Social Icons

Pages

Featured Posts

Tuesday, January 23, 2018

நிறைவான மதுரை உலாத்தல் 🙏 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா 🛎🌴🌸



“மிராண்டா இருக்குதுங்களா”

“ஆ இருக்கு”

இரண்டாயிரம் ரூபாவை நீட்டினேன். ஐநூறு ரூபாய்த் தாளைக் கண்டாலே கிலி பிடிக்குமாற் போல இருந்ததால் முன் தினம் மாற்றிய நோட்டுகளில் இரண்டாயிரம் தான் சுளையாக. 
காசை நான் கடைக்காரரிடம் நீட்டியதும்

“மிராண்டா இல்லைங்க”

“இப்ப தானே இருக்குன்னீங்க?”

“ரெண்டாயிரம் ரூவாக்கெல்லாம் சில்லறை இல்லீங்க”
திரும்பவும் என் பணப் பையைத் துழாவினேன். நல்ல வேளை சில நூறு ரூபாய்கள் இருந்ததால் என் தாக சாந்திக்குக் கை கொடுத்தது.
காலை ஐந்து நாற்பந்தைந்துக்கு ஆரம்பித்த 
மதுரை உலாத்தலில் தண்ணி வென்னி இல்லாமல் கள்ளழகர் கோயில் எல்லாம் போய் வந்தாச்சு மதியம் தொடுகிறது. சாப்பாட்டுக்கு முன் வாய் வரண்டு போனதால் தான் இந்த மிராண்டா முற்றுகை.

காந்தி மியூசியம் மதிய நேர உணவு இடைவேளைக்காகப் பூட்டியிருந்ததால் அந்தப் பக்கம் போகவில்லை.
நாயக்கர் மஹால் ஐ எத்தனை திரைப்படங்களின் பாடல் காட்சிகளில் பார்த்திருப்பேன். அங்கு காலடி வைத்ததுமே “திருமலை நாயகனே உன் திருமதி” ஆகட்டுமா” என்று வாய் முணு முணுத்தது.
பொது இடத்தில் அநாகரிகமாகக் காதல் செய்யாதீர்கள் என்ற அறிவிப்பு இருந்தது. சில மந்திகள் தங்கள் காதல் கல்வெட்டுகளை நாயக்கர் மகால் தூண்களில் கிறுக்கியிருந்தார்கள்.

“இளைய புரட்சித் தலைவியே” என்று சென்னையில் தீபாம்மாவுக்குச் சுவரொட்டிகள் அடித்ததைக் கண்டு சிரித்ததைப் போல “திமுகவின் திருப்பமே” என்று அழகிரிக்கு மதுரைச் சுவர்களில் குவிந்த சுவரொட்டிகளைப் பார்த்துச் சிரித்தேன். ஆட்டோக்காரர் பிரபாகரனுக்கு அழகிரி பெயரைக் கேட்டாலேயே கேப்டன் பிரபாகரன் மாதிரிக் கண்கள் சிவந்தது. அழகிரியின் அட்டகாசங்களைத் திட்டித் திட்டிப் பேசிக் கொண்டு வந்தார்.

“ஒரு நல்ல வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட் போகலாம் சார்” என்று ஶ்ரீ சபரீஸ் என்ற உணவகத்துக்குக் கொண்டு போனார்.
அங்கு கூட்டமில்லை. நானும் பிரபாகரனும் தான் விருந்தாளிகள். ஆனால்  Zee தமிழ் நடுவர்கள் போல இருபது ஆண்கள் (எண்ணிப் பார்த்தேன் சரியான கணக்குத் தான்) உணவு பரிமாறவும் ஐந்து பெண்கள் இலையெடுக்கவும் தயாராக நின்றிருந்தார்கள்.
பிரபாகரன் தனக்குத் தயிர் சாதமே போதுமென்றார் நான் காலை உணவுக்கும் சேர்த்து மதியச் சாப்பாட்டைக் கட்டுக் கட்டினேன்.

தன்னுடைய மதுரைப் பயணம் தான் மகாத்மா காந்தியைக் கதராடை கொள்ளச் செய்தது. காந்தி நூல் நூற்ற அந்த  இடம் அதிக மனித வாடையின்றி இருந்தது. இங்கே அதிகம் யாரும் வராதது குறித்து ஆதங்கப்பட்டார் பிரபாகரன்.

மதியம் தங்குமிடம் வந்து ஓய்வெடுத்து விட்டு மாலை நடை திறக்கும் போது திருப்பரங்குன்றம் போவோம் என்ற பிரபாகரன் கணக்குத் தப்பாமல் மூன்றரை மணிக்கு  ஆட்டோவோடு வந்தார். திருப்பரங்குன்றம் போனால் கூட்டம் கும்மியது. ஐயப்ப பக்தர்கள் சுவாமி சந்நிதானத்துக்கு முன்பு செல்ஃபி எடுத்துத் தள்ள, கோயில் தொண்டரோ கடுப்பில் அவர்களைப் பார்த்துக் கத்திப் பேசிக் கலைத்தார். முருகன் சந்நிதானத்தில் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இதெல்லாம் என்ன கனவா? மீனாட்சி அம்மனைப் பார்க்கத் தான் வந்தேன். ஆனால் திட்டமிடாதிருந்தும் தன்னுடைய ஆறுபடை வீடுகளில் கடைக் கோயில் பழமுதிர்ச் சோலைக்கும் முதற் கோயில் திருப்பரங்குன்றத்துக்கும் முருகன் என்னை அழைத்து வந்து விட்டாரே என்று உள்ளம் நெகிழ்ந்தது.

இரண்டு பென்னம் பெரிய கூம்புகளோடு அழகு பூத்த St Mary's cathedral church கண்டேன் ஆனால் சடுதியாக அதைக் கடந்ததால் மீண்டும் சுற்று அடித்து விட்டு வெளியில் நிறுத்திக் காட்டினார்.

முற் பிறவி ஞாபகங்கள் வருமாற் போலப் படங்களில் பார்த்திருப்போம் அதுபோலவே மதுரை நகரை வலம் வரும் போது எப்போதோ இங்கு வாழ்ந்து கழித்தது போலிருந்தது.

திடீர் ஏற்பாட்டில் எதிர்பாராது வந்து காலையில் இருந்து மாலை வரைத் தன் உடன்பிறந்த உறவாக என்னைக் கவனித்த
பிரபாகரனிடமிருந்து நன்றியோடு விடை பெற்று மதுரை விமான நிலையம் நோக்கி நடந்தேன். 
திரும்பிப் பார்த்தேன்.
பிரபாகரனுக்கும் அந்தப் பிரிவின் வருத்தம் இருந்திருக்க வேண்டும். தயங்கிக் கொண்டே கையசைத்து விட்டு ஆட்டோவின் கையை ஒடித்தார்.
மீண்டும் வருவேன் என் இனிய மதுரையே

மதுரை நகர உலாத்தல் 🙏🌴 அழகா கள்ளழகா



பழமுதிர்ச்சோலையைக் கடந்து மலையேற வேண்டி அழைத்தார் பிரபாகரன். அழகர் கோயில் அங்கே இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டே செங்குத்தான அந்தப் பாதையில் கூட ஏறினேன். அந்த ஏற்றம் சற்றுக் கடினமாகப்பட்டது. ஆனால் சுற்று முற்றும் பக்தர்கள் விறு விறுவென்று நடந்து போவதைப் பார்க்க நமக்கும் வேகம் கூடியது. மார்கழி மாதத்தின் இளங்குளிரோ அல்லது மலையுச்சி நோக்கிய பயணமோ சில்லென்ற காற்று உடம்பைத் தடவி வழித்து விட்டுப் போகுது.

குரங்குகள் எல்லாத் திசைகளிலும் பாய்ந்தோடிக் மொண்டிருக்கின்றன. பாதையின் மறு கரையில் கற்களை அடுக்கடுக்காக ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருப்பதைக் காட்டி
“வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் தாங்கள் வீடு கட்டும் போது இம்மாதிரியான நேர்த்தியைச் செய்து விட்டுப் போவார்கள்” என்றார் பிரபாகரன்.
மலையுச்சிக்கு மேலே போனதும் தான் தெரிந்தது நாங்கள் வந்திருப்பது ராக்காயி அம்மன் கோயிலுக்கு என்று. பிரபாகரன் அழைத்துச் செல்லும் திசையிலேயே போவோம் ஏன் எதுக்கு எங்கே என்ற கேள்வி இல்லாமல் என்று நானும் அதுவரை பேசாமல் இருந்து விட்டேன்.
உண்மையில் மணிவாசகம் இயக்கிய ராக்காயி கோயில் படத்தைத் தவிர இப்படியொரு கோயில் இருபதே எனக்கு அன்று வரை தெரிந்திருக்கவில்லை. ஆலயத்துக்குள் நுழைந்ததும் 
“குளிக்கலாமா சார்?” 
“இங்கேயா?”
“ஆமா சார் இது நூபுர கங்கைங்கிற புனித நீர் இங்கு வர்ரவங்க அதுல குளிச்சிட்டுப் போவாங்க”
“இல்லை வேணாங்க நீங்க குளியுங்க நான் வேடிக்கை பார்க்கிறேன்” என்று விட்டு அந்தச் சின்னக் கோயிலை நோட்டமிட்டேன். அந்தக் கோயிலின் நடு நாயகமாக படிக்கட்டுக்கள் போடப்பட்டு ஒரு தீர்த்தம். ஆண் பெண் பாகுபாடின்றி அந்தத் தீர்த்தப் பக்கம் போனால் ஆலயத்தின் தொண்டர் ஒருவர் வாளியால் நீரை இறைக்கிறார். ஒரு சில நிமிடக் குளியல் போட்டு விட்டுத் திரும்புகிறார்கள். பிரபாகரன் அங்கிருந்து திரும்பி வரும் போது அவரின் வேட்டி, சட்டை தொப்பலாக நனைந்திருந்தது. சட்டையைக் கழற்றிப் பிழிந்து விட்டு மீண்டும் போட்டுக் கொண்டார்.
நூபுர கங்கை அல்லது சிலம்பாறு இன்னும் வற்றாத சுனையாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆலயத்தின் மேல் தளத்தில் சுவாமி சந்நிதானத்துக்கு முன்னால் இருந்த நிலப்பகுதியில் இருக்கும் சதுரத் தளத்தை அகற்றி விட்டு அந்த நீரோட்டத்தை எங்களுக்குக் காட்டினார் பூசகர்.
ராக்காயி அம்மன் கோயில் தரிசனம் முடிந்து கீழிறங்கி வரும் போது ஒரு தாய்க் குரங்கு தன் குட்டியை அணைத்துக் கொண்டு கட்டியிருக்கப் பக்கத்தில் தகப்பன் குரங்கு. அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டு ஞாபகம் வந்து விட்டது.

“அழகர் கோயிலுக்கு நடந்தே போயிடலாமா சார்” என்று பிரபாகரன் கேட்க, மலையடிவாரத்துக்குப் போகும் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி நடந்து போனால் தான் என்ன என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் அது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்து கொண்டேன். 

அது ஒரு காட்டுப் பாதை. சீராகத் திருத்தியமைக்கப்படாத, கால் தடம் பதிந்த வழித்தடத்திலேயே பயணிக்க வேண்டும். திடீர் திடீரென்று குரங்குகள் பாய்ந்து வருகின்றன. 
“சார் கேமரா பத்திரம் அந்த பேக் ஐப் பார்த்து ஏதாச்சும் சாப்பாடுன்னு நெனச்சு குரங்குங்க பறிக்க வரும்” என்று பிரபாகரன் வேறு பயம் காட்டினார். அவர் சொல்லி முடிப்பதற்குள் குரங்கொன்று தன் முன் வரிசைப் பற்களைக் காட்டிக் கொண்டு என்னை நோக்கிப் பாய்ந்தது.
“ஏய் ஓடு ஓடு” என்று பயந்து கொண்டே கமராப் பையைச் சுழற்றினேன். அதுவோ என் பையைப் பறிக்காமல் போக மாட்டேன் என்று கங்கணம் கட்டியது போலச் சீறிக் கொண்டே போரிடத் தயாரானது.
அப்போது பிரபாகரன் ஒரு குச்சியை எடுத்து நிலத்தில் படாரென்று அடிக்கவும், குரங்கு பின் வாங்கி ஓடியது.
“நமக்குப் பயம் இருக்கறா மாதிரிக் காட்டிக்கிட்டோம்னா குரங்குக்குத் துணிச்சல் வந்துடும் சார், உங்களுக்குப் பயமா இருந்தா கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் வேற யாரும் கும்பலா வரும் போது அவங்க கூட சேர்ந்துப்போம்” என்று பிரபாகரன் சொல்ல, நடுக்காட்டுக்குள் தனியே நிற்பதை விட நடப்பதே மேல் என்று “இல்லைப் பரவாயில்லைங்ஜ போகலாம்” என்று விட்டு வழியில் நீர் வற்றி எலும்பும் தோலுமாக இருக்கும் பாறைத் திட்டுகளில் எல்லாம் வழுக்கி வழுக்கி ஏறி நடந்தேன்.
“இதோ அந்தப் பக்கம்லாம் ஆளுங்களைக் கொலைப் பண்ணிப் பிணத்தைத் தூக்கி வீசிட்டுப் போயிருக்காங்க”
“இதோ இந்தப் பக்கம் சின்னச் சின்னச் கோயில்கள் இருக்கு பாருங்க அங்கெல்லாம் நாம வந்து தீர்த்தத்தில் குளிப்போம்”
“அந்தப் பக்கப் புதர்ல பாம்புகள் நிறைய இருக்கு” 
என்று ஒவ்வொரு திசையாகக் காட்டிக் கொண்டே அவர் முன்னே நடக்கும் போது இலேசாக அடி வயிறு கலங்கத் தான் செய்தது. 
“போகாத இடந்தனியே போக வேண்டாம்” என்ற நீதியையும்  அந்த நேரம் பார்த்துப் போதித்தது மனசு.
ஆனால் அந்த நேரத்தில் இருந்த பயத்தை விட அதை நினைத்தால் இன்னும் பயம் வரும் இல்லையா அது போலவொரு மன நிலை. ஆனால் அந்த நேரத்தில் சில மணி நேரத்துக்கு முன்பாகவே அறிமுகமான பிரபாகரன் மேல் வைத்த நம்பிக்கை மட்டுமே அந்தப் பயத்தைக் களைந்தது.

“நாங்க இந்த மலை பூராவும் நடந்தே ஒவ்வொரு திக்குக்கும் போவோம்” என்றார். ஒருவாறு அந்தப் புதர்களைக் கடந்து ஒரு வெளியான பிரதேசம் அங்கே ஒரு கேணி. ஒரு பையனும் கிழவரும். இன்னொரு பக்கம்  காட்டு மரத்தை முறித்துக் கொண்டு ஒருவர்.
கேணிப்பக்கம் கொஞ்ச நேரம் நிதானித்து விட்டுக் கடந்தோம். 
“அதோ அந்தா சுவர் தெரியுதுல்ல அங்க தான் கள்ளழகர் படத்துல விஜய்காந்த் தொழுகை நடத்துற சீன் எடுத்தாங்க” பிரபாகரன் காட்டிய அந்தச் சுவர்ப் பக்கமும் புதர் மண்டிக் கிடக்குது.
கொஞ்சம் தள்ளி இளைஞன் ஒருவன் உணவுப் பண்டங்களைக் கடை பரப்பி வைத்திருக்கிறான்.

கிட்டத்தட்ட அரை மணி நேர நடையில் கள்ளழகர் கோயிலுக்கு வந்து விட்டோம். மலையடிவாரத்தின் நீண்ட பரப்பளவை உள்ளடக்கியிருக்குறது. கோயிலின் முகப்பில் ஒரு கலையரங்கம். அங்கு இன்னமும் தொடர்கிறதாம் பரத நடன நிகழ்வுகள். 

அழகர் கோயிலில் செய்யப்படும் சம்பா தோசை பிரசாதம் வெகு பிரபலம். நூபுர கங்கையில் இருந்து எடுக்கும் தண்ணீர் கொண்டு இதைச் சமைப்பதாக விக்கி சொல்கிறது.  கோயிலுக்குள் நுழைந்து தரிசித்தோம். என் வாழ்க்கையில் விரல் விட்டு எண்ணக் கூடிய வைணவக் கோயில்களுக்குத் தான் போயிருக்கிறேன். ஆழ்வார்களால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தைக் கண்ட நிறைவு மனதில் இப்போது.

வெளியில் வந்து முன்னே நிற்கும் கோபுரம் ஒன்றைக் காட்டி “இது கருப்ப்பண்ணசாமி சந்நிதி முன்னாடில்லாம் இந்தக் கோபுர வாசல் மூடப்பட்டிருக்கும். இப்ப சின்னதா ஒரு வாயில் வச்சுட்டாங்க பாருங்க” என்று அவர் காட்டிய திசை சென்று வாயிலில் நின்று வழிபட்டோம். பிரார்த்தனை நிறைவேற்றக் கசையடி கொடுக்கும் பகுதி பக்கமாக இருந்தது.

கருப்பண்ண சாமி வரலாறு அறிய 
http://m.dinamalar.com/temple_detail.php?id=18627

மதுரையில் இருந்து 25 கிலோ மீட்டர் ஆட்டோவில் பயணித்து மலையேறி இறங்கி இதோ இப்போது கள்ளழகரையும் கண்டாச்சு. வழக்கமாக இந்த மாதிரித் தல யாத்திரையில் அழகர் கோயில் பயணத்துக்கு மட்டும் ஒரு நாள் ஒதுக்குவாராம் பிரபாகரன் ஆனால் என்னுடைய ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து மதியத்துக்குள் முடித்து விட்டார்.
அழகர் கோயில் பார்க்க வந்து இவ்வளவையெல்லாம் சுற்றிக் காட்டிய களைப்பு துளி கூட இல்லாமல் அடுத்த உலாத்தலுக்கு வேகம் கூட்டினார் தன் ஆட்டோவில்.

ராக்காயி கோயிலில் அருச்சனையில் கிட்டிய பெரிய மாலையை பிரபாகரன் ஆட்டோவை அழகுபடுத்தியது.
மீண்டும் மதுரை நகரை நோக்கி விர்ர்ர்ர்ர்

Tuesday, January 09, 2018

மதுரை நகர உலாத்தல் 🙏🌴 பழமுதிர்ச்சோலை எனக்காகத் தான்








மதுரை நகர உலாத்தல் 🙏🌴
பழமுதிர்ச்சோலை எனக்காகத் தான்
“உங்க பேர் என்னங்க” - நான்
“பிரபாகரன் சார், உங்க பேரு?” - ஆட்டோக்காரர்
“பிரபா..” என்று நான் சொல்லி முடிப்பதற்குள் “அட நம்ம தலைவர் பேரு” என்று சொல்லிச் சிரித்தார் பிரபாகரன் என்ற அந்த ஆட்டோக்காரர். அவரோடு தான் மதுரை மாநகரின் அன்றைய பொழுது உலாத்தலைக் கழித்தேன்.
வேட்டி கட்டிய தமிழனாக அன்றைய நாள் முழுக்க மதுரையைச் சுற்றியது புதுவித அனுபவம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காலை இரண்டு மணி நேரம் உறைந்து விட்டு மீண்டும் தங்குமிடத்துக்கு வந்தேன். முந்திய தினம் தங்குமிட நடத்துநரிடம் பேசி வைத்தது போல மதுரையின் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க வாடகைக் காரை ஒழுங்கு செய்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் அவரிடம் போனால் தங்களின் வழமையான கார்ச் சாரதி வேறு ஒரு வேலையாகப் போய் விட்டார் வேணும் என்றால் வேறு காரை ஏற்பாடு செய்து தரட்டுமா என்று கேட்டார். எனக்கு அப்போது பொறி தட்டியது, வாடகைக் காரை விட ஆட்டோவிலேயே ஊர் சுற்றினால் என்ன என்று. இம்மாதிரிப் புது ஊர்களுக்குப் பயணப்படும் போது ஆட்டோக்காரர்கள் பலர் விரல். நுனியில் அந்த ஊர் வரலாறு, பண்பாடு, வாழ்க்கை முறை எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் பாங்கை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன். அதனால் மதுரை உலாத்தலுக்கு ஆட்டோக்காரைத் தேர்ந்தெடுத்தது தவறில்லை என்று நிரூபித்தது அன்றைய முழு நாள் பயணமும். தங்குமிடக்காரர் ஒழுங்கு செய்த ஆட்டோ முன் வந்து நின்றது. காலைச் சாப்பாட்டைச் சாப்பிட நேரம் வாய்க்கவில்லை. அன்றைய நாள் திருத்தல உலா என்பதால் மாமிசத்துக்கும் தடா.
ஆட்டோக்காரர் பிரபாகரன் தங்குமிடம் முன் வந்து ஆட்டோவை நிறுத்த அதில் தொற்றிக் கொண்டேன்.
பிரபாகரன் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய தோற்றமே பய பக்தியோடு இருக்க, வாயைத் திறந்தால் மதுரையின் பெருமையும், வரலாறும், தற்கால நடப்பும் வைகையாகக் கொட்டுகிறது. சரியான ஆளைத் தான் தேர்வு செய்திருக்கிறேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். இன்ன தேதியில் இவரை நான் சந்திக்கப் போகிறேன் அவர் வழியாக மதுரையை உலாத்தப் போகிறேன் என்பதெல்லாம் ஏற்கனவே எழுதி வைத்தது தானே அதுவே இப்பொழுது நடக்கிறது.
“எங்கெங்கெல்லாம் போகணும் சார்”
“மதுரையின் முக்கியமான கோயில்கள் குறிப்பா அழகர் கோயில் அப்புறமா நாயக்கர் மகால் கண்டிப்பாப் பார்க்கணும்” - நான்
“முதல்ல அழகர் கோயில் போவோம் ஏன்னா பதினொன்றரைக்கு நடை சாத்திடுவாங்க வர்ர வழியில காந்தி மியூசியம், நாயக்கர் மகால் எல்லாம்
பார்த்துடுவோம். மதியத்துக்கு மேல திருப்பரங்குன்றம் போவோம்’
நான் கோடு போட்டால் பிரபாகரன் ரோடு போட்டார்.
ஆட்டோவில் அழகர் மலை வரை போறதெல்லாம் தில்லான காரியம் என்று உணர்ந்து கொண்டேன். ஆனால் சாலையின் வளைவு நெளிவுகள் ஏற்ற இறக்கங்கள் எதுவும் என் உடம்பில் ஏறாது பதமாக வண்டியை ஓடியவாறே கதை கதையாகச் சொன்னார்.
இங்கே தான் சார் வைகை ஆறு ஓடுது என்று அவர் பாலத்தின் எதிரே காட்டிய போது அதெல்லாம் வற்றிய வயிறு ஒடுங்கிய பிச்சைக்காரன் போல இருந்தது.
“பாயாசம் எங்கேடா” என்று சிங்கம்புலி கேட்டது போல மனசு கேட்டது. ஏனெனில் மதுரைக்கு வருவதற்கு முன் நவம்பரில் பெய்த மழையில் பெருக்கெடுக்கும் வைகை ஆறு காணொளியை சமூக வலைத்தளங்களில் போட்டதைப் பார்த்து அதையும் காண வேண்டும் என்ற நப்பாசையில் வந்த எனக்கு அது ஏமாற்றம்.
“மடையைத் தெறந்துட்டாங்க சார் அதான் தண்ணி இல்லை” - பிரபாகரன்
அழகர் மலைக்குப் போகும் வழியில் ஆங்காங்கே தென்பட்ட மடங்களைக் காட்டி “அழகர் பவனி வரும் போது அந்தந்த வகுப்பினருக்கான இந்த மடங்களை எல்லாம் பயன்படுத்துவாங்க” என்றார்.
அழகர் மலையடிவாரத்தில் ஆட்டோ தரித்தது.
“இதுக்கு மேல போக முடியாதுங்க அழகர் மலைக்குஒ போகும் பஸ்ல தான் ஏறணும்”
அரை மணி நேரம் காத்திருந்து வரிசை கட்டி ஏறினோம்.
ஒளவைப் பாட்டிக்கு “சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமா” என்று முருகன் சிறுவன் வடிவில் காட்சி தந்த தலத்தைக் கண்டோம்.
பஸ் மெதுவாகப் போய் பழமுதிர்ச் சோலையின் முன்றலில் தரித்து நின்றது. இங்கும் ஐயப்பன் பக்தர்கள்
கூட்டமாக வந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
பூமாலைக்கடை, தேநீர்ச் சாலை உள்ளிட்ட சிறு கடைகளே இருந்தன.
அழகர் மலை உச்சியில் பழமுதிர்ச்சோலை வெகு அமைதியான சூழலில் இருந்தது. குன்றத்துக் குமரன் தனக்கேற்ற இடத்தில் தான் தன் நிறைவான வீடாகக் குடி கொண்டிருக்கிறான்.
வழக்கமாக கட்டண வழிபாடு, பொது வழிபாடு என்று மற்றைய தமிழக ஆலயங்களில் இருப்பது போலல்லாது
நாங்கள் சென்ற நேரம் எல்லோருக்கும் தலைக்குப் பத்து ரூபா தரிசனக் கட்டணமாக அறவிட்டது கண்டு பிரபாகரனுக்குக் கடுப்பாகி விட்டது. “ஏழை ஜனங்க எல்லாம் எப்பிடி வர்ரதாம்” என்று முணுமுணுத்தார். எனக்கும் புரியவில்லை ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயத்தில் அதுவும் கூட்டமும் அதிகமில்லாத சூழலில் வழிபாட்டுக்கு ஏன் கட்டணம் என்று மனதில் எழுந்தது கேள்வி.
இந்தச் சோலை மலை முருகன் கோயில் அளவில் அதிகம் பெரிதில்லாது ஈழத்துக் கோயில்கள் போன்ற அமைப்பிலேயே உள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலைக்கு நான் வருவதாகப் பயணத்திட்டத்தில் இருக்கவில்லை. ஆனால் முருகன் அழைத்து வந்து விட்டான் என்று மனதுக்குள் ஒரு நிறைவு.
பழமுதிரச்சோலையைக் கடந்து ராக்காயி கோயில் நோக்கி மலையுச்சி வரை நடக்கத் தொடங்கினோம் இருவரும்.
(தொடரும்)

Sunday, January 07, 2018

மதுரை நகர உலாத்தல் 🏜🌈 மேல மாசி வீதியிலே


“மேல மாசி வீதியிலே
மேளச் சத்தம் கேக்குதடி”
என்ற மலர்ந்தும் மலராத மு.மேத்தா எழுதி இளையராஜா இசையமைத்த புண்ணியவதி திரைப்பாடல் https://youtu.be/R3yQoAvyOuI
தான் மனசில் ஓடியது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வெளி வீதியெல்லாம் அளைந்த போது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆன்மிக தரிசனத்துக்காக அன்றைய காலையையும், கோயிலின் வெளி வீதியைச் சுற்றி வேடிக்கை பார்க்க அன்றைய மதியத்தையும் ஒதுக்க வேண்டும் என்ற என் தீர்மானம் சரியாகவே அமைந்தது. காலையில் மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் முடித்து, ஊர் உலாத்தல் போய் விட்டு மதிய உணவு கடந்த பின் மீண்டும் மீனாட்சி அம்மன் கோயில் பக்கம் நடந்தேன்.
மீனாட்சி அம்மன் கோயிலின் வெளி வீதியெல்லாம் குப்பை, கூழங்கள் எல்லாம் ஒற்றியெடுக்கப்பட்டு வெகு சுத்தமாக இருந்தது. மேற்குக் கோபுர வழியாக, ஒவ்வொரு திசையாகப் பயணிக்கும் போது கமராவின் கண்களிலும் கண்ட திருக்கோலமெல்லாம் பதிவாகுகிறது.
கோயிலின் நடை சாத்தியிருந்ததால் மீண்டும் மாலை நாலு மணிக்கு வாசல் திறப்பை எதிர் நோக்கிப் பக்தர் கூட்டமெல்லாம் ஒவ்வொரு திக்கிலும் குழுமி நிற்கிறார்கள். குடும்பம் குடும்பமாகவும் ஐயப்ப பக்தர்களாகவும் அந்தக் கூட்டம். ஒரு மெல்லிய இளஞ்சூட்டு வெயில் அடிக்க, நிழல் தேடிக் குந்தியிருந்து கதை பேசும் அவர்களையும், ஆலயச் சூழலும் ஈழத்து நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை நினைவு படுத்துகிறது.
மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு கோபுரங்களையும் அதன் சித்திர வெளிப்பாடுகளையும் நின்று நிதானித்துப் பார்க்க வேண்டும்.
கோயிலின் வெளி வீதியைச் சுற்றிய அடுக்கெல்லாம் வளையம் வளையமாகக் கடைத் தொகுதிகள். பாத்திரக் கடைகள், வளையல், இனிப்பு, சாப்பாடு என்று வித விதமாக, சில கடைகளின் பெயர்ப் பலகைகள் பொன் விழாவைத் தாண்டிய பாரம்பரியத்தைக் காட்டுகின்றன.
ஈழத்துக் கோயில்களில் கச்சான் கடைகள் ( வறுத்த
வேர்க்கடலை & சோளப் பொரி) தவிர்க்க முடியாதவை.
திருவிழா சமயம் வெளியூர்க்காரர்களால் அதிகமாகவும், பிற காலங்களில் ஒன்றிரண்டாவது கச்சான் கடைகளையும் ஈழத்தின் பிரபல ஆலயங்களில் காண முடியும். ஆனால் தமிழகத்தில் நான் சென்ற கோயில்களில் இவற்றைக் காண முடியவில்லை. மீனாட்சி அம்மன் கோயிலிலும் அப்படியே.
எனக்குத் திடீரென்று மூளை குறுக்கால் ஓடியது.
மதுரை ஆதீனம் அவர்கள் தனது வேடிக்கையான செயற்பாடுகளால் எப்போதும் பரபரப்பாகப் பேசப்படுபவர். நித்தியானந்தா விவகாரம் வேறு சூடு பிடித்திருக்கிறது. அங்கே ஒரு நடை எட்டிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது.
எதிர்ப்பட்ட ஒருவரிடம் “மதுரை ஆதீனம் மடம் எந்தப் பக்கங்க” என்று கேட்டேன். அவர் விநோதமாகப் பார்த்து விட்டு வழியைக் காட்டினார். அதற்குப் பின் ஆர்வம் எழாததால் அடங்கி விட்டேன்.
மதுரையில் நான் கண்ட புதுமையானதொரு அனுபவம் என்னவெனில், புதுப்படங்களின் விளம்பர சுவரொட்டிகளை விட, பழைய படங்களின் மீள் திரையீடு தான் அதிகம் கண்ணில் பட்டது. போட்டி போட்டுக் கொண்டு மதுரையின் இரண்டு தியேட்டர்கள் எம்.ஜி.ஆரின் பழைய படங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்குச் சித்திரை வீதியில் சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போனேன். இங்கு பழைய படங்களே அதிகம் திரையிடப்படுகின்றன. எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் படம் வெளிவரவிருக்கிறது என்று சுவரொட்டிகள் கட்டியம் கூறின. இன்னொரு தியேட்டரில் “நல்ல நேரம்” ஓடிக் கொண்டிருக்கிறது.
“அழகிய கண்ணே உறவுகள் நீயே” பாடலைப் போட்டு விட்டு பென்னம் பெரிய தாச்சிச் சட்டியில் தேன் குழல் முறுக்கைப் பொரித்துக் கொண்டிருக்கிறார் கடைக்காரர். சுற்றிலும் இனிப்புப் பலகாரங்கள் கூடை கூடையாய்ப் பந்தி. அதை வீடியோ எடுத்துப் போட்டேன் ஆனால் பேஸ்புக்காரன் ஒலியை அமுக்கி விட்டான்.
இங்கே https://www.facebook.com/kana.praba/posts/10215130193473553
போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் தவிர வெளியூர் பச்சைத் தண்ணி தானும் பல்லில் படக்கூடாதி என்று சொல்லித்தான் வீட்டமண்ணி வழி அனுப்பினார். அதனால் மதுரையில் ஒரே மிராண்டா மிராண்டா தான். ஜிகர்தண்டாவை அனுபவிக்க முடியாது பெருமூச்சுடன் கடந்துட்டேன் 😀
மீனாட்சி அம்மன் தல யாத்திரைக்குப் போவோர் இந்த மாதிரி ஆற அமர இருந்து பேசி விட்டு வர வேண்டும்.




















மதுரை உலாத்தல் 🌺🌿 மீனாட்சி அம்மனைக் கண்டேன்


“சில மணி நேரமேனும் தன் தாயைப் பிரிந்திருந்த குழந்தையொன்று அவளைக் காணுமிடத்து, குதித்தோடிப் போய்க் கட்டியணைத்து அழுதழுது முத்தம் கொடுக்குமே அப்பேர்ப்பட்ட பரவச நிலையில் இருந்தேன் மதுரை மீனாட்சி அம்மாளைக் கண்ட அந்தக் கணத்தில்”
அதற்கு ஒரு மணி நேரம் முன்பதாக நினைவுத் திரையில்
வளையம் வளையம் போட்டு
Hotel Sabarees Residency, மேல மாசி வீதி
அறை இலக்கம்201
காலை ஐந்து மணி
முன் தினம் இரவு பன்னிரண்டு மணி வரை நித்திரை போக்குக் காட்டியதால் காலை ஐந்து மணிக்குத் தான் நித்திரை களைந்து அரக்கப் பரக்க எழும்ப முடிந்தது.
“மீனாட்சி அம்மன் கோவில் நடை எத்தனை மணிக்குத் தெறப்பாங்க சார்” - நான்
“மார்கழி மாசங்கிறதால காலை நாலரை மணிக்கே நடை தெறந்துடுவாங்க சார் சீக்கிரமே கிளம்பிப் போனீங்கன்னா கூட்டமில்லாமல் அம்மன் தரிசனம் பாக்கலாம்” - தங்குமிட முகாமையாளர்.
முன் தினமிரவு நிகழ்ந்த இந்த உரையாடலை முன் வைத்து காலை ஐந்து மணிக்காவது கோயிலுக்குள் போய் விட வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.
ஆனால் “தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தாய் தங்கமே ஞானத் தங்கமே” என்று மனது திட்ட விழுந்தடித்துக் காலைக் கடன்களை முடித்து விட்டு புதிதாக வாங்கி வைத்த ராம்ராஜ் வேட்டியைக் குலைத்து இடுப்பில் சுற்றி விட்டு மீனாட்சி அம்மன் கோயில் திசை நோக்கி மேற்குக் கோபுர வாசல் வழியாக விறு விறுவென்று நடக்கிறேன்.
முந்திய இரவு போலவே அந்த அதிகாலை இருட்டிலும் ஒளி பாய்ச்சிய கடைகள். புகைப்படக் கருவியை எடுத்து வரவில்லை. ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க விட மாட்டார்கள் என்ற என் கணிப்புத் தப்பவில்லை. ஆனால் புகைப்படக் கருவியை நான் எடுத்துச் செல்லாததற்கு முழு முதற்காரணமே வேறு. மீனாட்சி அம்மனைத் தரிசிக்கத் தானே இத்தனை மைல் கடந்து வந்திருக்கிறேன். ஒளிப்படம் எடுக்க வேண்டும் என்ற கவனச் சிதறல் இல்லாமல் ஆசை தீர இந்தக் கோயிலை என் மனக்கண் வழியே நெஞ்சில் எழுப்ப வேண்டும் என்பதே எனக்கு முக்கியமாகப்பட்டது. ஆலய தரிசனம் முடிந்த பின்னர் தனியாக வந்து படம் எடுப்போம் என்று முடிவு கட்டினேன்.
மேற்குக் கோபுர வழியை எட்டிப் பிடிக்க அங்கே திரண்ட கூட்டத்தைக் கண்டதும் கால்கள் வேகமெடுத்தன. ஆனால் ஒவ்வொரு கோயிலுக்கும் போனால் கால் கழுவி, முகம் அலம்பி கோயில் உள் செல்லும் என் மரபை இங்கேயும் கைக்கொள்ள எண்ணி, “கால் அலம்பும் இடம் எங்கே இருக்குங்க” என்று எதிர்ப்பட்ட கோயில் பணியாளரைக் கேட்டேன். “தண்ணி குடிக்குற இடம் தான் இருக்கு” என்று அவர் காட்டிய திசைக்குப் போய் கைகளை அலம்பி விட்டு நீரை ஏந்திக் கால்களில் தெளித்து விட்டு மீண்டும் ஓடோடிப் போய்க் கூட்டத்தில் ஐக்கியமானேன்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுர வாசலில் இருந்து உள்ளே போனால் வேர் விட்டிருக்கும் ஒவ்வொரு கருங்கல் கால் தூண்களிலும் செதுக்கியிருக்கும் சிற்பங்களின் எழிலை நின்று நிதானித்து ரசிக்கிறேன். ஒரு பெரிய குன்றை அப்படியே பெயர்த்தெடுத்து வைத்தது போலப் பென்னம் பெரிய “முக்குறுணிப் பிள்ளையாரை”க் கும்பிட மறந்து வியஜ்து நின்றேன். ஆலயத்தின் உள்ளகத்தில் இருக்கும் தெப்பக்குளத்தருகே கூட்டமில்லை இளைஞன் ஒருவன் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். நானும் அந்தப் பக்கம் போய் நின்று பார்த்தேன். கோயிலின் உட் பிரகாரத்தின் பரிவார மூர்த்திகளைக் கும்பிட்டு விட்டு மூலவரைத் தரிசிக்கலாம் என்று சுற்றினேன்
சுற்றினேன் சுற்றிக் கொண்டே இருந்தேன். காரணம், எந்தப் பக்கத்தால் போனால் இந்தப் பக்கம் வரும் என்று குழம்பும் அளவுக்கு இந்தப் பிரமாண்ட ஆலயம் என்னைத் தொலைத்து விட்டது.
மதுரைக்காரர்கள் வழி காட்டுவதில் முன் நிற்பார்கள். ஆனால் நமக்குத் தான் அதைப் பின்பற்றித் தொடர் முடியவில்லை ஹிஹி
வெளியேறும் வழி தெரியாமல் திணறி ஆலய நிர்வாக பீடத்தில் இருந்த ஒருவரிடம் விசாரிக்க, அவரை முந்திக் கொண்டு பக்தர் ஒருவர் வழி காட்டினார்.
“இந்தா பாருங்க வலக்கைப் பக்கம் திரும்பினீங்கன்னா ....சந்நிதி அதுல இருந்து இடப் பக்கம் போய் கிழக்கால திரும்புங்க”
நான் “ங்கே”
காலை ஐந்து நாற்பத்தைந்து மணிக்குக் கோயிலுக்குள் போனவன் காலை ஏழே முக்கால் வரை மீனாட்சி அம்மன் கோயிலின் இண்டு இடுக்கு வரை தரிசித்துத் திருப்தி கண்டேன். என்னளவில் இரண்டு மணி நேரம் எடுத்து ஒரு கோயிலைச் சுற்றிப் பார்ப்பதென்பது அபூர்வம். ஆனால் இன்னொரு தடவை வரும் போது என் கண்ணில் அகப்படாதவை இன்னும் நிறைய இருக்கும்.
இதுவரை நான் பயணித்த ஆலயங்களில் கட்டணம் வழி தரிசன அனுபவம் கிட்டியதில்லை. அடிக்கடி போய் வந்த மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கூட அந்த முறைமை இருந்த போதும் அதை நான் பாவித்ததில்லை. ஆனால் மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே போனதும் தேர்த் திருவிழாவுக்குக் கூடியது போலத் திரண்ட கூட்டத்தைத் தாண்டி அம்மனைத் தரிசிப்பதென்றால் மணிக்கணக்காகும் போல என்றெண்ணிக் கட்டண வழி தரிசன வரிசைக்குள் புகுந்தேன். அங்கேயும் பொது வழியில் நின்ற மக்களின் பாதியளவு கூட்டம் தான். மீனாட்சி அம்மன் கோயிலின் அரை வாசிக் கூட்டத்தை ஐய்யப்ப பக்தர்கள் பங்கு போட்டிருக்கிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் கூட்டம் கூட்டமாக வெளியூரில் இருந்து வந்திருக்கும் சாமியே சரணம் ஐயப்பாக்கள். இன்னொரு புதுமை, தமிழில் பேசுபவர்களை விட தெலுங்கு, கன்னட மொழிக்காரர்கள் மாட்லாடக் கண்டேன். மூலவர் சுந்தரேஸ்வரைத் தரிசித்தேன்.
எனக்கு முன்னே கூட்டம் அசைந்தசைந்து மலைப்பாம்பாக நகர்கிறது. நானோ கை கூப்பிக் கொண்டு அம்பாள் சந்நிதியை எட்டி எட்டிப் பார்க்கிறேன். திரண்ட மனிதத் தலைகளை ஊடுருவி அம்மன் திருவுருவத்தைத் தேடும் கண்கள்.
தீபாராதனை ஒளி வட்டமாக வளைய அதனூடு தெரிந்த மீனாட்சி அம்மனைக் கண்டு அப்படியே அந்தத் திருவுருவத்தைக் கண்களில் தேக்கி நெஞ்சில் இருத்தினேன். இத்தனை ஆண்டுகளாய் அருவமாய் இருந்த அன்னையின் திருவுருவம் கண்டு நெகிழ்ந்தேன்.
ஒரு சில நிமிடத் துளிகள் என்றாலும் அந்த அற்புதமான கணங்கள் வாழ்நாள் தவத்தின் விளைச்சல் போலப் பட்டது.
நமக்கு மீறிய ஒரு சக்தி நம் கூடவே இருந்து நம்மை வழி நடத்துகின்றது. அந்தச் சக்தியின் தோற்ற வெளிப்பாட்டைக் காணும் போது அது அந்நியப்படுவதில்லை. தன் தாயைக் கண்டுணரும் பிறந்த குழந்தைக்கு ஒப்பான மன நிலைக்கு அது போய் விடுகிறது. அப்படியானதொரு நிலையில் தான் நான் அன்றிருந்தேன்.
“ஞான் கண்டு”
“ஞானே கண்டுள்ளு”
“ஞான் மாத்ரம் கண்டிட்டுள்ளு”
என்று பாலாமணி குருவாயூரப்பனை அவன் சந்நிதியில்
உன்னியேட்டா ரூபத்தில் கண்டு நெகிழ்ந்து, கண்கலங்கினாளே
( பார்க்க https://youtu.be/6xLzlzIkFTA )
அப்படியானதொரு பரவச நிலை அது.
அந்த அம்மாளாச்சி என் கண் முன்னே.
மேலதிக வாசிப்புக்கு “நந்தனம்” திரைப்படம் குறித்த என் பகிர்வு
https://kanapraba.blogspot.com.au/2008/01/blog-post.html
மதுரை உலாத்தல் தொடரும்
அடுத்து வருவது “மேலமாசி வீதியிலே”