Social Icons

Pages

Thursday, December 28, 2006

சிட்னி வலைப்பதிவர் சந்திப்புக்கள்

ஜூன் 17, சனிக்கிழமை இரவு 10.00 மணி

இரு தினங்களுக்கு முன் கனக சிறீ அண்ணா என் ஜீ மெயிலுக்கு மடல் ஒன்று தட்டி விட்டார். இப்படி

கானா பிரபா,

எமது சக வலைப்பதிவாளர் நா. கண்ணன் (கொரியா) தற்போது அவுஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். இவ்வார இறுதியில் சிட்னிக்கு வருகிறார்.

சனியன்று இரவு கருத்துக்களத்தில் ஒரு பேட்டி எடுத்தால் எப்படி?

கரும்பு தின்னக் கூலியா? மடல் பார்த்த மறு கணமே, "தாராளமாகச் செய்யலாம், கூட்டிவாருங்கள் வானொலி நிலையத்துக்கு, என்றேன் நான்.
படம் இடமிருந்து வலம் : திருநந்தகுமார், நா.கண்ணன் மற்றும் கானா

சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் நா.கண்ணன், திரு.நந்தகுமார் (உயர் கல்வி மாணவர்களுக்கான கல்வி ஒருங்கமைப்பாளர், ஆசிரியர்) கூடவே சிறீ அண்ணா ஆகியோர் வந்தார்கள்.

"இவர் தான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" பதிவு எழுதியவர் என்று சிறீ அண்ணா, நா.கண்ணனுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். (ஆஹா, நல்ல அறிமுகம்:-))

எனக்கும் கண்ணனை அறிவது அன்றுதான் முதல் முறை, அவருக்கும் அப்படியே. ஆனால் கூடவந்தவர்களுக்கோ அவரோடு நீண்ட காலம் மடல் மூலமாகவும், இணையத்தில் தமிழ்ச் செயற்பாடுகள் மூலமாகவும் பார்க்காமலே நல்ல அறிமுகம் இருந்தது (கோப்பெருந்தேவன் பிசிராந்தையார் நட்போ).

சம்பிரதாயமான உரையாடல்களைத் தொடர்ந்து கண்ணனுடனான நேர்காணல் ஆரம்பமாயிற்று. பேசவந்தவருக்கு ஒரு தூண்டில் போட்டு அவரை நிறையப் பேசவைக்கும் சுதந்திரம் கொடுப்பது என் நேர்காணல் பாணி. அதுவே கண்ணனுக்கும் நடந்தது.
படம்: நா.கண்ணன் மற்றும் கானா

மதுரையில் தான் மாணவராக இருந்த காலத்தில் எழுந்த ஈழத்தமிழர் ஆதரவு முன்னொடுப்புக்கள், தன் எழுத்து அனுபவம், மதுரைத் திட்டம், புளக்கர் பயன்பாடு பற்றி நிறையவே சுவையாகப் பேசினார் அவர். முழுமையான பேட்டியைக் கேட்க
கங்காரு நாட்டில் கண்ணனின் குரல்

ஆகஸ்ட் 18, 2006, வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி
இவர் தான் நெல்லைக்கிறுக்கன்

சிங்கார சிட்னி என்று இப்படி ஒரு தலைப்பில் தன் பதிவாக இட்டார் நெல்லைக்கிறுக்கன். யாரப்பா இந்த ஆளு, நம்மூர் வந்து சிட்னி முருகனைச் சந்திச்சவரை நாமும் சந்திக்கவேணும் என்று நினைத்து அவருக்கு மடல் போட்டேன். வெள்ளைக்கிழமை சிட்னியில் சந்திப்பதாக முடிவாயிற்று. நம்மூரில் காதலர்கள் தான் கோயிலுக்கு வந்து சந்திப்பார்கள், நம்ம கொடுப்பினை, சிட்னியில் நடந்த ஒவ்வொரு வலைப்பதிவர் சந்திப்புமே இதுவரை சிட்னி முருகன் ஆலயத்தில் தான் நடந்திருக்கின்றன.

அந்த வகையில் வெள்ளி மாலை ஏழு மணிக்கு ஆலயம் போய் முதலில் பிரகார தரிசனம் முடித்து விட்டு ஆலயத்தின் வெளியே வந்து நெல்லைக்கிறுக்கனை செல்போனில் அழைக்கிறேன். இருவருமே முன் பின் பார்த்திராதவர்கள் என்பதால் அடையாளம் கிடையாது. காதில் செல்பேனை ஒத்தியபடி வெளியே வந்தவரை கை நீட்டி வரவேற்க அவரும் பளிச்சென்று சிரிப்போடு கை குலுக்க அவர் தான் நெல்லைக் கிறுக்கன்.என் கணிப்பில் அவரின் புனைப்பெயரை வைத்து ஆள் ஒரு நாற்பது வயசுக்காரர் என்று நினைத்த வேளை பச்சப் புள்ளைக்கு மீசை வச்ச மாதிரி அவர் இருந்தார். பேச்சை விட அதிகம் புன்சிரிப்பு தான் அவரிடமிருந்து வெளிப்பட்டது. "திருநெல்வேலி சிங்கம்லே நீரு, பேசும்லே" என்று கேட்டுத் தான் பேசவைக்க முடிந்தது.

நானும் அவரும் சிட்னி முருகன் ஆலயக்குருக்கள் ரவி ஐயருடன் தமிழக நிலவரங்களை ஊர்வாரியாக மேய்ந்தோம். முழுமையாகப் படிக்க, நெல்லைக்கிறுக்கனின் சிட்னியில் பண்பாளர்களைச் சந்தித்தேன்

அப்போது கஸ்தூரிப் பெண்ணும், மழை ஷ்ரேயாவும் , கார்திக் வேலுவும் கூட வருவதாகச் சொன்னார் நெல்லையார். கஸ்தூரிப் பெண், கார்திக் வந்தாயிற்று, சிவாஜி சூட்டிம் முடித்து தாமதமாக ஷ்ரேயா வந்தார். இவர்கள் எல்லோரையும் அன்று தான் நான் சந்திக்கக் கூடியதாக இருந்தது, நெல்லையார் புன்ணியத்தில்.கஸ்தூரிப் பெண்ணின் நாகப்பட்டினம், கோவை, ரெக்ஸ்டைல் துறை, டெல்லி, சிட்னி வாழ் குழந்தைகளின் தமிழ்ப் படிப்பு என்று பேச்சுத் தாவலிடையே கார்திக்வேலுவும் சேர்ந்து அணி செய்தார். நானும் நெல்லைக்கிறுக்கரும் நல்ல மலையாளப்படங்களையும், கேரளாப் பயணத்தையும் பேசித்தீர்த்தோம். ஷ்ரேயா அதிகம் பேசவில்லை. கோயிலின் சாப்பாட்டுக்கடையில் வாங்கிய தோசை, இட்லி வடை, (போண்டா கிடையாது) அன்றைய நம் இரவு விருந்தாக இருந்தது. ஆளுக்கொரு பக்கம் கலைந்து போனோம்.

படம்: சிட்னி ஹெலன்ஸ்பேர்க் சிவா விஷ்ணு ஆலயம்

சிட்னி ஹெலன்ஸ்பேர்க் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு நெல்லைக்கிறுக்கரை நம் நண்பர் படை புடை சூழ கணேஷ விசர்ஜனுக்கு அழைத்துப் போனேன். தன் விடியோ கமராவால் ஆசை தீரப்ப் படமெடுத்தார் அவர். பெரும் திரளான கூட்டத்தில் திக்குமுக்காடி மதியச் சாப்பாட்டை வாங்கி கால்வயிறு நிரப்பினோம். வரும் வழியில் 80 களில் வெளிவந்த இசைத்தட்டுக்கள் என் காரில் ஒலிக்க , இளையராஜாவின் இசை ராஜாங்கத்தை சிலாகித்து மகிழ்ந்தோம். குறிப்பாக அக்னி நட்சத்திரம், வருஷம் 16, பன்னீர்ப்புஷ்பங்கள்.

தன் பாட்டனார் கொழும்பில் பலகாலம் இருந்ததாகப் பேச்சின் நடுவே சொன்னார். பேசிக்கொண்டே மெய்மறந்து போய் வழி மாறி 2 மணிநேரச் சுற்றில் ஆறு, மலை, காடு தாண்டி வழியில் கோர்ன் ஐஸ்கிரீமும் வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்து வீடு திரும்ப இரவு 7 மணி ஆயிற்று.எதிர்பாராமல் வந்த சந்திப்பு நெல்லைக் கிறுக்கருடன் இன்னும் தொடர்கின்றது.

ஒக்டோபர் 14, 2006, சனிக்கிழமை காலை 11.20 மணி


சிட்னி வலைப்பதிவர்கள் சந்திப்பில் வந்தவர்கள் தம் புகைப்படத்தை வெளியிடவேண்டாமென்ற கோரிக்கைக்கு மதிப்பளித்து மூத்த வலைப்பதிவர் Spider-man இன் படம் இடம் பெறுகின்றது.


"துளசி கோபால் அம்மையார் வரும் 14 ஆம் திகதி சிட்னிக்கு வருகிறார், நம் வலைப்பதிவர் சந்திப்பு ஒன்று கூடுவோமா" என்ற மின் மடல், தென் துருவ வலைப்பதிவர் சங்கத்து கொ.ப,செ மழை ஷ்ரேயாவிடமிருந்து வந்தது. அநானிகள் தவிர்த்த அனைத்து சிட்னி வலையர்களின் சம்மத மடல் இந்தச் சந்திப்பை உறுதி செய்தது. சிட்னி சிங்கார வேலர் சந்நிதியில் காலை 11.20 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு. அப்படியே நானும் காலையில் என் தேரைக் கிளப்பிக்கொண்டு போய்ச் சந்நிதியை அடைந்தேன்.

முதலில் இனங்கண்டது பொட் டீ கடையாரை. முன் பின் இதுவரை சந்திக்காவிட்டாலும் ஏதோவொரு அலைவரிசை (மொபைல் போனாக இருக்குமோ) நம் இருவரின் சந்திப்பை தானாக ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் கனக்ஸ் என்ற சிறீ அண்ணாவும் வந்து இணந்து கொண்டார். பின்னர் மழை ஷ்ரேயா, கஸ்தூரிப் பெண், துளசிம்மா அவர் கணவர் சகிதம் வந்தார்கள். சம்பிரதாயபூர்வமான அறிமுகப்படுத்தல்கள், போட்டோ செஷன் போன்றவை முடிந்து சனீஸ்வரனுக்கு காக்காய் பிடிக்க பெண்மணிகள் கிளம்பிச் சென்றனர்.

சில மணித்துளிகள் பொட் டீ கடையாரும் , சிறீ அண்ணரும் , நானும் ஈழப் பிரச்சனையில் இருந்து வலைப் பிரச்சனை வரை ஒரு சுற்று வரவும், பெண்மணிகள் மீண்டு(ம்) வந்து இணைந்து கொண்டனர். ஏதாவது ஒரு உணவகம் செல்வோமென்றால் சுவாமியின் பிரசாதமே மதிய உணவு ஆகட்டும் (சாமிக்குத்தம் ஆகிரும்ல) என்று மழை அடம்பிடித்தார். ஒரு உணவு பரிமாறும் கியூவின் பின்னால் துளசிம்மா போய் நிற்கவும் கோயிற் தொண்டர் ஒருவர் வந்து " அம்மா , இங்க வயசானவங்க மட்டும் தான் நிற்கலாம்", உங்க கியூ அப்பால் இருக்கு என்று ஒரு திசையைக் காட்டினார்", துளசிம்மாவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. (இருக்காதா பின்ன)

அடுத்த கியூ சென்று நாம் நிற்க பெண்மணிகள் பின்னால் அணிவகுத்தார்கள். ஆனால் அவர்கள் மெய்மறந்து அரட்டைக் கச்சேரியில் வரிசையை மறந்து நிற்க இடையில் பல புத்திசாலிகள் வரிசை கட்டி நின்றார்கள். தாமதமாகத் தம் நிலை உணர்ந்த அம்மணிகள் முகத்தில் புரட்டாசி சனி எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஒருவாறு முட்டி மோதி மதிய உணவை எடுத்து கோயிற் பின்புறமுள்ள கலாச்சார மண்டபத்துள் நுளைந்து கதிரை மேசை தேடி அனைவரும் ஒருகே ஆகாரம் கழித்தோம்.சாப்பாட்டின் நடுவே வலைப்பதிவுகள் பற்றிய அலசல்.

கோயிலிலிருந்து மீண்டு கஸ்தூரிப்பெண் வீட்டில் அனைவரும் அடைக்கலமானோம். சூடான வடை பரிமாறலுடன் மீண்டும் வலையுலக அலசல். குறிப்பாக மா.சிவகுமாரின் பொருளாதாரக் கட்டுரைகள் பற்றி துளசிம்மா விதந்து பாராட்டினார். இன்னும் சில நல்ல வலைப்பதிவர்கள் பற்றிய பதிவுகள் பற்றிச் சிலாகித்தோம்.

தன் வலைப் பதிவுகளில் சூடாகப் பரிமாறும் பொட் டீ கடை, நிஜத்தில் அளந்து அளந்து தான் தன் வார்த்தைகளை விட்டார். துளசிம்மா தன் எழுத்தைப் போலவே கல கல, இவரின் முதற் சந்திப்பிலேயே பல வருஷ நட்பு என்ற தோரணையில் பழகினார். கஸ்தூரிப் பெண் விருந்தோம்பலின் சிறப்பை தன் வீட்டில் காட்டினார், இவர் வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் பிள்ளையார் சிலை, (தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைவினை விற்பனை நிலையம் வந்த மாதிரி ;-)))
சிறீ அண்ணரும் அளவெடுத்துத் தான் ஏற்கனவே மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போலப் பேசினார் :-)
மழை ஷ்ரேயாவுக்கு சிட்னி புன்னகை அரசி பட்டம் கொடுக்கலாமா என்று சொல்லுமளவுக்கு வாயைத் திறந்தால் சிரிப்பைத் தவிர வார்த்தைகள் அவ்வளவு இல்லை. இவ்வளவு தான் நன் சந்தித்த வலைப்பதிவர் பற்றிய என் மதிப்பீடு. மிச்சத்தை வந்து கலந்து கொண்டவர்களும் சொல்லலாம்.

வலைப்பதிவுகளை எப்படித் தேர்ந்தெடுத்து வாசிக்கின்றோம் என்பதற்கு வந்த கருத்துக்களில் சில அவற்றின் விடயதானத்தைக் கொண்டு என்றும், கவர்ச்சிகரமாக தலைப்பு மற்றும் தமிழ் மணத்தில் காட்டப்படும் சுருக்கமான வலைப்பதின் முதற் பந்தியை வைத்து என்றும், அதிக பின்னூட்டலை வைத்து என்றும், குறிப்பிட்ட சில வலைப்பதிவர்களின் பதிவை (பின்னூட்டம் உட்பட) மட்டுமே படிப்பேன் என்றும் கருத்துக்கள் வந்தன.

வலைப் பதிவில் படம் போடுவதில் சிக்கல் என்ற உரிமைப் பிரச்சனை கிளப்பப்பட்ட போது பனங்காட்டு நரியைப் (Fire fox) பயன்படுத்தினால் சுலபமாக வலையேற்றலாம் என்ற என் யோசனை ஏற்கப்பட்டு பின் சந்திப்புக்கு வந்த சில வலையர்களால் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டது. பனங்காட்டு நரியில் (Fire fox) சில பதிவுகளின் எழுத்துருக்கள் தெரிவதில்லை என்ற கேள்விக்கு, Formatting ஐ எடுத்துவிட்டு மீள் பதியுங்கள் சரியாகிவிடும் என்ற யோசனை ஏற்கப்பட்டது. ஒருவாறு மாலை ஐந்து மணிக்குச் சபை கலைய ஆரம்பித்தது. வலைப்பதிவுகள் பற்றிப் பேசப்பட்ட முதற் சிட்னி சந்திப்பு என்ற திருப்தியோடு நகர்ந்தோம்.


பிறக்கப் போகும் 2007 ஆம் ஆண்டு நம் எல்லோருக்கும் சுபீட்சமான ஆண்டாக மலர (ஹிம்...ஒவ்வொருவருஷமும் முடியேக்கை இதைத்தானே சொல்லுறம், என்னத்தக் கண்டனாங்கள்) வலைப்பதிவு
ஐயாமார், தாய்மார்கள், அண்ணைமார், அக்காமார், தம்பி, தங்கையருக்கு என் வாழ்த்துக்கள்.

Friday, November 10, 2006

நிறைவான படகுப்பயணம்

மே 29, காலை 8.00 மணி (இந்திய நேரம்)

விடிகாலை வந்ததை உணர்த்துமாற் போலப் படகுவீட்டின் படுக்கையில் கண்ணயர்ந்த என்னை அந்த இருப்பின் சன்னல் சீலையை ஊடறுத்து வந்த சூரியவெளிச்சம் சுள்ளென்று சுட்டு எழுப்பியது. எழுந்து என்னைத் தயார்படுத்தி வெளியே வந்து பார்க்கின்றேன். சிஜீயும் நண்பர்களும் முன்னதாகவே எழும்பி ஆளுக்கொருவராகத் தம் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் தாமாகவே துடுப்பெடுத்து வலித்துப் போகின்றார்கள். இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பெரும்பாலும் தமக்கெனத் தனியான ஓடம் வைத்துத் தம் அலுவல்களைக் கவனிக்கின்றார்களாம்.

இந்தப் கடற்கழிப் பயணம் போகத் தீர்மானிப்பவர்களுக்கு ஒரு உப குறிப்பு.
பயணம் போகும் போது மறக்காது ஒரு கொழுவர்த்திச் சுருள், தீப்பெட்டி, போதுமான தண்ணீர்ப்போத்தல்கள், போன்றவற்றையும் மறக்காது எடுத்துச் செல்லுங்கள். மதுபானப் பிரியர்கள் என்றார் பியர் சப்ளை உண்டு, தனியாகக் கட்டணம் கொடுக்கவேண்டுமாம்.(இதைப் பற்றி அனுபவ பூர்வமாக ஒன்றும் என்னால் சொல்லமுடியாது.)

தூரத்தில் ஒற்றைப்படகில் வந்த இருவரில் ஒருவர் தன் கையில் இருந்த வலையொன்றைத் துளாவி வீசினார். பின்னர் படகை அப்படியே விட்டுவிட்டு இருவரும் ஏரிக்குள் பொத்தென்று குதித்தார்கள். அவர்களின் கழுத்தைத் தொட்டது அந்த நீர்மட்டம். நீரில் முக்கி எழுந்த அவர்களின் கைகளில் வலையோடு தென்பட்டன துடித்துக்கொண்டிருக்கும் பெரிய மீன்கள். வலையைப் படகில் வீசி அடித்துவிட்டு காக்காய்க் குளியலோடு மீண்டும் வந்தவழியே பயணப்பட்டார்கள் அவர்கள்.

சிஜியின் நளபாகத்தில் முட்டைப்பொரியல் அணிவகுக்க பாண், ஜாம், அன்னாசி நறுக்கல்களோடு கிடைத்தது. உடன் வழக்கம் போல் மசாலா ரீ ஒன்று.
மலையாள இளம் நடிகர் குஞ்சக்கோபோபன் ( காதலுக்கு மரியாதை மலையாளப்பதிப்பில் நடித்தவர்) ஆலப்புழாவில் சொந்தமாக உதயம் ஸ்ரூடியோ வைத்திருக்கிறாராம், தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களின் படப்பிடிப்பு எப்போதும் நடக்குமாம்.


ஒருவர் காலை இறக்கிய தென்னங் கள் முட்டியுடன் படகில் பயணப்படுகின்றார்.

ஊதுபத்தி கொழுத்திப் பக்திபூர்வமாக மீண்டும் படகுச்சேவை ஆரம்பமாகத் தொடங்கியபோது, வானம் சடுதியாகக் தன் மழைக்கர்ப்பத்தைப் பிரசவித்தது.
கரையோர வீடுகளின் முற்றத்தில் நின்ற ஆண்களும் பெண்களும் விறு விறுவென்று தம் வீடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டார்கள். தொடர்ந்த அடைமழையால் காலை 8.30 இற்குப் பயணப்படவேண்டிய படகு தாமதித்து 10 மணியளவில் தான் தூறல் மழையோடு தன் பயணத்தை ஆரம்பித்தது.
முந்தய தினம் எங்களோடு பயணப்பட்ட மற்றும் சில படகு வீடுகள் இரவுப் பொழுதில் வேறு இடத்தில் தரித்திருந்தாலும் காலைப் பயணத்தில் ஒன்றாகக் கூடவே சங்கமித்தன.
கரையோரமாய் சருவச்சட்டியால் தலையை மறைத்த பெண்ணும், குடைக்குள் இருவராக நடைபோடும் ஆண்களும் தென்படுகின்றார்கள். வாழைத்தோப்பையும், இலக்கம் பொறிக்கப்பட்ட கமுகு மரங்களையும் கடந்து படகு பயணப்படுகின்றது.

யூன் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை இருக்கும் மொன்சூன் பருவகாலத்தில் வரக்கூடிய அதீத மழையால் சிலவேளை படகுப்பயணங்களும் ரத்துச் செய்யப்பட்டுவிடுமாம்.

துவாயால் தன்னை மறைத்த குழந்தையொன்று நடுமுற்றத்தில் நின்று கடலைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கின்றது. சிறு பையன் ஒருவன் மூதாட்டி ஒருவர் படகில் இருக்க துடுப்பு வலித்துக்கொண்டு போகின்றான்.படகு வீட்டிலிருந்து எட்டிப் பார்த்த என்னைக் கண்டதும் கொஞ்சம் வெட்கத்தோடு தலைசாய்த்துத் தன் பணியை அவன் தொடர்ந்தான்.

காலை 10.20 இற்கு கரையைத் தொடுகின்றது நம் படகுவீடு. ஈரமான படகின் மரப்படிகளில் கவனமாகத் தாவி வெளியே வந்து, பழையபடி சந்துக்குள்ளால் நடைபோட்டுப் பிரதான வீதியை வந்தடைந்து பின் வாடகைக்கார் மூலம் கெளரி ரெசிடென்ஸ் வந்தடைகின்றேன்.
பயணம் எப்படியிருந்து என்று அன்பாக விசாரிக்கின்றார் கெளரி ரெசிடென்ஸ் முகாமையாளரான அந்த இளைஞன். பெரும் திருப்தியைத் தந்த அந்தப் பயணம் பற்றி வாயாரப் புகழ்ந்து ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.ஆலப்புழாப் படகுப் பயணத்துக்காக அன்றைய காலையில் கூடி நிற்கின்றார்கள் புதிய யாத்ரீகர்கள்.

கெளரி ரெசிடென்ஸ் இலிருந்து அவர்கள் ஒழுங்கு செய்த வாடகைக் கார் மூலம் கொச்சின் நோக்கிப் பயணப்பட ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். ஆலப்புழாவிலிருந்து கொச்சினுக்கு வாடகைக்கார் ரூ 900 வரை முடிகிறது, ஏனெனில் திரும்பிவரும்போது வண்டி வெறுமையாக வரவேண்டியதால் தான் இந்த இரட்டைக்கட்டணம். நான் மேலதிகமாக 5 மணி நேரம் கொச்சினைச் சுற்றிப்பார்க்கவும் இதே காரைப் பாவிக்கலாமேயென்று மொத்தமாக 1500 ரூபா செலவில் கார் ஒழுங்கு செய்யப்பட்டது.

காரில் அமர்கின்றேன். கொச்சின் ஹனீபாவைத்தவிர (பாசப்பறவைகள் இயக்குனர், நடிகர்) வேறொன்றுமே கொச்சின் பற்றி அறியாத எனக்கு, அந்தப் புது உலகம் தேடி என் மனம் ஆலாய்ப் பறக்கப் பயணப்படுகிறது கார் கொச்சின் நோக்கி.

வீண்டும் காணாம்.....

Friday, October 20, 2006

அந்தி வரும் நேரம்

மே 28, மாலை 6.00 மணி (இந்திய நேரம்)மாலை நேரச் சிற்றுண்டியை இரசித்துச் சாப்பிட்டுக்கொண்டே சாயாவைக் குடித்துக்கொண்டிருக்கும் போது அருகே வந்த சிஜி பேச்சுக்கொடுத்தார். நேற்று (மே 27) இந்தோனோசியாவின் சிலபகுதிகளில் பூகம்பம் வந்ததாகச் சொன்னார். அட இந்தப் பையன் தன் படகுத் தொழிலோடு உலகச் செய்திகளையும் கேட்டுவைத்திருக்கின்றானே என்று உள்ளுர வியந்தவாறே சிஜியின் மலையாளம் கலந்து ஆங்கிலம் சிறிதளவு தூவிய உரையாடலில் ஒன்றிப்போனேன். சிஜி கோட்டயத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர், இவரைப் பற்றி முன்பும் சொல்லியிருக்கிறேன். இந்தப் படகுச் சேவை அரை நாள் கணக்கிலும் உள்ளதாம். அதாவது நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரையானது இச்சேவை. குறுகிய பயணக்காரருக்கு ஏற்றது இது. என் படகு வீடு சற்றுத்திசை திரும்பி இன்னொரு பக்கமாகப் பயணப்பட்டு ஒரு கரையில் தரித்து நின்றது. படகிலிருந்து தாவி வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். நம்மூரில் கொட்டில் போட்ட ஆட்டிறைச்சிக் கடைகள் போல இரண்டு கடைகள் தென்பட்டன. அவை உடனே பிடித்து விற்கப்படும் புத்துணர்வான (fresh) கடலுணவுகள் விற்கும் மீன்கடைகள். Tiger Prawn, Karimeen ஆகிய வகையறாக்கள் பென்னான் பெருசாக இருந்தன. விலையும் அதிகம். கிட்டத்தட்ட ரூ 800 மட்டில் விற்கக்கூடிய கடலுணவு வகையறாக்கள் இருந்தன. இவ்வாறான படகுப்பயணம் செய்வோர் நடுவழியில் இங்கே கடலுணவை வாங்கிப் படகுக்காரரிடம் கொடுத்தால் இரவு உணவுப் படையலாக அவை மாறிவிடும்.

இம்மாதிரிப் படகுவீடுகள் மலையாள நடிகர்களான ஜெயராம், திலீப் போன்றவர்களிடம் சொந்தமாக உண்டாம். திலீப் வைத்திருக்கும் படகுவீடு ஒரு மாளிகைக்கு ஒப்பானதாக அதிகவசதிகளோடு உள்ளதாம். அதன் ஒரு நாள் வாடகையே 1 லட்சம் ரூபா வரை செல்லும் என்று சிஜி சொன்னார். இயக்குனர் பாசில் 16 படகுவீடுகளைச் சொந்தமாக வைத்துப் படகுச்சேவையில் அவற்றை ஈடுபடுத்திவருகின்றாராம். யம்மாடி.
படகுப் பயணம் தொடர்ந்தது, கொஞ்சத்தூரம் சென்ற பயணம் சூரியன் வேலை முடித்துச் செல்ல ஆயத்தமாகும் வேளை தரை தட்டியது படகு. இன்றிரவு இங்கேயே தங்கிவிட்டு நாளை காலை தான் மீண்டும் பயணத்தை ஆரம்பிப்பது வழக்கம் என்று சொன்னார் சிஜி. அதை ஆமோதித்தது போல என் பயணத்தில் கூடவே வந்த படகு வீடுகள் சற்றுத்தொலைவான துறைகளில் தங்கியிருந்தன.என் படகுவீட்டுக்காரர்கள் அக்கரையில் இருந்த வீட்டில் இருந்து தற்காலிக மின்சார இணைப்பு கொடுத்ததும் படகில் இருந்த மின்விளக்குகள் எரியத்தொடங்கின. அதோடு கழிப்பறை போன்றவற்றிற்குத் தேவையான நீரையும் மோட்டார் பம்ப் மூலம் படகில் இருந்த நீர்த்தாங்கியில் நிரப்பினார்கள். கொஞ்சம் வெளியே சென்று நடப்போம் என்று நினைத்து வெளியே வந்தேன்.படகு தரித்த கரையின் முகப்பில் இருந்த வீடு நம்மூர்ச் சூழ்நிலையை நினைவு படுத்தியது. காரணம் தென்னை மரங்களும் , தீனி தேடும் கோழிகளும், இரைமீட்கும் ஆடுகளும் அந்த இடத்தில் நீக்கமற நிறைந்திருந்தன. சதுப்பான பாத்திகளூடே நடந்து போனேன். சிறு கோயில் ஒன்று தென்பட்டது, சுற்றுப்பிரகார மூர்த்திகளுக்கான பிரகாரங்கள் அரைகுறைச்சீமெந்து தடவிய செங்கற் சுரங்கமாக இருந்தன. கொஞ்ச நேரம் அந்தச்சூழ்நிலையில் நின்றுவிட்டு மீண்டும் படகுவீடு போய் அடைக்கலமானேன். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் இரண்டாம் சனிக்கிழமை நடக்கும் பிரமாண்டமான படகுப்போட்டி இங்கிருந்து தான் ஆரம்பமாகுமாம்.நேரு கோப்பை என்று அழைக்கப்படும் இந்தப்படகுப் போட்டி புன்னமடா என்ற வாவியில் ஆரம்பிக்கும். ஆலப்புழா மக்களுக்கு ஒரு கலாச்சாரவிருந்தாக இருக்கும் இந்தப் படகுப்போட்டி உலகின் பல பாகங்களிலிருந்து படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு களியாட்டமான விளையாட்டு விருந்தாக அமைகின்றது. 16 பெரிய படகுகள், 125 ஆட்கள் என்று இந்தப் படகுப்போட்டியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். நேரு கோப்பை என்று அழைக்கப்படும் இந்தப்படகுப் போட்டி புன்னமடா என்ற வாவியில் ஆரம்பிக்கும். ஆலப்புழா மக்களுக்கு ஒரு கலாச்சாரவிருந்தாக இருக்கும் இந்தப் படகுப்போட்டி உலகின் பல பாகங்களிலிருந்து படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு களியாட்டமான விளையாட்டு விருந்தாக அமைகின்றது.1952 ஆம் ஆண்டு திருவங்கூர் மற்றும் கொச்சினுக்கு வந்த பண்டித ஜவகர்லால் நேரு, கோட்டயத்திலிருந்து ஆலப்புழாவிற்குப் பயணப்படுகையில் பாம்புப் படகுகளின் போட்டியும் சிறப்பு விருந்தளித்தது, அதில் வெற்றியிட்டிய வீரருக்கு நேரு சுழற்கேடயம் வழங்கிக் கெளரவித்தார். அன்றிலிருந்து ஆரம்பித்த இப்போட்டிகள் வருடா வருடம் ஆகஸ்ட் 2 ஆம் சனிவாரம் நேரு கிண்ணப் போட்டிகளாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பாம்புப் படகுகள் சுண்டான் என்று அழைக்கப்படுகின்றன. (படகுப்போட்டிப் படங்கள் & தகவல் உதவி நேரு கோப்பைக்க்கான இணையம்)

சூரியன் தான் போவதாகப் போக்குக் காட்டியவாறே செல்ல தென்னைமரம் ஒன்றிலிருந்து ஒருவர் கள் இறக்கியவாறே இருந்தார், படகுவீட்டுக்காரர்கள் கரையில் இருந்து வலை போட்டு மீன் பிடித்துப் பிடித்தவற்றை இரவு உணவுக்காகச் சுத்தமாக வெட்டிக் கொடுக்க சிஜி இரவுச் சமையலை ஆரம்பித்தார். மீன் பொரியல், தேங்காய்ப் பூ கலந்த காரட் சம்பல், தேங்காய்ச் செட்டுத் துண்டம் கலந்த பயற்றங்காய்த் துவையல், இவற்றுடன் அரிசிச் சோறும் சப்பாத்தியும் சூடாகப் பரிமாறப்பட்டது.இரவாக ஆக நுளம்புகளின் அட்டகாசமும், ஈசல்களின் ஆக்கிரமிப்பும் படகுவீட்டுக்குள் கொட்டமடித்தன. ஆனால் முன்னெச்சரிக்கையாக நான் வாங்கிச் சென்ற Mortein நுளம்புத்திரியைக் காலுக்கடியிலும் மேசையிலுமாகப் பற்றவைத்தேன், புகைக்குழல் இதமாக ஆடியவாறே நுளம்புகளை விரட்டத்தொடங்கியது. இப்படியான இரவுத் தங்கல் நண்பர் குழாமாக வந்து குடித்துக் கும்மாளமடிப்போருக்கு மிகவும் ஏற்றது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.மாலை 7.30 மணிக்குத் தரித்து நின்ற படகுவீடு அந்த இரவு முழுவதும் ஓய்வெடுத்துக்கொண்டது.சுபராத்ரி....

Friday, September 15, 2006

சாயங்காலச் சவாரி

மே 28, மதியம் 2.00 மணி (இந்திய நேரம்)
இந்தியாவிற்கு ஒவ்வொரு தடவை நான் பயணிக்கும் போதும் என் பெரும்பாலான நாட்கள் பெங்களூரில் தான் கழிந்திருக்கின்றது. Garden City என்ற நிலை மாறி Concrete Ciyஆக மாறிவிட்ட பெங்களூரின் நிலை கேரளாவிற்கும் ஏற்படாதிருக்கக் கடவது, வெளிநாட்டுக்கம்பனிகளையும் கேரளாவைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள் வெள்ளைக்காரன்களை விடமாட்டார்கள் என்று மனதார நினைத்துக்கொண்டேன். இருக்காதா பின்னே, இவ்வளவு அழகான பசுமைப்புரட்சி பூமி யூ எஸ் கரன்சி பட்டு நாசமாகப் போகவேண்டுமா? என் படகுப்பயண உலாத்தலில் கடந்துபோகும் நாளாந்தப் பயணிகள் போக்குவரத்துப் படகுகளில் இருக்கும் பயணிகள் வயது வேறுபாடின்றிக் கையெத்தி ஆரவாரிக்கின்றார்கள். ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கும், ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குமாக பயணிகளை உப்புமூட்டை காவிக்கொண்டு போகின்றன படகுகள். நன்றாக வயிறுமுட்டச் சாப்பிட்டு நடக்கமுடியாமல் நடப்பவன் போல மெல்ல மெல்ல ஊர்ந்தே போகின்றது என் படகு.

ஒரு கிறீஸ்தவத்தேவாலயம் கண்ணிற்படுகின்றது, நீர் முற்றம் கம்பளம் விரிக்க தேவாலயத்தின் அழகை நீங்களே படத்தில் பார்த்து இரசியுங்கள்.
எங்கள் படகுவீட்டு கரையை ஒட்டியதாகப் பயணப்படும்போது எட்டிப் பார்க்கின்றேன். கரைவழியில் நின்ற ஒரு சிறுவனும் சில சிறுமிகளும் எதையோ சொல்லிக்கொண்டு சமதூரத்தில் அக்கரையில் ஓடிவந்தார்கள். எனக்குப் புரியவில்லை, சிஜியைப் பார்த்தேன். பயணிகளைக் கண்டால் புதுப்பேனா கொடுக்கும் படி இப்படிக் கேட்பார்களாம் அந்தச் சிறுவர்கள். அவர்களைப் பொறுத்தவரை வெளிநாட்டவர்களிடம் பேனா கேட்டுப் பெறுவது புதையல் கிடைத்தமாதிரிப் போலும். என் கையில் இந்திய ரெனோல்ட் பேனாதான் இருந்தது.

எனது படகுவீட்டுப் படுக்கை அறை
நான் போன இந்தக் கடற்கழியெங்கும் நிறையமீன்கள் கிடைப்பதாகச் சிஜி சொன்னார். விஷப் பாம்பு, முதலை போன்ற வில்லன்களும் இல்லையாம். பயணப்பாதையில் எதிர்ப்படும் திருப்பங்களிலெ தன் மூங்கிற்கழியை இலாவகமாகச் சுழற்றி வலித்துப் படகைத் திசைதிருப்பினார் ஓட்டி. எதிர்ப்படும் நீர்வழிபாதைகளில் கரையோரமாய் வளர்ந்து தன் தலை (கிளை)பரப்பிப் படகின் மேலாகத் தொடுகின்றன மாமரங்களின் கிளைகள். மாம்பழ சீசனில் ஓசி மாம்பழம் கிடைக்க ஒரே வழி இந்த வழி தான் என்றார் சிஜி. அக்கரையில் தென்படும் வீடுகளில் ஆட்டுக்குட்டிகள் தென்பட்டன. எங்கே சிஜியைக் காணவில்லை என்று பார்த்தால் சாயங்காலப் பரிமாறல் செய்ய அடுக்களை போய்விட்டார். சில மணித்துளிகளில் வந்த சிஜி மேஜையில் ஏற்கனவே கொசுக்கள் சல்லாபித்துக் க கூடைக்குள் இருந்த கதலிப்பழங்களை ஒருபுறம் வைத்துவிட்டு சாப்பாட்டு மேஜையில் விரிப்பை அகற்றிப் புதிய விரிப்பைப் போட்டு அழகுபடுத்தினார்.

மழையில் தேங்கிய வெள்ள நீர் நிறத்தில் கடும் மசாலா சாயாப் பானமும், பயம்பிலி என்ற பண்டமும் சாயங்காலச் சிற்றுண்டியாகச் சிபியின் கைவண்ணத்தில் கிடைத்தது. பயம்பிலி என்றால் என்ன என்று முடியைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். வேறொன்றுமில்லை, நம்மூர் வாய்ப்பனின் மலையாளப் பதிப்புத்தான் அது. வாழைப்பழம் கலந்த அந்தப்பண்டம் நீட்டமான துண்டுகளாகசெய்யப்பட்டு மஞசள் வடிவில் பொரிக்கப்பட்டு இருந்தது,அவற்றை அழகான பரிமாறல் ஒழுங்கில் சாப்பாட்டுத் தட்டிலே வடிவமைத்திருந்தார். சுவையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.

வாய்ப்பனின் நினைப்பு வந்து தொடர்ந்து எழுதமுடியாமல் தொந்தரவு பண்ணுகின்றது, பொறுங்கள் பக்கத்தில் இருக்கும் இந்திய உணவகம் சென்று வாய்ப்பனைத் தேடிப் பார்த்துவிட்டுத் தொடருகின்றேன்.
நிங்கள் ஆகாரம் கழிச்சோ?

Monday, August 21, 2006

படகு விருந்து

மே 28, மதியம் 1.00 மணி (இந்திய நேரம்)


நான் பயணப்பட்ட கடற்கழி, நன்னீர் ஏரி என்று குறிப்பிட்டார்கள். இரு மருங்கிலும் குடியிருப்பை அமைத்து வாழும் மக்களின் வாசலை இந்த ஏரி தான் முற்றமாக நிறைக்கின்றது. பெண்கள் இந்த ஏரியின் கரையில் நின்று குளிப்பதும், துணிகளைத் துவைப்பதுமாக இருந்தார்கள். ஆண்கள் வழக்கம்போல் குளிப்பதோடு மட்டும் நிற்கிறார்கள். நான் போன காலம் பெருமழைகாலம் ஆரம்பமாகிவிட்டதை முன்னரே சொல்லியிருந்தேன். டிசம்பர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை இப்படியான கடற்கழிச்சுற்றுலாவிற்கு உகந்த மாதங்களாகக் கடலோடி நண்பர்கள் சொன்னார்கள். வயிறுமுட்டசாப்பிட்டவனைப் போல ஆடி அசைந்து மெதுவாகப் பயணப்படுகின்றது படகு வீடு. மெதுவான இப்பயணம் ஆங்காங்கு காணும் காட்சிகளை உள்வாங்கவும் வசதியாக இருக்கின்றது. கரைமருங்கில் அசோகா மரங்களும் கண்ணுக்குத் தப்பவில்லை. வாழைமரங்கள் கூட உள்ளேன் ஐயா என்கின்றன. கல் வீடுகளும், குடிசைகளுமாக மாறி மாறித் தென்பட்டது கடலுக்கும் வர்க்க ஏறத்தாழ்வு இருப்பதைக் காட்டியது.இந்த நீரோட்டம் நடுவே கொல்லம் 83KM சம்புக்குளம் 13 KM என்று தூரவழிகாட்டிகள் காட்டிநிற்கின்றன. ஒருபக்கக் கரையைப் பார்க்கின்றேன். அக்கரையில் கடலை மறித்து நெற்பாசனம் செய்யப்படுகின்றது. மறுபுறத்தே விரிந்த பரப்பில் இயற்கையாக அமைந்த ஆயிரம் தாமரை மொட்டுகளோடு தடாகப் பரப்பு.

மதியம் 1. 30 ஐத் தொடுகின்றது கடிகாரமுள். மதிய உணவுப் பரிமாறலுக்காக நங்கூரம் பாய்ச்சப்படுகின்றது. படகு ஓட்டும் முதியவர், அவருக்கு உதவியாக நடுத்தரவயசுகாரர், மற்றவர் சமையலையும் தங்கும் உல்லாசப்பயணிகளையும் கவனிக்கும் 25 வயதான சிஜீ என்ற இளைஞன். படகுவீட்டுப் பயணத்தில் நான் இயற்கைக் காட்சிகளை இரசித்துக்கொண்டே வரும் போது படகு வீட்டின் சமையற் பகுதியில் சிஜி சமைத்தவாறே அவ்வப்போது எனக்கு அருகில் வந்து இந்தப்படகுவீட்டும் பயணத்தின் தன் அனுபவங்களையும் மேலும் சுவையான செய்திகளையும் சொல்லச்சொல்ல நானும் கேட்டுக்கொண்டே அதுவரை வந்திருந்தேன். சரளமாக ஆங்கிலத்திலும் அவன் பேசியது எனக்கு வியப்பாக இருந்தது. வெறும் கேள்விஞானத்தின் மூலமே இப்படிச் சரளமாக அவன் ஆங்கிலம் பேசக்கற்றுக்கொண்டான். அவ்வப்போது மலையாளத்தில் அவன் பேசும் போது அவற்றை உள்வாங்கி எனக்குத் தெரிந்த சொற்களை வைத்துச் சமாளித்தேன்.மலையாள மொழிப்படங்களைப் பற்றிப் பேசும் போது "என்னென்னும் கண்ணட்டான்டே” (தமிழில் வருஷம் 16 என்று வந்தது) படம் பற்றி ரொம்பவே சிலாகித்துப் பேசினான். கடலோரம் வாங்கிய காற்றும், படகு அலைச்சலும் இயல்பாகவே வயிற்றைக் கிளற்ப் பசியை வா என்று சொல்லும் வேளை அது. சிஜியின் கைவண்ணத்தில் மணம் குணம் நிறைந்த மீன்பொரியல் குண்டு குண்டாய் வெள்ளைச் சோறு, நறுக்கிய வெண்டைக்காய்த் துவையல், தக்காளிச்சாலட், என்று பெருவிருந்தே படைக்கப்படுகின்றது. வெள்ளை முத்துக்களாய் நம்மூர் அரிசியின் நான்கு மடங்கு பருமனில் குண்டு குண்டாய் அரிசிச்சோறு கோப்பையை நிறைத்திருந்தது. வகையான காய்கறிகளின் சேர்க்கையில் ரஜினி வாய்ஸ் கொடுத்தபோது இருந்த தி.மு.க, த.மா.க கூட்டணி போல அமர்க்களமாக இருந்தது. எனக்கும் பேச்சுக்கொடுத்துத் திறமையான சமையலையும் செய்து முடித்த சிஜியை வாயாரப் புகழ்ந்தேன் மீன் பொரியலைச் சுவைத்தவாறே. மதிய உணவின் பின்னர் ஒருமணி நேர ஓய்வு. கிடைத்த அந்த நேரத்தில் கடலோடி நண்பர்கள் தரை விரிப்பை விரித்து மதியத்தூக்கம் கொள்கின்றார்கள். நானும் என் படுக்கை சென்றமர்ந்து "ஆச்சி பயணம் போகிறாள்" நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கின்றேன். ஒரு மணி நேர ஓய்வு கழிகின்றது. இப்பொது மழையும் ஒதுங்கிக்கொண்டது. அரை வட்டமடித்தது போன்ற நீர்ப்பரப்பில் மீண்டும் பயணப்படுகின்றது படகுவீடு.

உண்டமயக்கம் கண்ணைக்கட்டியது, கொஞ்சம் கண்ணயரலாம் என்று நினைத்துக்கட்டிலில் சாய்ந்தேன். சேவல் ஒன்று கூவிக்கேட்டது. "அட, மதிய நேரத்திலே சேவல் கூவல்" என்று ஆர்வமாகப் படுக்கையின் அருகே இருந்த சாரளம் வழியே பார்க்கின்றேன். பாதி கட்டப்பட்ட கொங்கிறீற் தடுப்புடன் கூடிய குடியிருப்பில் நின்று சேவல்கள் சில நிரையாக நின்று கூவித் தீர்க்கின்றன. யாத்ரா காணாம்........