Social Icons

Pages

Friday, December 26, 2014

"முன்னறிவிப்பு" (மலையாளம்) திரை அனுபவம்

செத்த பல்லியொன்றைக் கூட்டாக இழுத்துப் போக யத்தனிக்கும் எறும்புக் கூட்டத்தின் காட்சிப்படுத்தலோடு ஆரம்பிக்கிறது முன்னறவிப்பு மலையாளத் திரைப்படம்.

ஒரு மணி நேரம் 54 நிமிடங்கள் பயணிக்கும் இந்தப் படத்தின் ஓட்டமும் மெதுவான எறும்பு நடை தான். ஆனால் படம் பார்த்து முடித்ததும் சுருக்கென்று எறும்பொன்று கடித்த உணர்வு தான் சற்று முன்னர் இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும்.

தன்னுடைய மனைவியையும், குஜராத்திப் பெண் பூஜாவையும் ஆக இரட்டைக் கொலை செய்த குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து, 20 வருடங்கள் கடந்தும் ஜெயில் வாழ்க்கையை விட்டு வெளியுலகம் தேடிப் போக விரும்பாத சி.கே.ராகவன் (மம்முட்டி). 
ஜெயில் சூப்பரிண்டெண்ட் (நெடுமுடிவேணு) வாழ்க்கையை எழுத வரும் பத்திரிகையாளர் அஞ்சலி (அபர்ணா கோபி நாத். 
தான் அந்தக் கொலைகளைச் செய்யவில்லை என்று சாதிக்கும் கைதி சி.கே.ராகவனைக் கண்டு அந்த சுவாரஸ்யமான மனிதனின் வாழ்க்கையில் இருக்கும் மர்மத்தைப் புத்தக வடிவில் கொண்டு வர விரும்பிய பத்திரிகையாளர் அஞ்சலி சந்திக்கும் அனுபவங்களோடு முடிவில் சற்றும் எதிர்பாராத ஒரு புள்ளியில் வந்து நிற்கின்றது இந்தப் படம்.
இங்கே சொன்ன கதை முடிச்சை வைத்து ஒரு சராசரி மசாலாப் படமாக நீங்கள் கற்பனை பண்ணி "மனிதனின் மறுபக்கம்" அளவுக்குப் போனால் உங்கள் நினைப்பில் மண் தான்.

பாடல்கள் கிடையாது. மலையாள மர்மப் படங்களுக்கே உரித்தான மாமூல் இசையோட்டம் மட்டுமே. 
மலையாளத்தின் பிரபல இயக்கு நர் ரஞ்சித் தயாரித்து, கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேணு.

இந்த 2014 ஆண்டு வெளிவந்து நடிகர் மம்முட்டிக்கு பரவலான பாராட்டைக் கொடுத்த படம். கிட்டத்தட்ட மோகன்லாலுக்கு ஒரு "த்ரிஷ்யம்" போல மம்முட்டிக்கு "முன்னறிவிப்பு" என்று சொல்லுமளவுக்கு இவரின் வயதுக்கும், முதிர்ச்சிக்கும் ஏற்ற பாத்திரம் இது.
மம்முட்டியின் நடிப்பைப் பற்றிப் புதிதாக என்ன சொல்ல வேண்டியிருக்கிறது?
படம் முழுக்க எந்த வித நாயக அந்தஸ்தும், இலட்சணமும் இன்றிக் கொடுத்த பாத்திரமாகவே இயங்கியிருக்கிறார்.

படத்தின் நாயகியாக பத்திரிகை நிருபர் அஞ்சலி (அபர்ணா கோபி நாத்) மிகக் கச்சிதமான தேர்வு. இவர் தான் படத்தின் ஆரம்பம் முதல் காட்சிக்குக் காட்சி திரைக்கதையைச் சுமக்க வேண்டிய பொறுப்பை மிகவும் சிறப்பாக ஏற்று வழங்கியிருக்கிறார்.

இந்தப் படத்தைப் பார்க்கும் எண்ணம் இருந்தால், மலையாளம் தெரியாதவர்கள் ஆங்கிய உப குறிப்புகளோடு பார்க்க வேண்டியது கட்டாயம். தவிர்க்க முடியாத வசனப் பகுதிகளை உள்வாங்க அது உதவும். குறிப்பாக கைதி சி.கே.ராகவனின் தர்க்க ரீதியான கருத்துகள்.
படத்தின் முடிவை எங்கும் படிக்காமல் நீங்களாகவே அனுபவிக்க வேண்டுகிறேன்.

மெதுவாக நகரும் பட ஓட்டத்தைப் பொறுமையாக விரும்பிப் பார்க்கும் ரசிகருக்கு ஏற்றது இந்த "முன்னறிவிப்பு".
எனக்கு ஒரு நிறைவான கலைப்படைப்பைக் கண்ட திருப்தி ஒட்டியிருக்கிறது.