Social Icons

Pages

Thursday, September 24, 2015

தமிழகத்தின் மடி தேடி - மாங்காடு அம்மன் தரிசனம்


கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டுப் பயணம் ஏதுமில்லை. இந்த ஆண்டு இலக்கியாவின் முதலாவது பிறந்த தினம் எம் தாய்நாட்டிலேயே அமைய வேண்டும் என்று நினைத்துக் கடந்த மார்ச் மாதமே இலங்கைக்கான பயண ஏற்பாடுகளைச் செய்தாயிற்று. அப்போது புது வேலையில் சேர்ந்த சமயம் புது நிறுவனத்தில் எனது முதல் வேண்டுகோளே செப்டெம்பரில் அமையும் 3 வாரப் பயணம் குறித்ததாக அமைந்திருந்தது.

நமது எண்ணம் பரிபூரணமாக இருந்தால் மீதி எல்லாமே நாம் திட்டமிட்டதுக்கும் மேலாக அமைந்து விடும் என்பதை எனக்கு மீளவும் நிரூபித்து விட்டது இந்தப் பயணம்.

இலக்கியாவை எம் பெற்றோருக்குக் காட்ட வேண்டும். எங்களுக்குக் குழந்தைச் செல்வன் கிட்டவேண்டும் என்று எங்களை விட அதிக கரிசனையோடு இருந்த நண்பர்கள் நேர்ந்த நேர்த்தியை முடிக்க வேண்டும் இவை தான் இந்தப் பயணத்தின் இலக்கு.
முதலில் இலங்கைக்குப் போவோம். அங்கிருந்து இந்தியா செல்லும் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தான் முதலில் திட்டம். காரணம் சிட்னியில் இந்திய விசா விண்ணப்பிக்க வீணாக இரண்டு வேலை நாட்களைத் தின்று விடும். அவ்வளவு பெருங்கூட்டம் எப்போதும் இந்திய விசா முகவர் நிலையத்தில்.  ஆனால் என்னுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக இலங்கையிலுள்ள இந்திய விசா முகவர் நிலையத்தில் அனுபவம் அமைந்துவிட்டது. முதலில் இந்திய விசாவுக்கான புகைப்படத்தை எடுத்துக் கொள்வோம். எதற்கும் ஒரு உதவியாக அந்தப் படங்களை சீடியிலும் பதிவு பண்ணுவோம் என்று கொழும்பில் அந்த விடிகாலையில் திறக்கப்படாத புகைப்படக் கடைகளையெல்லாம் தட்டி ஒருவாறு காலை ஒன்பது மணிக்கே (கவனிக்கவும் கே) 
கடையைத் திறந்து வைத்திருந்த புண்ணியவானிடம் முகத்தைக் காட்டிப் படமும் எடுத்து ஆட்டோவில் இந்திய விசா முகவர் நிலையம் போனால் அங்கே கல்யாணக் கூட்டம். ஒரு வித்தியாசம், விசா விண்ணப்பிக்க வந்தவர்களை விட விண்ணப்பப் படிவமும் கையுமாக நின்று வாறவர் போறவரை எல்லாம் அமுக்கும் கூட்டம் தான் அது. அதையும் கடந்து முகவர் நிலையம் நுழைந்தால் ஒரு இளைஞன் வரவேற்று இன்னொரு அறையைக் காட்டினான். அங்கே இன்னொருத்தர் புகைப்படக்கருவி சகிதமாக. 
"300 ரூவாவுக்கு விசா விண்ணப்பம் நிரப்பித் தரலாம் அண்ணை றோட்டில நிக்கிறவங்கள் கூடக் கேப்பான்கள் ஏமாந்து போவிடாதேங்கோ அந்தா தெரியுது பில்டிங் அங்கை எங்கட ஆட்கள் நிக்கினம் போங்கோ என்று அவன் கையைக் காட்ட மீண்டும் வெளிப்பிரகாரச் சுற்று, 300 ரூபா தள்ளு கையில் விண்ணப்பப் படிவம் இந்தா பிடி.
மீண்டும் பழைய இடத்துக்கு வந்து நிற்க, மேல போங்கோ அண்ணை அங்க தான் விசா விண்ணப்பம் எடுப்பினம். மேலே போனால் எல்லாம் மீசை முளைக்காத இளைஞர் கூட்டம் வேலை பார்த்துக் கொண்டிருந்தது.
எட்டிப் போய் ஒருத்தரிடம் கேட்டேன்,
"நான் அவுஸ்திரேலியன் பாஸ்போர்ட் எவ்வளவு நாள் விசா வர எடுக்கும்? யாழ்ப்பாணமும் போகோணும் வெறுங்கையோட ஓமந்தையில் கால் வைக்கேலாது" 

"குறைந்தது ஏழு நாள் எடுக்கும்" என்றார் அதில் இருந்த பொடிப்பையர்.
ஏழு நாள் என் பாதி விடுமுறையைத் தின்னுமே என்று வாயைப் பிழியாமல் ஏமாற்றத்தோடு வெளியில் வந்தேன். அப்போதுதான் அண்ணர் சொன்ன செய்தி ஞாபகத்துக்கு வந்தது. இந்த ஆகஸ்ட் 15 முதல் அவுஸ்திரேலியா உட்பட சில நாடுகள் e-Visa வுக்கு apply பண்ணலாமாம். அந்தப்  புது நடைமுறையில் ஏன் இறங்குவான் என்றிருந்த நான் சரி இதுதான் கடவுள் விட்ட வழி என்று குட்டி யாழ்ப்பாணம் வெள்ளவத்தையை நோக்கிப் போய் ஒரு netcafe பிடிச்சு புகைப்பட சீடியை கணினியின் வாயில் அமுக்கி online இல் இந்திய e-Visa விண்ணப்பத்தை நிரப்பினேன். சலக்கடுப்பு கண்டவன் சிறு நீர் கழிப்பது போன்ற இணைய வேகத்தில் வெந்ததும் வேகாததுமாக விறு விறுவென்று காரியத்தை முடித்துவிட்டு வெளியே இறங்கினேன்.
அடுத்த நாள் காலை iPad இல் கண் விழிக்கும் போது எனது இந்திய விசா பரிசீலிக்கப்பட்டு வழங்கப்பட்டதாக மின்னஞ்சல் வந்தது.

உடனேயே விமானச் சீட்டைப் பதிவு பண்ணிவிட்டு எனது ஆஸ்தான ஓட்டல் நண்பரை அழைத்தேன். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் நண்பர் அனுப்பிய கார் காத்திருந்தது.
"ஓட்டலுக்குத் தானே சார்?" வெற்றிலைக் கறையேறிய சாரதி என்னிடம் திரும்பி

"மாங்காடு மாரியம்மன் கோயில் இங்கிருந்து பக்கமாங்க?"

"போயிடலாம் சார் முக்கால் மணி நேரம் ஆகும்"
கணக்குப் போட்டுப் பார்த்தேன். சென்னையில் இருப்பதே மூன்று நாட்கள். எனவே மாங்காடு அம்மன் கோயிலில் எனக்காக நேர்த்தி வைத்த நண்பரின் வேண்டுகோளின் படி அங்கேயே முதலில் போகலாம் என்று நினைத்து

"சரி அங்கே எடுங்க"
கொத்தவால்சாவடி எல்லாம் தாண்டி கார் மாங்காடு நோக்கிப் பயணித்தது.
தீ மிதிப்பு ஒன்றுக்கு ஆளுயர நடிகர் விஜய் கட் அவுட் போட்டு அவரின் ரசிக சிகாமணிகள் தீ மிதிப்போரை வாழ்த்தியிருந்ததைக் கண்டதும் மனதுக்குள் கவுண்டர் "மொதல்ல இவனை நான் மிதிச்சிட்டு வர்ரேன்" என்று அந்த நேரம் சிரிப்பு மூட்டினார்.

வழக்கம் போல வாகனச் சாரதியோடு நட்புப் பாராட்டிப் பழக்கம் பிடிக்கும் கதை இம்முறையும் இருந்தது. பக்கா சென்னைத் தமிழன் அவர். அவர் காரோடிக் கொண்டே என்னிடம் பேசப்பேச "மச்சி மன்னாரு மனசுக்குள்ள பேஜாரு" என்று என்னுயிர்த் தோழன் இளையராஜா பாடிக் கொண்டிருந்தார். 

மாங்காடு அம்மன் கோயிலின் பக்கவாட்டு வாசலில் இருந்த சாலையில் காரை நிறுத்திவிட்டு சாரதி நண்பரும் என்னுடன் கூட வந்தார்.
"தங்கச்சி! சார் வெளியூர்ல இருந்து வர்ரார் நேர்த்தி ஆக்கணும் பூஜை ஜாமன்களை எடுத்து வையீ" என்று கோயிலுக்கு நெருக்கமாக இருந்த ஒரு பூக்கடைப் பெண்ணிடம் நம் சாரதி கேட்க
"இந்தாங்க சார்  மாலை, பழம், இந்தாங்க இந்த வெள்ளித் தட்டுல வச்சிடுங்க" வெள்ளித்தட்டொன்றைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்து விட்டு நீட்டினார் பூ விற்கும் பூவை.

"எவ்ளோம்மா கணக்கு" 
"பூ மாலை, பழம், பூவு, தேங்கா" என்று அந்தப் பெண் எண்ணிக் கொண்டே காசுக் கணக்கைப் பார்த்து முடிப்பதுக்குள்
"நூத்து இருவது ரூபா கொடுங்க தம்பி" உள்ளே இருந்து பாரதிராஜாவின் ஏதோவொரு கிராமியப் படத்தை ஞாபகப்படுத்தும் தொங்கல் காதுக்குள் ஊஞ்சலாடும் கடுக்கண் மின்ன தாய்க் கிழவிவின் குரல் .

"நீ சும்மா இர்ம்மா" அந்தப் பெண் சினந்து விட்டு மீண்டும் காசுக் கணக்கைச் சரி பார்த்து 
"ஆமாங்க நூத்து இருவது தான் ஆவுது" 

"பாத்தியாம்மா உங்கம்மா எவ்ளோ பார்ஸ்டு பெரிசு பெருசுதான்" என்று நம் சாரதி நக்கலடிக்க வெட்கித்தார் அந்தப் பெண்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயிலுக்குள் பக்தர் கூட்டம் அள்ளியது. நீண்ட குழாய்த்தடுப்பு வழியே ஊர்ந்து ஊர்ந்து கடந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு தம்பதி அவர்களுக்கும் நீண்ட வருடங்களுக்குப் பின் மகள் பிறந்திருக்க வேண்டும். சுமார் இரண்டு வயசு மதிக்கத்தக்க அந்தச் சுட்டிப் பெண் வேடிக்கை காட்டினார். "காமாட்சிம்மா" "காமாட்சிம்மா" என்று அந்தக் குழந்தையின் பெயரைச் சொல்லி அன்பொழுகக் கவனித்துக் கொண்டிருந்தார் தந்தை.

வரிசையில் கலந்து மூல விக்கிரகங்களாக வீற்றிருக்கும் மாங்காடு காமாட்சி அம்மன்
தரிசனம் நிறைவாகக் கிட்டியது. ஆண்டவருக்கு நன்றி சொன்னேன்.
உட்பிரகாரத்தைச் சுற்றும் போது பால் கலந்த ஒரு வகை நைவேத்தியம் கிட்டியது.
நேர்த்தி வைக்கும் இடத்திலும் சுற்றி முடித்து விட்டு வெளியே வந்தேன்.
பூக்கடைக்குப் போய் இந்த வெள்ளித் தட்டைக் கொடுக்க வேண்டும் என்று அந்தப் பக்கம் நடந்து போய் பூ விற்கும் பெண்ணிடம் தட்டை நீட்டினேன்.

"காப்பித் தண்ணி ஏதாச்சும் குடிச்சுட்டுப் போங்க தம்பி" பூக்கடையின் முதுகுப்புறம் நீண்ட அந்த வீட்டின் உள்ளேயிருந்து தன் பொங்கை வாய்ச் சிரிப்போடு அதே மூதாட்டி.
நெகிழ்ந்து போனேன் நான். ஊர் பேர் தெரியாது ஏதோ ஒரு ஓர்மத்தில் தனியே கோயில் தரிசனம் காண வந்த எனக்கு இப்படி ஒரு உபசரிப்பா?
"இல்லைம்மா ரொம்ப நன்றி" கை கூப்பினேன்.
மாங்காடு அம்மன் தரிசனம் இதோ இப்போது கிட்டியிருக்கிறது என்று மனது சொன்னது.

Friday, March 13, 2015

வாசித்ததில் நேசித்தது - இயக்குநர் ஜெயபாரதியின் "இங்கே எதற்காக"

வாசித்து முடித்ததும் நீண்டதொரு பெருமூச்சை விட்டேன்.  இந்தப் புத்தகத்தைப் படித்த அனுபவத்தை மீட்டிப் பார்த்தால் ஒரு சுமையொன்று அழுத்துமே அது போலத் பக்கங்கள் ஒவ்வொன்றைக் கடந்த நிலை இருந்தது.

இயக்குனர் ஜெயபாரதி இப்படிச் சொல்கிறார், நான் பகவத் கீதையை ஆழ்ந்து படித்தவன் இல்லை! இருந்தாலும் எப்போதோ படித்தபோது பாஞ்சாலி கிருஷ்ணனிடம் கேட்டது நினைவுக்கு வந்தது. 
"தீயவர்களின் (கெளரவர்களின்) மனங்களை மாற்றி இந்த மகாபாரதப் போரை நீங்கள் தவிர்த்திருக்கலாமே!"

அதற்குக் கண்ணன்,
"ஒருவன் என்னவாக இருக்க வேண்டுக் என்பதை அவன் மனமோ அல்லது அவனின் அறிவோ தீர்மானிப்பதில்லை, அவனின் ஆன்மாதான் தீர்மானிக்கிறது. ஆன்மா முடிவு செய்ததை மாற்றும் சக்தி எனக்கில்லை பாஞ்சாலி" 

கிருஷ்ணன் சொன்ன இந்தமாதிரியான ஓர்மம் வயப்பட்ட, நல்ல சினிமாவைத் தமிழ் ரசிகனுக்குக் காட்டவேண்டும், நாமும் நல்ல சினிமா எடுக்கலாம் என்ற வைராக்கியத்யோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கலைஞன் சினிமாச் சூதாடிகளின் மத்தியில் தன் சுயத்தைத் தொலைக்காமல் தன் ஒவ்வொரு முயற்சிலும் போராடிச் சளைக்காமல் தன் நாற்பதாண்டுக் கலையுலக வாழ்வைத் தொடவிருக்கும் இயக்குநர் ஜெயபாரதியின் வாக்குமூலம் தான் இந்த நூல்.

வாக்குமூலம் என்று இந்தப் படைப்பை அடையாளப்படுத்தியதை நிரூபிக்குமாற்போல 
"நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. இது இறைவன் மீது ஆணை"
என்ற சத்தியப்பிரமாணத்தோடு நல்ல சினிமா எடுக்கப் புறப்பட்ட கதை ஒவ்வொன்றாய் சொல்லப்படுகிறது.

து.ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி என்று இருவருமே இலக்கிய உலகில் அறியப்பட்ட பெரும் எழுத்தாளர் தம்பதியின் மகனாக வாய்த்த ஜெயராமன் பின்னாளில் ஜெய் என்றும் ஜெயபாரதி ஆகியும் எழுத்தாளராகத் இலக்கிய உலகில் தடம் பதித்து அங்கிருந்து கொண்டே ஜ்வாலா என்ற திரையமைப்பை உருவாக்கி நல்ல சினிமாவை மொழி கடந்தும் தேடிக் கொணர்ந்து பகிர்ந்து அதுவும் தீராமல் நல்ல சினிமாவை நாமும் எடுக்கலாம் என்று சாதித்துக் காட்ட முனைந்த கலைப்படைப்பாளியின் சோதனைப் பக்கங்களைத் தான் இந்த நூல் அவரின் அனுபவ வெளிப்பாடாக உள்ளதை உள்ளவாறு பகிர்கின்றது. சில தருணங்களில் வாக்கியக் கோர்வைகளின் இடைவெளியில் அடைப்புக்குறிக்குள் அவரின் மனசாட்சியும் பேசுகிறது.

எத்தனையோ வகை வகையான வாழ்வியல் அனுபவங்கள், குறிப்பாகச் சினிமா உள்ளிட்ட கலையுலகப் பிரபலங்களின் வாழ்க்கைப் பகிர்வுகளை இன்னார் எழுதியும் பிறருக்குச் சொல்லக் கேட்டு எழுதியதையும் படித்திருக்கிறேன். ஆனால் அப்படியான பஞ்சுமெத்தை அனுபவத்தை இந்த நூல் தரவில்லை. முள் படுக்கையில் நடந்தவனின் ஊமைக் குரலாக, எந்த விதமான சால்ஜாய்ப்புகளுமோ, முகஸ்துதியோ, ஒளிவு மறைவோ இல்லாது சொல்லிக் கொண்டே போகின்றார் ஜெயபாரதி.

Crowd-funding என்ற முறைமையில் பொதுசனத்திடமிருந்து நிதி திரட்டி வெளிவந்த முதல் படைப்பு என்ற அங்கீகாரத்தைப் பெறும் "குடிசை" படத்தில் இருந்து ஒவ்வொரு படமாகச் சொல்லிக் கொண்டே போகின்றார். ஒவ்வொரு படம் எடுக்கும் போதும், பாதியில் எடுத்து அப்படியே கைவிட்ட போதும், மூலப் படம் இன்னொரு படமாக மாறிய போதும் என்று வித விதமான சவால்கள். இப்படியாகத் தனது குடிசை, ஊமை ஜனங்கள் ( தேநீர்  என்று எடுக்கப்பட்ட படம்), உச்சி வெயில், நண்பா நண்பா, ரெண்டும் ரெண்டும் அஞ்சு, புத்ரன், குருஷேத்திரம் என்று ஒவ்வொரு பட அனுபவங்களும் பதிவாகியிருக்கின்றது.
ஆனால் முதல் படமான குடிசை படம் வெளியான பின்னர் எழுந்த அதிர்வலைகளை மற்றைய படங்கள் அளவுக்கு ஆவணப்படுத்தவில்லையோ என்ற அவா எழுகிறது.

இயக்குநர் மனோபாலாவின் இன்னொரு முகமான புத்தக, போஸ்டர் வடிவமைப்பாளர் என்ற உண்மை போல எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இயங்கிய கலைஞர்களது நிழலும் நிஜமும் பேசுகின்றன. கிராமத்து அத்தியாயம் படத்தில் நாயகனாக நடிக்க வைத்து ஏமாற்றியதையும் தன்னால் அறிமுகப்படுத்திய விஜய் (தலைவாசல்), டெல்லி கணேஷ் போன்றவர்களின் உதாசீனத்தையும், தேசிய விருதை நண்பா நண்பா படத்தின் வழியாகப் பெற்ற சந்திரசேகரின் நன்றிக் கடன் (?) என்றெலாம் இன்னும் அறியப்படாத சங்கதிகள்.

ஆனால் தேநீர் படம் ஊமை ஜனங்கள் ஆன போது பாக்யராஜின் நியாயமான கோபத்தை இயக்குநராக ஆற்றுப்படுத்தவில்லையோ என்ற கேள்வியும் தொக்கு நிற்கிறது. இந்தக் கேள்விக்கான காரணம் ஏன் என்பது அந்தப் பட உருவாக்கத்தில் கிட்டிய ஒரு உதவி வழியாகத் தான். எதுவென்பதைப் புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

உச்சி வெயில் படம் எடுத்த அனுபவத்தைப் பகிர்ந்த அத்தியாயத்தில் இரு வேறு பகுதிகள் தான் தமிழ் சினிமாவின் இருவேறு குணாதிசியங்களைக் காட்டுகிறது.

காட்சி 1 

மக்களிடம் நிதி திரட்டி உச்சி வெயில் படத்தை எடுத்து முடிக்க உத்தேசிக்கும் ஜெயபாரதி, நடிகை ராதிகாவிடமும் அவ்வாறே உதவி கேட்டுப் போகிறார்.
"ரொம்ப இருட்டாவே படம் பூராவும் இருக்கும், நடிகர்கள் மெல்ல பேசுவாங்க.., எப்போதாவது மியூசிக் கேக்கும். இதுதானே நீங்க டைரக்ட் பண்ணப் போற படம்? I don't like such film! " என்றார் ராதிகா.
 
காட்சி 2

உச்சி வெயில் படப்பிடிப்பு முடிவில்.

"மேடம் எவ்வளவு payment தரச்சொல்லட்டும்" - இயக்குநர் ஜெயபாரதி
"உங்களுக்கு நான் எவ்வளவு payment தரணும் இப்போ" நடிகை ஶ்ரீவித்யா

சினிமா உலகில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் காலி பண்ணி விடுவார்கள் என்பதற்கு உதாரணமாக தேநீர் படத்தின் உருவாக்கத்தின் போது
இளையராஜா, ஜெயபாரதி சந்திப்பு வழியாக ராஜா உணர்த்துகிறார். 

இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இளையராஜா ஜெயபாரதியின் முதல் படத்துக்கே வாய்ப்பைக் கொடுக்க அன்றைய பரபரப்பான சூழலிலும் முன் வந்ததை முந்திய அத்தியாயம் ஒன்றில் காட்டுகிறார்.

"ராஜா சார் குடிசை படத்துக்கு பின்னணி இசையமைக்க விரும்புகிறார் அவர் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்று"
1979 இல் படம் தயாரிக்கப்பட்ட போது

இளையராஜாவை முன் வைத்து எழுப்பபடும் விமர்சனங்களுக்கு எல்லாம் விளக்கம்,  இப்படியான அனுபவப் பகிர்வுகளைப் படிக்கும் போது தான் இன்று வரை அவர் எவ்வளவு தூரம் சூதாடிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்ற ஒரு வளையம் போட்டிருக்கிறார் என்பதாக அமைந்திருக்கும்.

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தேசியத் திரைப்பட வாரியம் வரை எல்லாரையும் மறு விசாரணை செய்கிறது ஜெயபாரதியின் மனசாட்சி. எப்போதோ சுராங்கனி பாடி நிதி திரட்டிப் படம் பண்ண உதவிய சிலோன் ஏ.ஈ.மனோகர் வரை ஒருவர் விடாமல் தேடிப்பிடித்து நன்றி பாராட்டுகள் அந்தந்த நிகழ்வுகளை நினைவில் மீட்டி.

தன்னால் உறுதிப்படுத்தாதை இன்னார் சொன்னது என்றும் ஆவணப்படுத்துகிறார்.

இங்கே எதற்காகப் படமெடுக்கிறீர்கள் என்ற வைரமுத்துவின் உரிமை கலந்த அக்கறையையும், யாரோ ஒரு வாடகைக் கார்க்காரன் தன் சினிமாத்துறையின் யோக்கியதை குறித்துக் கேட்ட கேள்வியையுமே நாமும் இவரைப் பார்த்துக் கேட்க முடிகிறது. 
அதற்கான பதிலாக தன் படைப்பின் மீது நம்பிக்கையும், நல்லதைக் கொடுக்க வேண்டும் என்ற நேர்மையும் உள்ள இந்தக் கலைஞனின் பதிலே மேற் சொன்ன கீதையின் சாரம்.

இந்த நூலை இடையில் இருந்து அவ்வபோது படிக்கத் தோன்றும் அத்தியாயமாகப் படித்தேன். இறுதியில் தான் ஆரம்ப அத்தியாயங்களைப் படித்தேன். ஒரு புதுமையான படத்தொகுப்புப் போல மனதுக்குள் ஓட்டினேன்.

எழுத்துப் பிழைகள், தொகுப்பு வடிவத்தில் வாக்கிய அமைப்பில் சீரற்ற தன்மை போன்ற குறைபாடுகள் இந்த நூலில் பொதிந்திருக்கின்றன. 

பின் அட்டையில் ஜெயபாரதி தன் நூலில் சொன்ன ஏதாவது கருத்தை எடுத்துப் பதித்திருக்கலாம்.

நடிகர் சிவகுமார், எழுத்தாளர் மாலன் போன்றோர் இயக்குநர் ஜெயபாரதியின் ஆரம்ப காலத்தில் இருந்து பழகியவர்கள் என்ற அடிப்படையில் புத்தகத்தின் முகவுரைப் பகிர்வுகளைப் பகிர்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கியிருக்கலாம். ஆனால் இந்த இருவருமே நூலில் இடம்பெற்றிருக்கும் சில பகுதிகளை மையப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.
இவர்களுக்குப் பதில், ஜெயபாரதியின் திரை இயக்கத்தின்  ஆரம்பகாலத் தோழமை இயக்குநர் மனோபாலாவை எழுதச் சொல்லியிருந்தால் இவர் குறித்து இன்னும் தெரியப்படாததைச் சொல்லி வைக்கும் அனுபவப் பகிர்வாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது.

"இங்கே எதற்காக" இயக்குநர் ஜெயபாரதியால் எழுதப்பட்ட இந்த நூல் டிஸ்கவரி புக் போலஸ் வெளியீடாக டிசெம்பர் 2014 வெளியாகியிருக்கிறது.

நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகனொருவன் மொழி கடந்து ஒவ்வொன்றாய்த் தேடிப் பார்த்துச் சுகம் கொள்ளும் அனுபவம் போன்றதல்ல இது. 
அந்த ரசிகனுக்கு நல்ல சினிமாவை உள் வீட்டில் இருந்து காட்ட வேண்டும் என்ற முனைப்போடு பயணித்துக் கொண்டிருக்கும் கலைப் படைப்பாளியின் தீராத தாகம், வலிமிகு அனுபவப் பகிர்வாய்ச் சாட்சியம் பறையும் வாக்குமூலம் என்பேன்.

"நல்ல படமெடுத்தால் தியேட்டர் வந்து பார்ப்போம் என்று சொல்வாங்க, 
அதெல்லாம் சும்மா" 

என்று சொல்லும் இயக்குநர் ஜெயபாரதியின் வாக்குமூலம் தான் திரும்பத் திரும்ப மனதில் அறையுமாற் போல இருக்கிறது.