Social Icons

Pages

Friday, September 15, 2006

சாயங்காலச் சவாரி

மே 28, மதியம் 2.00 மணி (இந்திய நேரம்)
இந்தியாவிற்கு ஒவ்வொரு தடவை நான் பயணிக்கும் போதும் என் பெரும்பாலான நாட்கள் பெங்களூரில் தான் கழிந்திருக்கின்றது. Garden City என்ற நிலை மாறி Concrete Ciyஆக மாறிவிட்ட பெங்களூரின் நிலை கேரளாவிற்கும் ஏற்படாதிருக்கக் கடவது, வெளிநாட்டுக்கம்பனிகளையும் கேரளாவைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள் வெள்ளைக்காரன்களை விடமாட்டார்கள் என்று மனதார நினைத்துக்கொண்டேன். இருக்காதா பின்னே, இவ்வளவு அழகான பசுமைப்புரட்சி பூமி யூ எஸ் கரன்சி பட்டு நாசமாகப் போகவேண்டுமா? என் படகுப்பயண உலாத்தலில் கடந்துபோகும் நாளாந்தப் பயணிகள் போக்குவரத்துப் படகுகளில் இருக்கும் பயணிகள் வயது வேறுபாடின்றிக் கையெத்தி ஆரவாரிக்கின்றார்கள். ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கும், ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குமாக பயணிகளை உப்புமூட்டை காவிக்கொண்டு போகின்றன படகுகள். நன்றாக வயிறுமுட்டச் சாப்பிட்டு நடக்கமுடியாமல் நடப்பவன் போல மெல்ல மெல்ல ஊர்ந்தே போகின்றது என் படகு.

ஒரு கிறீஸ்தவத்தேவாலயம் கண்ணிற்படுகின்றது, நீர் முற்றம் கம்பளம் விரிக்க தேவாலயத்தின் அழகை நீங்களே படத்தில் பார்த்து இரசியுங்கள்.
எங்கள் படகுவீட்டு கரையை ஒட்டியதாகப் பயணப்படும்போது எட்டிப் பார்க்கின்றேன். கரைவழியில் நின்ற ஒரு சிறுவனும் சில சிறுமிகளும் எதையோ சொல்லிக்கொண்டு சமதூரத்தில் அக்கரையில் ஓடிவந்தார்கள். எனக்குப் புரியவில்லை, சிஜியைப் பார்த்தேன். பயணிகளைக் கண்டால் புதுப்பேனா கொடுக்கும் படி இப்படிக் கேட்பார்களாம் அந்தச் சிறுவர்கள். அவர்களைப் பொறுத்தவரை வெளிநாட்டவர்களிடம் பேனா கேட்டுப் பெறுவது புதையல் கிடைத்தமாதிரிப் போலும். என் கையில் இந்திய ரெனோல்ட் பேனாதான் இருந்தது.

எனது படகுவீட்டுப் படுக்கை அறை
நான் போன இந்தக் கடற்கழியெங்கும் நிறையமீன்கள் கிடைப்பதாகச் சிஜி சொன்னார். விஷப் பாம்பு, முதலை போன்ற வில்லன்களும் இல்லையாம். பயணப்பாதையில் எதிர்ப்படும் திருப்பங்களிலெ தன் மூங்கிற்கழியை இலாவகமாகச் சுழற்றி வலித்துப் படகைத் திசைதிருப்பினார் ஓட்டி. எதிர்ப்படும் நீர்வழிபாதைகளில் கரையோரமாய் வளர்ந்து தன் தலை (கிளை)பரப்பிப் படகின் மேலாகத் தொடுகின்றன மாமரங்களின் கிளைகள். மாம்பழ சீசனில் ஓசி மாம்பழம் கிடைக்க ஒரே வழி இந்த வழி தான் என்றார் சிஜி. அக்கரையில் தென்படும் வீடுகளில் ஆட்டுக்குட்டிகள் தென்பட்டன. எங்கே சிஜியைக் காணவில்லை என்று பார்த்தால் சாயங்காலப் பரிமாறல் செய்ய அடுக்களை போய்விட்டார். சில மணித்துளிகளில் வந்த சிஜி மேஜையில் ஏற்கனவே கொசுக்கள் சல்லாபித்துக் க கூடைக்குள் இருந்த கதலிப்பழங்களை ஒருபுறம் வைத்துவிட்டு சாப்பாட்டு மேஜையில் விரிப்பை அகற்றிப் புதிய விரிப்பைப் போட்டு அழகுபடுத்தினார்.

மழையில் தேங்கிய வெள்ள நீர் நிறத்தில் கடும் மசாலா சாயாப் பானமும், பயம்பிலி என்ற பண்டமும் சாயங்காலச் சிற்றுண்டியாகச் சிபியின் கைவண்ணத்தில் கிடைத்தது. பயம்பிலி என்றால் என்ன என்று முடியைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். வேறொன்றுமில்லை, நம்மூர் வாய்ப்பனின் மலையாளப் பதிப்புத்தான் அது. வாழைப்பழம் கலந்த அந்தப்பண்டம் நீட்டமான துண்டுகளாகசெய்யப்பட்டு மஞசள் வடிவில் பொரிக்கப்பட்டு இருந்தது,அவற்றை அழகான பரிமாறல் ஒழுங்கில் சாப்பாட்டுத் தட்டிலே வடிவமைத்திருந்தார். சுவையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.

வாய்ப்பனின் நினைப்பு வந்து தொடர்ந்து எழுதமுடியாமல் தொந்தரவு பண்ணுகின்றது, பொறுங்கள் பக்கத்தில் இருக்கும் இந்திய உணவகம் சென்று வாய்ப்பனைத் தேடிப் பார்த்துவிட்டுத் தொடருகின்றேன்.
நிங்கள் ஆகாரம் கழிச்சோ?