Social Icons

Pages

Friday, August 12, 2016

ஜேக்கப்பின்ட ஸ்வர்க்க ராஜ்ஜியம் - மகன் தந்தைகாற்றும் உதவி

இந்த வார இறுதியில் நான் இரண்டு படங்களைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இது வழமைக்கு மாறான செயல். ஒரு படத்தையே பொறுதியாகக் பார்க்கும் வல்லமை வீட்டில் இருக்கும் போது வாய்க்காது எனக்கு. 


இரண்டு படமுமே திருக்குறளை முன்னுதாரணமாகக் காட்டக்கூடியவை. "தந்தை மகற்காற்றும் உதவி" என்ற திருக்குறளை முதலில் பார்த்த "அப்பா" படத்துக்கும், "மகன் தந்தைக்காற்றும் உதவி" என்ற குறளை "ஜோசபின்ட ஸ்வர்க்க ராஜ்ஜியம்" (மலையாளம்) பொருத்தக்கூடியது.

 "அப்பா" சமுத்திரக்கனி இயக்கி நடித்த படம். ஆம்பள ஜோதிகா (அல்லது இரண்டு ஜோதிகா நடிப்பு) என்று சொல்லக்கூடிய நடிகர் தம்பி ராமைய்யா, கையாலாகாத் தனத்தோடு தொலைக்காட்சியைப் பார்த்துக் கெஞ்சிக் கேட்குமளவுக்கு லோடு லோடாக இறைப்பவர் என்று பார்த்தால் இந்தப் படத்தில் அவரின் தொற்று சமுத்திரக்கனி முதற்கொண்டு காய்ச்சி எடுத்து விட்டது.
உயரப் பறக்க நினைக்கும் நம்மவர் தம் பிள்ளைகளைப் பகடைக்காயாக்கிக் காய்ச்சும் அருமையான கதைக் கருவை வைத்துக் கொண்டு அடித்து ஆடவேண்டாமா? ஆங்காங்கே முத்திரை பதிக்கும் சின்னச் சின்ன யதார்த்தபூர்வமான காட்சிகளில் மட்டுமே உழைப்புத் தெரிகிறது. இந்தப் படக் கதைக்கரு புலம்பெயர் சூழலில் இருக்கும் நம்மவருக்கும் ஏகமாகப் பொருந்தக் கூடியது என்ற திருப்தி மட்டுமே மிஞ்சியது. முக்கால்வாசிப் படத்தோடு நிறுத்திக் கொண்டேன். ஆனால் இலக்கியா அம்மா அதிசயத்திலும் அதிசயமாக இரண்டாவது தடவை போட்டுப் பார்த்தார்.

"ஜோசப்பின்ட ஸ்வர்க்க ராஜ்ஜியம்" இயக்குநர் வினீத்  ஶ்ரீனிவாசன் இன்னொரு வெற்றிக் கோப்பையைக் கொடுத்த படம். தன்னுடைய ஆஸ்தான நாயகன் நிவின் பாலியை வைத்துக் கொண்டு இன்னொரு காதல் ரசம், கூழ் காய்ச்சாமல் புதியதொரு கதைக்களத்தில் எடுத்திருக்கிறார்.
துபாயில் பெரும் வணிகராக இருக்கும் ஜேக்கப் ஒரு கட்டத்தில் தன் வியாபாரப் பங்காளியால் ஏமாற்றப்பட்டுப் பாரிய கடனைச் சந்திக்க, தந்தை ஜேக்கப் இல்லாத சூழலில் இவரின் மூத்த மகன் ஜெர்ரி எவ்வாறு இந்தப் பாரிய நெருக்கடிகளைக் கடந்து தன் தந்தையின் ராஜ்ஜியத்தை மீளக் கட்டியெழுப்பினான் என்பதே கதைக்கரு.

மலையாள சினிமாவின் குணச்சித்திர ஆளுமை ரெஞ்சி பணிக்கர் தான் ஜேக்கப் என்ற மிடுக்கான பெரும் வர்த்தகப் புள்ளி. ஜேக்கப்பிற்கு அவரின் மனைவி மற்றும் மூன்று மகன்களும் ஒரே மகளுமாக அமைந்த குடும்பம், அது வேறு உலகம் அங்கே அவர் விரும்புவது நெறிமுறையான வாழ்வோடமைந்த கொண்டாட்டம் மட்டுமே கொள்கை. ஜேக்கப்பின் மனைவியாக லஷ்மி ராமகிருஷ்ணனுக்கும் வாழ்நாளில் சொல்லக் கூடிய பாத்திரமாக இப்படம் கிட்டியிருக்கிறது.
நிவின் பாலி இன்றைக்கு மலையாள சினிமாவின் பெறுமதி மிக்க நடிகர். ஆனால் தன் வணிக வெற்றிப் படங்களின் சூக்குமங்களைச் சாராது இந்த மாதிரி ஒரு கதைப் படத்தில் நடித்ததே அவர் மீதான மதிப்பை அதிகரிக்கிறது.

ரஞ்சி பணிக்கரின் அந்தப் பணக்கார மிடுக்குத் தனமும், சம அளவில் தன் குடும்பத்தினரோடு காட்டும் கனிவுமாக முதல் பாதியை ஆக்கிரமிக்கும் எடுத்துக்காட்டான அப்பா அவர். இதில் போலி முகத்தையோ, நாடகத் தோற்றப்பாட்டையோ காணமுடியவில்லை. அதுவும் கடைசிக் காட்சியில் எல்லாப் பொலிவும் இழந்த அந்த முகத்தில் தான் எத்தனை நுணுக்கமான உணர்வின் தேக்கம்.
இடைவேளை வரைக்கும் தந்தைக்கு அடங்கிய மகனாக விளங்கும் நிவின் பாலி இடைவேளைக்குப் பின் தன் தாயுடன் சேர்ந்து எதிர்ப்படும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வேடம். ஆனால் நிவின் பாலி எடுக்கும் சில முயற்சிகள் சினிமாத்தனமாக இருந்தாலும் "திடீர்ப் பணக்காரனா வர அண்ணாமலை" படமா என்று ஒரு கட்டத்தில் கிண்டலடித்தும் கொள்கிறார்.

சினிமாவுக்குண்டான காதல் காட்சி, ஆட்டமொன்றும் இல்லாது முக்கிய கதையின் பாதையில் பயணப்படுகிறது படம்.

ஶ்ரீனிவாசன் என்ற அற்புதமான கதை சொல்லி சக குணசித்திர நடிகர் மகன் வினீத் ஶ்ரீனிவாசன் மேல் எனக்கு எப்போதும் ஒரு தனி மதிப்பு உண்டு. பாடகராக, நடிகராக இயங்கிப் பின்னர் மலையாள சினிமாவின் கவனிக்கத்தகு இயக்குநராக மாறிய பின்னரும் மிகவும் பொறுப்பாக இயங்குபவர். படத்துக்குப் படம் வித்தியாசமான கதைச் சூழலில் நவீனத்துவம் பொருந்திய தன் படைப்பைப் பார்வையாளனுக்கு உறுத்தாமலும் கொடுப்பதில் சமர்த்தர் இவர்.
கிரகரி ஜேக்கப் என்ற துபாய் வாழ் கேரள இந்தியரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தான் இந்தப் படம் பேசுகிறது.
கிரகரி ஜேக்கப்  வாழ்வில் நிகழ்ந்த துரோகத்தனத்தை, அவர் குடும்பம் மீண்டு வந்த கதையைக் கேட்டாலே சாதாரணமாகக் கடந்து விடக் கூடிய அபாயமுண்டு. இங்கே தான் வினீத் இன் திறமையான திரைக்கதை, இயக்கம் வெகு சிறப்பாக அதைத் தூக்கி நிறுத்துகிறது.
ஒரு குடும்பத் தலைவன், மனைவி, ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளை என்று ஒவ்வொருவரின் குணாதிசியங்களையும் வெகு இயல்பாகக் காட்டியிருக்கிறார். உதாரணத்துக்குத் தங்கள் குடும்பச் சண்டை கடைசிப் பையன் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று அந்தத் தாய் பதறும் காட்சியின் நுணுக்கமே போதும். 
ஜேக்கப் துபாய் வந்த போது வாங்கியதாகச் சொல்லப்படும் புகைப்படக் கருவியை வைத்து  உணர்வு பூர்வமாகப் படத்தின் இறுதிக் காட்சியோடு பொருத்தியிருப்பது.

குடும்ப உறவில் நிலவும் ஆன்ம பந்தத்தை வெகு அழகாகச் சித்தரித்து நம் மனதிலும் அப்படியொரு வாழ்க்கையை எதிர்பார்க்கத் தூண்டுமேயானால் அதில் "ஜேக்கபின்ட ஸ்வர்க்க ராஜ்ஜியம்" வெற்றி பெறும் படைப்பாக இருக்கும்.

Sunday, June 12, 2016

இயேபின்ட புஸ்தகம் 🎬


எந்தவொரு ஆட்சி, அதிகார முறைமையும் துரோகத்தனத்தால் கட்டியெழுப்பப்பட்டது. அது தன்னை நிலை நிறுத்த எந்தவொரு விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும். பதவி வெறிக்கு முன் பந்த பாசம் கூட நிலைத்திருக்காது. 
ஆனால் இப்படியானதொரு கட்டமைப்பு என்பது நிலைத்திருக்காது, அடிமைத் தளையிலிருந்து தன் சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்ள, சமூக விடுதலை நோக்கிய, தன்னலம் பாராத போராளிகள் தோற்றம் பெறுவர். 
மன்னராட்சிக் காலத்திலிருந்து, ஐரோப்பியர் காலம், அதற்குப் பின்னான குடியாட்சி அரசமைப்பு வரை இது முடிவில்லாத சக்கரச் சுழற்சி. இதைத்தான் "இயோபின்ட புஸ்தகம்" திரைப்படமும் பதிவாக்குகிறது.

இந்திரா காந்தி அரசால் இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட காலப்பகுதி, 1977 ஆம் ஆண்டு தான் எந்த நேரமும் கைதாகலாம் என்ற சூழலில் கம்யூனிஸ்ட் தலைவர்,  தன் கழிந்த நினைவுகளை, வரலாற்றின் பழைய பக்கங்களை எழுத ஆரம்பிக்கிறார். அதுதான் "இயோபின்ட புஸ்தகம்" (The Book of Job).

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்குப் பாய்கிறது கதை. ஹாரிசன் என்னும் வெள்ளைக்காரர் கேரளாவின் மூணாறு பகுதியிலே தேயிலைத் தோட்டங்களை நிறுவித் தன் வர்த்தகப் பரப்பை ஆரம்பிக்கிறார். அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய வாழ்க்கைப்பட்டவர்களை அடிமைகளாக வழி நடத்தும் வகையில் விசுவாசமிக்க ஒருவனைக் காண்கிறார். அவனைக் கிறீஸ்தவனாக்கி இயோப் (Job) என்று பெயரும் சூட்டப்படுகிறது. 
முரட்டுத்தனமும், மிருக குணமும் கொண்ட இயோப் இப்போது ஹாரிசனின் முற்று முழுதாக நம்பிக்கைக்குரிய விசுவாசி. ஏற்கனவே திருமணமான உள்ளூர்ப் பெண் கசாளி மேல் ஹாரிசனின் பார்வைபடுகிறது.  கசாளியின் கணவனைக் கொன்று அவளை ஹாரிசனின் ஆசை மனைவி ஆக்குகிறான் இயோப். 
இயோப் இற்கு ட்மித்ரி, இவான், அலோசி என்று மூன்று பையன்கள். 
இந்த நிலையில் முதலாம் உலக யுத்தம் ஆரம்பிக்கிறது. ஹாரிசனின் தேயிலை வர்த்தகம் படுத்துவிட அவர் இங்கிலாந்து செல்ல முனைகிறார். ஆனால் கொச்சினில் வைத்து அவருக்கு நோய் முற்றி இறக்கிறார்.
இயோப் தன் கையில் அதிகாரத்தை எடுக்கிறான். மூணாறின் தேயிலை வயல்கள், ஹாரிசனின் பங்களா உள்ளிட்ட சொத்துகளைக் கையப்படுத்தி விடுகிறான். கர்ப்பவதியான ஹாரிசனின் ஆசை மனைவி கசாளியை வீட்டை விட்டு அடித்துத் துரத்துகிறான்.
இயோபின் மூத்த மகன் ட்மித்ரியும் இரண்டாமவன் இவானும் தன் தந்தை போன்ற முரட்டுச் சுபாவம் மிக்க வஞ்சகர்களாக வளர்கிறார்கள். ஆனால் கடைசிப் பையன் அலோசியோ இளமையிலேயே இறந்து போன அவனின் தாயைப் போல இரக்க சுபாவம் கொண்டு வளர்கிறான். அவனின் நட்பு வட்டம் காசாளியின் மகள், மலைக் கிராமத்துப் பையன் செம்பன் என்று சிறியது. 
ஆனால் சிறுவன் அலோசி, தம் அண்ணன் இருவரும் வேலைக்காரியைப் பாலியல் வன் கொடுமை செய்து கொன்று தூக்கியதைக் கண்டு வெறுத்துப் போய்  தன் வீட்டை விட்டே ஓடுகிறான்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயங்கிக் கொண்டிருந்த Royal Navy இல் கடற்படை வீரனாகச் சேர்ந்த அலோசி 1946 ஆம் ஆண்டில் மீண்டும் தம் சொந்த பூமிக்கு வருகிறான். 
இயோப் மற்றும் அவனது மகன்களது கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மூணாறு வாழ் அப்பாவிக் குடிகள் எப்படிக் காப்பாற்றப்படுகிறார்கள், ஆங்கிலேயர் ஆட்சியின் நிர்வாகத்தில் இருந்த இந்தியக் கடற்படையில் இருந்த அலோசியின் மறுபக்கம் என்ன, இந்த மூணாறுப் பகுதியின் வளத்தைச் சுரண்ட வரும் மதுரை அங்கூர் ராவுத்தரின் சதி வலையில் சிக்கும்இயோபின் ராஜ்ஜியத்தின் நிலை என்ன இதைத்தான் தொடர்ந்து பேசுகிறது இயோபின்ட புஸ்தகம்.

ஒரு வரலாற்றுப் பகைப்புலத்தோடு எடுக்கப்பட்ட இந்திய சினிமா இலக்கியத்தை இந்தப் படமளவுக்கு நேர்த்தியாக, என்னுடைய அனுபவத்தில் கண்டதில்லை. அதற்குக் காரணமே பிரமாண்டம் என்ற பெயரில் சாரமிழந்து போன காட்சியமைப்பு, எடுத்துக் கொண்ட சிக்கலான கதையமைப்பை எந்த வித வர்த்தக மாமூல் விஷயங்களுக்கும் ஆட்படாது நிறுவுதல், வெறும் பிரமாண்டத்தை மட்டும் காட்டிக் கதையில் கோட்டை விடுதல் என்ற நிலை இல்லாதிருத்தல் என்ற வகையிலேயே இதுவொரு கச்சிதமானதொரு படைப்பு.

இயக்குநர் அமல் நீராட் உடன் இணை தயாரிப்பாளர் இந்தப் படத்தின் நாயகன் பகத் பாஸில். இந்தப் படத்தின் கதையை ஒரு சொட்டுக் கூடச் சிதற விடாது காட்சியமைப்பில் பெரும் நியாயத்தைக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளரும் இயக்குநர் அமல் நீராட் தான். ஒளிப்பதிவுக்கும், காட்சிக் களன்களுக்கும் நூறு புள்ளியை இறைக்கலாம்.
நல்ல இயக்குநர் மட்டுமல்ல மலையாள சினிமாவின். இன்றைய நம்பிக்கைக்குரிய குணச்சித்திர ஆளுமை லால் தான் கொடுங்கோலனான இயோப் ஆக வருகிறார். தமிழ்ப்படங்களில் சாதா வில்லனாக்கிப் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கும் நாம் லால் இம்மாதிரியான அமானுஷ்ய நடிப்பைக் கொடுத்த படங்களைத் தேடியெடுத்துப் பார்க்கும் போது அவரின் உண்மையான பரிமாணம் விளங்கும்.
நான் நினைத்தே பார்க்கவில்லை, ஒடிசலான தற்காலத்துத் தலைமுறை நடிகன் ஜெயசூர்யா அங்கூர் ராவுத்தர் என்னும் மதுரைக்கார வணிகராக நெஞ்சில் வஞ்சமும், முகத்தில் கள்ளமும் பொதிந்திருக்கும் வெளிப்பாட்டை அநாயசமாகக் காட்டியது. இந்தப் படத்தில் லால் இற்கு அடுத்து நடிப்பென்ற வகையில் இவருக்குத் தான் கனமான வேலை கிட்டியிருக்கிறது.
இயோபின் கடைசி மகன், அலோசி என்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட வாலிபனாக பகல் பாஸில், நாயகன் என்பதற்காகத் தன்னை மீறிய நாயகத் தனத்தைத் தன் படங்களில் காட்டாதவர் இந்தப் படத்திலும் அடக்கமாகத் தன் எல்லையில் நின்று சாதிக்கிறார். இன்னும் அந்த செம்பன் என்ற மலைவாசி இளைஞனாக விநாயகன் இன்று கேரளாவைத் தாண்டி கவனிக்கப்படும் நடன், தன் கணவன் இவானின் (இயோபின் இரண்டாவது மகன்) துன்புறுத்தலுக்கு அடங்கிப் போனாலும் தன் கனவுலத்தில் வாழ்ந்து கொண்டே வஞ்சம் தீர்க்கக் காத்திருக்கும் ரஹேல் என்ற பாத்திரத்தில் வரும் பத்மப்ரியா, ஹாரிசனின் மகளாக ஏழ்மையும், மர்மமும் முகத்தில் புதைத்து வைத்திருக்கும் மார்த்தா என்ற இஷா சர்வாணி என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொரு பாத்திரங்களும் கச்சிதமாகப் பொருந்திப் போன நடிகர்களின் பங்களிப்பு.

படத்துக்கு அளவாகத் தூவப்பட்ட இசைக் கலவையை நேஹா நாயரும் யக்ஸன் கேரி பெரேராவும் சிறப்பான பங்களிப்பு. ரஹேலின் கனவுலகத்தில் பின்னணியில் ஒலிக்கும் "மெளனமே இதென்ன சொல்கிறாய்" https://youtu.be/q5V3iMGCRA் உஷா உதூப் பாடும் அந்தத் தமிழ்ப்பாட்டு அப்படியே காட்சியமைப்போடு படத்தை உலகத் தரத்தில் அமர்த்துகிறது.
அலோசி & மார்த்தா காதல் பாடலைத் தவிர்த்திருக்கலாம்.

இந்தப் படம் கேரளாவில் வசூல் ரீதியாகவும், விருதுகளாலும் பெருமை சேர்த்திருக்கிறது. இருப்பினும் இந்தியத் தேசிய விருதுகளிலும், சர்வதேசப் பட விழாக்களிலும் அதிகம் கவனிக்கப்பட வேண்டியது.

எங்கோ பிறந்து, எங்கோ வளர்பவன் தனக்கு செளகரியமான வாழ்விடங்களைத் தேடிப் போகின்றான். வரலாற்றின்  எல்லாக் காலகட்டத்திலும் அதர்ம நெறிகளோடு வாழத் தலைப்பட்டவர்களின் முடிவுரையை அலோசி போன்ற போராளிகளால் எழுத வேண்டியிருக்கிறது. சுதந்தரத்துக்குப் பின்னான மக்களாட்சியில் அலோசி போல் ஒருவன் வருகைக்காகக் காத்திருக்கிறது "இயோபின்ட புஸ்தகம்".

Sunday, February 07, 2016

விசாரணை - என்னுடைய FIR


வழக்கம் போல நல்ல படங்களுக்கு வரும் குறைவான மக்கள் கூட்டத்தோடு சிட்னியிலுள்ள திரையரங்கில் விசாரணை படம் பார்த்தேன். இப்படியான வகையில் நம்பிக்கை கொடுக்கும் ரசிகர்களால் தான் முன்னர் "அவதாரம்" படத்தின் ஆஸி விநியோகஸ்தருக்கும் அதுவே கடைசிப் படம் ஆனது. அப்போது 15 பேருடன் மெல்பர்ன் திரையரங்கில் பார்த்திருந்தேன். "அங்காடித் தெரு" பட சிட்னி விநியோகஸ்தரும் மூன்று பேருடன் படம் காட்டிய அனுபவத்தில் அப்படியான விஷப் பரீட்சைக்கே பின்னர் இறங்கும் நிலை இல்லாமல் போனது. இதுதான் நல்ல படங்களுக்கும் அவற்றைத் திரையரங்கில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்குமான இடைவெளியை ஏற்படுத்தும் சமாச்சாரங்கள்.

சரி இனி "விசாரணை" க்கு வருவோம்.
தாமுண்டு தம் வேலையுண்டு என்றிருக்கும் அப்பாவிகள் நாலு பேர் ஆந்திரா காவல்துறையினரால் கொள்ளையடிப்பு வழக்கின் குற்றவாளிகள் ஆகுமாறு நிர்ப்பந்திக்கப்படும் சூழலுக்கு அவர்கள் ஆட்படும் போது அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள். ஆந்திராவில் இருந்து தம் தாய்த் தமிழகத்துக்கு வந்த போது எப்படியானதொரு சவாலை எதிர் கொண்டார்கள் என்பதே படத்தின் மூலம்.
சொல்லப் போனால் இரண்டு வெவ்வேறு முடிச்சுகளோடு பயணப்படும் கதை, இடைவேளைக்கு முன், பின் என்று பயணிக்கிறது.

உமா சந்திரன் எழுதிய "முள்ளும் மலரும்" நாவலை முழுமையாகப் பயன்படுத்தாமல் அதன் முக்கிய கதையோட்டத்தை வைத்து மீதியைத் தன் பாணியில் கதையாக்கி "முள்ளும் மலரும்" படத்தை இயக்கிய போதும் இயக்குநர் மகேந்திரன், மூல எழுத்தாளக்குரிய கெளரவத்தையும், அடையாளத்தையும் ஒரு போதும் குறைத்துக் காட்டியதில்லை.
அது போலவே  மு.சந்திரகுமார் தன் சுய வாழ்வியல் குறிப்புகளை வைத்து எழுதிய "லாக்கப்" என்ற புதினத்த்தை இந்தப் படத்தின் முதல் பகுதியில் மட்டும் பயன்படுத்தி மீதியை இன்னொரு களத்தோடு இணைத்துப் புதிதாகக் கதை பண்ணிய வெற்றி மாறனும் இங்கே மு.சந்திரகுமாருக்கான முக்கியத்தை என்றும் தவிர்த்ததில்லை.
இயக்குநர் வெற்றி மாறனைப் பொறுத்தவரை அவரின் முந்திய படைப்புகளோடு ஒப்பிடும் போது "விசாரணை" அசுரப் பாய்ச்சல். அதுவும் இரண்டு கதை அம்சங்களை ஒரே காவல்துறை எனும் தளத்தில் நிகழ்ந்தாலும் இரு வேறுபடுத்திக் காட்டிய விதத்திலும் "வெற்றி" மாறன் தான்.

ஆனால் காட்சியமைப்புகளில் ஏற்கனவே பார்த்த இயக்குநர் மிஷ்கின் போன்றோரின் காவல் துறைப் படங்களின் ஒரு சில காட்சியமைப்புகளை நினைவுபடுத்துவது போலத் தோன்றி மறைகிறது.
ஆனந்தியின் பாத்திரமும், தினேஷ் & ஆனந்தி நட்பும் படத்தின் ஓட்டத்துக்கு எந்த விதத்திலும் உதவாத இடைச் செருகல்.
ஒரு மணி நேரம் 40 நிமிடம் ஓடும் படத்தில் பாடல்கள் இல்லை, இருந்தால் படத்தின் இயல்பைக் கெடுத்திருக்கும். ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை உறுத்தாமல் உதவுகிறது.
இடைவேளையே தேவை இல்லை எனுமளவுக்குப் படத்தைக் கவனம் சிதறாமல் எடுத்த விதத்திலும் வெற்றி மாறனுக்கு வெற்றியே.

நடிகர் தேர்வில் "அட்டகத்தி" தினேஷ், ஆடுகளம் முருகதாஸ் போன்றோர் படத்தின் பாத்திர அமைப்புக்கு ஏற்ற பாங்கில் இருப்பதால் இயல்பாகப் பார்க்க முடிகிறது.
சமுத்திரக்கனி இன்னொரு பிரகாஷ் ராஜ் ஆகும் அபாயக் கட்டத்துக்குப் பயணிக்கிறார்.
அதே பார்த்துப் போன இவரின் முந்திய பாத்திர நடிப்புக்குக் கொடுத்த உடல் மொழி, நல்லவரா கெட்டவரா என்று குழப்பும் நடையுடை. ஆனால் இந்த மாதிரிப் படங்களைப் பரவலான ரசிகர் வட்டத்துக்கு இழுத்துச் செல்லும் நட்சத்திர அந்தஸ்துக்குப் பலமாக அமைவார் என்ற விதத்தில் ஏற்கலாம். 
இங்கே சமுத்திரக்கனியின் கையைப் பிடித்து நான் இழுத்ததற்கு முக்கிய காரணமே நடிகர் கிஷோர் தான். முக்கியமான அரசியல் புள்ளியின் auditor ஆக வரும் கிஷோரை மையப்படுத்தித்தான் இந்தப் படத்தின் இரண்டாம் பகுதி.

வில்லன் என்றால் ஏகத்துக்கும் மிகை நடிப்பு, அப்பாவி என்றால் தரையில் தவழாத குறையாக நடித்துத் தள்ளும் நடிகர்களில் கிஷோர் இந்தப் படத்தில் கொடுத்திருக்கும் நடிப்புத் தான் இந்தப் படத்தில் பங்களித்த அனைவரையும் தள்ளி விட்டு முன் நிற்கிறது. 
இவர் வரும் ஆரம்பக் காட்சியில் இருந்து இறுதி நொடி வரை நுணுக்கமாகப் பார்த்தால் ஒரு மகா நடிகன் தன்னுடைய நடிப்பை எவ்வளவு தூரம் தனித்து வித்தியாசப்படுத்திக் காட்டலாம் என்ற ரீதியில் அனுபவிக்கலாம். 
மற்றப்படி இந்தப் படத்தின் ஒவ்வொரு பாத்திரத் தேர்வும் கச்சிதம். 

படத்தொகுப்பாளர் கிஷோர் இந்தப் படத்துக்குப் பலம், அவரின் நிரந்தர இழப்பை ஆரம்பத்தில் நினைவுபடுத்திய விதத்தில் மனம் கனத்தது.

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணித் தயாரிப்பில் "காக்கா முட்டை" ஐத் தொடர்ந்து "விசாரணை" என்று இரண்டு நல்ல படைப்புகள். இதில் முன்னதுதான் உலகத் தரத்துக்கான சமரசம் இல்லாத இயல்பான படம் என்பது என் கருத்து. 

ஒரு வருடத்துக்கு முன்பே தயாரிக்கப்பட்டாலும் இந்த ஆண்டின் நடப்புத் தமிழக அரசியலோடும், கடந்த வருடங்களில் நிகழ்ந்த அரசியல் சதுரங்க விளையாட்டுகளை உன்னிப்பாகக் கவனித்தோரும் இந்தப் படத்தின் காட்சி அமைப்போடு ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது.

சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற எழுத்தாளர் மு.சந்திரகுமாரின் காட்சிப் பதிவுகளைப் படம் முடிவில் இணைத்தது சிறப்பு.
வெனிஸ் இல் நிகழ்ந்த சர்வதேசப் பட விழாவில் போட்டிப் பிரிவில் பங்கேற்ற முதல் படம் விசாரணை. Amnesty International Italia விருதைப் பெற்றுக் கொண்டது.

"விசாரணை" போன்ற நல்ல சினிமா இன்னும் வர இவற்றைத் திரையரங்கு சென்று பார்த்து, இறுதியில் இடம் பாராது எழுந்து நின்று கை தட்டிக் கொண்டாட வேண்டும்.