Social Icons

Pages

Saturday, October 25, 2008

இரண்டாம் ராஜேந்திர வர்மன் எழுப்பிய Pre Rup சிவனாலயம்


எனது முதல் நாள் பயண அனுபவங்களை இது நாள் வரை தந்திருந்தேன். அடுத்த நாளின் நான் பயணப்பட்டவை தொடர்கின்றன.

மார்ச் 16 ஆம் திகதி கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து என் வழிகாட்டிக்காகவும், வாடகைக்காருக்காகவும் காத்திருந்தேன். இன்று அங்கோர் நகரப்பகுதியைத் தவிர்த்த நீண்ட தூரப் பயணம் செல்ல வேண்டும் என்பதால் சூரியன் முழுமையான தன் பணியை ஆரம்பிக்கும் முன்னரேயே நாம் கிளம்பவேண்டும் என்று முதல் நாள் வழிகாட்டி சொல்லியிருந்தார். அத்தோடு தூரப் பயணத்துக்கும், கொழுத்தும் வெய்யிலைத் தாக்குப் பிடிக்கவும் ருக் ருக்கின் மெதுவான ஓட்டம் சரிவராது. வாடகைக் காரிலேயே பயணப்பது உகந்தது. ஆனாலும் ருக் ருக்கிலேயே சியாம் ரீப் நகரமெல்லாம் சுற்றி வரும் வெள்ளையரும் உண்டு.

வழிகாட்டியும், காரும் சரியான நேரத்துக்கு வரவும் தொடர்ந்தோம் எம் அடுத்த உலாத்தலுக்கு.
சியாம் ரீப் நகரின் மிகப் பெரும் வைத்தியசாலையான ஏழாம் ஜெயவர்மனின் ஆஸ்பத்திரியைக் கடந்து போகிறோம். நகரினைக் கடந்த புற நகர்ப்பகுதிக்குச் செல்லும் பயணம், பாதையின் இருமருங்கிலும் மாமரங்களின் தோட்டங்கள் வியாபித்திருக்கின்றன. மட்பாண்ட, பனையோலை, தென்னையோலை மூலம் கைவினைப் பொருட்களைச் செய்து பாதையின் இருமருங்கும் தம் வாழ்வாதாரத்தைத் தேடும் கடைகள் இருக்கின்றன.

இவையெல்லாம் கடந்து ஒரு குறுக்குச் சந்தால் தார் போட்டும் போடாது காயங்கள் உள்ள ரோட்டால் கார் பயணித்து புழுதியைக் கிளப்பியது. கொஞ்சம் மெதுவாகத் தன் ஓட்டத்தை நிறுத்திய போது எட்டிப் பார்த்தேன். வியப்பில் கண்கள் அகன்றன. காரணம் இதுவரை நமது பாரம்பரிய அமைப்பில் இல்லாத இந்து ஆலயங்களைப் பார்த்த எனக்கு முதன் முதலில் நம்மூர் கோபுரங்கள் கண்ணுக்கு முன்னால் நிற்க எழுந்தருளியிருக்கும் சிவாலயமான Pre Rup ஆலயம் முன்னே கம்பீரமாக எழுந்து நிற்கின்றது.

இந்த Pre Rup சிவனாலயம் இரண்டாம் இராஜேந்திர வர்மனால் கி.பி 10 ஆம் நூற்றாண்டின் பிற்பட்ட காலப்பகுதியில் அதாவது 961 or 962 ஆண்டில் எழுப்பப்பட்டது. முழுமையானதொரு சிவனாலயமாக விளங்கும் இவ்வாலத்தின் கட்டிடப் பாணியும் Pre Rup என்றே தொல்லியல் வல்லுனர்களால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. செங்கல், சலவைக் கல் போன்றவை கட்டிட அமைப்புக்குப் பயன்பட்டிருக்கின்றன. சிறந்ததொரு கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டுக்களில் இதுவும் ஒன்று என்பதை அழிந்தும் அழியாத கோபுரமும், ஆலய அமைப்பும் காட்டுகின்றன. அத்துடன் ஆலய நுளைவு வாயிலும், சூழவுள்ள நகரத்தைப் பார்க்கும் வகையில் உயர்ந்து எழும்பியிருக்கும் மேற்பீடமும் சிறப்பானதொரு அமைப்பாக இருக்கின்றது. கோயில் முழுதுமே சித்திர வேலைப்பாடுகள் நிரம்பி வழிகின்றன. சிறப்பாக, சன்னல் தொகுதிகளின் சித்திர வடிவமைப்புக்கள் போற்றத்தக்கவை. முன்னர் நான் பார்த்திருந்த ஆலயங்களில் இருந்து வேறுபட்டு முழுமையானதொரு இந்திய ஆலயக் கட்டிடப் பாணியில் இது அமைந்திருப்பது வெகு சிறப்பு.

இந்த ராஜேந்திரவர்மன் என்ற மன்னன் மகேந்திரவர்மன், மகேந்திர தேவியின் மகனாகக் கொள்ளப்படுகின்றான். ராஜேந்திர வர்மனின் தளபதியாக இருந்த கவிந்திரவிமதன (Kavindravimathana) பெளத்த அமைச்சராகவும் கொள்ளப்பட்டிருக்கின்றான்.

இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

மேலே படத்தில், ஈமைக்கிரிகைகள் செய்யும் சதுரக் கேணி

இந்த ஆலயத்தினை இறந்தவர்களுக்கான ஈமைக் கிரிகைகளைச் செய்யும் ஒரு இடமாகவே ஆதி தொட்டு மக்கள் கருதி வருகின்றார்கள். அதற்குச் சான்றாக ஆலயத்தின் முகப்பில் நீண்டதொரு சதுர வடிவக் குழி அமைத்து இருக்கின்றார்கள். என்னுடைய சுற்றுலா வழிகாட்டி சொன்னார் இந்தக் குழியில் வைத்தே சடலங்களுக்கான ஈமைக் கிரிகைகள் செய்து பின்னர் அவற்றை எரிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது என்று. இருப்பினும் இந்தக் கோயில் இரண்டாம் இராஜேந்திர வர்மனின் சிறப்பு வழிபாட்டுக்குரிய நகரக் கோயிலாகவே இருந்திருக்கின்றது. ஆலயத்தின் மேல் உச்சியினை நோக்கிப் போகும் செங்குத்தான படிக்கட்டுக்களை நோக்கும் போது, இந்த அரசனைப் பல்லக்கில் தூக்கி எவ்வளவு கஷ்டப்பட்டு மேலே கொண்டு போயிருப்பார்களோ என்று என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஆலயத்தின் உச்சியை அடைந்ததும் உள்ளே எட்டிப் பார்த்தபோது மேலே படத்தில் இருக்கும் பூசைத் திரவியங்களை உட்புறத்தில் வைத்து வழிபடுகின்றார்கள் தற்போதய கம்போடியர்கள், இங்கேயும் புத்தர் வந்து சிவன் போய் விட்டார்.

ஆலயத்தின் மேல் உச்சியில் இருந்து எடுத்த முழு ஆலயத்தின் தோற்றம்

ஆலயத்தின் உள்ளே இருக்கும் சிற்ப மகளிர்


வரலாற்று ரீதியாக இவ்வாலயம் முக்கியம் பெறக் காரணம் இது அரசியல் ரீதியான கொந்தளிப்புக்கள் அடங்கி அங்கோரின் ராட்சியம் மீளவும் வந்தபோது எழுப்பப்பட்ட இரண்டாவது ஆலயம் இதுவாகும். இந்த ஆலயத்தின் உருவ அமைப்பு இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட East Mebon ஆலயத்தினை ஒத்திருக்கின்றது.

உசாத்துணை: கம்போடிய சுற்றுலாக் குறிப்புக்கள் மற்றும் தகவல்களை உறுதிப்படுத்த விக்கி பீடியா

20 comments:

ஆயில்யன் said...

ஒவ்வொரு படங்களிலினையும் பார்க்கும்போது ஒரு விதமான ஆச்சர்யத்தையினையே ஏற்படுத்துக்கின்றது,கட்டிட வேலைப்பாடுகள் நம்மூர் கோவில்களினை போன்றே அமைந்திருந்தல் காரணமோ? (ஒரு வேளை கோயில் வேலைப்பாடுகளில் இங்கிருந்தே ஆட்களினை கொண்டு சென்று ஈடுப்படுத்தியிருப்பார்களோ?)

ஆயில்யன் said...

//இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.//

சிவலோக பிராப்தி அப்படின்னு சொல்லுவாங்களே அது மாதிரியாக இருக்குமோ ?

அழகாய் இருக்கிறது அந்த கேணி

G.Ragavan said...

அடா அடா அடா... படத்துல பாக்குறப்பவே பிரம்மாண்டமா இருக்கே... நேர்ல எப்படியிருந்திருக்கும்!

பல்லக்குல மன்னனைத் தூக்கீட்டுப் போயிருக்க மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். நடந்துதான் மன்னர் ஏறியிருக்கனும். பல்லக்கு பொதுவாகவே பெண்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்துல கோயிலுக்குள்ள பல்லக்குல போகக் கூடாதுன்னு இவ்ளோ பெரிய கோயிலைக் கட்டிய மன்னனுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு.

ஆயில்யன் said...

நல்லா இருக்கு தல!

even உஙக போஸும் கூட! -(அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது - இப்படி யாராச்சும் சொல்லப்போறாங்க பாருங்களேன்!)


கிகிகி!:))))

குசும்பன் said...

அருமையாக இருக்கிறது பயன கட்டுரை!

கானா பிரபா said...

ஆயில்யன்

நிச்சயமாக இது இந்திய சிற்பக் கலைஞர்களின் கைவண்ணமே தான். முன்னர் பார்த்த ஆலயங்களில் கைமர் நாட்டின் கட்டிடக் கலை ஆதிக்கம் சரி பாதிக்கு மேல் இருந்தது. இந்த ஆலயம் முழுமையானதொரு இந்திய ஆலயமாகவே இருக்கிறது.

போஸை போட்டு பீதியை கிளப்பிட்டோம்ல ;)

Anonymous said...

//ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்//

ஈழம் ஒருநாள் மலரும், உங்களுக்கு முகவரி கிட்டும், கவலை வேண்டாம் அன்பரே.

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்கு தல.....நீங்களும் சூப்பர்!

கானா பிரபா said...

// G.Ragavan said...
அடா அடா அடா... படத்துல பாக்குறப்பவே பிரம்மாண்டமா இருக்கே... நேர்ல எப்படியிருந்திருக்கும்!//

வாங்க ராகவன்

உண்மையிலேயே பிரமாண்டம் தான், இப்படியான இடங்களைப் பார்க்கும் போது ஏதோ கனவுலகில் இருப்பது போல் இருந்தது.

நீங்க சொன்னது சரி, கால் வலிக்க வலிக்க மன்னர்களும் நடை பயின்றிருப்பார்கள் போல.

வினையூக்கி said...

Thanks for sharing the info and photos

கானா பிரபா said...

//குசும்பன் said...
அருமையாக இருக்கிறது பயன கட்டுரை!//

வருகைக்கு நன்றி குசும்பன்


//வலைப்பூங்கா said...

ஈழம் ஒருநாள் மலரும், உங்களுக்கு முகவரி கிட்டும், கவலை வேண்டாம் அன்பரே.//

மிக்க நன்றி சகோதரரே

சதங்கா (Sathanga) said...

ப்ரமாண்டம் ! அற்புதம் !! கடல் கடந்தும் இந்தியக் கட்டிடக் கலையின் மகத்துவத்தை இன்றும் உணரவைக்கின்னர் அக்கால மன்னர்கள்.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி நிஜமா நல்லவரே

Anonymous said...

ருக்ருக்-ல பயணப்படணும் ஆசையாத்தான் இருக்கு. சிலைகள் எல்லாம் நம் கோயில்கள்ல இருக்க மாதிரியே இருக்கு.

குடுகுடுப்பை said...

அருமை நண்பரே.

கானா பிரபா said...

//வினையூக்கி said...
Thanks for sharing the info and photos//

வருகைக்கு நன்றி நண்பா


//சதங்கா (Sathanga) said...
ப்ரமாண்டம் ! அற்புதம் !! கடல் கடந்தும் இந்தியக் கட்டிடக் கலையின் மகத்துவத்தை இன்றும் உணரவைக்கின்னர் அக்கால மன்னர்கள்.//

உண்மைதான் சதங்கா, இதை நீங்க நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தணும்.

கானா பிரபா said...

//சின்ன அம்மிணி said...
ருக்ருக்-ல பயணப்படணும் ஆசையாத்தான் இருக்கு.//

சின்ன அம்மணி

மெல்பனில் இருந்து கம்போடியா பக்கம் தான், போய்ட்டு வரவேண்டியது தானே ;)

//குடுகுடுப்பை said...
அருமை நண்பரே.//

மிக்க நன்றி நண்பா

கோபிநாத் said...

அருமை தல ;)

சுபானு said...

//
இங்கேயும் புத்தர் வந்து சிவன் போய் விட்டார்.
//
அங்கேயும் அதே நிலைதான..?

நன்றாக இருக்கின்றது உங்கள் பயணக் கட்டுரை.

அதுசரி இக்கட்டடக்கலைக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்களா அல்லது கம்போடியர்களா அண்ணா?

கானா பிரபா said...

வணக்கம் சுபானு

இந்தக் கட்டிடக்கலைக்குச் சொந்தக்காரர்கள் கம்போடியாவை ஆண்ட இந்திய வம்சாவளி அரசர்கள்.