Social Icons

Pages

Wednesday, August 27, 2008

ஏழாம் ஜெயவர்மனின் Ta Prohm ஆலயம்

Banteay Kdei ஆலயத்தைப் பார்த்து முடித்து நாங்கள் அடுத்துப் பயணப்பட்டது Ta Prohm என்ற ஆலயத்தைப் பார்க்க. இதுவும் கூட ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது. இவ்வாலயம் போன்று கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கும் கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வாலயமும் பெளத்தமதத்துக்காக தனித்துவமாக அமைக்கப்பட்டதாகும். ஏழாம் ஜெயவர்மனின் Preah Khan மற்றும் Ta Prohm ஆலயங்களின் பாணியிலேயே இதுவும் அமைக்கப்பட்டதாகும். கம்போடிய நாட்டில் மண் மேட்டிலும், அடர்காடுகளிலும் புதைந்து போன ஆலயங்களில் இவ்வாலயம் மோசமான பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றது என்பதை இப்போது எஞ்சியிருக்கும் கட்டிடச் சிதைவுகள் சாட்சியங்களாக கண்முன் காட்டி நிற்கின்றன.

இதுவும் கூட பெளத்த சன்னியாசிகளின் துறவு நிலை வாழ்வுக்கான கட்டிடமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த Ta Prohm ஆலயத்தின் கட்டிட அமைப்பைப் பொறுத்தவரை Bayon என்ற வடிவமைப்பைத் தழுவியதாகச் சொல்லப்படுகின்றது. இப்படியான வகைப்படுத்தல்களை எப்படி இந்தப் புவியியல் அறிஞர்கள் வகுக்கின்றார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். உதாரணத்துக்கு Bayon என்பது கூட ஏழாம் ஜெயவர்மனின் ஆலயமே. கட்டிடிட வடிவமைப்பில் ஒத்த பாணியைக் கைக்கொண்டிருக்கும் ஆலயங்களை இப்படி உதாரண வகைப்படுத்தலாக ஆக்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு ஆலயங்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், சில ஆலயங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆலயங்களை முன்மாதிரியாகக் கொண்டு கூட அமைக்கப்பட்டிருப்பதும் உண்டு.

மற்றய ஆலயங்களைப் போலல்லாது வாகனங்களைப் பெருந்தெரு முகப்பில் நிறுத்தி விட்டு ஒரு புதர் வழியே அமைக்கப்பட்டிருக்கும் பாதை வழியே கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். தூரத்தே சோலைகள் இருபுறஞ் சூழ நடு நாயகமாக Ta Prohm ஆலயம் காட்சி தருகின்றது. கம்போடிய நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக கைவிடப்பட்டு,மரஞ் செடி கொடிகளால் சூழப்பட்ட சூன்யப் பிரதேசமாகிவிட்ட ஆலயம் இப்போது ஒரு பகுதி மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்காக திருத்தம் செய்யப்பட்டு காட்சி தருகின்றது.

இந்த ஆலயத்தில் தான் Angelina Jolie நடித்த Tomb Raider படம் எடுக்கப்பட்டது. கம்போடியாவில் நான் சந்தித்துப் பேசிய நாலுபேரில் மூவர் என்ற கணக்கில் ஹாலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி புராணம் பாடுகின்றார்கள். Tomb Raider படம் நடிக்க வந்து இந்த நாட்டின் மேல் பாசம் கொண்டு ஏஞ்சலினா பல மனித நேயப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றார். கம்போடிய அரசர் Norodom Sihamoni ஆகஸ்ட் 12, 2005 இவருக்கு கம்போடிய நாட்டு நிரந்த குடியுரிமை (citizenship) உரிமை வழங்கிக் கெளரவித்திருகின்றார் (ஆதாரம்: விக்கிபீடியா). ஏஞ்சலினா ஜோலி கம்போடியாவின் கெளரவப் பிரஜை கூடவாம். இந்த நாட்டின் Rath Vibol என்ற பிள்ளை ஒன்றை இவர் தத்தெடுத்தும் வளர்க்கின்றார் என்று வாயெல்லாம் பூரிப்பாகச் சொல்கின்றர்கள் கம்போடியர்கள்.

வலிமையான முறுக்கேறிய மரங்கள், மனிதர்கள் தான் விட்டுவிட்டார்கள், நாமிருக்க கவலையேன் என்பது போல சிதைந்து விழப்போன கட்டிடத்தை தாங்கி இறுகத் தம் கிளைகளால் பற்றி முறுக்கியிருப்பது இந்த ஆலயத்தில் மட்டுமே நான் கண்ட அதிசயம்.தம் கரங்களின் நீண்ட விரல்களால் விழப்போகும் கட்டிடத் தொகுதியைப் பற்றிப் பிடிப்பது போன்ற தோரணையில் இவை இருக்கின்றன.பருத்தி இன மரங்களே இந்த ஆலயச்சூழலில் வியாபித்திருக்கின்றன. உலகின் கண்களுக்கு கம்போடியாவைக் காட்டும் புகைப்படத்தொகுதிகளில் இந்த முறுக்கேறிய மரங்கள் ஆலயத்தினை விழாது பாதுகாக்கும் காட்சிகள் தவறாது இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

தேசத்தின் சொத்துக்களைச் சூறையாடிய அன்னியர் புத்தரின் கழுத்தளவு வரை வெட்டிக் கொண்டு போனதின் அடையாளமாக மேற்காணும் சிலை.

பாதம் மட்டும் எஞ்சிய புத்தர்




உட்பக்கச் சுவர்களிலே காணும் அப்ஸரா தேவதைகளில் சிற்பங்கள்

பாரிய ஆலயத்தின் உட்பக்கச் சுவர்கள் விழுந்து விடாமல் பாரமெடுக்கும் வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், பலகைகள் பொருத்திய வழித்தடங்களையே பின்பற்றி நடக்க வேண்டும். சீரற்ற பாதையிலும், அழிபாடான கட்டிடத்தொகுதிகளிலும் குனிந்தும், நிமிர்ந்தும், வளைந்தும், நெளிந்தும் போவதே ஒரு சவாலான விடயம்.






உடல் சோர்ந்தாலும் இந்த வழித்தடங்கள் தோறும் வியாபித்திருக்கும் கட்டிட சிற்ப வேலைப்பாடுகளைக் காண்பதற்கு எத்துணை கஷ்டங்களையும் மனம் தாங்கும் வலுவோடு காலம் என்னும் அரக்கன் வெட்டித் தள்ளிய கற்தூண்களில் பாய்ந்து ஏறி, பார்த்து ரசித்துப் புகைப்படமாக்கிக் கொள்ளும் ஆவல் அடங்காது.

கம்போடியாவின் இந்து ஆலயங்களில் காணும் இந்துத் துறவிகளுக்கு ஒப்பாக இங்கே பெளத்த துறவிகளின் சிலைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

அங்கோர் வாட்டினை பார்க்கவென வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஆலயத்தையும் தவற விடமாட்டார்கள் என்பதால் முந்திய கோயிலை விட இங்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கின்றது. மதிய நேரம் உண்ட களைப்பில், முகத்தில் துண்டைப் போட்டுவிட்டு தூணொன்றில் சரிந்து படுக்கும் பயணிகளும் ஆங்காங்கே தென்படுகின்றார்கள்.
ஏழாம் ஜெயவர்மனால் நிர்மாணிக்கப்பட்ட முதற்தொகுதி ஆலயங்களில் இதுவும் ஒன்றெனக் கொள்ளப்படுகின்றது. அதற்குச் சாட்சியமாக மிகுந்த சிரத்தையோடு இவ்வாலயத்தை அவன் கட்டிமுடித்திருப்பது, சிற்ப வேலைப்பாடுகளிலும் ஆலய அமைப்பிலும் கண்டு கொள்ள முடிகின்றது. ஏழாம் ஜெயவர்மன் தனது தாய்க்காக அர்பணித்த ஆலயமாக இந்த Ta Prohm ஆலயம் கொள்ளப்படுகின்றது. முன்னர் நான் சொன்னது போல, ஏழாம் ஜெயவர்மனின் ஆலயங்களை நிர்மாணித்து ஓவ்வொன்றையும் குடும்ப உறுப்பினர்களுக்காக அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது. இன்னும் சில பதிவுகளில் இவன் தன் தந்தைக்காக அர்ப்பணித்த Preah Khan பற்றிச் சொல்வேன்.

Ta Prohm ஆலயம் ஆரம்பத்தில் பெளத்த துறவிகளுக்கான மடாலயமாக அமைக்கப்பட்டாலும், இதன் செல்வாக்கு அதிகரித்து, பின்னர் இந்த ஆலய ஆளுகையின் கீழ் 3000 கிராமங்களும் (ஆமாம் மூவாயிரமே தான்), ஆயிரக்கணக்கான தொண்டர்களும், தங்க நகை விற்பனை நிலையங்களுமாக தன் நிர்வாகத்தை அகலவிரித்தது. கம்போடியா சொல்வோர் தவறாமல் பார்க்கவேண்டிய அரும்பெரும் ஆலயம் இது என்பதை நான் தயங்காது சொல்வேன்.



ஆலயத்தைத் தரிசித்து விட்டு இன்னொரு பாதையால் வெளியேறி வரும் போது வெளிப்புறத்தே ஓரமாய் இருந்து கம்போடிய நாட்டு இசைக் கருவிகளை மீட்டியவாறே அந்த நாட்டுப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றது ஒரு குழு. நெருங்கிப் போய்ப் பார்த்தால் மனம் கனக்கின்றது. அவர்கள் கொடுங்கோலன் பொல் பொட் கம்போடியாவில் ஆண்ட காலத்தின் போது வியட்னாமிற்கு எதிரான யுத்தத்தில் புதைக்கப்பட்ட மிதிவெடிகளில் (Land mines) சிக்கித் தம் கண்களை, கால்களை, மற்றைய அவயவங்களை இழந்தோர் உருவாக்கிய Landmine Victim Community என்ற அமைப்பில் இவர்கள் இணைந்து இப்படி இசைத்தும் பாடியும் தம் எஞ்சிய வாழ்வைக் கொண்டுபோகப் போகின்றார்கள். சுகதேகியாகப் பிறந்தும், கொடியதோர் போர் என்ற அரக்கனின் கரங்களில் சிக்கித் தம் வாழ்வைத் தொலைத்தவர்களைக் கண்டதும் மனதில் பாரம் தொற்றிக் கொண்டது. கண்கள் கலங்க அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

Sunday, August 24, 2008

ஏழாம் ஜெயவர்மனின் Banteay Kdei ஆலயம்

அங்கோர் வாட் ஆலயம் சென்ற பதிவுகளைப் போட்டிருந்து பின்னர் சற்று இடைவெளி விட்டு கம்போடிய நடனம் கண்ட அனுபவத்தை போன பதிவில் எழுதியிருந்தேன். வாரம் ஒருமுறைக்காவது கடமையுணர்ச்சியோடு இப்பதிவுகளை எழுதி முடிக்கவேண்டும் என்ற அவா, சில பல காரணங்களால் தள்ளிப் போய் ஒருமாதமாகிவிட்டது. அடுத்த இரண்டு பதிவுக்காகவும் எடுத்த படங்களை தேர்வு செய்து வைத்துவிட்டேன் என்பதால் தொடர்ந்து தடங்கல் இருக்காது என்று நினைக்கின்றேன்.

அங்கோர் வாட் ஆலயம் சென்று சுற்றிப்பார்த்து மீளவும், நண்பகல் சூரியன் நடு உச்சியில் நின்று விக்ஸ் மருந்துக்கு வேலை வைத்தான். சுற்றுலா வழிகாட்டியுடன், காத்திருந்த ருக் ருக் வண்டிக்காரரையும் அழைத்துக் கொண்டு போய் மதிய உணவை எடுக்கப் போனேன். அங்கோர் வாட் ஆலயத்தினை ஒட்டிய சில நிமிடத் தூரத்தில் பெரியதொரு உணவகம் தென்பட்டது. சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து ஓலைகளால் வேயப்பட்டதொரு உணவகம் அது. என்னோடு சேர்ந்து ஒரே மேசையில் இருந்து சாப்பிடலாம் என்று நான் வழிகாட்டியையும், வண்டிக்காரரையும் வேண்டினேன். வழிகாட்டியோ "இப்படியான உணவகங்களின் தங்களுக்கென்று இன்னொரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கே சகாய விலையில் உணவைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே நீங்கள் மட்டும் போங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்" என்று சொல்லவும், இருவருக்குமான உணவுச் செலவுக்காக சில டொல்ர்களைக் கொடுத்தேன். அவர்கள் நகரவும், தனியே தன்னந்தனியே மேசையொன்றில் இருந்து உணவுப் பட்டியலைப் பிரித்தேன். தேடிப்பிடித்து எனக்குப் புழக்கமான உணவையும், பெப்சியையும் ஓடர் செய்தேன். கம்போடியாவில் உணவு விஷயத்தில் ரிஸ்க் எடுப்பது எவ்வளவு அபாயம் என்பதை பின்னர் ஒரு தனிப்பதிவில் சொல்கின்றேன்.

மதிய உணவு முடிந்து மீண்டும் எங்கள் தல யாத்திரை தொடர்ந்தது. அடுத்து நாம் சென்ற ஆலயம் பன்டே கெடே( Banteay Kdei ). இது கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 13 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்துக்கும் இடையில் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஏழாம் ஜெயவர்மனால் (Jeyavarman VII) இவ்வாலயம் எழுப்பப்பட்டது. முழுமையானதொரு பெளத்த ஆலயமாக விளங்கும் இவ்வாலயம் Angkor Wat/Bayon என்ற கட்டிடக் கலை அமைப்பில் அடங்குவதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.


இந்த Banteay Kdei ஆலயம் ஏழாம் ஜெயவர்மனால் எழுப்பப்பட்ட ஆலயமான Ta Prohm இற்கு தென்கிழக்காகவும், அதே மன்னனால் எழுப்பப்பட்ட Angkor Thom இற்கு கிழக்கு முகமாகவும் அமைந்திருக்கின்றது. Banteay Kdei என்றால் "Citadel of the Cells" என்ற பொருள்படும்.
நான் இனிமேல் தரப்போகும் Ta Prohm என்ற ஆலயத்தின் வடிவமைப்பை ஒத்ததாக இது சொல்லப்படுகின்றது. இதனை ஆலயம் என்று வகுப்பதை விட, ஏழாம் ஜெயவர்மனால் பெளத்த சன்னியாசிகளுக்காக உருவாக்கப்பட்ட மடாலயம் என்று கூறினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஆலயமுகப்பிலேயே பெளத்த சன்னியாசிகள் தங்கும் பர்ணசாலை அமைந்துள்ளது.
முன்னொரு காலத்திலே ஆலயச் சூழல் சிறப்பாக இருந்தது என்பதற்கு அடையாளமாக வரண்டு பள்ளமான பெரியதொரு நீர்ச்சுனையின் சுவடு தெரிகின்றது. அடந்த சோலைகளின் மத்தியிலே, தற்சமயம் இவ்வாலயத்தைச் சூழ எந்தவொரு குடியிருப்புக்களும் இல்லாத பகுதியாக இருக்கின்றது.

Banteay Kdei ஆலயத்தைப் பொறுத்தவரை Bayon என்ற சிக்கலான கட்டிடக்கலையைப் பயன்படுத்தியிருப்பது அழிந்தாலும் சிதைந்தாலும், இப்போதும் எஞ்சியிருக்கும் கட்டிட அமைப்பு உறுதிப்படுத்துகின்றது. கட்டிடத்தின் உள்ளமைப்பைப் பொறுத்தவரை சலவைக்கல்லை உபயோகித்து வடிவமைத்திருந்தாலும், கட்டும்போது பயன்படுத்தப்பட்ட கட்டிடக்கலைத் தொழில்நுட்பம் மிகவும் பலவீனமானது என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்போது சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து கம்போடியாவின் அழிந்துபோன ஆலயங்களைப் புனரமைத்துக் காட்சிப் பொருளாக்கும் தோரணையில் இந்தக் கட்டிடத்தையும் புனர்நிர்மாணம் செய்து வருகின்றார்கள். அதற்கு அடையாளமாக உள்பகுதியில் உள்ள சில வாசல்கள் அடைக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டியிருக்கின்றது. பொதுவாகவே கம்போடிய ஆலயங்களின் நுளைவாயிலில் இருமருங்கிலும் நாக தலை பொருந்திய வாயிற்புறங்கள் இருக்கும். அவை மூன்று, ஐந்து, ஏழு என்று இடத்துக்கிடம் வித்தியாசப்பட்டிருக்கும். இதில் ஒரு சுவையான தகவல் என்னவென்றால் மூன்று அல்லது ஐந்து தலை நாகம் உள்ள வாயில்கள் இந்துக் கோயில்களாகவும், ஏழு தலை நாகம் உள்ள கோயில்கள் பெளத்த கோயில்களாகவும் கணிக்கப்படுகின்றன.
மேற்படம்: ஆலய உள்ளமைப்பில் இயற்கையாகவே வெளிச்சம் வருவதற்காக குடைந்துருவாக்கப்பட்ட அடுக்குகள்.
மேற்படம்:ஆலயத்தின் பின் பக்க வாசல் ழாம் ஜெயவர்மனைப் பொறுத்தவரை ஆலயங்களை எழுப்பி ஆலயத்தை தன் தாய், தந்தை, தனக்காக அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது. அதுபற்றிய உதாரணக் கோயில்கள் பின்னர் வரும். ஆனால் Banteay Kdei ஆலயம் இவனால் யாருக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்ற விபரம் இதுவரை தெளிவாக்கப்படவில்லை.

ஆலயத்தின் சீரற்ற கட்டிட அமைப்பு ஒருபக்கம் இருக்க, பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதங்களுக்கிடையிலான பிணக்குகளால் அழிவுற்ற ஏழாம் ஜெயவர்மன் ஆலயங்களுக்கு உதாரணமாக இந்த Banteay Kdei ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களும் சான்று பகிர்கின்றன.

நன்றி: என்னோடு கூடவே வந்து தகவல்களை அளித்த வழிகாட்டி மற்றும் கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புக்கள்.