Social Icons

Pages

Wednesday, December 26, 2012

திடீர் திருப்பூர் பதிவர் சந்திப்பு

சில விடயங்களைச் செய்யவேண்டும் என்று ஏகப்பட்ட திட்டம் எல்லாம் போட்டிருப்போம் ஆனால் சொதப்பிவிடும். ஆனால் இன்னும் சிலதை எந்தவித முன்னேற்பாடுமின்றித்  திடுதிப்பில் தோணும்போது செய்ய நினைக்கும் போது இன்னும் சிறப்பாக வந்து விடும். அப்படியானதொரு நிகழ்வு தான் திருப்பூர் நண்பர்களை நான் சந்தித்த கதை.

கோயம்புத்தூருக்குப் போகிறேன் என்று ட்விட்டர் வழியாகச் சொன்னதும், என் நேசத்துக்குரிய ராஜநாயஹம் சார் "பிரபா, கோவையிலிருந்து திருப்பூர் பக்கம் தான்,  கண்டிப்பா நீங்க எங்க வீட்டுக்கு வரணும்" என்று அன்புக்கட்டளையிட்டார். எனக்கோ திருப்பூர் என்றார் டிவியில் பார்த்த பனியன், ஜட்டியைத் தவிர வேறொன்றும் தெரியாத நிலையில் மீண்டும் நண்பர் சதீஷிடம் அடைக்கலம் புகுந்தேன். அவரும் "மிஞ்சி மிஞ்சிப்போனா ஒண்ணரை மணி நேரம் தான் ஆகும், காலேல சீக்கிரமா போயிட்டு வந்துடலாம், நானே என் காரை எடுத்து வர்ரேன்" என்றார். இதற்குள் சென்னிமலை சி.பி.செந்தில்குமார், "இவ்வளவு தூரம் ஈரோடு வராவிட்டால் ஆட்டோ அனுப்புவோம்" என்று மிரட்டியிருந்தார். கோவையில் தங்கியிருந்த அந்த தீபாவளி தினத்துக்கு முதல் நாள் காலை யாரையும் சந்திக்கமுடியாத சூழல் வேறு. எனவே நண்பர் சதீஷை காலை ஏழரை மணிக்கெல்லாம் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரச்சொல்லியிருந்தேன். அவரும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார்.

சதீஷின் காரில் இளையராஜா ஒலிக்க, ரசித்துக் கொண்டே மீண்டும் பேச்சுக்கச்சேரியோடு பயணித்தோம் திருப்பூர் நோக்கி. திருப்பூரில் சந்திக்கவிருக்கும் நண்பர்களுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு போவோமே என்ற நினைப்பில் வழியில் இருந்த ஆனந்த பவனில் இனிப்புப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு மீண்டும் ஆரம்பித்தது பயணம். அவிநாசி ரோட்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் பாய்ந்தது கார். வழியெங்கிணும் இரு மருங்கிலும் தமிழ்ப்பெயர் தங்கிய கடைகளைக் காணும் போது முந்திய தினம் இரவு கோயம்புத்தூருக்குள் நுழைந்த அதே பரவசம் உள்ளூர இருந்தது.  நாங்கள் சென்ற அந்த அகலப் பெருந்தட வீதியின் சீரமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

வீதியை நோட்டம் விட்டுக் கொண்டே செல்போனில் ட்விட்டரின் டைம்லைனைத் தட்டிப்பார்த்துக் கொண்டேன். நண்பர் பரிசல்காரன் திருப்பூர் பதிவர் சந்திப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாதே எறு ஆதங்கப்பட்ட ட்விட் ஒன்று கண்ணில் சிக்கியது. அவருக்கு நான் முந்திய தினம் திருப்பூர் சந்திப்பைப் பொதுவாக டைம்லைனில் இட்டதைச் சொல்லி விட்டு மீண்டும் நோட்டம்.
அவிநாசியைத் தொடும் போது நண்பர் ராஜன் லீக்ஸ் நினைவுக்கு வந்தார். அப்படி ஒரு ஊர் இருப்பதே அவர் மூலம் தான் அறிந்து கொண்டதன் விளைவு அது. நாங்கள் சாவகாசமாகப் பயணித்து மணி பத்தை எட்டும் போது திருப்பூருக்குள் நுழைந்துவிட்டோம்.

 திருப்பூர் புகையிரத நிலையத்தில் இருந்து நண்பர் ஆகாய மனிதனின் அழைப்பு, தானும் சென்னிமலை சி.பி.செந்தில் குமாரும் அங்கிருப்பதாக.  "இதோ திருப்பூர் வந்தாச்சு அங்கேயே வருகிறோம்" என்று சொல்லிவிட்டு  ரயில் நிலையம் நோக்கிப் போனோம்.  எங்கே போகலாம் என்று அங்கேயே வைத்துத் திட்டம் தீட்டினோம். திருப்பூர்க்கார் ஆகாய மனிதனே தீர்மானித்து அங்குள்ள திருப்பூர்  மாநகராட்சி வெள்ளிவிழா நினைவுப்பூங்காவுக்குப் போகலாம் என்று முடிவு கட்டியாச்சு. நம் சந்திப்புக்கு வருவதாக இருக்கும் ராஜநாயஹம் சாருக்கும் அழைத்துச் சொல்லிவிட்டு, ட்விட்டரிலும் இந்தச் செய்தியைப் பகிர்ந்தோம்.

நண்பர் ஆகாய மனிதன் (யுவராஜ்) @onely1 பெயரைப் பார்த்தால் ஏதோ ஐம்பதைத் தாண்டிய மனுஷர் என்று நினைத்தால் பெயருக்கும் அவருடைய சிந்தனைகளுக்கும் சம்பந்தமில்லாத ஒரு இளையவர். ஈழத்தமிழ் மக்கள் மீதும், உரிமை மீதும் அவருக்கு இருக்கின்ற தீவிர அக்கறையை திருப்பூர் சந்திப்பில் வைத்துத் தெரிந்து கொண்டேன்.
 உண்மையில் நண்பர் சி.பி.செந்தில்குமாரை நேரே சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் இந்தப் பயணத்தில் அது நிறைவேறாது போய்விடுமே என்று நினைத்த எனக்கு அவர் ஈரோட்டிலிருந்து ரயிலில் இந்தச் சந்திப்புக்காகக் காலையிலேயே வந்தது நெகிழ வைத்தது. அதை அவருக்கும் சொல்லி என் நன்றியறிதலை வெளிப்படுத்தினேன்.  மனம் சோர்வாகிப்போன நாட்களில் எல்லாம் திரும்பவும் ஒரு முறை சி.பி.செந்தில்குமாரின் ட்விட்டுக்களையும், அவரின் பாணியில் கொடுக்கும் கலகல சினிமா விமர்சனங்களையும் படித்து வருபவன் நான்.  என் தலைமுடியை "திருவிளையாடல் படத்தில் வரும் முத்துராமன், தேவிகாவின் தலையை நோண்டுமாற்போல" நோண்டி என் கூந்தல் இயற்கையிலேயே கருப்பா? என்று ஆராய்ச்சியும் அங்கு நிகழ்த்தினார் சென்னிமலையார்.
சி.பி. செந்தில்குமாரின் தந்தையார் வைத்திருந்த ஐம்பது வருஷங்களுக்கு முந்திய திரைப்படப்பாடல்களைக் கொண்ட பாட்டுப் புத்தகங்களை எனக்குத் தந்து "இவை சிட்னியிலாவது பத்திரமாக இருக்கட்டும்" என்று கொடுத்த அந்தப் பொக்கிஷம் இப்போது பத்திரமாக என் வீட்டு நூலக அறையில் பாதுகாப்பாக இருக்கின்றது.

 ராஜநாயஹம் சாரின் எழுத்துக்களின் தீவிர அடிமை நான்,  நீண்ட அனுபவங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் அந்தப் பெரிய மனிதரின் கடைக்கண் பார்வை நம்மீதும் இருக்கின்றது என்ற பெருமை இன்றளவும் எனக்குண்டு.  பார்க்கிற்குத் தன் டூவீலரில் வந்து சேர்ந்தார் அவர். எனக்கென அவரின் நண்பர் சாரு நிவேதிதாவின் சிறுகதைத் தொகுதியைக் கொடுத்தார். தன் வீட்டிலேயே சந்திப்பை நடத்தியிருக்கலாம், மதிய உணவும் எடுத்திருக்கலாம் என்ற ஆதங்கத்தை சந்திப்பின் இறுதி வரை சொல்லி ஆதங்கப்பட்டார். அடுத்த தடவை அவர் வீட்டில் தான் நம் சந்திப்பு. இயக்குனர் கே.பாக்யாராஜோடு பணிபுரிந்த காலங்கள், சொல்லப்படாத சேதிகள் எல்லாம் அவரிடமிருந்து கொட்டின. ரசித்துக் கேட்டோம்.
 இந்தச் சந்திப்புக் குறித்து ட்விட்டர் மூலம் அறிந்து திருப்பூர்வாசி சத்திய மூர்த்தி அவர்களும் வந்து சேர்ந்தார். வந்ததன் பின்னர் அவரும் ஆகாய மனிதனின் அப்பாவும் நண்பர்கள் என்ற உண்மையும் அவர்கள் இருவருக்கும் தெரிந்தது. சமூக வலைத்தளங்களால் இந்த இளைய சமுதாயம் தம் நேரத்தைக் கட்டுப்பாடின்றி வீணடிக்கிறதே என்ற ஆதங்கம் தொனிக்க சத்தியமூர்த்தி அவர்களின் பேச்சு இருந்தது.

இடமிருந்து வலம்: ஆகாய மனிதன், நான், சதீஷ், சி.பி.செந்தில்குமார், ராஜநாயஹம் சார், பரிசல்காரன்

பரிசல்காரன் (கிருஷ்ணகுமார்)  தன்னுடைய மகள்களுடன் தீபாவளிக்கான கொள்வனவுக்குப் போகும் வழியில் நம்மையும் சந்திக்க வேண்டி வந்திருந்தார்.  அவரின் எழுத்தில் இருக்கும் அதே நிதானம் நேரில் சந்திக்கும் போதும். ஒடிசாவில் தன் மடிக்கணினியைத் தொலைத்த வரலாற்றிலிருந்து திருப்பூர் வாழ்வியலில் கார்மெண்ட் இண்டெஸ்ட்ரி குறித்து அவர் பகிர்ந்து கொண்ட பல விடயங்கள் சுவாரஸ்யமாக இருந்தன.  அதுவரை குழப்பமாக இருந்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் குழப்பங்களுக்கு  விடையும் கிடைத்தது.  நான் சந்திக்கவிருந்த நண்பர் பட்டியலில் இருந்த பரிசல்காரனும் தன்னுடைய குடும்பப் பொறுப்போடு பொறுப்பாக இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டது மட்டற்ற மகிழ்ச்சி.
 ராஜநாயஹம் சார், பரிசல்காரனின் மகள்களை அழைத்துக் கொண்டு போய் கூல் ட்ரிங்ஸ் வாங்கிக் கொடுத்து விட்டு நம் சந்திப்புக்குமென நீராகாரம் வாங்கி வந்தார். சமீபகால மின்தடை, சாயத்தொழிற்சாலைக் கழிவுகளை ஆற்றில் கலப்பதற்கு எதிரான நடவடிக்கைகளால் திருப்பூரின் முதுகெலும்பான ஆடை உற்பத்தி, சாயம் தீட்டும் தொழில் போன்றவை பாதிக்கப்படும் இன்றைய சூழலும் குறித்த கலந்துரையாடலில் முக்கியமாகப் பேசப்பட்டவை.
மூன்று மணி நேரம் நிகழ்ந்த அந்தச் சந்திப்பை, பார்க்குக்கு வந்தவர்களே ஏதோ அரசியல் கூட்டம் என்று நினைக்குமளவுக்கு ஆக்கிவிட்டு, ஏதாவது ஆங்கே வயிற்றுக்கும் ஈயப்படும் என்று பக்கத்து ஓட்டலுக்குப் போகலாம் என்று முடிவானது. ராஜநாயஹம் சாரும், பரிசல்காரன் மகள்களுடனும் அங்கேயே விடை கொடுத்தனர்.



படத்தின் இடது மூலையில் சத்தியமூர்த்தி அவர்கள்.

சத்தியமூர்த்தி அவர்களோடு, ஆகாய மனிதன், சி.பி.செந்தில்குமார், சதீஷ் ஆகியோரோடு திருப்பூர் சரவணபவன் ஹோட்டலுக்குப் போனோம். சோறு, கறி சாப்பாடு கிடையாது என்று கைவிரிக்க, சென்னிமலை முகம் சுருங்க டிபனோடு அரங்கேறியது சாப்பாட்டுக் கச்சேரி. அப்போது அவிநாசியில் இருந்து இட்ஸ்பிரசாந்த் என்ற பிரசாந்தும் வந்து சேர்ந்தார். சாப்பாட்டில் இல்லாத காரம் அவரின் பேச்சில், கிட்டத்தட்ட தெலுங்கு ஹீரோ ரேஞ்சில்.  அங்கிருந்தோர் எல்லோருக்கும் இளையவராக அவர்.  கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் நிகழ்ந்த திருப்பூர் சந்திப்பு சரவணபவனில் நிறைவுக்கு வந்தது.

கோயம்புத்தூர் நோக்கி நண்பர் சதீஷுடன் பயணிக்கும் போது நண்பர் @6SayS இன் அழைப்பு. தான் அவிநாசியில் தான் கடை வைத்திருப்பதாகவும்  போகும் வழியில் சந்திக்குமாறும் வேண்டினார்.

அவிநாசியில் மின் உபகரணங்களை விற்கும் கடையைச் சொந்தமாக நடத்திவரும் இளைஞர் அவர். உருவத்துக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லாமல் அவர் தன்னுடைய தொழில் குறித்துப் பேசும் போது எனக்கும் சேர்த்து நண்பர் சதீஷ் வியந்தார். தமிழகம் எதிர்நோக்கும் மின் தடைக்கு மாற்றீடாக சூரிய ஒளி மின் பிறப்பாக்கிகளை தானே எடுத்துச் சென்று வீடுகளுக்குப் பொருத்தும் அனுபவங்களையும், வாடிக்கையாளர் சேவை எவ்வளவு தூரம் ஒரு வியாபாரத்தில் முக்கியமானது என்றும் அவர் பேசப் பேச, இந்தப் பிள்ளை பிழைக்கும் என்று மனதில் எண்ணிக்கொண்டேன். அவர் பொழுதுபோக்கிற்காகப் புகைப்படங்களை எடுத்து வருகிறார் என்பதை வைத்திருந்த உயர்ரக காமெரா பறை சாற்றியது. அந்தத் தீபாவளிக்கு முந்திய நாளிலும் கடையில் தனியாளாக இயங்கிக் கொண்டிருந்த அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டோம்.
உண்மையில் எனது இந்த ஆண்டுப் பயணத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த சந்திப்புக்களில் மிக நீண்டதொரு நிறைவான சந்திப்பாக திருப்பூர் சந்திப்பு அமைந்து விட்டது.

Wednesday, December 19, 2012

சென்றும் செல்லாத கோயம்புத்தூர் பயணம்

கோழிக்கோடுவில் இருந்து கோவை நோக்கிய பஸ் பயணத்தில், எனக்கு அடுத்த பக்கத்தில் இலங்கையில் இருந்து வந்திருந்த கன்னியாஸ்திரிகள் யாழ்ப்பாணத்தமிழில் அளவளாவிக்கொண்டிருந்தனர்.  டிவியில் சரத்குமார் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். நானோ யன்னலோர இருக்கையில், அந்த இருளிலும் ஏதாவது வெளிச்சத்தில் தென்படும் இடங்களைத் தேடித் தேடிப் பார்த்துக் கொண்டே வந்தேன். பாலக்காடு வந்தது. நான் அடுத்த பயணத்தில் வரத் தீர்மானித்திருக்கும் ஊர் இது. நிறையப்படங்களில் பார்த்ததை நேரே காணும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு உணவகத்தில் இரவு ஆகாரம் கழிப்பதற்காக பஸ் நிறுத்தப்பட்டது. நான் சுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இருபது நிமிட வாக்கில் மீண்டும் பயணம். மெல்ல மெல்ல கோவை மண்ணை பஸ் தொடுவதை உணர்த்துமாற்போலத் தமிழில் பெயர்ப்பலகைகள், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து முழுமையான தமிழ்ச் சூழலை உணர்த்தும் வண்ணம் இரவு விளக்கொளியில் சுற்றும் முற்றும் தமிழ்ப் பெயர்கள், எங்கும் தமிழ்ப் பெயர் தாங்கிய கடைகள். ஆகா இதைப் பார்க்கும் போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. கோயம்புத்தூர் என்றாலே கோவை சரளாவையும், ஜி.டி.நாயுடுவையும், அவ்வூர் வட்டார மொழி வழக்கை மட்டுமே அதுவரை அறிந்து வைத்திருந்தேன். கோவைக்கு வந்து தனது முதற் தரிப்பில் ஆட்களை இறக்கியது பஸ், நானும் இறங்கிக் கொண்டேன்.

 நான் இந்தியப்பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக ட்விட்டரில் பகிர்ந்தபோது, மிகுந்த அக்கறையோடு பயண ஏற்பாடுகளை அவ்வப்போது விசாரித்து, தானே எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாகச் சொல்லி நெகிழ வைத்தவர் நண்பர் சதீஷ் (@saysatheesh). இத்தனைக்கும் இரண்டு வருடம் முகம் காணாத நட்பு, ஒத்த இரசனை மட்டுமே நம்மை நெருங்க வைத்தது. மாலையில் கோழிக்கோடுவில் இருந்து பஸ்ஸில் கோவைக்கு வரும்போது இருட்டி விடும் எனவே நானே உங்களை பஸ் நிறுத்துமிடத்துக்கு வந்து ஹோட்டலுக்கு அழைத்துப் போகிறேன் என்றார். எனக்கோ ஏன் இவரைக் கஷ்டப்படுத்துவான், அடுத்த நாள் வேலை நாளாகக் கூட இருக்குமே என்று அவரிடம் சொன்னாலும் கேட்கவில்லை. "அது ஒண்ணும் பிரச்சனை இல்லை, பஸ் வர்ர நேரம் எத்தனை மணிக்குன்னு கேட்டுச் சொல்லிடுங்க நானே என் காரில் வந்து காத்திருக்கிறேன்" என்று சொன்னார்.
எனக்காக நண்பர் சதீஷும் மனைவியும் காத்திருந்தார்கள். முதல் முறை நேரே சந்திக்கிறோம், எனக்கென்னவோ பள்ளிக்கால நண்பரை நீண்ட நாட்களுக்குப் பின் கண்ட உணர்வு. நான் கோவையில் இருந்த இரண்டு இரவு, ஒரு பகல் பொழுதை நண்பர் சதீஷ் இருக்கிறார் என்ற பாதுகாப்புணர்வை ஏற்படுத்திவிட்ட அவரை எப்படி மறப்பேன்.

கோவை வாழ்க்கையைப் பற்றிப் பேசிக்கொண்டே நண்பர் சதீஷ் காரில் என்னை பார்க் ப்ளாஸா ஹோட்டலுக்கு அழைத்துப் போனார்.  தொடர்ச்சியான 14 மணி நேரத்துக்கும் மேலான மின்வெட்டால் கோயம்புத்தூர் போன்ற தொழிற்பேட்டை நகரம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதை அந்தக் கார்ப்பயணத்தில் சதீஷின் உரையாடலில் உணர்ந்து கொண்டேன்.

அடுத்த நாள் திருப்பூர் பயணத்துக்கும் தம் காரிலேயே வந்து அழைத்துப் போவதாகச் சொல்லிவிட்டு விடைகொடுத்தார். 

கோயம்புத்தூருக்குப் பயணம் செல்வதாகத் தீர்மானித்து இணையத்தில் தேடியபோது வழிகாட்டிய ஹோட்டல் பார்க் ப்ளாஸா. அந்த ஹோட்டலுக்கு அழைத்த போது "வணக்கம்" என்று வரவேற்பாளினி சொன்ன அந்த ஒற்றைச் சொல்லால் மறுபேச்சில்லாமல் தங்கும் அறையைப் பதிவு செய்துவிட்டேன். ஆனால் பின்னர்தான் தெரிந்தது கோவை நகரிலிருந்து வெகு தூரம், தள்ளி விமான நிலையத்துக்கு அருகாமையில் அந்த ஹோட்டல் இருப்பதை. இதனால் கோயம்புத்தூர் போயும், அந்த ஊரைப் பார்க்கமுடியாமலேயே போய் விட்டது. அடுத்த நாள் திருப்பூர் பயணமே முழு நாளையும் கவர்ந்து விட்டது. காசியண்ணன் கூட வேடிக்கையாக "இவர் எங்கே கோயம்புத்தூருக்கு வந்தார்" என்று கலாய்த்தார். பார்க் ப்ளாஸா உயர் தர நட்சத்திர விடுதி என்பதால்  பங்கமில்லாத சேவையை வழங்கியது மனத்துக்குத் திருப்தியாக இருந்தது.


அடுத்த நாள் கோயம்புத்தூர் வாழ் நண்பர்களைச் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தபோது பலரும் தீபாவளிக்கு முதல் நாளான அன்று பண்டிகைக்காலக் கொள்வனவிலும், சிலருக்கு வேலை நாள் என்பதாலும் அன்று மாலையே நான் தங்கியிருந்த பார்க் ப்ளாஸாவில் சந்திப்போம் என்று முடிவானது.

பகல் முழுதும் என்னோடு திருப்பூருக்கு வந்த களைப்பு, வீட்டுக்காரம்மாவின் புகார் எதுவும் இல்லாமல்  முதல் ஆளாக நண்பர் சதீஷ் வந்தார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் காசியண்ணன் (@akaasi) தீபாவளிப் பலகாரத்துடன் வந்தார். தமிழ்மணம் இணைந்த 2005 காலத்தில் இருந்தே காசியண்ணனோடு இணையம் மூலம் ஏதோ ஒருவகையில் தொடர்போடு இருக்கும் மகிழ்ச்சியில் இருப்பவன் நேரை கண்டதும் இன்னும் இரட்டிப்பான சந்தோசம். ஹோட்டல் வாசல்புறம் நிற்காதே உள்ளுக்கு ஓடு என்று நுளம்புகள் (கொசுக்கள்) துரத்தின. உட்புறமிருந்த உணவகத்தில் போய் உட்கார்ந்தோம். நண்பர் தேங்கா என்று செல்லமாக அழைக்கப்படும் தீபக் @DKCBE வந்தார். ட்விட்டரில் குறும்புத்தனமாக இருக்கும் ஆளுக்கும் உருவத்துக்கும் சம்பந்தமே இல்லாத பரம சாது அவர். கோவைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்துக்கான காரணகர்த்தா அறிவுக்கரசு சார் @arivukkarasu வேலை முடித்து அரக்கப்பரக்க ஓடிவந்து தாமதத்துக்கு வருந்துவதாகச் சொன்னார். என்னளவில் அவர் எனக்கு உறவினர் போன்று அடிக்கடி பரிவோடு ட்விட்டரில் விசாரிப்பவர், எதிர்பார்த்த அதே அறிவுக்கரசு சாரை நேரே பார்த்தேன். அந்த நாள் முழுதும் என்னோடு நேரத்தைச் செலவிடவில்லையே என்ற கவலை சந்திப்பு முடியும்வரை அவருக்கு இருந்தது. எனக்காக The Best of Neil Diamond என்ற இசைவட்டைக் கொண்டு வந்து பரிசளித்தார்.  கோவைச் சந்திப்பு பற்றி அறிந்து நண்பர் பிழைதிருத்தி @PizhaiThiruthi  அங்கு வந்தபோதுதான் அவர் இங்கே இருப்பதே தெரியும். ட்விட்டரில் அவர் கொடுக்கும் அதே பாணியிலான கலகலப்பும், கோபமும் கொண்ட கலவை அவர். ட்விட்டரில் புதிதாக இணைந்து கொண்ட நண்பர் அர்விந்த் பிரபு @arrvindprabhu டைம்லைனில் வந்து  நானும் வரலாமா என்று அப்பாவித்தனமாகக் கேட்டார். என்ன கேள்வி, உடனே வாருங்கள் என்று போட்டதும் அவரும் இன்னொரு இடத்துக்குப் போக இருந்தும் நடுவில் இந்தச் சந்திப்பைக் கண்டுவிட்டுப் போகலாம் என்று வந்து சேர்ந்து கொண்டார்.  நண்பர் பரத் இற்குப் போக்குவரத்துச் சிக்கல் இருப்பதால் வரமுடியவில்லை என்று வருத்தப்பட்டார். மினிமீன்ஸ் கூட தீபாவளிக்கு முதல் நாள் என்பதால் வருவதில் சிக்கல் என்று தகவல் அனுப்பினார். இடமிருந்து வலம்:பிழை திருத்தி, அர்விந்த் மனோ, தீபக், நான், காசி அண்ணன், அறிவுக்கரசு சார்



 (படத்தில் எனக்குப் பக்கத்தில் சிரித்த முகத்தோடு சுதர்சன் கோபால்)
நான் எதிர்பாக்காமல் ஆனால் நீண்ட நாட்களாகச் சந்திக்கவேண்டும் என்று நினைத்திருந்த நண்பர் சுதர்சன் கோபால் வந்தது எனக்கு இன்ப அதிர்ச்சி.  இவர் லண்டனில் இருக்கிறார் என்று நினைத்திருந்தேன் ஆனால் ஊருக்கு வந்துவிட்டதாகச் சொன்னார். திரையிசைப்பாடல்களில் இருந்து இலக்கியம் வரை ஒத்த அலைவரிசையில் இயங்குபவர், நண்பர் ஜீ.ராவின் ஜெராக்ஸ் என்பேன். கையோடு கொண்டு வந்திருந்த Splendours of Royal Mysore என்ற அரிய நூலைக் கொண்டு வந்து கொடுத்தார். எல்லோரும் நிறையப் பேசியதால் அதிகம் சாப்பிடவில்லை, ஆனால் மனசு நிறைந்தது. உண்மையில் அந்தப் பரபரப்பான தீபாவளிக்கு முதல் நாள்இவர்கள் எல்லோரும் வந்திருந்து என்னைச் சந்தித்ததோடு, தங்களுக்குள் ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்த முடிந்ததால் எனக்கு ஒரு நிறைவான சந்திப்பாக இருந்தது.


அடுத்த தடவையாவது கோயம்புத்தூருக்கு வாங்க, மருதமலையில் பதிவர் சந்திப்பைப் போட்டுடுவோம் என்ற காசியண்ணன் வாக்கை அடுத்த ஆண்டு முடிவதற்குள் நிறைவேற்ற வேண்டும்.

முதற்படம் நன்றி:  Connect Coimbatore





Thursday, December 13, 2012

கோழிக்கோட்டில கல்யாணம்


 குருவாயூரில் நிறைந்த தரிசனம் கிடைத்த திருப்தியில் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தேன்.  காலை ஆறுமணிக்கெல்லாம் அங்கே சாப்பிட எதுவும் கிட்டவில்லை, தண்ணீரால் வயிற்றை நிரப்பிவிட்டு, வரவேற்புப்பகுதிக்கு வந்து ஹோட்டல் கணக்கைத் தீர்த்துவிட்டு அவர்கள் ஒழுங்கு செய்த வாடகைக் கார் மூலம் காலை ஆறரைக்கு கோழிக்கோடு நோக்கிப் பயணம் ஆரம்பித்தது.

கோழிக்கோடுவில் நண்பர் ஜிபேஷ் இன் கல்யாணம் காலை பத்து மணிக்கு. அவர் எங்கள் நிறுவனத்தின் இந்திய BPOவில் பணியாற்றியவர், ஐந்தாண்டு காலப் பழக்கம். உங்களுடைய கல்யாணத்துக்கு நான் அங்கு வருவேன் என்ற அவருக்கு நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவேண்டியே இந்தப் பயணம்.
வாடகைக்கார் ஓட்டுனர் மனோஜ் ஐப் பார்த்தால் நடிகர் ஜெயராமின் தம்பி மாதிரித் தோற்றம், குங்குமக் கீற்றை நெற்றியில் இட்டு, பட்டுச்சட்டையும், வேஷ்டியுமாக. அவரோடு பேச்சுக் கொடுத்தேன்.  குருவாயூர் கோயிலின் விசேஷத்தைப் பேசிக்கொண்டே வந்தார். அவரின் தந்தை தான் கோயிலில் நிதமும் நடக்கும் கிருஷ்ணாட்டத்தில் ஆடும் முக்கிய கலைஞராம்.  அந்தப் பயணம் பெருந்தெருவில் இருந்து சந்து பொந்தெல்லாம் தொட்டுப் பயணித்தது.  கேரளத்தின் மிகப்பிரபலமான பாரதப்புழா ஆறு நாக்கு வரண்டு தென்பட்டது.  அந்த அதிகாலை வேளையிலும் கிராமத்துப் பையன்கள்  கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். காலை எட்டுமணிக்கெல்லாம்  கோழிக்கோடு சென்று திருமணம் நடக்கும் மண்டபமும் போயாச்சு. காவலாளி தவிர யாருமில்லை.  அவர் என்னைக் கண்டதும் சிரித்து ஏதோ மலையாளத்தில் சொன்னார், நானும் அசட்டுச் சிரிப்போடு தலையை ஆட்டி வைத்தேன். உள்ளே போய் உட்காரச் சொல்வது மட்டும் புரிந்தது. கையில் இருக்கும் இரண்டு உடுப்புப் பொதிகளை இறக்கி வைத்துவிட்டு, கல்யாண மண்டபத்தில் அடுக்கப்பட்ட கதிரைகளில் ஒன்றில் ஆசுவாசப்படுத்திக் கொண்டே சூழவும் பார்த்தேன், மண்டபம் எல்லாம் அலங்கரித்து இருந்தது.  இன்னும் இரண்டு மணி நேரம் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் இருக்கவேண்டுமே என்று மனசு அங்கலாய்க்க, அந்த நேரம் நண்பர் ஜிபேஷ் என் செல்போனில் அழைத்தார். நான் கல்யாண மண்டபத்தில் இருக்கும் விஷயத்தைக் கேட்டுப் பதைபதைத்து, ஆளை அனுப்புகிறேன் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுங்கள் என்றார். கொஞ்ச நேரத்தில் அவரின் சகோதரரின் டூவீலர் வந்தது.

எங்கள் யாழ்ப்பாணத்துக் கல்யாணத்தில் காலையிலேயே சுற்றமும், உறவுகளும் வந்து மாப்பிள்ளை வீட்டில் குவிந்து விடுவார்கள். காலைச்சாப்பாடு, தேனீர் எல்லாம் அங்கேயே. அதே போன்றதொரு சூழல் ஜிபேஷ் இன் வீட்டில். அந்தவீட்டின் அமைப்பும், சூழலும் கூட எனக்கு யாழ்ப்பாணத்தில் இருப்பது போல ஒரு பிரமை. சிட்னியில் இருந்து வந்திருக்கிறேன் என்று உறவினர்கள் அறிந்ததும் ஏகத்துக்கும் மரியாதை.  உண்மையில் நம் ஈழத்தவருக்கும் கேரளத்தவருக்குமான பண்பாட்டுத் தொடர்புகள் குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொண்டால் பல சங்கதிகள் கிட்டும் போல.
மாப்பிள்ளைக்கான சடங்குகள் ஆரம்பித்தன. மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்தபின்னர் பெரியோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். மணமகனின் காரிலேயே அவருக்கு அருகில் அமர்ந்து கல்யாண மண்டபம் சென்றேன்.

அங்கே எமது நிறுவனத்தின் இந்திய BPO வில் பணிபுரிந்த நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள். கிட்டத்தட்ட பத்துப்பேர் இதுவரை ஒருவர் முகத்தையும் பார்த்திராது அது நாள் வரை தொலைபேசியில் மட்டுமே  இருந்த நாம், எல்லோரும் ஆசை தீரப் பேசிக்கொண்டோம், ஒருபக்கம் கல்யாணச் சடங்குகளையும் பார்த்துக் கொண்ட.   பெண் வீட்டுக்காரர் தமிழ் நாடு என்பதால் ஒருபக்கம் தமிழ் மணம் கமிழ்ந்தது. சாப்பாட்டு நேரம்கூடவே  கேரளத்துப் பாயாசம். கேரளாவில் தண்ணீருக்குப் பதில் வெந்நீரில் கலக்கிய ஜீரக நீரைக் கொடுப்பார்களாம். முதலில் அதைப் பரிமாறினார்கள். . வாழையிலை போடப்பட்டு கிட்டத்த பத்துவிதமான காய்கறிகளோடு, சோறும் பரிமாறப்பட்டது. அடக்கிவைத்திருந்த பசி சோற்றையும் கறிகளையும் அள்ளியணைத்து உள்ளிழுத்துக் கொண்டது.

கல்யாணக் காட்சியை முடித்துக் கொண்டு,  முதன் முதலாக நாடுகாண் பயணி வஸ்கொடகாமா  வந்திறங்கிய இடமான கோழிக்கோடுவின் கப்பாட் கடற்படுக்கையைக் காணவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மணி ஒன்றாகிவிட்டது. மாலை ஐந்துமணிக்கு கோயம்புத்தூருக்குச் செல்லும் பஸ் பிடிக்கவேண்டும் என்று அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டேன். உண்மையில் இயற்கை எழில் நிறைந்த கோழிக்கோடு சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாகத் தரிசிக்கவேண்டிய இடம்.  அடுத்த பயணத்தில் வஸ்கொடகாமா கால்வைத்த இடத்துக்குப் போவோம் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டேன். மீண்டு மாப்பிள்ளை விட்டுக்குப் பயணம்.

மாலை நேரம் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை வரவேற்றுப் பலகாரப் படையலும் தேனீர் விருந்தும். நம்மூர் புட்டு வாழை இலையில் இருந்து என்னைத் தெரியும் தானே என்று சொல்லுமாற்போல இருந்தது.  ஜிபேஷின் பள்ளிக்கால நண்பர் வசந்த் ஏதோ பலவருஷங்கள் பழகிய நண்பனைப் போல ஒட்டிக் கொண்டார். அவரே என்னை கோழிக்கோடு பஸ் நிலையம் வரை அழைத்து வந்து, இங்கு வந்து விட்டு வெறுங்கையோடு போகக்கூடாது என்று சொல்லி ஒரு கிலோ நேந்திரம் பழம் (வாழைப்பழம்) சிப்ஸ், இன்னொரு கிலோ அல்வா வாங்கிக் கையில் திணித்தார். இந்தக் கடையின் நேந்திரம் பழம் சிப்ஸ் வெகு பிரபலம் தெரியுமா என்று அவர் சொன்ன அந்தப் பெட்டிக்கடை எளிமையின் உருவம், ஆனால் கூட்டமோ தள்ளு முள்ளு அளவுக்கு.   அவர் அன்புக்கு நான் அடிமை.

பர்வீன்  ட்ராவல்ஸ் இல் ஏற்கனவே இணையம் மூலம் கோழிக்கோடு - கோயம்புத்தூர் பயணத்தைப் பதிவு செய்திருந்தேன்.  அந்த பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த சில நிமிடங்களில் பஸ் வந்தது. எனக்குப் பக்கத்தில் இருந்த இளைஞன் சென்னையில் இருந்து வந்திருந்தார். செல்போனில் காதலியோடு கடலை போட்டுக்கொண்டிருந்தார். இவர்களுக்கு இடையில் நான் ஏன் நந்தி மாதிரி என்று நினைத்து, காலியாக இருந்த முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டேன்.  வாகனச்சாரதி தனக்கு மட்டும் எண்பதுகளின் இளையராஜா பாடல்களைப் போட்டுக் கொண்டே, சரத்குமாரின் மாயி படத்தைப் போட்டு நம்மை இக்கட்டில் ஆழ்த்திவிட்டார். இருளைக்கிழித்துக் கொண்டு ஆம்னி பஸ் பயணித்தது கோவை நோக்கி.







Thursday, December 06, 2012

குருவாயூரப்பன் கோயில் தரிசனம்


குருவாயூரைப்பற்றி என்போன்றோருக்குத் தெரியவைத்த பெருமை கவிஞர் வாலிக்குச் சேரும். "குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி" பாட்டு மூலமே குருவாயூரானை அறிந்து கொண்டேன்.  கேரளத்தைப் பற்றி அறிந்து கொண்ட ஈழத்தவருக்கு சபரிமலை ஐயப்பன் அளவுக்கு குருவாயூர் பரிச்சயமில்லை. ஆனால் என் சித்தப்பா கடும் கிருஷ்ண பக்தர், குருவாயூருக்கு நான் போய்த் திரும்பிய செய்தியைச் சொன்னபோது அவர் முகத்தில் இருந்த பெருமிதச் சிரிப்பு அந்தக் கோயிலின் மீது அவர் கொண்ட நேசத்தைக் காட்டியது.

நந்தனம் என்ற மலையாளப்படத்தைச் சில ஆண்டுகள் முன்னர் பார்த்த பின்னர் இப்படிப் பகிர்ந்து கொண்டேன் http://www.madathuvaasal.com/2008/01/blog-post.html
"இறுதியில் தன் திருமணம் முடித்த களிப்பை ஜானகியும் சொல்ல வரும் போது ஜானகி அப்போது தான் தன் மகன் உன்னி வந்ததாக அறிமுகப்படுத்துகின்றார். அங்கு உன்னியின் வடிவத்தில் வேறு யாரோ? அப்படியென்றால் இதுவரை நாளும் பாலாமணிக்கு ஆறுதல் கொடுத்த அந்த உன்னி யார்?
உடனேயே தன் கணவனை இழுத்துக் கொண்டு குருவாயூரப்பன் சந்நிதிக்கு ஓடும் பாலாமணி குருவாயூர் கோயில் மூலஸ்தானம் அருகே ஒருவனைக் காண்கின்றாள். அது அவளுக்கே தெரிகின்ற, இதுவரை நாளும் உன்னியின் உருவத்தில் வந்த அந்த உருவம்...

" ஞான் கண்டு, ஞானே கண்டுள்ளு, மாத்ரம் கண்டிடுள்ளு, அது உன்னியட்டா வேஷத்தில் வந்தது"
கணவன் மார்பில் புதைந்து கொண்டு அழ ஆரம்பிக்கின்றாள் பாலாமணி. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் எமது கண்கள் தானாகவே பனிக்கின்றன.
உடனேயே தன் கணவனை இழுத்துக் கொண்டு குருவாயூரப்பன் சந்நிதிக்கு ஓடும் பாலாமணி குருவாயூர் கோயில் மூலஸ்தானம் அருகே ஒருவனைக் காண்கின்றாள். அது அவளுக்கே தெரிகின்ற, இதுவரை நாளும் உன்னியின் உருவத்தில் வந்த அந்த உருவம்...

வெறும் சினிமா என்று ஒதுக்க முடியாது இன்றும் அந்தக் காட்சியை நினைக்கும்போது மெய்சிலிர்க்கும் எனக்கு. குருவாயூருக்கு ஒரு நாள் போகவேண்டும் அவன் சந்நிதியில் காலாற நடக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.


ஏற்கனவே கேரளாவுக்கு வந்தபோது திருவனந்தபுரம் ஸ்ரீ பத்ம நாப‌ சுவாமி கோயிலில் வேஷ்டி கட்டினால் தான் ஆலயத்துக்குள் பிரவேசிக்க முடியும் என்று சொன்னதால் ஆலயம் நிர்வகிக்கும் கரும பீடத்தில் ஒரு வேட்டியை வாங்கி உடுத்திக் கொண்டு போயிருந்தேன். இம்முறை முன்னேற்பாடாக என் பயணப்பொதியில் காவி நிறத்தில் ஒரு வேட்டி, சால்வையை எடுத்து வைத்துக் கொண்டேன். கொச்சினில் நண்பர் சைஜுவைக் கண்டபோது இதைச் சொன்னேன். "காவி வேஷ்டியை அனுமதிக்கிறார்களா தெரியவில்லை" என்று அவர் சந்தேகக் குரல் எழுப்பவே, குருவாயூர் கோயிலின் கரும பீடத்தில் வாடகைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து அன்று மாலைப் பூசைக்காகக் கோயிலுக்கு ஆட்டோ பிடித்தேன்.

ஆலயத்தை அடைந்து அங்குள்ளவர்களிடம் கரும பீடம் எங்கே இருக்கு என்று கேட்டறிந்து அங்கே போய்க் கேட்டால் வாடகைக்கெல்லாம் வேஷ்டி கொடுப்பதில்லை என்றார்கள். கோயிலின் சுற்றுப்புறங்களில் இருந்த கடைகளை நோட்டம் விட்டேன். ஒரு துணிக்கடை இருந்தது. அங்கு போய் ஒரு நாலு முழ வேட்டியை 130 ரூ கொடுத்து ஓரமாக மறைவிடம் தேடி இடுப்பில் செருகிக் கொண்டேன். என் இடுப்பில் வேட்டி நிற்பதென்பது சிலுக்கு சுமிதாவுக்கு சேலை கட்டிப் பார்ப்பது போல சவாலான விடயம். பின்னர் தான் தெரிந்து கொண்டேன் எந்த நிற வேஷ்டியென்றாலும் உள்ளே போகலாம் என்று (சைஜூ நின்னை ஞான் கொல்லும்) ஒருமாதிரியாக உடம்பில் சுற்றியாச்சு அடுத்ததென்ன கோயிலுக்குள் நுழைவோம் என்று போனால், கையில் காமரா, செல்போன். இதையெல்லாம் கொண்டு உள்ளே அனுமதிக்கமுடியாது என்று காவலர் கறாராக இருந்தார். ஆலயத்தின் வெளிக் கரும பீடத்தில் இவற்றைப் பாதுகாப்பாக‌ வைத்துவிட்டு ரசீதை வாங்கிக் கொண்டேன்.

இங்கே ஒரு குறிப்பு, நீங்கள் குருவாயூர்க் கோயிலுக்குப் போவதாக இருந்தால் முன்னேற்பாடாக காமரா, மற்றும் செல்போனைப் பாதுகாப்பாக வைத்து விட்டுச் செல்லுங்கள். இரண்டு, மூன்று மணி நேரம் வரிசையில் கால்கடுக்க நின்று பின்னர் கோயிலுக்கு முன்னுள்ள சோதனை நிலையத்தில் இவை காண்பிக்கப்பட்டால் (மறைத்து வைத்திருந்தாலும் கண்டுபிடிக்கக் கருவி உண்டு) வீண் நேர விரயம் உங்களுக்குத் தான்.

 குருவாயூரப்பன் கோயிலில் தினமும் காலை 3 - 3.30 வரை நிர்மல்யம் என்ற காலைப் பூஜையும், காலை 11.30 - நண்பகல் 12 உச்சிக்காலப் பூஜையும், மாலை 4.30 - 5 மணிக்கு சீவளி என்ற சாயரட்சைப் பூஜையும் இரவு 7.45 - 8.15 மணிக்கு இரவுப்பூஜையும் வெகு விசேஷமானவை. உண்மையில் முழு நாளும் தங்கியிருந்து இவை ஒவ்வொன்றையும் பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இரவு 9.15 மணிக்கு கிருஷ்ணாட்டம் என்ற கேரளப் பாரம்பரிய நடனத்தையும் ஆலயத்தில் நிதமும் வழங்கிச் சிறப்பிப்பர். இவற்றுக்கெல்லாம் நான் முந்திய பதிவில் சொன்னது போல, கோயிலுக்கு அருகாமையிலுள்ள தங்குமிடமே பேருதவியாக இருக்கும்.


புதுமையின் சுவடுகளைக் குறைத்துப் பழம்பெருமை மிக்க கூரைவேலைப்பாட்டுடன் குருவாயூர் கோயில். ஆலயத்தைச் சூழவும் கடைகள். ஒருபக்கம் கலா மண்டபம் அமைத்து,  நான் சென்ற சமயம் செம்பை வைத்ய நாத பாகவதர் நினைவாக அதிகாலை ஐந்து மணியிலிருந்து தொடர் கர்னாடக இசைக்கச்சேரிகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
அடியவர்கள் குளித்து நீராடப் பெரும் தீர்த்தக் கேணியும், உடை மாற்றிக் கொள்ள கட்டிடம் ஒன்றும் இருக்கிறது.




குருவாயூர் கோயிலில் சிறப்பு தரிசனம் என்ற பேச்சுக்கே இடமில்லை, எல்லோருமே சமம், எல்லோருக்குமே ஒரே அணுகுமுறை தான். யாருக்காகவும் கோயிலின் ஆசார, ஒழுக்கவியல் நடைமுறையை மாற்ற மாட்டார்கள். இது பெரும்பாலான கேரளத்துக் கோயில்களுக்கே உரிய தனிச்சிறப்பு. கோயிலின் இணைய முகவரி http://www.guruvayurdevaswom.org/dpooja.html

மாலை நான்கு மணிக்கெல்லாம் ஆலயத்தில் இருந்தேன். என்னடா கூட்டம் அள்ளும் என்றார்களே பெருசா யாரையும் காணோம் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு வெற்றுடலோடு வேஷ்டியும் தரித்துக் கோயிலுக்குள் நுழைந்தேன். கோயிலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் வர ஆரம்பித்தது, ஒரு வரிசையில் நின்றார்கள் மூலஸ்தானத்தில் இருக்கும் மூர்த்தியைக் காண. நானும் அதில் ஒருவராக நின்றேன், ஆனால் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் மட்டுமே இந்த வாசல் வழியாக வரலாம் என்று என்னையும் கூட நின்ற சில இளையோரையும் தடுத்துவிட்டார்கள். ஆகா இப்போ என்ன செய்யலாம் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கமாட்டாரோ என நினைத்து என்னோடு நின்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விட்டேன். அவர்கள் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

நேரம் போய்க்கொண்டிருக்கிறதே எப்படி குருவாயூரப்பனைக் காணலாம் என்று மனம் பதபதைக்க, அந்த வேளை செண்டை மேளம், குழல் முழங்கத் தொடங்கியது. சுவாமியின் உட்பிரகாரப் பவனி ஆரம்பித்ததை அது கட்டியம் கூறியது. சத்தம் கேட்ட திசை கேட்டுப் பார்த்தேன். அழகுபடுத்தப்பட்ட யானைகள் தம் மேல் சுவாமியின் விக்கிரகத்தைச் சுமந்து கொண்டு கம்பீரமாக நடை போட்டுக் கொண்டு வந்தன. நின்ற இடத்திலிருந்தே கை கூப்பினேன், வாய் "பச்சை மால் மலை போல் மேனி"யை முணு முணுக்கத் தொடங்கியது.

மெல்ல மெல்ல யானை நடையோடு சுவாமியின் உட்பிரகாரப்பவனி நடக்க, முன்னே செண்டை வாத்தியக்காரர்கள் முறுவலித்துக் கொண்டே வாசிக்கச் சூழவும் பக்தர்கள் பக்திப் பரவசத்தோடு ஆண்டவனை நோக்கிக் கைகூப்பிய நிலையில். அந்தச் சூழ் நிலையில் உலகியலை மறந்து எல்லாம் துறந்து வேறெந்தச் சிற்றின்பங்களையும் உள்ளிளுக்க ஒப்பாமல் ஆண்டவனை மட்டுமே சரணாகதி அடைந்த நிலையில் மனம் இருந்தது.

சுவாமி வலம் கிழக்குப் பிரகாரத்தை நோக்கி வந்து அங்கேயே தாமதித்தது. மூலவரை நோக்கியவாறு பாராயணம் நடந்து கொண்டிருக்க, அடியவர் கூட்டம் அங்கேயே ஸ்தம்பித்தது. அப்போது தான் பார்த்தேன் இன்னொரு வழியால் கூட்டமொன்று மூலஸ்தானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை. எப்படி வருகிறார்கள் என்று நோட்டம் விட்டால் அவர்கள் East Nada என்ற கிழக்கு வீதியால் வருவது தெரிந்தது. அங்கிருந்து நகர்ந்து கோயிலின் முகப்புக்கு வந்தேன். அப்போது தான் ஒரு உண்மை புரிந்தது. மூலவரைத் தரிசிக்க வேண்டும் என்றால் கோயிலின் கிழக்குப் பக்கமாக உள்ள முகப்பு வாசல் வழியாகத் தான் எல்லோருக்குமென வழியேற்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கே இரும்புச் சட்டத்துக்குள்ளே அடங்கி, கூட்டம் கூட்டமாக வரிசையில் பக்தர்கள் கோயிலுக்குள்ளே சென்று கொண்டிருந்தார்கள். நானும் அந்தக் கூட்டத்துள் ஐக்கியமானேன். ஒரு மணி நேரம் கடந்த நிலையில் மெல்ல உள்ளே சென்று மூலஸ்தானத்தில் வீற்றிருந்த குருவாயூரப்பனைச் சேவித்தேன். ஒரு நிமிடத்துக்கும் குறைவான நெருக்கமான சந்திப்பு அது. ஆனால் அதற்குள் அவருக்குச் சொல்லவேண்டியதைச் சொல்லிய திருப்தி. கூட்டம் நெட்டித் தள்ளியது. உட்பிரகார விக்கிரகங்களை வழிபட்டுவிட்டு "இது போதும் எனக்கு" என்ற பூரண திருப்தியோடு குருவாயூரப்பன் ஆலயத்தில் இருந்து வெளியேறினேன்.

ஹோட்டலுக்கு வந்தபோது மதியம் சாப்பிட்ட இரண்டு துண்டு சப்பாத்தி ஜீரணித்து பசி வயிற்றைக் கிள்ளிக் கிள்ளிக் கொண்டிருந்தது. மீண்டும் ஹோட்டலுக்குள்ளேயே இருந்த உணவகத்தின் கதவைத் தட்டினால் அதே சப்பாத்தி தான் சைவச்சாப்பாடாகக் கிடைக்குமாம். இந்த இருட்டில் தெரியாத தேசத்தில் எங்கே உணவகத்தைத் தேடுவேன் என்று நினைத்து அதையே வாங்கி வயிற்றில் தள்ளினேன்.

சரி, குருவாயூருக்கு வந்து தரிசனமும் கண்டாயிற்று, திட்டமிட்டபடி இனி அடுத்த பயணம் கோழிக்கோடு நோக்கி என்று நினைத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தேன். செல்போன் தட்டி எழுப்பியது. மறுமுனையில் முன்னர் எங்கள் கம்பெனியின் சென்னை அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர் நாராயணன் அழைப்பில். குருவாயூர் தரிசனம் எல்லாம் கண்டாயிற்று இனிக் கோழிக்கோடு பயணப்படப்போகிறேன் என்று நான் சொல்ல "இல்லை பிரபா இவ்வளவு தூரம் வந்துட்டீங்க, கண்டிப்பா அதிகாலை மூணு மணிக்கு நடக்கிற நிர்மல்யத்தில் கலந்துக்குங்க" என்று அன்புக் கட்டளை போட்டார். எல்லாம் தெய்வ கிருபையோ என்று நினைத்துக் கொண்டு, ஹோட்டல் ரிஷப்சனில் இருந்தவரிடம் அதிகாலை இரண்டு மணி வாக்கில் ஒரு ஆட்டோ ஒழுங்கு செய்யமுடியுமா என்று கேட்க அவரும் உடனேயே ஆட்டோக்காரரை அழைத்துச் சொல்லிவிட்டிருந்தார்.

அடுத்த நாள் அதிகாலை ஒன்றரை மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்துவிட்டு ஆட்டோக்காருக்காகக் காத்திருந்தேன். அவரும் சரியான நேரத்தில் வந்து, கோயிலில் இரண்டரை மணிக்கெல்லாம் இறக்கிவிட்டார். குருவாயூரப்பன் கோயில் பிரகாரம் அந்த இருள் சூழ்ந்த அதிகாலையிலும் கட்டுக்கடங்காத கூட்டத்தோடு நிரம்பியிருந்தது. கிழக்கு வீதியால் கோயிலுக்கு நுழைய கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நீளம் கடந்த கூட்டம்.

 
 அதிகாலையில் குளிப்பாட்டப்படும் கோயில் யானை

 நான் சென்ற அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை, வெளியூர் மக்கள் மட்டுமன்றி உள்ளூர்வாசிகளும் பெருந்திரளாகக் கலந்து சிறப்பிப்பர் என்று அறிந்து கொண்டேன். அன்று சுபமுகூர்த்தம் வேறு. ஆலயத்தின்  முகப்பிலேயே நேரெதிராக ஒரு பரண் அமைத்து மூலவரை நோக்கிவாறு மணமுடிக்கவிருக்கும் ஜோடியை இருத்தி, தீட்சதர் மணச்சடங்கு நடத்திவைப்பார். அந்த அதிகாலை நேரத்திலேயே ஒரு கல்யாணச் சடங்கு நடந்து கொண்டிருந்தது.



காலை ஆறரை மணிக்கெல்லாம் கோழிக்கோடு கிளம்பவேண்டும், இந்த கூட்டத்தைத் தாண்டி உள்ளே போவேனோ என்று மனம் கிலேசித்தது. ஆனாலும் முடிந்தவரை இந்த வரிசையில் நின்று பார்ப்போம் என்று மனத்தை ஒருமுகப்படுத்தினேன். நம்மவருக்கே உரிய தனிப்பண்புடன் இடையில் சிலர் நுழைந்தது வேறு அந்த வரிசையைத் தாமதப்படுத்தியது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கால் கடுக்க நின்று ஒருவாறு அந்தச் சனக்கும்பலில் ஒருவராக ஆலயத்துக்குள் போயாச்சு. மீண்டும் குருவாயூரப்பனை நேருக்கு நேர் தரிசனம், உட்பிரகாரப்பவனி முடித்து ஆறுதலாக உள்ளே சுற்றி வந்து வேடிக்கை வந்தேன்.  ஒரு எளிமையான பழைமை பேணும் இந்த ஆலயத்தில், எத்தனை ஆயிரம் பக்தர்களை நிதமும் உள்வாங்கி அருள்பாலிக்கிறான் எங்கள் குருவாயூரப்பன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அனுமார் சிலை மேல் பொதிந்திருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டேன்.

குருவாயூர் வரவேண்டும் எம்பெருமான் முகம் காணவேண்டும் என்ற நினைப்பைச் செயற்படுத்தியாயிற்று. இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து நினைத்ததற்கும் மேலாக குருவாயூரப்பனின் நிறைவான தரிசனம் கிட்டிய பரிபூரண திருப்தியில் பிரிந்தேன் அங்கிருந்து







































































முகப்புப்படம் 1   நன்றி http://seasonsun-tharans.blogspot.com

முகப்புப்படம் 2   நன்றி http://www.hindudevotionalblog.com