எனது முதல் நாள் பயண அனுபவங்களை இது நாள் வரை தந்திருந்தேன். அடுத்த நாளின் நான் பயணப்பட்டவை தொடர்கின்றன.
மார்ச் 16 ஆம் திகதி கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து என் வழிகாட்டிக்காகவும், வாடகைக்காருக்காகவும் காத்திருந்தேன். இன்று அங்கோர் நகரப்பகுதியைத் தவிர்த்த நீண்ட தூரப் பயணம் செல்ல வேண்டும் என்பதால் சூரியன் முழுமையான தன் பணியை ஆரம்பிக்கும் முன்னரேயே நாம் கிளம்பவேண்டும் என்று முதல் நாள் வழிகாட்டி சொல்லியிருந்தார். அத்தோடு தூரப் பயணத்துக்கும், கொழுத்தும் வெய்யிலைத் தாக்குப் பிடிக்கவும் ருக் ருக்கின் மெதுவான ஓட்டம் சரிவராது. வாடகைக் காரிலேயே பயணப்பது உகந்தது. ஆனாலும் ருக் ருக்கிலேயே சியாம் ரீப் நகரமெல்லாம் சுற்றி வரும் வெள்ளையரும் உண்டு.
வழிகாட்டியும், காரும் சரியான நேரத்துக்கு வரவும் தொடர்ந்தோம் எம் அடுத்த உலாத்தலுக்கு.
சியாம் ரீப் நகரின் மிகப் பெரும் வைத்தியசாலையான ஏழாம் ஜெயவர்மனின் ஆஸ்பத்திரியைக் கடந்து போகிறோம். நகரினைக் கடந்த புற நகர்ப்பகுதிக்குச் செல்லும் பயணம், பாதையின் இருமருங்கிலும் மாமரங்களின் தோட்டங்கள் வியாபித்திருக்கின்றன. மட்பாண்ட, பனையோலை, தென்னையோலை மூலம் கைவினைப் பொருட்களைச் செய்து பாதையின் இருமருங்கும் தம் வாழ்வாதாரத்தைத் தேடும் கடைகள் இருக்கின்றன.
இவையெல்லாம் கடந்து ஒரு குறுக்குச் சந்தால் தார் போட்டும் போடாது காயங்கள் உள்ள ரோட்டால் கார் பயணித்து புழுதியைக் கிளப்பியது. கொஞ்சம் மெதுவாகத் தன் ஓட்டத்தை நிறுத்திய போது எட்டிப் பார்த்தேன். வியப்பில் கண்கள் அகன்றன. காரணம் இதுவரை நமது பாரம்பரிய அமைப்பில் இல்லாத இந்து ஆலயங்களைப் பார்த்த எனக்கு முதன் முதலில் நம்மூர் கோபுரங்கள் கண்ணுக்கு முன்னால் நிற்க எழுந்தருளியிருக்கும் சிவாலயமான Pre Rup ஆலயம் முன்னே கம்பீரமாக எழுந்து நிற்கின்றது.
இந்த ராஜேந்திரவர்மன் என்ற மன்னன் மகேந்திரவர்மன், மகேந்திர தேவியின் மகனாகக் கொள்ளப்படுகின்றான். ராஜேந்திர வர்மனின் தளபதியாக இருந்த கவிந்திரவிமதன (Kavindravimathana) பெளத்த அமைச்சராகவும் கொள்ளப்பட்டிருக்கின்றான்.
இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.
இந்த ஆலயத்தினை இறந்தவர்களுக்கான ஈமைக் கிரிகைகளைச் செய்யும் ஒரு இடமாகவே ஆதி தொட்டு மக்கள் கருதி வருகின்றார்கள். அதற்குச் சான்றாக ஆலயத்தின் முகப்பில் நீண்டதொரு சதுர வடிவக் குழி அமைத்து இருக்கின்றார்கள். என்னுடைய சுற்றுலா வழிகாட்டி சொன்னார் இந்தக் குழியில் வைத்தே சடலங்களுக்கான ஈமைக் கிரிகைகள் செய்து பின்னர் அவற்றை எரிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது என்று. இருப்பினும் இந்தக் கோயில் இரண்டாம் இராஜேந்திர வர்மனின் சிறப்பு வழிபாட்டுக்குரிய நகரக் கோயிலாகவே இருந்திருக்கின்றது. ஆலயத்தின் மேல் உச்சியினை நோக்கிப் போகும் செங்குத்தான படிக்கட்டுக்களை நோக்கும் போது, இந்த அரசனைப் பல்லக்கில் தூக்கி எவ்வளவு கஷ்டப்பட்டு மேலே கொண்டு போயிருப்பார்களோ என்று என்று எண்ணத் தோன்றுகின்றது.
வரலாற்று ரீதியாக இவ்வாலயம் முக்கியம் பெறக் காரணம் இது அரசியல் ரீதியான கொந்தளிப்புக்கள் அடங்கி அங்கோரின் ராட்சியம் மீளவும் வந்தபோது எழுப்பப்பட்ட இரண்டாவது ஆலயம் இதுவாகும். இந்த ஆலயத்தின் உருவ அமைப்பு இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட East Mebon ஆலயத்தினை ஒத்திருக்கின்றது.
உசாத்துணை: கம்போடிய சுற்றுலாக் குறிப்புக்கள் மற்றும் தகவல்களை உறுதிப்படுத்த விக்கி பீடியா