Social Icons

Pages

Friday, December 18, 2009

யானைச் சவாரியும் யானைகளின் சாகசமும்

அந்த ஒரு நாள் சுற்றுலாவுக்காகப் பதிந்த சுற்றுலாப்பயணிகளிடம் "யாரெல்லாம் யானைச் சவாரி செய்ய ஆசைப்படுகின்றீர்கள்? கையைத் தூக்குங்களேன்" என்றார் பஸ்ஸுக்குள் இருந்த எங்களைப் பார்த்து, சுற்றுலா முகவர். ஆனையாரின் முதுகில் சவாரி செய்வது என் வாழ் நாள் இலட்சியம், அது இவ்வளவு சீக்கிரம் ஈடேறுகிறதே என்ற மகிழ்ச்சியில் ஆசையோடு கையைத் தூக்கிக் கொண்டே பஸ்ஸில் சுற்றும் பார்க்கிறேன்.கூடவந்தவனெல்லாம் கப்சிப் என்று ஏவிஎம் சரவணன் மாதிரி கையைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். "சரி! உங்களை மட்டும் Elephant village இல் விட்டு விட்டு அரை மணி நேரத்தில் வந்து கூட்டிக் கொண்டு போகின்றோம்" என்று என்னிடம் சொல்லி விட்டு சொன்ன படியே என்னை Elephant village என்ற இடத்தில் இறக்கினார்கள்.

யானைச் சவாரி செய்ய அதிகமில்லை ஜென்டில்மன் வெறும் 500 தாய்லாந்து பாட் தான். கிட்டத்தட்ட 12 டொலர்கள். காசைக் கட்டி விட்டு நின்ற என்னை மரச்சட்டங்கள் பதித்த மாடி ஒன்றுக்கு ஏறுமாறு பணித்தார்கள். அங்கே நின்று தான் யானையாரின் முதுகில் உட்கார வேண்டும். அந்த மரச்சட்ட மாடியின் மேல் பிள்ளையார் சிலையும் உண்டியலும் இருந்தது. ஒரு ரவுண்ட் அடித்து விட்டு யானையார் நான் நின்ற மாடிக்கு வருகிறார். என்னை அவரின் மேல் இருக்குமாறு கையைக் காட்டுகிறார்கள். மெல்ல மெல்ல நிதானமாக காலைச் சவட்டி யானையாரின் முதுகின் மேல் இருந்த பெட்டியில் இருக்கிறேன். அதில் சீற்றும் , பெல்டும் இருந்தது. பெல்டைப் போடுகிறேன். முன்னே பாகன் வழிகாட்ட யானையார் மெதுவாக நடக்கிறார். அடர்ந்த புதர்ப்பத்தைகளின் நடுவே இருக்கும் குறுகலான பாதையால் மெல்ல நடக்கிறோம். யானையாரின் முதுகு வெயிலுக்கு வெடித்த தார் ரோட் மாதிரி இருக்கு. லேசான லத்தி வாடையும் நாசியைத் துளைக்கிறது. கொஞ்சம் பயம், நிறைய சந்தோஷமாக யானைச் சவாரி மெல்ல நடை பழகுகிறது.

மவனே! என் முதுகில் ஏறிச் சவாரி செய்கிறாயா? உன்னை அப்படியே.... என்ற கணக்காய் பாதையை விட்டு விலகி புதர்ப்பக்கமாகத் திரும்புகிறார் யானையார். தாய்லாந்து மொழியில் அவரைத் திட்டியவாறே கையை பாதைப்பக்கமாகக் காட்டுகிறான் பாகன். கூடவே என் கமராவை வாங்கிப் படம் எடுப்பதற்கும் தயாராகிறான். ஆனால் யானையார் செம கடுப்பில் இருக்கிறார் போல, பாகன் படம் எடுப்பதுக்கு யானையாரை நிற்குமாறு பணித்தாலும் அவர் கேட்ட பாடில்லை, முன்னே முன்னே நகர்ந்து வருகிறார். கையில் இருந்த முசத்தால் கண்ணுக்குள் குத்தி விடுவது போல பாகன் பாவனை காட்ட பயத்தோடு நிற்கிறார்.அந்த சமயம் பார்த்து பாகன் பின்னால் போய் கமராவை சரிபார்க்க ஆரம்பிக்க, யானையார் மீண்டும் நகர்கிறார். மீண்டும் பாகன் முசத்தால் வெருட்டுகிறான். யானையார் தாமதிக்கிறார். இப்படி இவர்கள் இரண்டு பேரின் கண்ணாமுச்சியில் நான் அகப்பட்டு நிற்கிறேன். பின்னர் பாகனும் என்னோடு யானைச் சவாரியில் பங்கு போட யானையார் முதுகில் ஏறி சதுப்பு நீரோடைப்பக்கம் யானையாரைத் திசை திருப்புகின்றான். அறுந்து போவான் சேத்துக்குள்ளாலை எல்லாம் நடக்க விடுகிறான் என்று யானையார் நொந்திருப்பார். ஒருவாறு அரைமணி நேர யானைச் சவாரி முடிந்து இருப்பிடம் வருகிறோம். களைப்பைப் போக தண்ணீர் தரப்படுகிறது. எனக்காகக் காத்திருக்கிறார் சுற்றுலா வழிகாட்டியும், கூடவந்த பஸ்ஸும். அடுத்து நாங்கள் சென்றது தான் முந்திய உலாத்தல் பதிவில் பார்த்த தாய்லாந்தின் மிதக்கும் சந்தை (Damnoen Saduak).

மிதக்கும் சந்தைச் சுற்றுலா முடிந்து அடுத்த உலாத்தலுக்கு முன்னர் இரண்டு பகுதிகளாகச் சுற்றுலாப் பயணிகள் பிரிக்கப்பட்டு இரு வேறு உலாத்தல்களுக்காகத் திசை திருப்பபடுகின்றனர். என்னுடன் கூட வந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே என் பஸ்ஸில் இருக்க புதிதாக சில தலைகள் வந்து சேர்கின்றன. அதில் ஒருத்தி தான் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த ஒரு இந்தியப் பெண்ணும், அவள் நண்பியான பிரென்சுக்காரியும் , இன்னும் இரண்டு ஜப்பானியப் பெண்களும். நாங்கள் முதலில் சென்றது வயிற்றுக்கு வஞ்சனை செய்யக்கூடாது என்ற நோக்கில் ஒரு மதிய உணவகத்துக்கு. அதை ஒழுங்கு செய்து பணம் கட்டியதும் சுற்றுலா முகவர் தான். அந்த ஒரு நாள் சுற்றுலாக் கட்டணத்தில் மதிய உணவும் அடக்கம். நல்ல மீன் கறியும், தாய்லாந்து கோழி மிளகாயில் சங்கமாய்க் கிடந்த கறியுடன் சோறும் வருகிறது. அந்தப் பிரெஞ்சுப் பெண்களும், ஜப்பானிய பெண்களும் என் மேசையில் தான் வந்து இருக்கிறார்கள். அவர்களாக ஒவ்வொருவரை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த இந்தியப் பெண், தன் தாய் தந்தையின் சொந்த ஊர் பொச்சிரி, பொச்சிர் என்றாள். என்னடா இது இப்படி ஒரு ஊரா என்று மூளைக்கு வேலை கொடுத்துக் கண்டு பிடித்தேன். அட! பாண்டிச்சேரி ;)

அந்தப் பாண்டிச்சேரிக் குமரிக்கு வயசு 22, தன் கல்யாணத்துக்காக உடுப்பெடுக்க வந்திருக்கிறாளாம். பாரதிராஜா படங்களில் வருமே வெள்ளுடைத் தேவதை அந்த உடுப்புத்தானாம். என்னடா கொடுமை பிரான்சிலிருந்து இவ்வளவு மைல் கடந்து தாய்லாந்து வந்து சுற்றிப் பார்ப்பதென்றால் நியாயம், அதை விட்டு விட்டு உடுப்பெடுக்க ஏன் வந்திருக்கிறாள் என்று மனதுக்குள் குமைந்த என் நினைப்பை அடுத்த சில நாட்களில் மாற்றியது நானும் அந்த விஷயத்தில் கண்ட உண்மையை. அதைப் பிறகு சொல்கிறேன். சாப்பிட்டு விட்டு அந்த ப்ரென்சுக்காரியும் இந்திய யுவதியும் லாவகமாக சிகரட்டைப் பற்றுகிறார்கள். புகை வளைவில் கலாச்சாரம் வளையல்களாகப் போகிறது.

அடுத்து நாங்கள் உலாத்தப் போனது யானைகளின் சாகசம் காண. யானைகளின் சகாசக் காட்சி நிலையம் செல்கிறோம். உள் நுளைந்தால் எடுத்த எடுப்பிலேயே தேவர் பிலிம்ஸ் புலி ஒன்று உயிரோடு, அதற்குப் பக்கத்தில் நின்று படம் கூட எடுக்கலாமாம். வேண்டாமய்யா இந்த விளையாட்டு என்று நகர்கிறேன் அந்த இடத்தை விட்டு.

யானைச் சாகசம் நடக்கும் திடலுக்குள் போய் உட்கார்கிறோம். முதலில் கண்கட்டு வித்தை நடக்கிறது. பெட்டிக்குள் போனவள் பின் கதவால் திரும்புகிறாள், தொப்பிக்குள் போன முயல் பறவையாக வருகிறது. இதெல்லாம் ஓய்ந்த பின்னர் யானைகள் மெல்ல மெல்ல அணிவகுத்து வருகின்றன. ஒவ்வொரு யானையும் வந்து வேடிக்கை காட்டி விளையாடுகின்றன. பார்க்கும் போது சுதந்திர தின அணிவகுப்புப் போல இருக்கிறது.


அடுத்து தாய்லாந்து நாட்டின் போரியல் வரலாற்றில் யானைப் படையின் பங்களிப்பினை ஒருவர் ஒலிபெருக்கியில் சொல்லச் சொல்ல காட்சிகள் கண்முன்னே நடக்கின்றன.கோட்டைக் கொத்தளங்களைப் தீப்பந்தங்களை எறிந்து தீமுட்டுகிறார்கள். பெரும் போர் நிகழ்கின்றது. இரண்டு நாட்டு யானைப் படைகளும் வாட் போர் புரிகிறார்கள். வென்றவன் கட்சி யானைகளில் இருந்து வீரர்களை மண்ணில் முத்தமிட வைக்கின்றான்.

அடுத்ததாக யானைகளின் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி. அந்தப் போட்டிக்காக அடுத்த கட்ட யானைகள் தம்மோடு ஒவ்வொரு நாட்டுப் பெயர்பொறித்த விரிப்புக்களோடு வருகின்றன. ஒவ்வொரு அணிக்கும் நடக்கிறது கால்பந்து மோதல். யானைகள் லாவகமாக கோல் போட்டு விளையாடுகின்றன. இறுதி வெற்றி உருகுவே யானைக்காம் ;)

எல்லாம் முடிந்து அடுத்த பக்கத்தில் முதலைகளின் சாகசமும் காண்பிக்கப்படுகிறது. சிறுவன் ஒருவன் முதலையின் வாய்க்குள் தலையைக் கவிழ்ப்பதுமாக நடக்கிறது விளையாட்டு. அடுத்த உலாத்தலுக்கு நேரமானதால் நகர்கின்றோம் அந்த இடத்தை விட்டு.

Sunday, November 22, 2009

தாய்லாந்தின் மிதக்கும் சந்தை (Damnoen Saduak) கண்டேன்

தாய்லாந்து உலாத்தல் அடிக்கடி தொடரமுடியாமல் இழுத்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பதிவுக்குமாக பொருத்தமான படங்களை ஏற்கனவே எடுத்திருந்த தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுத்துப் போடுவது தான் பெரும் வேலையாக இருக்கின்றது. எப்படியாவது வாரத்தில் இரண்டு தொகுப்பாவது போடவேண்டும் என்ற நினைப்போடு மீண்டும் தாய்லாந்து உலாத்தல் தொடர்கின்றது.

இம்முறை நான் பார்க்கச் சென்ற இடம் Damnoen Saduak என்ற பகுதியில் இருக்கும் மிதக்கும் சந்தை (Floating Market). Damnoen Saduak என்ற வாய்க்காலுக்கு இருமருங்கும் பெட்டிக்கடைகள் நிறைக்க, நடுவில் ஓடும் நீரோடையில் இந்த மிதக்கும் சந்தை வியாபாரம் களை கட்டுகின்றது. முன்னர் நான் கம்போடியாவில் பார்த்த மிதக்கும் கிராமம் போல மக்களில் முழுமையான வாழ்க்கையும் இந்த இடத்தில் கழிவதில்லை. மாற்றாக இங்கே கால்வாய்க்கு இருமருங்கிலும் அமைந்த பெட்டிக் கடைகளோடு, கூடவே கால்வாயில் பயணிக்கும் நீண்ட வள்ளங்களில் ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் பொருட்களை நிறைத்துக் கொண்டே நீர்ப்பாதையின் ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தம் வரை பயணிப்பார். இந்த இடத்துக்குப் பொருட்களை வாங்க வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் தமக்கான வள்ளங்களில் கட்டணம் கொடுத்து ஏறிப் பயணித்துக் கொண்டே எதிர்ப்படும் இந்த மிதக்கும் கடைகளில் பேரம் பேசிப் பொருட்களை வாங்குவார்கள். இது நாள் முழுதும் தொடரும் வழக்கமாக இருக்கும்.

எனது அடுத்த நாள் பயணத்தில் தங்கியிருந்த ஹோட்டல் மூலம் ஒரு நாட் சுற்றுலாவை ஒரு பயண முகவரிடம் ஏற்பாடு செய்திருந்தேன். அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இருந்தது இந்த மிதக்கும் சந்தைக்கான சுற்றுலா. மினி வான் மூலம் என்னையும், வேறு ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்களையும் அழைத்துக் கொண்டு Damnoen Saduak நோக்கிப் பயணித்தது வாகனம்.

தாய்லாந்து அரசர் இராமா IV இன் ஆட்சிக்காலத்தில் இந்த Damnoen Saduak கால்வாய் தோண்டப்பட்டுப் பெயரும் சூட்டப்பட்டது. Samutsakorn மாகாணத்தில் இருக்கும் Taachin ஆற்றையும் Samutsongkram மாகாணத்தில் உள்ள Maklong என்ற ஆற்றையும் இணைத்து உள்ளூர்வாசிகளின் பயணச் சிரமத்தைக் குறைத்ததோடு அவர்களின் பொருண்மிய மேம்பாட்டை வளப்படுத்தும் முகமாவே இந்தக் கால்வாய்த் திட்ட்டம் அமைந்தது.

ராஜ்புரி என்ற மாகாணத்தின் கீழ் இருக்கும் இந்த Damnoen Saduak, பாங்கொக்கில் இருந்து சுமார் 100 கி.மீட்டர் பயணத்தில் இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்கிறோம். வாகனத்தில் இருந்த சுற்றுலா வழிகாட்டி "சரியாக ஒரு மணி நேரத்தில் மீண்டும் இந்த இடத்த்துக்கு வந்து விடுங்கள், இப்போது நீங்கள் விரும்பிய இடத்துக்குப் போகலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

கால்வாயின் மிதப்பில் வந்தால் ஒவ்வொரு பயணிகளையும் கூட்டாக இணைத்து கிட்டத்தட்ட பத்துப்பேர் கொள்ளுமளவுக்குச் சேர்த்த பின்னர் ஒவ்வொரு வள்ளமாகப் பயணத்தை ஆரம்பிக்கிறது. அந்தப் பயணத்திற்கான கட்டணமும் மிகக் குறைவு. வள்ளம் போக முன்னர் ஒவ்வொருவராகப் படம் பிடித்ததன் சூக்குமம் முதலில் புரியவில்லை. ஆனால் இந்தப் பயணம் முடிந்த பின்னர் வள்ளத்தில் இருந்து வெளியேறும் போது, ஏற்கனவே என்னைப் புகைப்படம் எடுத்த சிறுவன் என் முகம் பொறித்த பீங்கான் கோப்பை ஒன்றைக் காட்டி நினைவுப் பொருளாக வாங்க விருப்பமா என்று கேட்கிறான். விருப்பமிருந்தால் வாங்கலாம், இல்லாவிட்டால் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கலாம்.


வள்ளத்தில் இருந்தவாறே கால்வாய் ஓரமாக இருக்கும் கடைகளைப் பார்த்தவாறே நகர்கின்றேன். என் வள்ளத்தில் ஒரு ஜப்பானிய இளமங்கையும், ஐரோப்பாவின் ஏதோ ஒரு மொழி பேசும் இரண்டு வயதான தம்பதிகளும், மேலும் சில வெள்ளையர்களுமாக இருக்கின்றார்கள். எனக்கு முன்னே இருந்த ஜப்பானிய யுவதி அடிக்கடி தன் கமெராவைத் தந்து தன் போஸுக்கு படமெடுக்கச் சொன்னாள். பெண் என்றால் பேயும் இரங்கும் தானே ;-)

இந்த வள்ளப் பயணத்தில் ஒரு தொழில் ரகசியத்தைக் கண்டேன். வள்ள ஓட்டுனருக்குப் பரிச்சயமான, அல்லது நட்பு வட்டாரத்தில் உள்ள கால்வாய் ஓரக் கடைகளைக் கண்டால் அந்தப் பக்கமாக வள்ளத்தைத் திருப்பி நிற்கின்றார். ஒரு சில நிமிடங்கள் அந்தக் கடைக்காரர் தன்னுடைய கடையில் உள்ள பொருட்களாகக் காட்டிக் காட்டி வியாபாரத்தை சில நிமிடங்களுக்குள் முடிக்க ஆசைப்படுகின்றார். 500 தாய்லாந்து பாட் இல் இருக்கும் சில பொருட்களை இப்படியே வள்ளத்தில் இருப்பவர் தன் வாய் வீச்சில் பேரம் பேசி 100 தாய்லாந்து பாட் வரை குறைக்கும் கொடுமையும் இருக்கிறது. எல்லா ஆசிய நாடுகளிலும் இருக்கும் பொதுவான பண்பு இது.

இந்த மிதக்கும் சந்தையில் உள்ள வியாபார நுட்பம் என்னவென்றால், அழகான காட்சிப்படுத்தல் மூலமும், ஒரு சில செக்கன்கள் மட்டுமே அவகாசம் இருக்கும் குறுகிய கால இடைவெளியில் தமது பொருட்களைப் பற்றி உயர்வாகப் பேசியும் குறித்த வியாபாரிகள் தமது விற்பனையை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஆனால் நான் பார்த்த அளவில் இந்த மிதக்கும் சந்தையால் பயணிகளைக் காவிச் செல்லும் வள்ளங்கள் ஈட்டும் வருமானம் தவிர, மிதக்கும் சந்தைகளின் விற்பனை மூலமான வருமானம் பெரிதாக இல்லை என்றே நினைக்கின்றேன். பெரும்பாலான கூட்டம் வேடிக்கை பார்த்தே சொல்கின்றது.
எமது கூர்மூக்கு வள்ளம் ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தம் வரை அசைந்தாடிப் போகின்றது. மீண்டும் தன் கமராவைத் எனக்குத் தந்துவிட்டு தன் தலையைச் சிலுப்பிப் போஸ் கொடுக்கிறாள் அந்த ஜப்பானிய யுவதி.

தாய்லாந்தில் விளையும் ஆப்பிள், மங்குஸ்தான், அன்னமுன்னா (சீதாப்பழம்), வாழைப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம், மாதுளம்பழம் என்று பரப்பிய பழ வள்ளம் ஒரு புறம். தாய்லாந்தின் பாரம்பரிய விழுமியங்கள் சார்ந்த ஓவிய, கைவினைப் பொருட்கள் தாங்கிய வள்ளம் ஒரு புறம், தாய்லாந்துக்கே உரிய கூடைத் தொப்பிகளை நிறைத்த தொப்பிக்கடை வள்ளம் இன்னொரு புறம், கால்வாயில் பயணிக்கும் போது பசிக்கிறதா இருக்கவே இருக்கிறது சுடச்சுடத் தயாராகும் உணவு என்று சைவ அசைவ மாமிச வகையறாக்களோடு சுடச்சுட வெள்ளைச் சோறும், நூடுல்ஸ் பாத்திரங்களுமாக இன்னொரு சாப்பாட்டுக் கடை வள்ளம், தாய்லாந்தின் கொடுமையான வெயிலில் பியர் அடித்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பவருக்கு முன்னால் வருகிறது மதுபானப் போத்தல்களும், குளிர்பானங்களும் தாங்கிய வள்ளமொன்று,
சாப்பிட்டீர்களா இப்போது தாய்லாந்து இனிப்புப் பதார்த்தங்களையும் ஒரு கை பாருங்களேன் என்று சொல்லுமாற்போல தாய்லாந்தின் தனித்துவமான வாழைப்பழ பன் கேக் வகையறாக்களுடன் இன்னொரு இனிப்பு வள்ளம் என்று எதிர்ப்படும் ஒவ்வொரு வள்ளக் கடைகளும் விதவிதமான பொருட்களோடு கடைபரப்பி வலம்வருகின்றன. முதுமையின் விளிம்பில் இருக்கும் மூதாட்டி ஒருவர் தனியே தன் வள்ளத்தைத் தள்ளி அதற்குள் இருக்கும் வாழைப்பழங்களைக் காட்டிக் காட்டி விற்பனை செய்தது உருக்கியது.


தாய்லாந்தின் இன்னொரு முகம் பற்றி எல்லோருமே பரவலாக அறிந்த செய்தி. அதைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்வதற்கு முன், இந்த வள்ளப் பயணத்தில் நான் கண்ட ஒரு காட்சியையும் இங்கே சொல்லி வைக்கிறேன். எமக்குப் பக்கமாக இன்னொரு வள்ளம், அதிலே ஒரு 70 வயதைத் தொடும் ஒரு வெள்ளைக்காரக் கிழத்தோடு இருபதைத் தாண்டாத ஒரு தாய்லாந்து யுவதி. ஆணா பெண்ணா என்று அவளை எடை போடவே கஷ்டமாக இருக்கும் தோற்றத்தில் இருந்த அவள் முகம் வறுமையின் முகவரியைப் பறை சாற்றியது. தன் பார்ட்னராக வந்த வெள்ளைக்காரக் கிழவரிடம் யாசித்து, பக்கத்தில் போகும் தொப்பிக் கடை வள்ளத்தில் ஒரு தொப்பியை வாங்கிப் போட்டுக் கொண்டே குழந்தை மாதிரி அந்தக் கிழவரைப் பார்த்துச் சிரிக்கிறாள். மனசின் ஓரமாய் ஊசியால் குத்துவது போல இருக்கிறது. அந்தக் காட்சியைப் படம் பிடித்துக் கொண்டேன்.
நீலச்சட்டை தாய்லாந்து பெண்மணியோடு கூட்டி வந்த கிழவர்.

வானம் மெல்ல மழைத் துளிகளை ஊசிகளாக கீழ் நோக்கிச் செருகுகின்றது. நனைந்தபடியே முடிவிடம் நோக்கிப் பயணிக்கிறோம்.




வரலாற்றுக் குறிப்புக்கள் நன்றி: தாய்லாந்து சுற்றுலாத் தளங்கள்