Social Icons

Pages

Monday, March 26, 2007

தொட்டிற் பழக்கம் - ஒரு weird பதிவு


பதிவர்கள் ஒவ்வொருவராக தம் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பித் தம் தனிக்குணங்களைக் காட்டும் வேளை இது.சகோதரி உஷாவின் அழைப்பில் நானும் களமிறங்குகின்றேன். தொட்டிலில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள், என்னைப் பொறுத்தவரை
இங்கே நான் சொல்லப்போகும் என் தனிக்குணங்கள் இனிமேலும் மாறுமா என்பது சந்தேகமே ;-))

இங்கே என் மனச்சாட்சியின் குரலாக என் குணாதிசயங்கள் வெளிவருகின்றன. இவற்றில் பலவற்றை முதன்முதலாக இன்னொருவருடன் நான் பகிரும் என் தனிப்பட்ட விஷயங்களாகவும் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை குழந்தைப் பருவத்திலிருந்து தொடரும் சில பழக்கங்களோடு இடையே புகுந்த சில பழக்கங்களாகவும் இவை இருக்கின்றன.

என்னுடைய அம்மா, கூடவே இரண்டு சகோதரிகள், ஒரு தம்பி (இரண்டு மூன்று வயது இடைவெளியில்) என்று பெத்துப் போட்டுவிட்டு அவர்களின் இளவயதிலேயே தாத்தா (அம்மாவின் அப்பா) இறந்துவிட்டார். எனவே என் அம்மாவைப் பொறுத்தவரை ஒரு பெண்ணின் இளமைக்கால எதிர்பார்ப்புக்கள் ஆசாபாசங்கள் மட்டுப்படுத்தப்பட்ட உண்ண உணவு, உடுக்க உடை, படிப்பு என்ற எல்லையோடு சாதாரண வாழ்க்கையாகவே கழிந்து போனது. அவரின் அடிமனதில் இருந்த சங்கீதம், நடனம் போன்ற நுண்கலைகள் மீதான ஆசை, ஆசை அளவிலேயே நின்று , ஒரு ஆசிரியையாக மட்டும் தன்னை வளர்த்துக்கொண்டார். சரி, என்னுடைய ஆசைகளைப் பெண் குழந்தை பிறந்தால் அவளுக்கு என் விருப்பம் போல வளர்த்துவிடலாம் என்ற என் அம்மாவின் நினைப்பில் விழுந்தது மண். இரண்டு அண்ணன்மாருடன் மூன்றாவதாக நான் பிறந்தேன். அதனாலோ என்னவோ இயன்றவரை என் பிள்ளைப் பிராயத்திலிருந்தே ஒரு பெண்பிள்ளை போல வளர்த்து வந்தார். அதுவே பின்னாளில் என்னுடைய சில குணாதிசயங்களில் பெண்களுக்கே உரிய சில பண்புகளும் வாய்த்துவிட்டன.

1. பயங் கொள்ளல்

ஆயிரம் ஜெனமங்கள் என்றொரு பாழாய்ப்போன படத்தை என் சிறுபிராயத்தில் பார்த்துத் தொலைத்துவிட்டேன். அது முதல் இரவு வேளைகளில் அம்மா காவல் காக்க ஓண்ணுக்குப் போவது, கை கால் மறைத்து தலையின் மூக்கு வாய்ப்பாகம் மட்டும் வெளியே தெரிய
போர்வையால் மூடிக்கொண்டே தூங்குவது, பேய்ப்படங்களின் பாடல்கள் வானொலியில் வந்தால் இருகாதிலும் விரலால் இறுகமூடிக்கொள்வது சில உதாரணங்கள். ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் வரும் வெண்மேகமே பாடலை இன்றும் எனக்குக் கேட்டால் குலை நடுங்கும். ( வெளிநாடு வரும் வரை அம்மா தான் சாப்பாடு ஊட்டிவிட்டார்)

என்னுடைய பதினோராம் ஆண்டில் ( பிளஸ் ஒன்) படிக்கும் போது ஆச்சி (அப்பாவின் அம்மா) இறந்தபோது தான் நான் முதன்முதலில் ஒரு மரணவீட்டுக்கே போனேன். இதுவரை நான் மரணவீடுகளுக்குச் சென்ற எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். புலம்பெயர்ந்து வந்த பின் நான் தவிர்க்கமுடியாது சென்ற மரணச்சாலைகளில் பார்வைக்காக வைக்கப்படும் உடலைப் பார்க்கும் வரிசையில் நின்று உடலைப் பார்க்காமல் அந்தக் கணம் மட்டும் கண்ணை மூடிக்கொள்வேன். விதிவிலக்கு மலரக்காவின் இறுதிச்சடங்கு.

2. பாட்டு கேட்டல்

என்னைப் பொறுத்தவரை சினிமாப்பாடல்களைப் படங்களில் வரும் இடைச் செருகலாக இல்லாமல் என்னை ஆக்கிரமிக்கும் சோகங்களுக்கான ஒத்தடமாகவும், அதி உச்சபட்ச மகிழ்ச்சியின் போது பங்கு போடும் பங்காளியாகவும் பல தடவை அனுபவித்திருக்கின்றேன். காதல் அரும்பிய காலங்களில், இளையராஜாவின் எண்பதுகளில் வந்த படப்பாடல்களை ரேப்றெக்கோடரில் போட்டுக் கேட்டுக்கொண்டே மேசையில் தலைசாய்த்துக் கனவு காண ஆரம்பித்துவிடுவேன்.

ஒன்று சொன்னால் சிரிக்காதீர்கள். பாடலில் வரும் ஆண் குரலாக நானும் பெண்குரலாகக் காதலியையும் உருவகப் படுத்தி அப்பாடலை ஒரு படப்பாடல் போலத் தான் பகற்கனவு காண்பேன். என் ஜீவன் பாடுது படத்தில் வரும் எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற இளையராஜாவின் பாடலைத் தலை சாய்த்துக் கேட்கும் நாள் என் காதலியை டியூசனில் நான் காணாத நாள் என்பது என் ரேப் றெக்கோடருக்குத் தெரியும்.

3. படம் பார்த்தல்

சிம்பு தனுஷ் காலமும் வந்துவிட்டது, இளையராஜாவின் மகன் யுவனும் இசையமைக்க வந்துவிட்டார். ஆனால் எனக்கு இன்னும் பிடித்தவை எண்பதுகளில் ராமராஜன் நடித்த படங்களும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே, அரண்மனைக் கிளி வகையறாக்கள். கரகாட்டக்காரன் வீசீடி போதாதென்று டீ.வீ.டியும் வைத்திருக்கிறேன். என் காரில் ஐந்து இசைத்தட்டுக்களைப் பொருத்திக் கேட்கலாம். அந்த ஐந்தும் பெரும்பாலும் எண்பதுகளில் ராஜா போட்ட மெட்டுக்கள்.
அதிகம் சென்ரிமென்ற் கலந்த அன்பே சிவம், பிளாக் போன்ற படங்களைப் பார்த்தால் கண்ணீர் வருவது என்னை மீறிய சக்தி ;-).




4. குழந்தைகள் மீதான நேசிப்பு

Finding Nemo என்ற படத்தை வெள்ளைக் குழந்தைகள் தம் பெற்றோருடன் தியேட்டர் வந்து பார்க்கும் போது தனி ஆளாக அந்தக்கூட்டத்தில் படம் பார்த்த பயல் நானாகத்தான் இருப்பேன். Lion King மூன்று பாகங்களையும் டீவீடியில் வாங்கிப் பொக்கிஷமாக வைத்திருக்கின்றேன். கூடவே Madagascar, டிஸ்னியின் பெரும்பாலான கார்ட்டூன் தொகுப்பு வீடியோக்கள் இன்னும் சில உதாரணங்கள்.

என்னுடைய படுக்கையில் tickle me Elmo என்ற பொம்மை இருக்கிறது (பார்க்க படம் ), அதனுடைய வயிற்றை அமுக்கி அது குலுங்கிக் குலுங்கிச் சிரித்து ஓய்ந்த பின் தான் எனக்குத் தூக்கம் வரும்.

ஊரில் இருக்கும் போது பக்கத்து வீட்டுப் பிள்ளைகளைப் பிராய்க்குக் காட்ட உப்பு மூட்டை, நுள்ளுப்பிறாண்டு கிள்ளுப் பிறாண்டு விளையாட்டுக் காட்டிய பழக்கம் இன்னும் தொடர்கிறது. வார இறுதி நாட்களில் காலை 10 மணிக்கு முன் Mc Donalds சென்று அங்கு காலை உணவு சாப்பிட வரும் குழந்தைகளை வேடிக்கை பார்ப்பது ஒரு சுகம். விருந்து நடக்கும் வீடுகளில் பெரும்பாலும் பெரியோரின் பேச்சுக் கச்சேரியைத் தவிர்த்துக் குழந்தைகளோடு விளையாட்டுக் காட்டி அவர்கள் சிரிப்பதை ஆயுள் முழுவதும் பார்க்கப்பிடிக்கும்.

சமீபத்திய சாதனை: கடந்த இரு வாரம் முன் ஒரு கலியாண இரவு விருந்தில், பிறந்து பத்து மாதமான ஒரு குழந்தையோடு வந்த பெற்றோர் இசைக்கு ஆடத் தொடங்கத் தனியே தன் வண்டியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை வாரியெடுத்து என் தோளில் சாய்த்து தூக்கம் கொள்ளவைத்து விருந்து முடிவிற் தான் அதன் தாயிடம் கொடுத்தேன்.

5. வாசிப்பும் உலாத்தலும்



1995 ஆம் ஆண்டு நான் அவுஸ்திரேலியா வந்த நாள் முதல் ஆனந்த விகடனைச் சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. உதாரணத்துக்கு இப்பதிவில் நான் மேலே இணைத்துள்ள ஆனந்த விகடன் வெளிவந்த ஆண்டுகளைப் பாருங்கள். இன்னும் எனக்கு காமிக்ஸ் புத்தகங்கள் கொள்ளைப் பிரியம் (பார்க்க படம்). 1995 ஆம் ஆண்டு மணிச்சித்ரதாளு படம் வெளிவந்து ஷோபனாவுக்குத் தேசியவிருது அறிவித்ததை ஒரு ஆனந்த விகடனில் வாசித்துத் தெரிந்துகொண்டு முதன் முதலில் மணிச்சித்ர தாளுவில் ஆரம்பித்த மலையாளப் படம் பார்க்கும் அவா இன்னும் தொடர்கிறது. அதுவே பின் என் கேரள உலாத்தலாகவும் மாறிவிட்டது. கேரளாவில் கொஞ்சக் காலம் வாழக்கூடாதோ என்பதே இப்போது முளைத்திருக்கும் என் weird நினைப்பு.


போதுமா உஷா ;-)))

Friday, March 09, 2007

கொச்சின் - விட்ட குறை, தொட்ட குறை


கடந்த பதிவில் கொச்சின் பற்றிய புவியியல் மற்றும் வரலாற்று அம்சங்களைப் பின்னர் தருவதாகச் சொல்லியிருந்தேன்.கொச்சின் பற்றி அறியாத அன்பர்களுக்கு இது சிறு விளக்கத்தையும் ஆர்வத்தையும் உண்டுபண்ணும் என்ற ரீதியில் இப்பதிவு அமைகின்றது. அத்தோடு அங்கு நான் எடுத்த படங்களின் மீதியையும் காட்ட ஒரு சந்தர்ப்பம் இது. கேரள சுற்றுலாத்தலங்களின் உதவியுடன் தகவல்களைப் பெற்று இப்பதிவைத் தருகின்றேன்.

கொச்சி என்றும் கொச்சின் என்றும் அழைக்கப்படும் இத்துறைமுகப்பட்டினம்
எர்ணாகுளம் என்ற மாவட்டத்தில் உள்ளடங்குகின்றது. அரபியன் கடல் தொட்டு நிற்க தெற்கே குமாரகம், ஆலப்புழா மாவட்டத்தையும் கிழக்கே இடுக்கி, மேற்கே திரிச்சூர் பிரதேசங்கள் சூழ கொச்சின் அமைந்துள்ளது.

அரபிக்கடலின் மகாராணி என்ற செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இவ்விடம் கேரளாவின் வர்த்தகப் பட்டினமாகவும் கொள்ளப்படுகின்றது. அதை உணர்த்துமாற் போலப் பண்டைய கால வரலாற்றுத் தரவுகளின் படி பிரிட்டிஷார், அரேபியர்கள், சீனர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் வந்து வாணிபம் நடாத்திப் போன இடமாக இருக்கின்றது. மேற்குலகத்தவர் முதன்முதலில் கைப்பற்றிய இந்தியப் பிரதேசம் இதுவாகும். கொச்சின் துறைமுகம் ஒரு வர்த்தகக் கேந்திரமாக இருந்ததால் அதிகம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விடயம் இல்லாவிட்டாலும், குறிப்பாக கோவளம் கடற்கரையில் காணும் சுகம் இல்லாவிட்டலும், வரலாற்றுப் பெருமை மிக்க துறைமுகத்தைப் பார்க்கும் வாய்ப்பாகவும் சீன வல என்று மலையாளத்தில் அழைக்கப்படும் chinese net ஐப் பார்க்கவும் இந்தப் பயணத்தை ஏற்படுத்த வேண்டும். சீன வலை முறைப்படி சீனாவிற்கு வெளியே கொச்சினில் மட்டுமே மீன் பிடிக்கப்படுகின்றது. சமாந்தரமாக நீண்ட வலையமைப்பு ஏற்படுத்தி வலையின் மேற்புறம் மீனவர் நடந்து சொல்வதற்கான வசதியையை உருவாக்கி வித்தியாசமானதொரு முறையில் மீன் பிடிக்கப்படும் முறையைக் கட்டாயம் பார்க்க இது ஒரு அரிய சந்தர்ப்பம். (பார்க்க, இப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள்)

ஒல்லாந்தர் 1530 இல் கோவாவிற்குத் தம் பிராந்தியத் தலைநகரை மாற்றும் வரை 1503 ஆம் ஆண்டிலிருந்து கொச்சினே தலைப்பட்டினமாகத் திகழ்ந்தது. 2408 சதுர கி.மீ பரப்பளவில் இந்தப்பிரதேசம் உள்ளது. என்னுடைய அனுபவப் படி திருவனந்தபுரப் புறச்சூழ்நிலையிலிருந்து மாறுபட்டே இப்பிரதேசம் உள்ளது. ஒரே மாநிலத்துக்குள்ளேயே சில வாழ்வியல் மற்றும் நடைமுறை வேறுபாடுகளையும் காணக்கூடியதாக இருந்தது.
கொச்சினில் நான் பார்த்த சில இடங்களை அடுத்த பதிவில் தருகின்றேன்.
வரும்........