Social Icons

Pages

Friday, February 14, 2014

"பாலித்தீவில் இந்தியத் தொன்மங்களைத் தேடி"

இலங்கையிலிருந்து வெளியாகும் "சுடர் ஒளி" பத்திரிகையில் என் முதல் பயணத்தொடராக "பாலித்தீவில் இந்தியத் தொன்மங்களைத் தேடி" வரும் ஞாயிறு பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் வெளிவருகின்றது. பத்தாண்டுகளுக்கும் மேலான என்னுடைய எழுத்துப் பகிர்வு இன்று தாயகத்தில் இயங்கும் ஒரு பத்திரிகை வழியாக என் பெற்றோரின் கையை எட்டப் போகின்றது என்றால் இதை விட என் எழுத்துக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டும்?

அடிக்கடி " நீங்கள் எழுதிறதை எனக்கும் அனுப்பி வையுங்கோ பிரபு" என்று கேட்கும் என் அப்பாவுக்கும் பதில் சொல்ல இந்தப் பயணத்தொடர் உதவப்போகிறது. 

பாலித்தீவில் கண்டதும் கேட்டதுமாக இல்லாமல் வரலாற்றுப் புத்தகங்களின் ஆதாரபூர்வமான தகவல்களோடு பாலித்தீவை எழுத்து வழியாக இரண்டாம் முறையாக உலாத்தப் போகிறேன். இதற்காக நூலகங்களில் இருந்தும், பாலித்தீவு பேசும் வரலாற்று மூலாதாரம் தாங்கிய புத்தகக் கொள்வனவு மூலமும் என் தேடலை ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு அத்தியாயமும் மூன்று மணி நேரத்துக்கும் மேலான உழைப்பைப் பங்கு போடுவதால் நிதானமாக கடந்த ஐந்து வாரங்களாக ஏழு அத்தியாயங்களைச் செதுக்கியிருக்கிறேன். 

நான் பாலித்தீவில் இருக்கும் போதே சுடர் ஒளி பத்திரிகையில் இருந்து நண்பர் வர்மா இந்தத் தொடரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். மனம் சோர்ந்து போகும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொண்டுதான் அடுத்த அத்தியாயத்தைக் கிளப்புவேன். அந்த வகையில் இந்தத் தொடரை ஈழத்து வாசகர் கையில் எடுத்துச் செல்ல வழி வகுத்த வர்மா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

"பாலித்தீவில் இந்தியத் தொன்மங்களைத் தேடி"உங்களுக்கும் எனக்கும் இது நாள் வரை பாலித்தீவில் புதைந்திருக்கும் இந்துப் பண்பாட்டு விழுமியங்களை எழுத்தின் வழியே உலாத்தலாகத் தரிசிக்கப் போகின்றது.