சங்காரம் செய்யும் காட்சி, அர்ஜினனுக்கும் சிவனுக்குமான போர், சிங்கத்தில் ஏறி நிற்கும் துர்க்கை அம்மனின் எழில் வடிவம், கைலாசமலையை பெயர்த்தெடுக்க முயலும் இராவணன், மன்மதன் சிவன் மேல் ஏவும் காமக் கணைக் காட்சி, தேவதையின் உருவச் சிலை, வாலிக்கும் சுக்ரீவனுக்குமான சண்டை, நாகா இனத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து பின்னர் அர்ஜினனும், வாசுதேவ கிருஷ்ணனும் தீவைக்கும் காந்தார வனம், கம்சனைக் கொல்லும் கிருஷ்ணன், குருசீட மரபைக் காட்டும் முனிவர்களின் கூட்டு என்று இந்த ஆலயத்தின் ஓவ்வொரு சுவர் இடுக்குகளைக் கூட விட்டு வைக்காமல் சிற்பச் செதுக்குவேலைகளில் இதிகாச புராணக் கதைகள் பேசப்படுகின்றன.





சியாம் ரீப் நகரத்தில் இருந்து Banteay Srei 38 கி.மி தொலைவில் இருக்கின்றது. வழமையான சுற்றுலாப் பிராந்தியத்தில் இருந்து சற்றே தள்ளியிருக்கும் இவ்வாலயத்துக்கான போக்குவரத்துக்கும் செலவு மேலதிகமாக இருந்தாலும் எமது இந்து மதத்திற்கு அதுவும் குறிப்பாக சைவசமயத்துக்கு அன்றைய காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட மதிப்பும் மரியாதையும் எவ்வளவுக்கெவ்வளவு உயர்ந்து அது காலத்தைக் கடந்தும் எஞ்சியிருக்கின்றது என்பதைக் கண்ணாரக் கண்டு வர ஓர் அரிய வாய்ப்பாக இருக்கின்றது.

உசாவ உதவியது: கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் கையேடு