
பதிவர்கள் ஒவ்வொருவராக தம் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பித் தம் தனிக்குணங்களைக் காட்டும் வேளை இது.சகோதரி உஷாவின் அழைப்பில் நானும் களமிறங்குகின்றேன். தொட்டிலில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள், என்னைப் பொறுத்தவரை
இங்கே நான் சொல்லப்போகும் என் தனிக்குணங்கள் இனிமேலும் மாறுமா என்பது சந்தேகமே ;-))
இங்கே என் மனச்சாட்சியின் குரலாக என் குணாதிசயங்கள் வெளிவருகின்றன. இவற்றில் பலவற்றை முதன்முதலாக இன்னொருவருடன் நான் பகிரும் என் தனிப்பட்ட விஷயங்களாகவும் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை குழந்தைப் பருவத்திலிருந்து தொடரும் சில பழக்கங்களோடு இடையே புகுந்த சில பழக்கங்களாகவும் இவை இருக்கின்றன.
என்னுடைய அம்மா, கூடவே இரண்டு சகோதரிகள், ஒரு தம்பி (இரண்டு மூன்று வயது இடைவெளியில்) என்று பெத்துப் போட்டுவிட்டு அவர்களின் இளவயதிலேயே தாத்தா (அம்மாவின் அப்பா) இறந்துவிட்டார். எனவே என் அம்மாவைப் பொறுத்தவரை ஒரு பெண்ணின் இளமைக்கால எதிர்பார்ப்புக்கள் ஆசாபாசங்கள் மட்டுப்படுத்தப்பட்ட உண்ண உணவு, உடுக்க உடை, படிப்பு என்ற எல்லையோடு சாதாரண வாழ்க்கையாகவே கழிந்து போனது. அவரின் அடிமனதில் இருந்த சங்கீதம், நடனம் போன்ற நுண்கலைகள் மீதான ஆசை, ஆசை அளவிலேயே நின்று , ஒரு ஆசிரியையாக மட்டும் தன்னை வளர்த்துக்கொண்டார். சரி, என்னுடைய ஆசைகளைப் பெண் குழந்தை பிறந்தால் அவளுக்கு என் விருப்பம் போல வளர்த்துவிடலாம் என்ற என் அம்மாவின் நினைப்பில் விழுந்தது மண். இரண்டு அண்ணன்மாருடன் மூன்றாவதாக நான் பிறந்தேன். அதனாலோ என்னவோ இயன்றவரை என் பிள்ளைப் பிராயத்திலிருந்தே ஒரு பெண்பிள்ளை போல வளர்த்து வந்தார். அதுவே பின்னாளில் என்னுடைய சில குணாதிசயங்களில் பெண்களுக்கே உரிய சில பண்புகளும் வாய்த்துவிட்டன.
1. பயங் கொள்ளல்
ஆயிரம் ஜெனமங்கள் என்றொரு பாழாய்ப்போன படத்தை என் சிறுபிராயத்தில் பார்த்துத் தொலைத்துவிட்டேன். அது முதல் இரவு வேளைகளில் அம்மா காவல் காக்க ஓண்ணுக்குப் போவது, கை கால் மறைத்து தலையின் மூக்கு வாய்ப்பாகம் மட்டும் வெளியே தெரிய
போர்வையால் மூடிக்கொண்டே தூங்குவது, பேய்ப்படங்களின் பாடல்கள் வானொலியில் வந்தால் இருகாதிலும் விரலால் இறுகமூடிக்கொள்வது சில உதாரணங்கள். ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் வரும் வெண்மேகமே பாடலை இன்றும் எனக்குக் கேட்டால் குலை நடுங்கும். ( வெளிநாடு வரும் வரை அம்மா தான் சாப்பாடு ஊட்டிவிட்டார்)
என்னுடைய பதினோராம் ஆண்டில் ( பிளஸ் ஒன்) படிக்கும் போது ஆச்சி (அப்பாவின் அம்மா) இறந்தபோது தான் நான் முதன்முதலில் ஒரு மரணவீட்டுக்கே போனேன். இதுவரை நான் மரணவீடுகளுக்குச் சென்ற எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். புலம்பெயர்ந்து வந்த பின் நான் தவிர்க்கமுடியாது சென்ற மரணச்சாலைகளில் பார்வைக்காக வைக்கப்படும் உடலைப் பார்க்கும் வரிசையில் நின்று உடலைப் பார்க்காமல் அந்தக் கணம் மட்டும் கண்ணை மூடிக்கொள்வேன். விதிவிலக்கு மலரக்காவின் இறுதிச்சடங்கு.
2. பாட்டு கேட்டல்

ஒன்று சொன்னால் சிரிக்காதீர்கள். பாடலில் வரும் ஆண் குரலாக நானும் பெண்குரலாகக் காதலியையும் உருவகப் படுத்தி அப்பாடலை ஒரு படப்பாடல் போலத் தான் பகற்கனவு காண்பேன். என் ஜீவன் பாடுது படத்தில் வரும் எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற இளையராஜாவின் பாடலைத் தலை சாய்த்துக் கேட்கும் நாள் என் காதலியை டியூசனில் நான் காணாத நாள் என்பது என் ரேப் றெக்கோடருக்குத் தெரியும்.
3. படம் பார்த்தல்


அதிகம் சென்ரிமென்ற் கலந்த அன்பே சிவம், பிளாக் போன்ற படங்களைப் பார்த்தால் கண்ணீர் வருவது என்னை மீறிய சக்தி ;-).
4. குழந்தைகள் மீதான நேசிப்பு
Finding Nemo என்ற படத்தை வெள்ளைக் குழந்தைகள் தம் பெற்றோருடன் தியேட்டர் வந்து பார்க்கும் போது தனி ஆளாக அந்தக்கூட்டத்தில் படம் பார்த்த பயல் நானாகத்தான் இருப்பேன். Lion King மூன்று பாகங்களையும் டீவீடியில் வாங்கிப் பொக்கிஷமாக வைத்திருக்கின்றேன். கூடவே Madagascar, டிஸ்னியின் பெரும்பாலான கார்ட்டூன் தொகுப்பு வீடியோக்கள் இன்னும் சில உதாரணங்கள்.

ஊரில் இருக்கும் போது பக்கத்து வீட்டுப் பிள்ளைகளைப் பிராய்க்குக் காட்ட உப்பு மூட்டை, நுள்ளுப்பிறாண்டு கிள்ளுப் பிறாண்டு விளையாட்டுக் காட்டிய பழக்கம் இன்னும் தொடர்கிறது. வார இறுதி நாட்களில் காலை 10 மணிக்கு முன் Mc Donalds சென்று அங்கு காலை உணவு சாப்பிட வரும் குழந்தைகளை வேடிக்கை பார்ப்பது ஒரு சுகம். விருந்து நடக்கும் வீடுகளில் பெரும்பாலும் பெரியோரின் பேச்சுக் கச்சேரியைத் தவிர்த்துக் குழந்தைகளோடு விளையாட்டுக் காட்டி அவர்கள் சிரிப்பதை ஆயுள் முழுவதும் பார்க்கப்பிடிக்கும்.
சமீபத்திய சாதனை: கடந்த இரு வாரம் முன் ஒரு கலியாண இரவு விருந்தில், பிறந்து பத்து மாதமான ஒரு குழந்தையோடு வந்த பெற்றோர் இசைக்கு ஆடத் தொடங்கத் தனியே தன் வண்டியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை வாரியெடுத்து என் தோளில் சாய்த்து தூக்கம் கொள்ளவைத்து விருந்து முடிவிற் தான் அதன் தாயிடம் கொடுத்தேன்.
5. வாசிப்பும் உலாத்தலும்


போதுமா உஷா ;-)))