Social Icons

Pages

Monday, August 09, 2010

பட்டையைக் கிளப்பிய பட்டாயா பயணம்

தாய்லாந்துக்கு உலாத்தப்போய் ஒரு கடற்கரையிலாவது குளியலை மேற்கொள்ளாமல் போனால் அந்தப் பாவம் சும்மா விடாது என்று நினைத்துத் திட்டமிட்டபோது முதலில் என் மனதில் தோன்றிய இடம் புக்கெட் தீவு தான். காரணம், அவுஸ்திரேலியாவைச் சூழவும் எத்தனையோ கடற்கரைப்படுக்கைகள் இருந்தாலும் ஒரு வாரம் லீவு கிட்டினாலே அவுஸ்திரேலியர்கள் படையெடுப்பது இந்தப் புக்கெட் தீவுக்குத் தான். அவுஸ்திரேலியர்களைக் குறிவைத்து உள்ளூர் சுற்றுலாப்பணியகங்கள் முதலில் காட்சிப்படுத்துவது இந்த புக்கெட் தீவு நோக்கியதாகத் தான் இருக்கும். ஆனால் என் அதிஷ்டம், இருக்கும் சொற்ப நாட்களுக்குள் புக்கெட் தீவு சென்று வரக் கால நேரம் போதாமல் இருந்தது. எனவே கையருகே இருக்கும் சொர்க்கத்தைத் தேடிப்போவோம் என்று நினைத்து பாங்கொக் நகரில் இருந்த தனியார் சுற்றுலா மையத்தின் கதவைத் தட்டினால் அவர்கள் கை காட்டி விட்டது பட்டாயா வை அண்மித்த Coral island.

பட்டாயா ,தாய்லாந்து நாட்டிலுள்ள நகரம். இது தாய்லாந்து வளைகுடா பகுதியின் கிழக்கு கடலோரம் அமைந்துள்ளது. பேங்காக் நகரின் தென்கிழக்கில் 165கிமீ தொலைவுக்குள் இருந்தாலும், சோன்புரி மாகாணத்தில் உள்ள அம்பே பேங் லாமுங் (பங்கலாமுங்) பகுதியுடன் தொடர்பற்று உள்ளது. (நன்றி விக்கிபீடியா) பட்டாயா குறித்து மேலதிக வாசிப்புக்கு

எனது தங்குமிடத்தில் இருந்து என்னை ஏற்றிக் கொண்டு பின்னர் மேலும் சில பயணிகளை வெவ்வேறு ஹோட்டல்களில் இருந்து ஏற்றியவாறே பட்டாயா நோக்கிப் பயணித்தது சுற்றுலா வான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கடந்த நிலையில் பட்டாயாவில் வந்திறங்கியது. இந்த நகரம் பூலோக சொர்க்கம் என்று வர்ணிக்கத்தக்க வகையில் அனைத்து சமாச்சாரங்களும் கிட்டும் இடம். ஆனால் அதற்கெல்லாம் சமரசம் செய்து கொள்ளாமல் நேராக , ஒழுங்கு செய்திருந்த படகு மூலம் Coral island நோக்கிப் பயணிக்கலாம் என்று கூட்டத்தோடு கூட்டமாக கடலுக்குள் கால்கள் அலம்ப நடக்கின்றோம். எங்களுக்காகக் காத்திருந்து வழிகாட்டியாக இருப்பவன் முன்னே நடக்கப் பின்னால் பவ்யமாகப் போகின்றோம்,படகு எங்களுக்காகக் காத்து நிற்கின்றது. ஒவ்வொருவராகக் கைப்பிடித்துத் தூக்கிய அந்த வழிகாட்டி என்னைக் கண்டதும் "கமோன் ஷாருக்கான் கமோன் ஷாருக்கான்" என்றான் எனக்குப் பாதி சிரிப்பும் பாதி வெறுப்புமாக நான் "ஷாருக்கான் இல்லை, யாரவர்?" என்றேன் படகில் ஏறி இடம் பார்த்து இருந்ததும் அவனை நோக்கி. "பொலிவூட் ஸ்டார் ஷாருக்கான்" என்று எனக்கே விளக்கமளித்தான். ஷாருக்கான் அடிக்கடி வந்து போகும் இடமாம் இது, ஷூட்டிங் கூட நடந்திருக்காம் , மேலதிக ஆராய்ச்சியின் விளைவாக அவன் எனக்குச் சொன்னது. அதுக்காகக் கண்டவன் எல்லாம் ஷாருக்கானா என்று என் மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். படகு கடலைக் கிழித்துக் கொண்டு போய்க்கொண்டிருக்கின்றது.



ஷாருக்கானைத் தெரிந்த எம் சுற்றுலா வழிகாட்டி ;-)

Coral island ஐ மையப்படுத்திப் பல கடல் சகாசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சகாசத்துக்கும் பணம் கட்டினால் போதும். அந்த வகையில் அடுத்ததாக கடலுக்குள் முழ்கி நீந்தும் சகாசத்துக்காகப் பணம் கட்டியவர்களின் ரசீதுகளை வாங்கி விட்டு இன்னொரு சிறு படகில் அவர்களை இடமாற்றி விடுகிறார்கள். கூட வந்த ஒரு ஜப்பானியக் கூட்டம் மாயமாகிறது. எமது பயணம் தொடர்ந்தது.



அடுத்ததாக பாரசூட்டில் மிதக்கப் பணம் கட்டியோரை அழைக்கிறார்கள், ஒவ்வொருவராகப் போகிறார்கள், இன்னொரு பிரமாண்டமான கப்பலை நோக்கி, அதில் நானும் ஒருவன். ஏதோ துணிச்சலில் பணம் கட்டியாகிவிட்டது. வாழ்நாளில் சினிமாப் பாட்டுக்களை ஓட விட்டுக் கற்பனை செய்ததைத் தவிர நிஜத்தில் பாரசூட் அனுபவம் கிடையாது. பயந்தாங்கொள்ளி வேறு. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று மனச்சாட்சியின் உறுத்தலைக் கேட்காமல் முன்னே நடக்கிறேன். ஒவ்வொருவராகப் பாரசூட்டில் பறக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அடுத்தது நான், திரும்பி ஓடுவோமா என்றால் எங்கே ஒடுவது கடலையும் படகையும் தவிர?



பாரசூட்டில் ஏற்றமுன் பாதுகாப்பு அங்கிகளை அணியச் செய்து சிறிது விளக்கமும் கொடுக்கிறார்கள். எல்லாம் காதில் ஏறினால் தானே? பாழாய்ப்போன மனச்சாட்சி "உனக்கு இது தேவையா தேவையா" என்று ரீமிக்ஸ் செய்தது. என்னைப் பாரசூட்டுடன் கட்டுகிறார்கள் மெல்ல மெல்ல மேலே போகிறேன். என்ர மடத்துவாசல் பிள்ளையாரே, உன்னைத் தேடி தான் நான் வாறேனோ தெரியேல்லை, என்னைக் காப்பாற்று பிள்ளையாரே பிள்ளையாரே என்று அரட்ட அரட்ட சுழன்று சுழன்று அந்தக் கடற்காற்றில் பாரசூட் நமீதா ஆட்டம் ஆடியது.


மேலே மேலே உயர உயர பயம் எல்லாம் மெல்லக் கழன்று ஒரு பற்றற்ற ஞானியைப் போலச் சிரித்துக் கைகளை விரிக்கின்றேன். புதிய வானம் புதிய பூமி என்று பாடலாம் போலத் தோன்றியது, மகிழ்ச்சிக் களிப்பில் அந்த உசரத்தில் நான் கத்தியது கீழே யாருக்கும் கேட்டிராது அவ்வளவு உயரம். வாழ்வின் உச்சத்தைக் காட்டிய திருப்தியோடு கீழே லாவகமாக பாரசூட் வளைந்து வளைந்து கப்பலின் தளத்தைத் தொடுகிறது. முறுவலோடு என் படகுக்குள் பாய்கின்றேன். மீண்டும் பயணம் தொடர்கிறது Coral island நோக்கி.



அரைமணி நேரம் வரை கழிந்த நிலையில் Coral தீவு நெருக்கமாகக் கண்ணுக்கு முன்னால். மெல்ல மெல்ல இன்னும் இன்னும் நெருக்கமாக. ஒருவாறு அந்தப் படகுப்பயணம் தரை தட்ட ஒவ்வொருவராக இறங்கினோம். எமக்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு உணவகம் சக இளைப்பாறும் இடம் செல்கிறோம். பின்னர் கடலில் குளிப்பதற்கான நீச்சலுடையை மாற்றி விட்டு மீண்டும் கடலுக்குள் பாய்கிறோம். ஆசை தீர அந்தக் கடலில் குளிக்கலாம் என்றால் ஆசை தீர்ந்தால் தானே. பளிங்கு மாதிரிச் சுத்தமான தண்ணீர் , ஒரு இளஞ்சூட்டு வெப்பத்தின் கதகதப்பில் அந்தக் கடலில் குளிப்பதே பேரானந்தம் தான்.




சீட்டுக்கட்டு விளையாடும் உள்ளூர்வாசிகள்

Coral தீவிலும் அதை மையப்படுத்திய ஏகப்பட்ட கடற்களியாட்டங்களுக்கான வசதிகள் உண்டு. காற்றடைத்த மிதவைத் தெப்பங்கள், நீருக்குள் பாய்ந்தோடும் மோட்டார் சைக்கிள்கள், மோட்டார் படகுப் பயணம் என்று இவற்றை வாடகைக்கு வாங்கி ஓடும் வசதி உண்டு. இங்கிருந்தும் கடலின் அடிக்குள் போய் கடல் ஆழம் கண்டு களிப்புறவும் வசதிகள் உண்டு. களைப்பாக வந்து கடற்கரை மணலோரம் இருக்கும் இருக்கைகளில் சாய்ந்து கடற்காற்றை அனுபவிக்கவும் வசதிகள் உண்டு, அதற்கும் தனிக்கட்டணம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு இலவச குருமணல் தரை அனுபவம்.

கடலைக் கண்டால் பெரிசுகளே குழந்தையாக மாறும் போது இந்தச் சிறுசுக்கு மட்டும் உவகை வந்தால் வியப்பேது

இந்தப் பயணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டதன் பிரகாரம், மீன் பொரியல், மீன் கறி, முட்டைப் பொரியல், சாலட் என்று கூட்டாகச் சோற்றுடன் களமிறங்கும் கூட்டணியைப் பரிமாறுகிறார்கள். உண்ட களைப்பில் மெல்ல கடற்கரை மணல் தழுவ குட்டி உறக்கம் கொள்ளலாம். கடற்கரையை மையப்படுத்தி சுடச்சுட தாய்லாந்தின் சுதேச பண்டங்களும், பழவகைகளும் சுடச்சுட விற்பனையாகின்றன. இளநீர்க்குலைகள் வெட்டப்பட்டுத் தாகம் தணிக்க உதவும் அதே வேளை உள்ளே இருக்கும் வெள்ளை வழுக்கலைக் கிளறித் தின்னவும் வசதியாகக் கொத்திக் கொடுக்கிறார்கள்.
எல்லா அனுபவங்களும் தித்திக்க மாலை சாயும் நேரம் Coral தீவை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிகின்றோம்.



Thursday, August 05, 2010

தாய்லாந்து போனால் Khaosan Road கட்டாயம் போங்கோ


பாங்கொக் நகரில் நான் தங்குவதற்காக ஏற்பாடு செய்த ஹோட்டல் பெரும் சிக்கலைக் கொண்டு வந்தது என்று முந்திய பதிவிலும் சொல்லியிருந்தேன். அந்த யோகம் எனக்குத் தொடர்ந்து கொண்டே இருந்தது இன்னொரு வடிவிலும். நான் பாட்டுக்குக் கால் நடையாகவும் அல்லது ஆட்டோவிலும் ஊர் சுற்றி விட்டு மீண்டும் என் ஹோட்டலுக்குத் திரும்ப வேண்டுமே என்று ஆட்டோக்காரை நிறுத்தி என் தங்குமிடமான Lamphu Tree House போகவேண்டும் என்றால் அவரோ ஒகே ஒகே என்று சமத்தாகத் தலையாட்டி விட்டு Rambuttri Village Inn முன்னால் நிறுத்தி விட்டு என் பர்சைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். நான் பிறகு இன்னொரு ஆட்டோவைப் பிடித்துக் கண்ணை மூக்கைக் காட்டி என் தங்குமிடத்துக்கு வந்து சேரும் கதையாகி விட்டது. ஒருத்தர் இரண்டுபேர் என்றால் பரவாயில்லை இதுவே நாலைஞ்சு ஆட்டோக்காரை வெவ்வேறு நாட்களில் பிடித்தாலும் இதே கதிதான். ஒரு நாள் இதுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று ஒரு நாள் இப்படியாக என்னை நடுத்தெருவில் Rambuttri Village Inn முன்னால் ஒரு ஆட்டோர்க்காரர் விட்ட சமயம் பார்த்து இறங்கிக் காலார நடந்தேன். ஆகா, என் முன்னே ஒரு பெரும் அமளிதுமளி நிறைந்த பரந்து விரிந்த கடைத்தெரு ஒன்று முன்னால் விரிய எங்கெங்கு காணினும் வெள்ளைத் தோல்க்காரர் கூட்டமும், சுடச்சுடத் தாய்லாந்தின் தனித்துவங்கள் கடை விரித்திருக்கின்றன. அடடா, தாய்லாந்துப் பிள்ளையார் தான் என்னை இந்த இடத்துக்கு ஆட்டோக்காரர் வடிவில் வந்து இங்கே இழுத்துக் கொண்டு வந்தாரோ என்று எண்ணத் தோன்றியது. ஆம், நான் நின்ற அந்த இடம் தான் Khaosan Road.



தாய்லாந்துக்குச் சுற்றுலா வந்து Khaosan Road போகாமல் திரும்பிப் போவோர், சென்னைக்கு வந்த சுற்றுலாக்காரர் தி.நகர் போய் ரங்கநாதன் தெருவுக்குப் போகாத பாவம் அடைவார்கள். அந்த அளவுக்கு Khaosan Road
மிகமுக்கியமானதொரு சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது. இங்கே சந்து பொந்துக்கள், குறுக்கும் நெடுக்குமான குச்சு வீதிகள் எல்லாமே கடைகள், கடைகள், கடைகள், தலைகள், தலைகள், மனிதத் தலைகளின் கூட்டம் தான். இந்த இடம் இவ்வளவு முக்கியத்துவம் பெறக்காரணத்தில் முதன்மைக்காரணி இங்கே தான் backpackers எனப்படும் முதுகில் ஒரு மூட்டை பொதியைச் சுமந்து ஊர் சுற்றும் நாடோடிகளுக்கும், செலவு குறைந்த ஆனால் தரமான தங்கும் விடுதிகளும் நிறைந்திருக்கின்றன. இந்த ஒரு விஷயத்தை முதன்மைப்படுத்தியே இந்தச் சுற்றாடல் முழுவதும் விதவிதமான கடைகள் மையம் கொண்டு விட்டன.



எந்த விதமான முன்னேற்பாடும் இன்று கிடைத்த ஒரு வாரத்தை பாங்கொக்கில் கழிக்கலாம் என்று வருவோர் நேராக Khaosan Road வந்தாலே போதும். இங்கே நிறைந்திருக்கும் தனியார் சுற்றுலாப் பணியங்கள் வழிகாட்டி விடுகின்றன. அதாவது தாய்லாந்திலிருந்து கம்போடியா, வியட்னாம் வரை போகக் கூடிய நெடுந்தூரப் பயணங்களில் இருந்து, பாங்கொக்கைச் சூழவுள்ள புற நகர்கள் அயோத்யா, பட்டாயா தீவு போன்றவற்றோடு, பாங்கொக் நகரச் சுற்றுலா என்று விதவிதமான சுற்றுலாப் பொதிகளைக் காட்டுகின்றார்கள். உங்கள் வசதிக்கேற்ப ஒரு குறிப்பிட்ட சுற்றுலா அட்டவணையைத் தேர்ந்தெடுத்துப் பணம் கட்டினால் போதும், அடுத்த நாட்காலை உங்கள் தங்குமிடம் முன் சொகுசு வண்டி வந்து காவல் நிற்கும், அழைத்துப் போக.


பாங்கொக் வந்து விட்டோம் வெறுங்கையோடு ஊர் திரும்பப் போறோம் என்ற கவலை வேண்டாம், நேராக Khaosan Road க்கு ஆட்டோவை விடுங்கள். பாசிமணி மாலைகள் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட, விதவிதமான தாய்லாந்தின் பழமையையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஓவியங்களையும், நினைவுச் செதுக்குகளையும் அள்ளிக் கொண்டு வரலாம்.



எல்லா இடமும் சுற்றிப் பார்த்து விட்டுச் சீக்கிரமாகவே தங்குமிடம் வந்து விட்டோம், இளமையாக இருக்கும் இரவை எப்படிக் களிக்கலாம், உடனே டாக்ஸியை Khaosan Road பக்கம் விடுங்கள். வானம் கறுத்துப் போனபின்னர் இந்த Khaosan Road இற்குக் கொண்டாட்டம் தான். வெளிச்சத்தைப் பரவவிட்டு பரபரப்பாக நடைவண்டி வியாபாரங்களில் இருந்து பார், ஹோட்டல்கள் என்று அமர்க்களமாக அந்த இரவை ஒரு பெரும் பண்டிகையாக கழிப்பார்கள். நடைவண்டிகளிலே குறிப்பாக இங்கே அதிகம் விளையும் வாழைப்பழத்தை வைத்து விளையாட்டுக் காட்டும் வியாபாரம் Banana Pancake சாப்பிட்டால் ஜென்ம சாபல்யம் அடைவீர்கள். இப்படி நானும் ஒரு Banana Pancake கையேந்தி பவனை மறித்து அந்த பன் கேக்கைத் தயாரித்துத் தரும்படி கேட்கவும், கண்ணுக்கு முன்னாலேயே, கரைத்து வைத்த மாவுவை அகப்பையால் எடுத்து பரப்பிய சூடான தட்டில் வட்டமாக ஒரு சுழற்றுச் சுழற்றி விட்டு, அது கொஞ்சம் வெந்ததும் மேலே முட்டையை அடித்துத் துவைத்து விட்டு வாழைப்பழத்தைத் துண்டமாக நறுக்கி மேலே போட்டு விட்டு பின் அந்த ரொட்டியை லாவகமான மடித்துக் கொடுத்தாளே பார்க்கலாம் அப்பப்பா என்ன சுவை.




கடைத்தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தால் சட்டையில் இழுக்காத குறையாய் மீன்கள் நம் கால்களைத் தடவிச் செய்யும் மசாஜ்க்கு வாங்கோ வாங்கோ என்று இழுக்கிறார்கள். கீழே குனிந்து கொண்டு போனால் போனவாரம் திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன டிவிடிக்கள் 20 பாட் இல் சிரித்துக் கொண்டிருக்கின்றன.


எத்தனை தடவை அந்தக் கடைத்தெருவைச் சுற்றினாலும் அலுக்காத உலாத்தலாக இருந்தாலும், வயிற்றுக்கு வஞ்சனை பண்ணக்கூடாது என்று வயிறு கடமுடா என்று எச்சரித்தால் முன்னே தெரிகிறது புத்தம் புது நிறம் மாறாத பூக்களாய் மீன் குவியல்கள் துடித்துக் கொண்டு கடைக்கு முன்னால். உள்ளே நுழைந்து மீன் வறுவல் ஆடர் கொடுத்தால் துடிக்கும் மீன் அடுப்பில் பாய, வெண் சோற்றுடன் சில நிமிடங்களில் தட்டில் பொன் நிற வறுவலாக ஆடி அடங்கித் தன் வாழ்க்கையை முடித்து பசிக்கு இரையாகக் காத்திருக்கும்.

ஆற அமர அந்த உணவை முடித்து அந்த நடு நிசி தொடும் நேரம் Khaosan Road சந்தியில் வந்து நின்றால் அதே இளமையோடு துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த வீதி.