Social Icons

Pages

Saturday, June 23, 2007

கேரளாவில் யூத சமூகம் - சில வரலாற்றுத் துளிகள்





கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேல் விடுபட்டுப் போன உலாத்தலைத் தொடர்கின்றேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.

கடந்த பதிவில் யூதர்களின் ஆலயம் குறித்த பகிர்வைத் தந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக யூதர்களின் இந்திய வருகை குறித்த சில அம்சங்களைப இப்பதிவில் பார்ப்போம்.

யூத ஆலயம் சூழவுள்ள பகுதி Jew Town என்றழைக்கப்படுகின்றது. இந்த பிரதேசம் கொச்சின் பிரதேசத்தின் வாசனைத்திரவிய வியாயாரத்தின் முக்கிய கேந்திரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இஞ்சி, கறுவா, உட்பட்ட வாசனைத் திரவியம் மணமணக்கும் கடைகளையும், யூத மொழியான ஹீப்ருவில் பொறிக்கப்பட்ட பெயர்களையும் காண்பது இங்கு சாதாரணம்.

கேரளாவில் யூதக்குடிகளின் பரம்பல் குறித்த Kerala & her Jews என்ற ஆங்கிலச் சிறுநூலை வாங்கிக்கொண்டேன். யூத ஆலயத்தின் முகப்பு அறையில் வெறும் சித்திரச்சுவராக கேரளாவில் யூதர் வருகை, மக்னா காட்டா உடன்படிக்கை கைச்சாத்திட்ட நிகழ்வு உட்பட்ட வரலாற்றுக் குறிப்புக்களை ஓவியங்களாகத்தீட்டியிருக்கின்றார்கள். அவற்றை வரிசைக்கிரமமாகப் பார்த்து வந்தால் பல வரலாற்று நிகழ்வுகளைக் கண்முன் கொண்டுவரமுடியும். 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Rabbi Nissim என்ற யூதக்கவிஞன் இப்படிச் சொல்கின்றார்,

"I Travelled from Spain
I had heard of the city of Shingly
I longed to see an Israel King
Him, I saw with my Own eyes"

Cranganore (கிரங்கனூர்), Muzhiris என்று கிரேக்கர்களாலும் Shingly என்று யூதர்களாலும் அழைக்கப்பட்ட ஒரு கடற்துறை, பண்டைய காலகட்டத்திலேயே மேற்குலகத்தாரால் அறியப்பட்ட இந்தியக் கடற்துறையும் கூட. இந்தக் கிரங்கனூர் நகர், திரிச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. யூதர்களின் இந்தியாவிற்கான குடியேற்றப் பரம்பல் கி.பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை அதிகம் செல்வாக்குச் செலுத்திய காலமாகும். Judeo-Malayalam என்பது காலப்போக்கில் மருவிவிட்ட ஹீப்ரூவும் (யூத மொழி) மலையாளக் கலப்புமான மொழியே இவர்களின் புழக்கத்தில் உள்ள மொழியாகும்.


கிரங்கனூரில் தம் குடியேற்றத்தை ஆரம்பித்த யூத இனம், உள்நாட்டு ஆட்சி மாற்றங்களின் போது துரத்தப்பட்டு கொச்சினில் இருந்த இந்து ராஜாவின் பாதுகாப்பில் அடைக்கலமானார்கள் என்கிறது வரலாறு. வாலில்லாக் குரங்கு (Ape), மற்றும் மயில் போன்ற தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஹீப்ரு மொழிவழக்கையும் வரலாற்றாசிரியர்கள் சுட்டுகின்றார்கள்.
பழந்தமிழ்ச் சொல்லான தகை (Takai) இதற்குப் பொருத்தமான சொல்லாக ஹீப்ரு மொழியில் உள்ள Tuki என்ற சொல் சுட்டப்படுகின்றது.
Moses de Paiva என்ற Dutch Jew, 70,000 இலிருந்து 80,000 வரையான யூதர்கள் 370 A.D இல் மலபார் கடற்கரையில் வந்திறங்கியதாகச் சொல்கின்றார். முதலாம் நூற்றாண்டில் (70 C.E) யூதர்களின் இரண்டாவது ஆலயம் ரோமானியர்களால் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பத்தாயிரம் வரையான யூதர்கள் இந்து ஆட்சியாளரின் கருணையினால் கேரளாவின் மற்றைய பாகங்களுக்கும் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.



Joseph Rabban என்ற யூத வியாபாரி 8 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மலபார் துறையில் காலடி வைத்தான். இவனுக்கு கொச்சின் யூதர்கள் மீதான நிர்வாக ஆளுமையை அப்போதிருந்த மலபாரின் சேர ஆட்சியாளர் இரண்டாம் பாக்ஷர ரவிவர்மன் (Bhaskara Ravivarman II )கொடுத்திருந்தார். இரண்டம் பாக்ஷர ரவிவர்மனை சேரமான் பெருமாள் என்றும் அழைப்பார்கள். இந்த நிர்வாக ஆளுமை கிரங்கனூர் என்ற பிரதேசத்தில் 72 இலவசக் குடியிருப்போடு, அஞ்சுவர்ணம் என்ற உடன்படிக்கையாக செப்புப் பட்டயம் பொறிக்கப்பட்ட சாசனத்தில் எழுதிக்கொடுக்கப்பட்டது. ஜோசப்பும் அவனைத் தொடந்த யூதத் தலைவர்களும் யூத சமூக நலனில் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டார்கள்.


போர்த்துக்கேயரின் காலத்தில் (AD 1500) அவர்களின் ஆட்சிமுறையினால் மிகுந்த அல்லற்பட்ட யூத சமூகம் AD 1662 இல் டச்சுக்காரர்களுக்கு உதவி போர்த்துக்கீசரை விரட்டியடிக்க உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்கள். AD 1662 இல் தோல்வியுற்ற டச்சுக்காரர்களின் முற்றுகை அடுத்த ஆண்டில் வெற்றியைத் தழுவியது. போர்த்துக்கேயர் விரட்டியடிக்கப்பட்டார்கள். கேரளாவில் டச்சுக்காரரின் ஆட்சிக்காலத்தை யூத சமூகத்தின் பொற்காலம் என்கின்றார்கள். 1687 இல் Amsterdam இல் இருந்து வந்த யூதப் பிரதிநிதி மூலம் "NOTSIAS DOS JUDEOS DE COCHIM" கொச்சின் யூத வரலாறு மீள் அச்சேறுகின்றது. போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட யூதர்களின் நூல்கள் மீள் அச்சேறுகின்றன. கொச்சினில் வாழும் யூத சமூகத்திற்கு டச்சு ஆட்சியாளர்களின் கருணைக் கண் சலுகைகளாகக் கிடைக்க உதவுகின்றது.

1795 இல் தொடந்த பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் கேரளாவின் குறிப்பாக கொச்சின் வாழ் யூத சமூகத்திற்கு சலுகைகளும், வசதிகளும் வாய்த்த நிறைவான காலமாக அமைந்துவிட்டது.


நல்லது நண்பர்களே, இந்தப் பதிவு கொஞ்சம் வரலாற்றுத் தகவல்களோடும் என் கமராவில் சுட்ட படங்களோடும் நிரம்பிவிட்டது.

உசாத்துணை: Kerala & her Jews மற்றும் சில வரலாற்றுத் தளங்கள்

வீண்டும் காணாம்......