Social Icons

Pages

Sunday, November 22, 2009

தாய்லாந்தின் மிதக்கும் சந்தை (Damnoen Saduak) கண்டேன்

தாய்லாந்து உலாத்தல் அடிக்கடி தொடரமுடியாமல் இழுத்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பதிவுக்குமாக பொருத்தமான படங்களை ஏற்கனவே எடுத்திருந்த தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுத்துப் போடுவது தான் பெரும் வேலையாக இருக்கின்றது. எப்படியாவது வாரத்தில் இரண்டு தொகுப்பாவது போடவேண்டும் என்ற நினைப்போடு மீண்டும் தாய்லாந்து உலாத்தல் தொடர்கின்றது.

இம்முறை நான் பார்க்கச் சென்ற இடம் Damnoen Saduak என்ற பகுதியில் இருக்கும் மிதக்கும் சந்தை (Floating Market). Damnoen Saduak என்ற வாய்க்காலுக்கு இருமருங்கும் பெட்டிக்கடைகள் நிறைக்க, நடுவில் ஓடும் நீரோடையில் இந்த மிதக்கும் சந்தை வியாபாரம் களை கட்டுகின்றது. முன்னர் நான் கம்போடியாவில் பார்த்த மிதக்கும் கிராமம் போல மக்களில் முழுமையான வாழ்க்கையும் இந்த இடத்தில் கழிவதில்லை. மாற்றாக இங்கே கால்வாய்க்கு இருமருங்கிலும் அமைந்த பெட்டிக் கடைகளோடு, கூடவே கால்வாயில் பயணிக்கும் நீண்ட வள்ளங்களில் ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் பொருட்களை நிறைத்துக் கொண்டே நீர்ப்பாதையின் ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தம் வரை பயணிப்பார். இந்த இடத்துக்குப் பொருட்களை வாங்க வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் தமக்கான வள்ளங்களில் கட்டணம் கொடுத்து ஏறிப் பயணித்துக் கொண்டே எதிர்ப்படும் இந்த மிதக்கும் கடைகளில் பேரம் பேசிப் பொருட்களை வாங்குவார்கள். இது நாள் முழுதும் தொடரும் வழக்கமாக இருக்கும்.

எனது அடுத்த நாள் பயணத்தில் தங்கியிருந்த ஹோட்டல் மூலம் ஒரு நாட் சுற்றுலாவை ஒரு பயண முகவரிடம் ஏற்பாடு செய்திருந்தேன். அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இருந்தது இந்த மிதக்கும் சந்தைக்கான சுற்றுலா. மினி வான் மூலம் என்னையும், வேறு ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்களையும் அழைத்துக் கொண்டு Damnoen Saduak நோக்கிப் பயணித்தது வாகனம்.

தாய்லாந்து அரசர் இராமா IV இன் ஆட்சிக்காலத்தில் இந்த Damnoen Saduak கால்வாய் தோண்டப்பட்டுப் பெயரும் சூட்டப்பட்டது. Samutsakorn மாகாணத்தில் இருக்கும் Taachin ஆற்றையும் Samutsongkram மாகாணத்தில் உள்ள Maklong என்ற ஆற்றையும் இணைத்து உள்ளூர்வாசிகளின் பயணச் சிரமத்தைக் குறைத்ததோடு அவர்களின் பொருண்மிய மேம்பாட்டை வளப்படுத்தும் முகமாவே இந்தக் கால்வாய்த் திட்ட்டம் அமைந்தது.

ராஜ்புரி என்ற மாகாணத்தின் கீழ் இருக்கும் இந்த Damnoen Saduak, பாங்கொக்கில் இருந்து சுமார் 100 கி.மீட்டர் பயணத்தில் இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்கிறோம். வாகனத்தில் இருந்த சுற்றுலா வழிகாட்டி "சரியாக ஒரு மணி நேரத்தில் மீண்டும் இந்த இடத்த்துக்கு வந்து விடுங்கள், இப்போது நீங்கள் விரும்பிய இடத்துக்குப் போகலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

கால்வாயின் மிதப்பில் வந்தால் ஒவ்வொரு பயணிகளையும் கூட்டாக இணைத்து கிட்டத்தட்ட பத்துப்பேர் கொள்ளுமளவுக்குச் சேர்த்த பின்னர் ஒவ்வொரு வள்ளமாகப் பயணத்தை ஆரம்பிக்கிறது. அந்தப் பயணத்திற்கான கட்டணமும் மிகக் குறைவு. வள்ளம் போக முன்னர் ஒவ்வொருவராகப் படம் பிடித்ததன் சூக்குமம் முதலில் புரியவில்லை. ஆனால் இந்தப் பயணம் முடிந்த பின்னர் வள்ளத்தில் இருந்து வெளியேறும் போது, ஏற்கனவே என்னைப் புகைப்படம் எடுத்த சிறுவன் என் முகம் பொறித்த பீங்கான் கோப்பை ஒன்றைக் காட்டி நினைவுப் பொருளாக வாங்க விருப்பமா என்று கேட்கிறான். விருப்பமிருந்தால் வாங்கலாம், இல்லாவிட்டால் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கலாம்.


வள்ளத்தில் இருந்தவாறே கால்வாய் ஓரமாக இருக்கும் கடைகளைப் பார்த்தவாறே நகர்கின்றேன். என் வள்ளத்தில் ஒரு ஜப்பானிய இளமங்கையும், ஐரோப்பாவின் ஏதோ ஒரு மொழி பேசும் இரண்டு வயதான தம்பதிகளும், மேலும் சில வெள்ளையர்களுமாக இருக்கின்றார்கள். எனக்கு முன்னே இருந்த ஜப்பானிய யுவதி அடிக்கடி தன் கமெராவைத் தந்து தன் போஸுக்கு படமெடுக்கச் சொன்னாள். பெண் என்றால் பேயும் இரங்கும் தானே ;-)

இந்த வள்ளப் பயணத்தில் ஒரு தொழில் ரகசியத்தைக் கண்டேன். வள்ள ஓட்டுனருக்குப் பரிச்சயமான, அல்லது நட்பு வட்டாரத்தில் உள்ள கால்வாய் ஓரக் கடைகளைக் கண்டால் அந்தப் பக்கமாக வள்ளத்தைத் திருப்பி நிற்கின்றார். ஒரு சில நிமிடங்கள் அந்தக் கடைக்காரர் தன்னுடைய கடையில் உள்ள பொருட்களாகக் காட்டிக் காட்டி வியாபாரத்தை சில நிமிடங்களுக்குள் முடிக்க ஆசைப்படுகின்றார். 500 தாய்லாந்து பாட் இல் இருக்கும் சில பொருட்களை இப்படியே வள்ளத்தில் இருப்பவர் தன் வாய் வீச்சில் பேரம் பேசி 100 தாய்லாந்து பாட் வரை குறைக்கும் கொடுமையும் இருக்கிறது. எல்லா ஆசிய நாடுகளிலும் இருக்கும் பொதுவான பண்பு இது.

இந்த மிதக்கும் சந்தையில் உள்ள வியாபார நுட்பம் என்னவென்றால், அழகான காட்சிப்படுத்தல் மூலமும், ஒரு சில செக்கன்கள் மட்டுமே அவகாசம் இருக்கும் குறுகிய கால இடைவெளியில் தமது பொருட்களைப் பற்றி உயர்வாகப் பேசியும் குறித்த வியாபாரிகள் தமது விற்பனையை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஆனால் நான் பார்த்த அளவில் இந்த மிதக்கும் சந்தையால் பயணிகளைக் காவிச் செல்லும் வள்ளங்கள் ஈட்டும் வருமானம் தவிர, மிதக்கும் சந்தைகளின் விற்பனை மூலமான வருமானம் பெரிதாக இல்லை என்றே நினைக்கின்றேன். பெரும்பாலான கூட்டம் வேடிக்கை பார்த்தே சொல்கின்றது.
எமது கூர்மூக்கு வள்ளம் ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தம் வரை அசைந்தாடிப் போகின்றது. மீண்டும் தன் கமராவைத் எனக்குத் தந்துவிட்டு தன் தலையைச் சிலுப்பிப் போஸ் கொடுக்கிறாள் அந்த ஜப்பானிய யுவதி.

தாய்லாந்தில் விளையும் ஆப்பிள், மங்குஸ்தான், அன்னமுன்னா (சீதாப்பழம்), வாழைப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம், மாதுளம்பழம் என்று பரப்பிய பழ வள்ளம் ஒரு புறம். தாய்லாந்தின் பாரம்பரிய விழுமியங்கள் சார்ந்த ஓவிய, கைவினைப் பொருட்கள் தாங்கிய வள்ளம் ஒரு புறம், தாய்லாந்துக்கே உரிய கூடைத் தொப்பிகளை நிறைத்த தொப்பிக்கடை வள்ளம் இன்னொரு புறம், கால்வாயில் பயணிக்கும் போது பசிக்கிறதா இருக்கவே இருக்கிறது சுடச்சுடத் தயாராகும் உணவு என்று சைவ அசைவ மாமிச வகையறாக்களோடு சுடச்சுட வெள்ளைச் சோறும், நூடுல்ஸ் பாத்திரங்களுமாக இன்னொரு சாப்பாட்டுக் கடை வள்ளம், தாய்லாந்தின் கொடுமையான வெயிலில் பியர் அடித்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பவருக்கு முன்னால் வருகிறது மதுபானப் போத்தல்களும், குளிர்பானங்களும் தாங்கிய வள்ளமொன்று,
சாப்பிட்டீர்களா இப்போது தாய்லாந்து இனிப்புப் பதார்த்தங்களையும் ஒரு கை பாருங்களேன் என்று சொல்லுமாற்போல தாய்லாந்தின் தனித்துவமான வாழைப்பழ பன் கேக் வகையறாக்களுடன் இன்னொரு இனிப்பு வள்ளம் என்று எதிர்ப்படும் ஒவ்வொரு வள்ளக் கடைகளும் விதவிதமான பொருட்களோடு கடைபரப்பி வலம்வருகின்றன. முதுமையின் விளிம்பில் இருக்கும் மூதாட்டி ஒருவர் தனியே தன் வள்ளத்தைத் தள்ளி அதற்குள் இருக்கும் வாழைப்பழங்களைக் காட்டிக் காட்டி விற்பனை செய்தது உருக்கியது.


தாய்லாந்தின் இன்னொரு முகம் பற்றி எல்லோருமே பரவலாக அறிந்த செய்தி. அதைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்வதற்கு முன், இந்த வள்ளப் பயணத்தில் நான் கண்ட ஒரு காட்சியையும் இங்கே சொல்லி வைக்கிறேன். எமக்குப் பக்கமாக இன்னொரு வள்ளம், அதிலே ஒரு 70 வயதைத் தொடும் ஒரு வெள்ளைக்காரக் கிழத்தோடு இருபதைத் தாண்டாத ஒரு தாய்லாந்து யுவதி. ஆணா பெண்ணா என்று அவளை எடை போடவே கஷ்டமாக இருக்கும் தோற்றத்தில் இருந்த அவள் முகம் வறுமையின் முகவரியைப் பறை சாற்றியது. தன் பார்ட்னராக வந்த வெள்ளைக்காரக் கிழவரிடம் யாசித்து, பக்கத்தில் போகும் தொப்பிக் கடை வள்ளத்தில் ஒரு தொப்பியை வாங்கிப் போட்டுக் கொண்டே குழந்தை மாதிரி அந்தக் கிழவரைப் பார்த்துச் சிரிக்கிறாள். மனசின் ஓரமாய் ஊசியால் குத்துவது போல இருக்கிறது. அந்தக் காட்சியைப் படம் பிடித்துக் கொண்டேன்.
நீலச்சட்டை தாய்லாந்து பெண்மணியோடு கூட்டி வந்த கிழவர்.

வானம் மெல்ல மழைத் துளிகளை ஊசிகளாக கீழ் நோக்கிச் செருகுகின்றது. நனைந்தபடியே முடிவிடம் நோக்கிப் பயணிக்கிறோம்.




வரலாற்றுக் குறிப்புக்கள் நன்றி: தாய்லாந்து சுற்றுலாத் தளங்கள்