Ta Keo என்ற சிவனாலயத்தைத் தரிசித்து விட்டு நாம் அடுத்துச் சென்ற இடம் பல வரலாற்று நினைவிடங்களை ஒரே இடத்தில் கொண்டிருந்த தொகுதி. அந்தத் தொகுதியைக் காணப் போகும் போது பெரும் எடுப்பிலான வாயிற்புறத்தை எல்லையாகக் கொண்ட பகுதியைக் கடந்தே செல்லமுடிகின்றது. பல ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து பொட்டுத் திடலாக இருந்த அந்த இடத்தில் ஆங்காங்கே பனைமரங்கள் அங்கொங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்க உடைந்து போன கோயில்கள், அரண்மனை, சிதைந்து போன விளையாட்டுத் திடல் என்று இருக்கின்றது அந்தப் பிரதேசம்.
Preah Palilay ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjki-S4JOpsUKm1Mo_GLRcwPJTQ4WTw8XFPOAlAHXdDuxAaLBGn0sgZRdEffyt6Sj3iBZbT6LW0hhpYibMNU7ZDTnACHtvjbqFCAPyyEYvA3li7Z2lwytvlT4DRBaSzEgA_yRER/s400/6.JPG)
Preah Palilay என்ற கோயிலுக்குள் முதலில் போகின்றேன். இது 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியோ அல்லது அதற்குப் பிற்பட்ட காலப்பகுதியிலோ அமைக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புக்கள் சொல்கின்றன. பெளத்தமதத்துக்கான ஆலயம் இதுவாகும். இந்த ஆலயத்தின் அமைப்பு முறை Post Bayon என்ற வகைக்குள் அடக்கப்படுகின்றது. சலவைக்கல் கொண்டு அமைக்கப்பட்ட இவ்வாலயக் கோபுரம் ஒரு நெட்டையான மரம் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது எப்போது எழுப்பப்பட்டது என்பதற்கு வரலாற்றாசிரியர்களிடம் ஓர் முரண்பாடு உண்டு. இது கி.பி 12 ஆம் நூற்றாண்டுக் கடைசி அல்லது கி.பி 13 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் அமைக்கப்பட்டதாக ஒருசாரார் சொல்லும் வேளை தேரவாத பெளத்தத்தின் அமைப்பாக இவ்வாலயம் திகழ்வதால் கி.பி 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியோ அல்லது கி.பி 14 ஆம் நூற்றாண்டுப் பகுதியாகவோ இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZj4xoNNV4nNOUflx5uG4EFLPN2BojNdE7Oxv2ByvFYI0j1n8dE8-c3-EI4E8qbyRS1rmH4Ao0Artx_U8jV385bmZHGn6crtEYC2YnfodOHLLWZTXlysnPK9dxlpO7dBcQqIqj/s400/3.JPG)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimRxXSwVBMsJj4XGZocsLTU0pk4UQidp69NGCa_RabiXE3rgXtzWfuT7_lqI3ZDLxeCvRrq3TgTHcYyzjqTPEGkfyQPB3PVWFsCOl4rQ5zL0eQIzdMz36tqtiBREogua0RX4a2/s400/4.JPG)
Phimeanakas
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBl-bSAcCB46iOyNAxnbJdtTa7x7CyAgKBWAvBShuQ8OfHoQsy-HJJSb75Bdbd6PUwX90Q6UVJtjUsZronhrmMy0fK6Eqat_P6TGWDKNMiQry2JrYTphB29HzlWDTbacDXN7HZ/s400/9.JPG)
Phimeanakas என்ற ஆலயம் "சொர்க்கத்தின் இடம்" என்று கொள்ளப்பட்டு கி.பி 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் கி.பி 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கும் இடைப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இதுவோர் இது ஆலயமாகும். முன்னர் நாம் பார்த்த Ta Keo என்ற சிவனாலயத்தை அமைத்த ஐந்தாம் ஜெயவர்மனே இந்த ஆலயத்தை அமைத்ததாகச் சொல்லப்படுகின்றது. கட்டிட அமைப்பைப் பொறுத்தவரை Kleang என்ற வகைக்குள் இதனை வரலாற்று ஆசிரியர்கள் வகைப்படுத்துகின்றார்கள். சலவைக்கல்லினால் அமைந்த பிரமிட் வடிவத் தோற்றத்தில், மூன்று அடுக்குகள் அமைந்தும் அதன் மேல் கோபுரம் தாங்கிய கட்டிடக் கலை அமைப்பைக் கொண்டிருக்கின்றது இவ்வாலயம்.
பழைய செவி வழிக்கதைகளின் படி ஒவ்வொரு நாள் இரவும் மன்னன் தங்கத்தில் அமைந்த மேற்கூரையில் ஏறி நின்று பார்க்கும் போது இந்த நாட்டின் தெய்வமான ஒன்பது தலை தாங்கிய நாக வடிவம் பெண் போன்ற தோற்றத்தில் தெரியும் என்றும் அது வராதவிடத்து இந்த மன்னனுக்கும், நாட்டுக்கும் கேடு விளையும் என்றும் சொல்லப்பட்டது. இப்படியான முதல் சுற்றில் மகாராணியைக் கூட அழைத்துச் செல்லாது இரண்டாவது சுற்றின் போதே மகாராணியை தன்னோடு கோபுரத்தின் மேலேற அனுமதித்ததாகவும் ஒரு விந்தையான கதை சொல்லப்படுவதுண்டு.
அதிக சிற்பவேலைப்பாடுகளைக் கொண்டிராத அமைப்பில் இருந்தாலும், அருகே இருக்கும் Angkor Thom இனை ரசிக்க ஏற்றதான உயரத்தில் இருப்பது இதன் சிறப்பு. Royal Palace என்னும் அரண்மனைக்குட்பட்ட பகுதியில் இவ்வாலயம் இருப்பது, மன்னர் குடும்பத்திற்கான பிரத்தியோகமான கோயில் என்பதைக் காட்டி நிற்கின்றது. இவ்வாலயத்தை எழுப்பியவன் ராஜேந்திரவர்மன் (கி.பி 941 - கி.பி 968) என்றும், மீளப் புனருத்தானம் செய்தவன் இரண்டாம் சூர்யவர்மன் (கி.பி 1113 - கி.பி 1150)என்றும் சொல்லப்படுகின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNoNh9vzB9R_d3FVXhBjZZHTus2eEiexs2UeN-5xCoCq0bMJCoW6HD8k2q8VOap7qGb-HFnh-er43worKJfRKbocIz5w28c-4FOhquJ0o11SxZgzdLdcpQF9I69eGdQX_Qcwey/s400/10.JPG)
Terrace of the Elephants![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQqK2U1LdoN3aIYi2jEMHBHCTTlSfc7SVaCS57oR4SLCMFfHhF-1A85qN5USL8Dw7KCG1WM4JdftyYbPQxd_IyWXMGN66v7I2seYmUgdsdL9tOv-96n43BUHyPMDgotdu6dVXk/s400/18.JPG)
யானைகளின் வடிவங்களைச் சிற்பவேலைப்பாடாகக் கொண்ட மதில் எழுப்பய பெரும் உப்பாரிகை ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இது இரண்டரை அடி மீட்டர் உயரமும், 300 மீட்டர் நீளமும் கொண்டு அமைந்திருக்கின்றது. இந்த உப்பாரிகையை அமைத்த நோக்கம் இதன் அமைவிடத்தைப் பார்த்தே ஊகிக்கமுடிகின்றது. அதாவது இந்தத் தளத்துக்கு முன்புறமாக பெரும் சதுக்கம் ஒன்று இருக்கின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSadupYeWrP-cCOaqDaSZ3wWH9_ORDrKMwLeRmwHjF5IvFKGu-jXC65hjgR4edFyDe1BbzhpkbT3WERL-qMjaX1v5imkjotqS5fEGR0526yrgHjxVnFCF5_87Bi-NcLWU8Jrjr/s400/15.JPG)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnm_-I6WDyeekcTTGK4xCLpDonwyvoArUBiE4YaB5gRcn48PILLG2czkr5b2A4DPQSa2xUZgnQe2kBxPNlrzUhG8KWCF12tJoGe4bsOFCRqOYZgnwWv_e045L-7hyB8wR_wezQ/s400/16.JPG)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjb0bhKb08DFw8ogU7OeBFKIy8dkk8cT39TxAjHmLkUoNWuBqgLfUPUYGZ2asKFhBgUJCtVn5GH-j0u9OyxtBMielKr3icBA9_X6uR7Xhy3AYvjBwC4nm12ysndmwzyhg2gKrE_/s400/17.JPG)
இந்த தளத்தின் மேற்பகுதி உப்பாரிகையில் இருந்தவாறே அரச குடும்பத்தவர்கள், களியாட்டங்களையும், வீரதீர விளையாட்டுக்களையும் பார்த்து ரசிப்பதற்கான அமைப்பாகவே இது எழுப்பப்பட்டிருக்கின்றது. ஏழாம் ஜெயவர்மனால் நிர்மாணிக்கப்பட்ட இந்த அமைவிடம் போரில் வெற்றி பெற்றுத் திரும்பிய வீரர்களை மன்னர் சந்திப்பதற்கான நிலையமாகவும் கொள்ளப்பட்டிருக்கின்றதாம்.
மேலே அரண்மனை வளாகத்தில் இருக்கும் நீர்த்தடாகம்
எட்டாம் ஜெயவர்மனால் அமைக்கப்பட்ட நீர்த்தடாகத்தின் கரையோரம் அமைக்கப்பட்ட சிற்பவேலைப்பாடுகள்
அரண்மனை வளாகத்தைச் சூழவுள்ள பரிவார மூர்த்திகளின் ஆலயங்கள் ஒட்டுமொத்தமான இந்த பிரதேசத்தைப் பார்க்கும் போது ஒரு பெரும் அரண்மனை வளாகத்தினைக் கொண்டு, கூடவே மன்னர் குடும்பத்தின் வழிபாட்டிடம், போர் வீரர்களைச் சந்திக்கும், களியாட்டங்கள் வீர தீர விளையாட்டுக்களைக் கண்டு கழிக்கும் நிலையம், வாவி என்று முழுமையான அரச வாசஸ்தலத்தை இப்பிரதேசம் கொண்டு, இப்பிரதேசத்தைச் சூழ பரிவார மூர்த்திகளாக சின்னச் சின்ன ஆலயங்களையும் அமைத்துக் கொண்ட பெரும் நிர்வாக அலகைக் காட்டி நிற்கின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9plLwLYwz-CkB_EMlzQ3mGkl12UG5a1x-y7QhzXbrriPxLU8gDsK1CtFVbAW7ZiuFDFu1dtPdGDb7Djs5cshkd9X3JriGLvgHT9osj6NoV4Bdtef-qkgACA215QRa7PoywGnT/s400/13.JPG)
பதிவின் உசாத்துணை:
* கம்போடிய சுற்றுலாக் கையேடு
* விக்கிபீடியா
* Ancient Angkor By Michael Freeman & Claude Jacques
* CambodianOnline.net