Social Icons

Pages

Sunday, April 27, 2008

கைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்னர்கள்


கடந்த பதிவில் கம்போடியா நாட்டின் கைமர் பேரரசில் விளங்கிய பல்லவ மன்னர்களில் முதற் தொகுதியைக் கொடுத்திருந்தேன். இன்றைய பதிவில் அதன் தொடர்ச்சியாக மற்றைய மன்னர்களைப் பார்போம்.

சூர்யவர்மன்(Surya varman )

ஆட்சிக்காலம்: கி.பி 1002 - 1050

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர (Yashodapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

KHLEANG


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

South Khleang, Phimanckas, Takeo, phom sadak, Preah Khan, Prasat Preah Vihear on Dangrek Mountain, and Prasat Phimeanakas

இவனது ஆட்சியில் பெளத்த மதம் எழுச்சியும், செழிப்பும் கொண்டு விளங்கியது. ஆனாலும் இந்து மதத்தைப் பேணுபவர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்தான். நாற்பது ஆண்டுகள் இவன் தொடர்ச்சியாக ஆண்ட காரணத்தால் ஸ்திரமான அரசையும், பொருளாதார மேம்பாட்டையும் சிறப்பாகச் செய்தான்.

இறந்த பின் பிறீ நிர்வாண பாத (Preah Nirvanapada) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.


இரண்டாம் உதய ஆதித்யவர்மன் (Udayaditya varman II )

ஆட்சிக்காலம்: கி.பி 1050 - 1066

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர (Yashodapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

BAPHUON


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Baphuon , West Mabon

Baphuon ஆலயத்தின் உள்ளே தங்கத்தில் சிவலிங்கத்தை இவன் எழுப்பினான்.

2KM நீளமான மேற்கு பராய் (West Baray) என்ற நீர்த்தேக்கத்தை அமைத்தான்.

தொடர்ந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றிருக்கின்றது.


இரண்டாம் சூரியவர்மன்(Surya varman II )

ஆட்சிக்காலம்: கி.பி 1113 - 1150

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர (Yashodapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

ANGKOR WAT


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Angkor Wat, Thom Manon

கைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான்.

இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான்.

தொடர்ந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றிருக்கின்றது.

ஏழாம் ஜெயவர்மன்(Jeya varman VII )

ஆட்சிக்காலம்: கி.பி 1181 - 1218

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

அங்கோர் தொம் (Angkor Thom)


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Angkor Thom, Bayan, Preah Khan, Prasat Chrun

இவனது தந்தை பெயர் இரண்டாம் தரனிந்திரவர்மன் (Dharanindravarman II), தாய் ஜெயராஜசூடாமணி (Jeyarajacudamani)

இந்த ஏழாம் ஜெயவர்மன் தனது மனைவி ஜெயதேவி இறந்தபின் அவளின் சகோதரி இந்திரதேவியை மணம் முடித்தான். இரண்டாவது மனைவியான இந்திரதேவி பெரும் புத்த பிரச்சாரகி. எனவே ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் முன்பை விட பெளத்த மதத்தின் ஆதிக்கம் பெரும் எழுச்சி கொண்டு விளங்கியது. அதன் தாக்கம் இன்று வரை தொடர்கின்றது. இது குறித்து விரிவான பார்வையை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் 121 தங்குமிடங்கள் (Rest houses)102 வைத்தியசாலைகள் ஆகியவையும் கட்டப்பட்டனவாம். இவன் காலத்தில் மகாஜன பெளத்தம் என்ற பிரிவே பின்பற்றப்பட்டது.

இவன் இறந்த பின் மஹாபரம செளகத (Mahaparama saugata) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.

இவ்வாறாக கைமர் பேரரசில் முக்கியமான பல்லவ மன்னர்கள் விபரம் அங்கோர் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. ஆனால் மேற்குறித்த ஆண்டு எல்லைக்குள்ளும், ஆண்டு எல்லைக்கு அப்பாலும் இன்னும் பல பல்லவ மன்னர்கள் இடைப்பட்ட காலத்தில் குறுகிய கால ஆட்சியை மேற்கொண்டிருக்கின்றார்கள். அது குறித்த முழுப்பார்வையையும் விக்கிபீடியாவின் தகவல் களஞ்சியம் இங்கே பட்டியலிடுகின்றது. ஆனால் தற்போதைய வரலாற்று ஆர்வலர்களுக்கு நான் முன் சொன்ன பட்டியலே பெரிதும் தேவைப்படுகின்றது.

இந்தப் பதிவுடன் கைமர் பேரரசின் மன்னர்கள் குறித்த பார்வை முடிவுற்றது. தொடர்ந்து வரும் பகுதிகள் இந்த மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டிய ஆலயங்கள், நினைவிடங்கள் குறித்த பார்வையாக இருக்கின்றது. இதுவரையும், தொடர்ந்து வரும் பகுதிகளிலும் எடுக்கப்பட்டவை என் சொந்தப் புகைப்படத் தொகுதிகளாகும்.

Tuesday, April 22, 2008

கைமர் பேரரசு (Khmer Empire) - முதற் தொகுதி மன்னர்கள்

சென்ற பதிவில் பல்லவ மன்னர்கள் குறித்த அறிமுகத்தை வரலாற்று ரீதியான உசாத்துணைகளோடு கொடுத்திருந்தேன். அதற்குக் காரணம் தொடர்ந்து வரும் பதிவுகள் இந்தப் பல்லவ மன்னர்களின் ஆதிக்கம் கம்போடியாவில் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தியிருந்தன என்றே தொடரவிருக்கின்றன.

தேதிவாரியாக என் பயணத் தொடரைக் கொடுப்பது வழக்கம். சற்று விதிவிலக்காக என் கம்போடியப் பயணத்தின் இறுதி நாளன்று சென்று பார்த்த அங்கோர் நூதன சாலையில் (Angkor Museum) நான் இந்தத் தொடருக்கு உதவும் என்ற வகையில் எடுத்துக் கொண்ட குறிப்புக்களின் அடிப்படையில் இப்பதிவு அமையவிருக்கின்றது. பயணத்தின் கடைசி நாளன்று அங்கோர் நூதன சாலையில் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் செலவழித்திருப்பேன். அவவளவுக்கு அங்கே வரலாற்று ஆதாரங்களும், செய்திக் குறிப்புக்களுமாக முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நூதனசாலையில் இருக்கும் விடயங்கள் குறித்த பதிவைப் பின்னர் தருகின்றேன்.

எதிர்வரும் காலங்களில் கம்போடியாவுக்குப் பயணப்படுவோருக்கு ஒரு ஆலோசனை மட்டும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். உங்கள் பயணத்தின் முதல் நாளே இந்த அங்கோர் நூதனசாலைக்குச் (Angkor Museum) செல்லுங்கள். காரணம் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் நீங்கள் பார்க்கப் போகும் ஆலயங்கள், வரலாற்றுச் சுவடுகள் குறித்த முழுமையான பார்வையை இந்த நூதனசாலை கொடுக்கின்றது. எனவே இந்த நூதனசாலையில் நீங்கள் பெறும் அறிவையும், தகவல்களையும் வைத்துக் கொண்டு குறித்த ஆலயங்களைப் பார்க்கும் போது மிகவும் இலகுவான விளக்கத்தை அவை உங்களுக்குத் தானாகவே கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.

கம்போடியாவில் அமைந்த கைமர் பேரரசின் (Khmer Empire) முதல் மன்னனாய் முதலாம் ஜெயவர்மன் (Jayavarman I) கொள்ளப்படுகின்றான். இவன் கி.பி 657 இலிருந்து கி.பி.681 வரை ஆட்சி செய்ததாகவும், இரண்டாம் பாவவர்மன் (Bhavavarman II) இந்த ஜெயவர்மனுக்கு முற்பட்ட காலத்து அரசன் என்றும், முதலாம் ஜெயவர்மனைத் தொடர்ந்து ஜெயதேவி என்னும் மகாராணி ஆட்சிப் பீடம் ஏறியதாகவும் விக்கிபீடியாவின் வரலாற்றுக் குறிப்புக்கள் தகவல் பகிர்கின்றன.

ஆனால் அங்கோர் நூதனசாலையில் பொறித்திருக்கும் அரசர்கள் பட்டியலில் முன் குறிப்பிட்ட மன்னர்களைத் தொடர்ந்து ஆட்சிப்பீடம் ஏறியவர்களையே முக்கியத்துவப்படுத்தி, இந்த மன்னர்கள் குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு ஒரு காரணம் இந்த மன்னர்களின் திருப்பணியில் அமைந்த ஆலயங்களே இன்று முக்கியமான வரலாற்று ஆதாரங்களைத் தரும் சான்றாக அமைந்திருக்கின்றன.


எனவே தொடர்ந்து அங்கோர் நூதனசாலையில் எடுத்துக் கொண்ட குறிப்புக்களின் அடிப்படையில் கைமர் பேரரசில் (Khmer Empire) குறிப்பிடப்படும் முக்கியமான பல்லவமன்னர்களும், அவர்கள் தலைநகராகக் கொண்டு செயற்பட்ட இடங்கள், குறித்த மன்னர்கள் அமைத்த ஆலயங்கள் போன்ற விபரங்களைத் தருகின்றேன்.

இரண்டாம் ஜெயவர்மன் (Jayavarman II)

ஆட்சிக்காலம்: கி.பி 802 - கி.பி. 850

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடங்கள்:

இந்திரபுர (Indrapura) , ஹரிஹராலயா(Hariharalaya) , அமரேந்திரபுர (Amerendrapura), மகேந்திரபுர (Mahendrapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

KULEN Style


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Damrie Krap, O Pong, Khting Slap, Rup Areak, Neak ta, Trong Khla, Khonum, Krus Prea, Aram Ring chon, Mahendra Parvatha (Kulen Mountain)

ஜாவா மன்னர்களை விரட்டியடித்து ஆட்சியமைத்த மன்னனாகக் கொள்ளப்படுகின்றான்.

இந்த இரண்டாம் ஜெயவர்மன் இறந்தபின் பிறீ பரமேஸ்வரா (Preah Parameswara)என்று பெயர்சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

இந்திரவர்மன் (Indra varman I)

ஆட்சிக்காலம்: கி.பி 877 - 889

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

ஹரிஹராலயா (Hariharalaya)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

PREAH KO Style


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Preah Ko, Bakong, Baray Indiratata ka

இந்த நாட்டின் சமுதாய சமயப் பணிகளைச் செய்த முக்கிய மன்னர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றான். இவரின் புரோகிதர் சிவசோமாவின் (Sivasoma) வழிகாட்டலில் இவற்றைச் செய்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த முதலாம் இந்திரவர்மன் இறந்தபின் இஸ்வரலோகா/ஈஸ்வரலோகா (Iswaraloka) என்று பெயர்சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

யசோவர்மன் (Yashovarman)

ஆட்சிக்காலம்: கி.பி 889 - 910

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடங்கள்:

ஹரிஹராலயா (Hariharalaya), யசோதபுர/அங்கோர்(Yashodhapura/Angkor)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

BAKHEND Style


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Loleu, Bakhong, Phom Khon, East Baray, Prea Vihear, Phom Bok, Phom Krom (Trimoorthy god)
முதலாம் இந்திரவர்மன் மகன் தான் இந்த யசோவர்மன் என்று சொல்லப்படுகின்றது.

இந்த யசோவர்மன் இறந்தபின் பரம சிவலோகா (Parama Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

நான்காம் ஜெயவர்மன்(Jeyavarman IV)

ஆட்சிக்காலம்: கி.பி 921 - 941

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

கோ கெர் (Koh Ker)
முன்னர் யசோவர்மனின் ஆட்சியில் தலைநகராக இருந்த அங்கோர் (Angkor) இருந்து இவன்(நான்காம் ஜெயவர்மன்) தன் தலைநகரை மாற்றிக் கொண்டான்.

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

KOH KER Style



இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:
Koh Ker group, Neang KhMao, Choeung An

யசோவர்மனின் சகோதரி ஜெயதேவியை மகாராணியாக்கிக் கொண்டவனே இந்த நான்காம் ஜெயவர்மன் என்று சொல்லப்படுகின்றது.

இந்த நான்காம் ஜெயவர்மன் இறந்தபின் பரம சிவபாத (Parama Sivapada)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

ராஜேந்திரவர்மன் (Rajendravarman)

ஆட்சிக்காலம்: கி.பி 944 - 968

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர/அங்கோர் (Yashodapura/Angkor)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

Pre Rup Style


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Pre Rup, Prasad East Mebon, Bat Chum, Bantea Srei, Baksei, Chamkrong,

இந்த ராஜேந்திரவர்மன் என்ற மன்னன் மகேந்திரவர்மன், மகேந்திர தேவியின் மகனாகக் கொள்ளப்படுகின்றான். ராஜேந்திர வர்மனின் தளபதியாக இருந்த கவிந்திரவிமதன (Kavindravimathana) பெளத்த அமைச்சராகவும் கொள்ளப்பட்டிருக்கின்றான்.

இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

இந்த கைமர் பேரரசின் மன்னர்கள் வரிசை நெடியது, எனவே அடுத்ததும் நிறைவானதுமான தொகுதி மன்னர்களை அடுத்த பகுதியில் தருகின்றேன். இங்கே ஒவ்வொரு மன்னர்கள் அமைத்த ஆலயங்களில் பெரும்பாலானவற்றைக் கண்டு தரிசிக்கும் வாய்ப்பும் எனக்கு இருந்ததால் பதிவில் குறிப்பிட்ட ஆலயங்களைத் தனித்தனியாகப் பின்னர் பார்ப்போம்.

Sunday, April 13, 2008

தென் கிழக்காசியா சென்ற பல்லவ மன்னர்கள்: ஓர் அறிமுகம்

கடந்த இரண்டு பதிவுகளிலும் கம்போடியாவிற்கு நான் பயணப்பட்ட அனுபவம் மற்றும் அங்குள்ள தங்குமிட வசதி குறித்து எழுதியிருந்தேன். தொடர்ந்து வரப்போகும் பகுதிகள் கம்போடியாவில் மன்னராட்சி நிலவிய காலகட்டங்களில் நிலவிய செழுமையான ஆட்சியின் எச்சங்களாக விளங்கும் நினைவிடங்கள், ஆலயங்கள், அந்தக் காலகட்டத்துக் கலாசார அரசியல் மாற்றங்கள் பற்றிப் பேசப் போகின்றன. அத்தோடு கைமர் பேரரசில் (Khmer Empire) பல்லவ மன்னர்களில் ஆதிக்கம் குறித்தும் விரிவாகத் தரலாம் என்றிருக்கின்றேன்.

கம்போடியாவில் பல்லவ மன்னர்களின் ஆதிக்கம் குறித்து அறிவதற்கு முன்னர் இந்தப் பல்லவ மன்னர்கள் குறித்த எளிய அறிமுகம் ஒன்று அவசியமாகின்றது. பல்லவ மன்னர்கள் யார் என்பது குறித்த அறிமுகத்தை இந்தியாவில் அவர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் இருந்து கொடுக்கும் போது முழுமை பெறும் என்பது என் எண்ணம். இதற்காக சிட்னி தமிழ் அறிவகம் ஊடாக "தென் இந்திய வரலாறு" (டாக்டர் கே.கே.பிள்ளை முதற்பதிப்பு 1960), "தென்னாடு" ( கா.அப்பாத்துரை எம்.ஏ.எல்.டி, முதற்பதிப்பு 1954 ), தமிழக வரலாறும் பண்பாடும் (வே.தி.செல்லம் (முதற் பதிப்பு 1995) ஆகிய நூல்களை வாசித்து உசாத்துணையாக்கிக் கொண்டேன்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை காஞ்சியை அரசிருக்கையாகக் கொண்டு பல்லவ மன்னர்கள் கி.பி 10 ஆம் நூற்றாண்டு வரை பல நூற்றாண்டுகளாக இவர்கள் தமிழகத்தின் வடக்கில் ஆட்சி செலுத்தினார்கள். பல்லவ மன்னர்களின் பிறப்புக் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வரலாற்று ஆசிரியர்களிடையே இருக்கின்றது.

வடக்கேயிருந்து தென்னாடு வந்தவர்களில் சகர், பார்த்தியர் ஆகியோருடன் பகலவம் அல்லது பாரசீக நாட்டு மக்களாகிய பகலவர் என்ற இனத்தவரும் இருந்தார்கள். பல்லவர்கள் இவர்களின் பிரிவே என்பார் ஒரு சாரார். ஆனால் இவர்கள் ஆந்திரப்பேரரசில் சிற்றரசர்களாகவும் அத்துடன் அவர்களின் கொடியின் சின்னம் ஏறத்தாளச் சோழர்களின் புலிக்கொடியாகவே இறுதிவரை இருந்தது. எனவே பல்லவ மன்னர்கள் சோழர்களுடன் தொடர்பு கொண்ட திரையர் என்போர் ஆவார் என்று சொல்லப்படுகின்றது. பல்லவர், திரையர், தொண்டமான் ஆகிய சொற்கள் தமிழிலக்கியத்தில் ஒருபொருட் சொற்களாகும். முதல் தொண்டமானாக இளந்திரையன் குறிக்கப்பட்டான்.

இன்னொரு கருத்தாக வரலாற்றாசிரியர் சி.இராசநாயகம் அவர்களின் குறிப்புப்படி மணிமேகலை காப்பியத்தை ஆதாரம் காட்டி மணிபல்லவத்து நாககன்னிகைக்கும் தொண்டமான் நெடுமுடிக்கிள்ளி என்ற சோழ இளவலுக்கும் களவொழுக்கத்தில் தோன்றிய தொண்டை மண்டலத்து ஆட்சியாளன் இளந்திரையன் வழி தோன்றியவர்களே பல்லவர்கள் என்றும் மணிபல்லவத்து "பல்லவ" என்ற சொல்லை வைத்து காஞ்சியில் ஆட்சியைத் துவக்கினான் என்று சொல்கின்றார். பல்லவ மன்னர்கள் யார் என்பது குறித்து மா.இராசமாணிக்கனார் எழுதிய விரிவான கட்டுரை, வரலாறு என்ற இணையத்தளத்தில் இங்கே கிடைக்கின்றது.

மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை தென்னாட்டு வரலாற்றில் பல்லவரே நடுநாயகம் வகிக்கின்றார்கள். ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் அவர்கள் பாண்டியப் பேரரசுடன் பல தடவை மோதிக்கொண்டார்கள்.

பல்லவ மன்னர்களுக்கு முற்பட்ட காலமானது களப்பிரர்களது பிடியில் இருந்ததால் பெளத்தம், சமண சமயங்களின் ஆதிக்கமே முன்னர் இருந்து வந்தது. பல்லவர்கள் முதலில் பிராகிருதத்திலும், பின்னர் சமஸ்கிருதத்திலும், இறுதியில் தமிழிலுமாகப் பட்டயம் இயற்றியிருக்கின்றார்கள்.

பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் வாணிகமும் குடியேற்றமும் கிழக்கே கடல் கடந்து இந்து சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் மிகவும் பரந்தது. பல்லவப் பேரரசர் பலர் தாமே கலைஞராக இருந்து ஓவியம், இசை, சிற்பம் போன்ற கலைகளை வளர்த்தார்கள். பல்லவர் ஆட்சிக்காலத்தில் கட்டிட சிற்பக்கலை புதிய பரிமாணம் பெற்று விளங்கியது. இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்து மாமல்லபுரத்து கடற்கரைச் சிற்பங்களும், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாச நாதர் ஆலயமும் பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பைச் சான்று பகிர்கின்றன.

தென்னிந்திய கீழைத்தேய நாடுகளான பர்மா, மலாயா, சுமாத்திரா, ஜாவா, போர்னியோ, சையாம், பூணாம், காம்பூஜா (கம்பூச்சியா அல்லது கம்போடியா), சம்பா ஆகிய நாடுகளோடு ஆரம்பத்தில் ஏற்படுத்திக் கொண்ட வணிகத் தொடர்பு நாளடைவில் தென் இந்திய மக்களும், நாகரீகமும் இந்த நாடுகளில் பரவ வழியேற்பட்டது.

தற்போது கம்போடியா என்று அழைக்கப்படும் காம்போஜ அரசு முன்னர் பூனானின் (Funan) (வியட்னாமிய மொழியில் Phù Nam) ஆட்சியில் இருந்தது. காம்போஜ அரசகுலத்தினை நிறுவியோர் கம்பு முனிவர் மரபினர் எனக்கூறுவர். காம்போஜ நாட்டில் சைவமும் வைணவமும் ஓங்கி வளர்ந்தன. பவவர்மன் என்ற அரசர் தன் தம்பி சித்திரசேனர் உதவியால் சுமார் கி.பி.590 இல் பூனான் (Funan) அரசனைப் போரில் முறியடித்தார். பவமன்னர், சித்திரசேனர் ஆகியோரது கல்வெட்டுக்களும், கி.பி ஏழாம் நூற்றாண்டிலுள்ள பல்லவ மன்னர்களது கல்வெட்டுக்களும் பலவகையிலும் ஒத்திருக்கின்றன. பவமன்னர் சிவபக்தர் என்ற காரணத்தினால் நாட்டில் நான்கு சிவாலயங்களைக் கட்டுவித்தது மட்டுமன்றி நாட்டிலுள்ள பல கோயில்களிலும் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்து மதப்பாடல்களைப் பாடும் படியும், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைப் பாராயணம் பண்ணும்படியுமான வழக்கத்தை ஏற்படுத்தினார். அவருக்குப் பின் வந்த அவர் தம்பி மகேந்திர வர்மன் அண்மையில் இருந்த இந்து நாடான சம்பாவோடு (now southern and central Vietnam) நட்புக் கொண்டிருந்தார்.


மகேந்திரவர்மனுக்குப் பின் வந்த ஈசானவர்மன் மத ஆசாரங்களைக் கண்காணிப்பதற்காக பேரறிஞராகிய வித்தியா விசேட ஆசாரியரை நியமித்திருந்தாராம். கி.பி 548 இலும் கி.பி 549 இலும் உள்ள கல்வெட்டுக்கள் இதைச் சொல்லி நிற்கின்றன. வித்தியா விசேடர் ஒரு கோயில் கட்டி அதில் சிவலிங்கத்தையும், ஹரிஹரர் சிலையையும் பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்தோ சீனாவில் சிவன், விஷ்ணு , சிவனும் விஷ்ணுவும் ஒருங்கே அமையப்பெற்ற ஹரிஹர ஆகிய மும்மூர்த்திகளின் ஆராதனைகள் உயர்நிலையில் இருந்தன என்பதற்கு இவ்வாறான உருவச்சிலைகளும், சாசனங்களும் சான்றாகின்றன.

கி.பி 968 இல் ஐந்தாம் ஜெயவர்மனது ஆட்சிக்காலத்திலுள்ள கல்வெட்டு தஷிணாபதம் அல்லது தக்காணம் சைவசமயத்தின் நடுநிலையாக விளங்கியதைத் தெரிவிக்கின்றது.
கீழைத்தேய நாடுகளில் உள்ள மக்களிடையே தென்னிந்தியப் பழக்கவழக்கங்களும் , கொள்கைகளும் மிகுதியாகப் பரவியிருந்தன. காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களையும், தென்னாட்டில் தோன்றிய சங்கராச்சாரியாரையும் பற்றி அங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிட்டிருக்கின்றன.எனவே இந்த தென் கிழக்காசிய நாடுகளில் குடியேறிய ஆட்சியாளர்களும் சரி, மதத்தலைவர்களும் சரி தமது தாய் நாடு நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இவற்றின் மூலம் புலனாகின்றது.

காம்போஜ நாட்டின் பிற்கால அரசராகிய இரண்டாம் சூர்யவர்மனது ஆட்சியில் (கி.பி 1112- 53)அங்கோர் வாட் என்னும் சிறப்புமிக்க கோயிற்கட்டடப் பணி நடைபெற்றது. தென் இந்திய முறைப்படி கட்டப்பட்ட அவ்வாலயம் திருமால் கோயிலாகும். அதில் மகாபாரதம், இராமாயணம், ஹரிவம்சம் முதலான உருவச்சிலைகள் உள்ளன. அங்கோர் வாட் சிற்பப்பணிகள் போராபுதூர் சிற்பங்களை விட மேலானவை என்பது ஆய்வாளர் கூற்று.

ஆரம்பத்தில் சைவ, வைணவ மதங்களின் எழுச்சியும், செழுமையுமாக இருந்த கம்போடியாவின் சமயப்பண்பாடு நாளடைவில் உள்நாட்டு ஆட்சி, அரசியல் மாற்றங்களால் பெளத்த மத வழிபாட்டிற்கு தாவியது. ஆனாலும் சாதாரண குடிமக்கள் தவிர்ந்த உயர்தர வகுப்பினரிடையே இன்னும் இந்து மத ஆசாரக்கொள்கைகளும், நம்பிக்கைகளும் இறுக்கமாக இருந்துவந்தது. கம்போடியாவின் தற்போதய தலைநகர் நொம்பெங்(Phnom Peng) இல் மன்னரின் புரோகிதர்கள் இன்னாளிலும் அலுவலர்களுக்கு பணியேற்புரை நடத்துவதோடு ஏனைய சடங்குகளையும் பின்பற்றி வருகின்றார்கள். தென் இந்தியக் கிரந்த எழுத்துக்களிலே எழுதப்பட்ட சற்றுப் பிழையுற்ற சமஸ்கிருத மொழியே ஊடக மொழியாக இருந்திருக்கின்றது. தற்போது கம்போடிய நாட்டு மக்களாகிய கமெரர்கள், இந்தியர்கள் ஆகியோரின் பண்பாட்டுக் கலவையாக ஒரு பொதுப்பண்பாடு உருவெடுத்தாலும் இதன் அடிப்படை மூலம் இந்திய வழி நாகரிகமே என்பதில் ஐயமில்லை.

மேற்கண்ட ஆய்வுக்குறிப்புக்கள் இந்திய, இலங்கை ஆராய்ச்சியாளர்களின் பார்வையாக பதியப்பட்டிருக்கின்றது. நான் கம்போடியாவில் சந்தித்த வரலாற்று அனுபவங்கள் எவ்வளவு தூரம் முன் சொன்ன வரலாற்றுக் குறிப்புக்களோடு இயைந்திருக்கின்றன என்பதை தொடரும் பதிவுகளில் பொருத்தமான படங்கள், நான் குறிப்பெடுத்துக் கொண்ட அம்சங்கள் மூலம் தரவிருக்கின்றேன். அந்த வகையில் அடுத்து வரும் பகுதி கைமர் பேரரசில் இருந்த மன்னர்கள் குறித்த பார்வையாக அமையவிருக்கின்றது.

உசாத்துணை:
1."தென் இந்திய வரலாறு", டாக்டர் கே.கே.பிள்ளை (ஆறாம் பதிப்பு 1994, முதற்பதிப்பு 1958)
2. "தென்னாடு", கா.அப்பாத்துரை, எம்.ஏ,எல்.டி (முதற்பதிப்பு செப் 1954, மூன்றாம் பதிப்பு 1957)
3. "தமிழக வரலாறும் பண்பாடும்", வே.தி.செல்லம் (முதற்பதிப்பு 14, ஏப்ரல், 1995, நான்காம் பதிப்பு ஜூலை 2003