Social Icons

Pages

Tuesday, October 27, 2009

பாங்கொக் நகரத்துக் கோயில்கள்

பாங்கொக்கில் தங்கியிருந்த முதல் நாள் சுற்றுலாவுக்காக நான் ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த சுற்றுலாகப் பணியகத்தின் வழிகாட்டி வந்து என்னை அழைத்துப் போனாள், எனக்காக ஹோட்டலின் எதிர்த்திசையில் கார் காத்து நின்று கொண்டிருந்தது. முதலில் நாங்கள் போன இடம் Wat Pho என்ற புகழ்பெற்ற பெளத்த ஆலயம். இருநூறு வருடங்களுக்கு முற்பட்ட பழமையான இந்த ஆலயத்தில் மிக நீண்ட சயன நிலையில் இருக்கும் தங்க நிறத்துப் புத்தரைப் பார்க்க என்றும் கூட்டம் இருக்கும்.

நாங்கள் போன நாள் பெளத்தர்களுக்கு ஒரு விஷேட நாளாக இருந்ததால் உள்ளூர் மக்களின் கூட்டமும் திரண்டிருந்தது. 45 மீட்டர் நீளமும் 15 மீட்டர் உயரமுமான அந்தப் புத்தரைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றது. ஆலயத்தின் உள்ளரங்கத்தில் ஒரு ஓரமாக வரிசை ஒன்று நீண்டு கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது. இந்த ஆலயத்துக்கான தனித்துவமான வழிபாட்டினை மேற்கொள்ள உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரஜைகள் என்ற பேதமில்லாமல் இருக்கின்றது அந்த வரிசை. தாய்லாந்து நாட்டுக்கே உரிய பாரம்பரிய மசாஜ் இந்த ஆலயத்தில் இருந்து தான் தோற்றம் பெற்றது என்று சொல்கின்றார்கள்.



ஆலயச் சூழலில் வலம் வரும் போது பள்ளிச் சிறுவர் கூட்டம் தம் கலாச்சாரச் சுற்றுலாவுக்காகத் திரள்வது தெரிகின்றது. கூடவே இன்னொரு பகுதியில் சிறுவர்களுக்கு பெளத்தமதப் பிரசாரத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றார் ஒரு துறவி. நான்கு மன்னர்களுக்கான நினைவிடங்களும் இங்கே அமைக்கப்பட்டு பெருமைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.

தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தின் தந்தையான Hermit doctor (Ruesee) இன் உருவச் சிலையும் அவருக்கு முன்னே மருந்து தயாரிக்கப் பய்ன்படும் அம்மிக்குழவியும்

புத்தர் சிலையில் மினுமினுவென்று இருந்த தங்க மேற்பூச்சைச் சுரண்டித் தன் நெற்றியில் வைத்தாள் என்னுடன் வந்த வழிகாட்டி. அதை நெற்றியில் இடுவதால் புத்தரின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாம். பலர் இப்படிச் சுரண்டியதால் புத்தர் நிறமிழந்து போய்க் கொண்டிருக்கிறார்.

Grand Palace Complex

1782 இல் முதலாம் இராமா என்ற அரசரின் ஆளுக்கைப் பிரதேசமாக மாற்றப்பட்ட இந்தப் பகுதி 218,400 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அரச வாசஸ்தலத்தோடு, Emerald Buddha என்ற பெளத்த வழிபாட்டிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்துக்குப் போகும் போது இன்னொரு கட்டுப்பாடும் விதிக்கப்படுகின்றது. அதாவது ஆண்கள், பெண்கள் என்று எல்லோருமே அவர்களுக்கு கொடுக்கப்படும் தனித்துவமான முழுநீளக்கை கொண்ட ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் என்பது விதிவிலக்கற்ற விதிமுறை.




Temple of the Emerald Budda (Wat Phra Kaew)

கி.பி 14 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் சிலையைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் இது என்று கொள்ளப்படுகின்றது. தாய்லாந்து நாட்டுக்கே உரிய சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த, தங்க நிறத்தில் தகதகக்கும் இவ் ஆலயத்தின் உட்சுவரில் இராமாயணக் கதையைச் சித்திரமாகத் தீட்டியிருக்கின்றார்கள். கம்போடியா நாட்டின் புகழ்பெற்ற அங்கோர் வாட் ஆலயத்தின் மாதிரி அமைப்பை இங்கே உருவாக்கி இருக்கின்றார்கள்.



Temple of the Dawn (Wat Arun)

கைமர் மன்னர்களின் தனித்துவமான கட்டிட அமைப்பினைக் கொண்ட மிக நீண்ட ( கிட்டத்தட்ட 105 மீட்டர்) கூம்பு வடிவக் கூரையைக் கொண்ட இவ்வாலயத்தில் இந்து சமயக் கடவுளர்களின் சிலைகள் இருப்பது குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம். அந்த வகையில் சிவன், இந்திரன், பிரம்மா, சக்தி போன்ற கடவுளர்களின் உருவச் சிலைகள் காணக்கிடைக்கின்றன. ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா, இந்த Wat Arun என்ற ஆலயப் பெயரில் Arun என்பது இந்தியக் கடவுளரான அருணனைக் குறிக்கின்றது என்கிறார்கள்.
ஆமாம், உதயத்துக்கான ஆலயம் என்று சிறப்பிக்கப்படும் இக்கோயில் அருணன் என்று இன்னொரு பெயரால் அழைக்கபடும் சூரியனின் கோயிலாகவே கொள்ளப்படுகின்றது.






உசாத்துணை: தாய்லாந்து வழிகாட்டி, சுற்றுலா வழித்தகவல் குறிப்புக்கள்