Social Icons

Pages

Friday, October 26, 2007

பெங்களூர் Kemp Fort இல் கண்ட சிவனாலயம்




கர்னாடக உலாத்தலை ஆரம்பித்து விட்டுப் பாட்டுப் போட ஓடிவிட்டார் என்று நினைப்பவர்களின் கருத்தை மாற்ற என் கர்னாடக உலாத்தல் விட்ட இடத்தில் இருந்து தொடர்கின்றது. வேலைத்திட்டத்திற்காக பெங்களூர் அலுவலகம் வந்தாயிற்று. ஆனால் வேலை முடிந்த மாலை வேளைகளில் பொழுதைக் கழிக்க ஒரே வழி பெங்களூரின் உள்ளூர் அமைவிடங்களைப் பார்த்து முடித்துவிட வேண்டியது தான். அதுவும் அதிக தூரம் அற்ற இடங்களைத் தெரிவு செய்வோம் என்று நினைத்து உதவிக்கு எனக்காக நியமிக்கப்பட்ட வாகனம் ஓட்டும் நண்பரிடம் பேச்சும் கொடுத்தேன்.

அவர் பெயர் ஹனீப், வட நாட்டில் இருந்து இரண்டு தலைமுறைக்கு முன் பெங்களூருக்குப் பிழைப்புக்காக வந்தவராம். தமிழைச் சரளமாகப் பேசுகின்றார். அவ்வப்போது காரின் குறுக்கே ஹீரோ ஹொண்டாவை நுளைக்கும் ஐ.டி பசங்களையும், பொண்ணுகளையும் சம உரிமை கொடுத்து, இறக்கிய கார்க் கண்ணாடி இடுக்கால் எட்டிப் பார்த்துத் திட்டியவாறே, பெங்களூரில் இருக்கும் முக்கியமான பார்க்கவேண்டிய இடங்களைச் சொல்லிக் கொண்டே போகின்றார்.

அப்படி நாங்கள் முதலில் தேர்ந்தெடுத்தது பெங்களூர் விமான நிலையத்துக்குப் போகும் சாலையில் உள்ள Kemp Fort என்ற உடுபிடவை வணிக வளாகமும் அதனோடு ஒட்டியிருக்கும் சிவனாலயமும் ஆகும்.

Kemp Fort தன் பெயருக்கேற்றாற்போல் கோட்டை ஒன்றின் முகப்பு வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் நான்கு மாடி விற்பனை வளாகம். ஆடை ஆபரண இத்தியாதிகளுக்கு ஒரே கூரையின் கீழ் ஆண் பெண் இருபாலாருக்குமாக அமைக்கப்ப்ட்டிருக்கின்றது. அவுஸ்திரேலியாவில் இருக்கும் உடுப்பு விற்பனை நிலையத்துக்குச் சென்று, கவர்ந்திழுக்கும் நாலைந்து நல்ல சட்டைகளை எடுத்து விரித்தால் Made in India என்றிருக்கும். ஆனால் விலையோ நடிகர் ஜெயராம் வளர்க்கும் செல்லப்பிராணி விலை(அதாங்க ஆனை விலை)
டொலர் கணக்கில் கொட்டித் தீர்த்து, வயிறெரிந்து வாங்குவதை விட Kemp Fort இலேயே அள்ளிக் கொள்ளலாம் என்றால் என் ஆசையில் மண். அவுஸ்திரேலியாவில் விற்கும் விலைக்கு கிட்டும் அளவுக்கே Kemp Fort இல் இருக்கும் தரமான உடுபிடவைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. எல்லாம் பில் கேட்ஸ் ஆளுங்க செய்யும் வேலை. பின்னே, அமெரிக்கர்கள் அதிகளவில் வந்து போகும் ஸ்தலமாக பெங்களூர் மாறிவிட்டதால், இப்பொது எல்லாமே அங்கு கொள்ளை விலை தான். ஒரு சில உடுப்பு வகைகளை வாங்கி விட்டு, வெளியில் கார் அருகே நிற்கும் ஹனீபிடம் போகின்றேன்.




"பிரபா சார், வாங்க டெம்பிள் போகலாம் என்கிறார் ஹனீப். அவருக்குப் பின் நான் தொடர, Kemp Fort விற்பனைக் கூடத்தோடு பின் பக்கமாக அமைந்திருக்கின்றது சிவனாலயம் ஒன்று.
வாயிலில் விளங்கும் விநாயகப் பெருமான் சிலையும், உள்ளே நுளையும் போது காணும்
மிகப் பெரும் சிவபெருமானின் சிலையும் கண்டதும் தானாகவே கைகளைக் கூப்பித் தொழ வைக்கின்றன. அமைதியான கூட்டுப் பிரார்த்தனை ஒன்று அந்த இரவுப் பொழுதைத் தூசி தட்டிப் பெருக்குகின்றது. சில மணித்துளிகள் அந்த இறைலயத்தில் ஒன்றி விட்டு மெல்ல நகர்கின்றேன் அவ்விடத்தை விட்டு.

பெங்களூர் வந்தால் தவற விடக்கூடாத இடங்களில் இதுவுமொன்று.

இப்பதிவில் இருக்கும் முதற் புகைப்படம் மட்டும் Douglas Whitby ஆல் எடுக்கப்பட்டு இணையம் வழி பெறப்பட்டது. மற்றயவை என் சொந்தத் தயாரிப்புக்கள்.

Sunday, August 12, 2007

கர்நாடகா உலாத்தல் ஆரம்பம்



இந்தியப் பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் தேடி வாசித்து இந்தியா குறித்த வரலாற்று, அரசியல், சமூக விடயங்களை அறிந்த எனக்குப் பாரத தேசத்தை நேரில் காணும் வாய்ப்பு 2001 ஆம் ஆண்டில் தான் முதலில் வாய்த்தது. இவ்வளவு நாளும் கற்பனைக்கு மட்டுமே எட்டியிருந்த இந்தக் கனவு தேசம் எப்படியிருக்கும் என்பதைக் கண்ணால் கண்டு எனது வாசிப்பனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு அப்போது ஓரளவு கிடைத்தது.

நான் வேலை செய்த Oracle நிறுவனத்தின் திட்ட அமுலாக்கல் பிரிவின் (Project implementation) சார்பிலேயே எனது இந்த இந்தியப் பயணம் அமைந்தது.2001 ஆம் ஆண்டில் ஏதோ ஒரு கட்டிடடங்களில் பங்கு போட்டுக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக Indian Development Centre (IDC Oracle)மற்றும் Oracle Consulting ஆகிய பிரிவுகள் சில நூறு பணியாளர்களுடன் மட்டுமே அப்போது இயங்கிக் கொண்டிருந்தது.

மீண்டும் கடந்த 2006 ஆம் ஆண்டு வாய்த்த பெங்களூர்ப் பயணம் கூட மீண்டும் அலுவலக நிமித்தமே அமைந்திருந்தது.பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் வாசலில் அமெரிக்காவிலிருந்தோ அவுஸ்திரேலியாவிலிருந்தோ வரப்போகும் யாரோ ஒரு வெள்ளைத்தோல் மென்பொருள்காரனை வரவேற்க ஐந்து நட்சத்திர ஹோட்டல்காரர்களின் பெயர்ப் பதாதைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

Oracle India கடந்த ஆறு ஆண்டுகளில் அசுரத்தனமான வேகத்தோடு முன்னேறியிருந்தது என்பதற்கு இந்த நிறுவனம் தொழில் கொள்ளவைத்திருக்கும் பல்லாயிரம் பணியாளர் என்ணிக்கையே உதாரணம் கற்பித்தது. Garden City என்று செல்லமாக அழைக்கப்படும் பெங்களூரு Concrete City ஆக மாறிப்போயிருக்கின்றது. ஒரு சின்ன சந்து கிடைத்தால் போதும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் சந்தில் சிந்து பாடிக் கட்டிடம் எழுப்பிவிடும் அளவிற்கு இந்த நகரம் முன்னேறிக்கொண்டிருக்கின்றது. அயலக மாநிலங்களிலிருந்து இளைஞர்களும், இளைஞிகளும் தாம் கற்ற 65 ஆவது கலையான மென்பொருள் அறிவோடு முற்றுகை நடாத்திக் குடியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.ராஜ்குமாரின் படங்களையே போட்டுப் போட்டு அலுத்த திரையரங்குகள் திரையைக் கிழித்து ரியல் எஸ்டேட் பதாதைகளுடன் புதியதொரு மென்பொருள் நிறுவனத்தைக் கம்பளம் போட்டு வரவேற்கின்றன. காங்கிரஸ் - ஜனதள் கூட்டணியில் ஆட்சியோட்டிக் கொண்டிருந்த தரம்சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்து அரியாசனம் ஏறிய குமாரசாமிக் கவுடாவின் பதாதைகள் புதிதாக முளைத்திருக்கின்றன.

வீதியெங்கும் வாரியிறைக்கப்பட்ட டாக்ஸிகளும், கொம்பனி கார்களும், ஆண்டாண்டு காலமும் வாழ்ந்து கொண்டிருக்கும் மத்தியதர பெங்களூர்க்காரனின் வாகனத்தை முந்திக் கொண்டு பாய்கின்றன. புதிய புதிய மேம்பாலங்கள் பனர்கட்டா ரோட்டை மேவிப் பாய்கின்றன. சில வழித்தடங்கள் மூடப்பட்டு வேற்றுப்பாதையால் நாளாந்தப் பயணங்கள் மாற்றி விடப்படுகின்றன. புழுதி விலக்கத் தம் முகத்தைக் கைத்துணியால் மறைத்த இளைஞர் பட்டாளமொன்றின் டூவீலர் அணிவகுப்பு ஏதோவொரு மென்பொருள் நிறுவனம் நோக்கிப் போகின்றது. புழுதி அப்பிய கண்களோடு விடிகாலைச் சூரியக் கதிர்கள் வியாபிக்கின்றன. பெங்களூரின் சாபக் கேடாக இருக்கும் கெட்டுப் போன வீதிகளோடு சண்டை போட்டுக் கொண்டு கார்ச்சக்கரங்கள் நகர்கின்றன.


என் கம்பனியால் ஒழுங்கு செய்யப்பட்ட ஹோட்டலின் டாக்ஸி Leela Palace உள் நுளைகின்றது. லீலா பாலஸ் பெங்களூரின் விமான நிலையத்திற்கு ஒப்பீட்டளவில் மற்றைய தங்குமிடங்களை விட குறுகிய தூரத்தில் இருக்கின்றது. அரச பிரதிநிகள், உயர்மட்டத் தலைவர்கள் அதிகம் வந்து போகும் பெரிய ஹோட்டல்களில் ஒன்று. தன் பெயருக்கு ஏற்ற விதத்தில் பெரியதொரு அரண்மனையாக எழுந்து நிற்கின்றது இது. மும்பை, பெங்களூர், கோவா, மற்றும் கோவளம் ஆகிய இடங்களிலே இந்த ஹோட்டலின் அமைவிடங்கள் உள்ளன.








பூங்கா நகரமான பெங்களூர் காங்கிறீற் நகரமாக மாறிக் கொண்டிருக்கையில், லீலா பாலஸ் ஹோட்டலின் உள்ளேன் ஒரு மினி அந்தப்புரமே இருந்தது. நீர்ச்சுனைகளும், செயற்கையாக அமைத்த இயற்கை மலர்ச்சோலைகளுமாக உள்ளே ஒரு ரம்யமான சூழ்நிலை விளங்கியது. நான் தங்கியிருந்த காலத்தில் சீக்கிரமே காலையில் எழுந்து நடை போட இந்தச் சூழ்நிலை ஒரு இதமான வாய்ப்பையளித்தது.

எம் நிறுவனப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய நல்ல தரமான தங்குமிடங்களில் இருக்கவேண்டும் என்ற நோக்கில், இப்படியான ஹோட்டல்களோடு முற்கூட்டிய ஒப்பந்த அடிப்படையிலும் தங்கல் பதிவுகளைப் பேணிவருகின்றது. பெரும்பாலும் பெரிய கம்பனிகள் இப்படியான திட்டத்தையே பின்பற்றுகின்றன.






இந்த லீலா பாலஸ் ஹோட்டல் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் இருக்கின்றது. காரை விட்டு ஹோட்டல் உள்ளே நுளைகின்றேன். சிறு கூட்டம் ஒன்று லீலாவில் ஏற்கனவே நடந்து முடிந்த ஏதோவொரு சந்திப்பு நிகழ்வினை முடித்துக் கொண்டு வெளியேறுகின்றது. அதில் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டே நகரும் கறுப்பு உருவம் ஈர்க்கின்றது. "அட! முன்னாள் கிறிக்கெற் வீரர் கபில்தேவ் போகின்றாரே " என்று ஒரு கணம் நின்று அவரைப் பார்த்துவிட்டு ஹோட்டலின் உள்ளே நுளைகின்றேன். இனியதொரு வயலின் இசையை வாத்தியக்காரர்கள் வரவேற்பறையில் தவழவிடக் காதில் தேனாகப் பாய்கின்றது இந்த இசை வரவேற்பு.



தொடரும் ......!

Wednesday, July 18, 2007

புகைப்படப் போட்டிக்கு நானும் வாறன்

தமிழில் புகைப்படக்கலை கூட்டு வலைப்பதிவு நடத்தும் போட்டிக்கு என்ர சார்பிலை நான் எடுத்த படங்களை அனுப்புறன் , பார்த்து ஏதாவது பண்ணுங்க சாமி ;-)


யாழ்ப்பாணம் பூநாறி மடத்தடிக் கோயிலடியில் வசிக்கும் நாய்களுக்கும் தமிழ் புரியும் போல?


ஹைதராபாத் Golconda கோட்டையில் ஓய்வெடுக்கும் நாய்


கடவுளைத் தேடித் தீப ஒளி


ஆலப்புழாப் படகுவீட்டுக்குள்ளிருந்து.....


படகுப் பயண ஏற்பாடுகளில் கடலோடி



கடற்கழியில் துணி துவைக்கும் நங்கை


நீராடும் காளைகள்

Sunday, July 08, 2007

நிறைவான கேரள உலாத்தல்




மே 29, 2006 மாலை 6.00 மணி (இந்திய நேரம்)

கொச்சினில் உள்ள யூத ஆலயம் சென்று தரிசித்து இரவு 7 மணிக்கு கொச்சினில் இருந்து பெங்களூர் செல்லும் விமானத்தை எடுக்க ஏற்பாடு செய்திருந்தேன். எனவே மாலை ஆறு மணிக்கெல்லம் கொச்சின் உள்ளூர் விமான நிலையம் அடைந்துவிட்டேன் முற்கூட்டியே நான் சந்திக்கப்போகும் சோதனையை அறியாமல். கழிந்த நாட்கள் கேரளபூமி கொடுத்த சுற்றுலா இன்பம் என் மனதை நிறைக்க தொடர்ந்த பயணக்களைப்பே தெரியவில்லை. ஏற்கனவே இணையமூலம் பதிவு செய்திருந்த Air deccen விமானத்தின் E-ticket பிரதியை எடுத்துக்கொண்டு Air deccen விமானத்துக்கான Boarding pass வழங்கும் பகுதியை ஏறிட்டேன். நீண்டதொரு சன வளையல் இருந்தது. இதுவே இன்னும் ஒரு மணி நேரம் போனால் விமான நிலைய கார் தரிப்பு நிலையம் வரை கூட பயணிகள் வரிசை கடக்கலாம் என்று மனதுக்குள் புலம்பியபடி நானும் அந்த வரிசையில் பங்காளி ஆகின்றேன். அந்த வரிசையில் கொச்சினில் இருந்து Air deccen மூலம் நாட்டின் மற்றைய பகுதிகளான டெல்லி, சென்னை, கோவா என்று மற்றும் பல தரிப்பிடங்களுக்கான பயணிகள் நிறைந்திருந்தார்கள் என்றாலும் Boarding pass counter ஒரு எலி கூட இல்லை. அதாவது ஒரு Air deccen பணியாளர்களோ தென்படவில்லை. வேடிக்கை என்னவென்றால் இந்த வரிசையில் மாலை 5 மணிக்கு புறப்படவேண்டிய விமானத்தின் பயணிகளும் அடக்கம்.

ஆறு மணி ஏழாகி எட்டைத் தொட அரை மணி நேரமே பாக்கி. வரிசையில் இருந்த குழந்தைகள் அடம்பிடித்து அழ ஆரம்பிக்கின்றன. பெரியவர்களுக்கே பொறுமையின் எல்லையைக் கடந்த நிலையில் பாவம் சிறுவர்கள் என்ன செய்வார்கள்?
பயணிகள் வரிசையில் இருந்த ஒரு சிலர் பலராகி, வரிசையை விட்டு விலகி வந்து விமான நிலைய ஊழியர்களிடம் எங்கே ஒரு Air deccen ஊழியரையும் காணவில்லையே என்று கேட்டோம். அவர்கள் கையை விரித்து தெரியாது என்று பாவனை காட்டிக் கருமமே கண்ணாயினர்.

கொச்சின் விமான நிலையத்தில் பெரும்பாலான விமான நிறுவனங்களுக்கான பிரத்தியோக அலுவலகம் உண்டு. அந்த வகையில் Air deccen அலுவலகமும் நம் கண்ணில் தென்பட எட்டிப்பார்த்தோம். உள்ளே தொலைபேசி அழைப்புக்கள் தான் வருகின்றன, அலுவலகத்தில் ஆட்களே இல்லை. ஒரு பயணி கோபங்கொண்டு மூர்க்கமாகக் கதவைத் திறக்கின்றார், சாவி போடாத கதவு பட்டென்று திறந்து கொள்ள அவர் உள்ளே நுளைந்து அந்த அலுவலத்தில் இருந்த தொலைபேசி இலக்கப்பட்டியிலில் தென்பட்ட Air deccen இன் தலைமைத் தொலைபேசி இணப்பகத்துக்கு எடுத்து ஏதோ கோபமாகப் பேசுகின்றார். அவரிடமிருந்து நல்ல பதிலை எதிர்ப்பார்த்து வெளியே காவல்கிடக்கின்றோம். வெளியே வந்த அந்தப் பயணி "இன்று Air deccen இன் கொச்சின் மூலமான அனைத்துச் சேவைகளுமே இரத்துச் செய்யப்பட்டுவிட்டனவாம், இன்று பதிந்தவர்கள் நாளை காலை வரும் Air deccen விமானமூலமே நாட்டின் பிறபாகங்களுக்குப் போகமுடியுமாம்" என்று சினத்தோடு பொரிந்து தள்ளிவிட்டுப் போய்விட்டார். இவ்வளவு பேரும் மணிக்கணக்கில் காத்திருக்க என்னதொரு மொத்தனமான செயல் இது என்று ஒவ்வொருவருமே புலம்பினோம்.


ஒவ்வொருவரும் ஏமாற்றத்தோடு மற்றைய விமானச் சேவைகளின் கதவைத் தட்டுகின்றோம். King Fisher, Jet Airways என அந்த விமானச் சேவைகளின் இன்று இரவுக்குச் சொற்பமான இருக்கைகளே மீதம் இருக்கின்றன. கடைசி நேரக் கொள்வனவு என்பதால் முன் கூட்டிய விலையை விட பலமடங்கு அதிகமென்றார்கள். இன்று இரவு இங்கேயே ஒரு தங்குமிடம் போய் தங்கி நாளை வருவதை விடக் கிடைக்கின்ற விமானத்தை எடுத்துக்கொண்டு ஓடுவோம் என்ற ஆவலில் ரூ 7500 க்கு Jet Airways மூலம் பயணச் சீட்டை எடுத்துக் கொண்டு கொச்சின் விமான நிலையத்தின் பயணிகள் காத்திருப்பு பகுதிக்குள் நுளைகின்றேன். ஏதோ அரண்மனைக்குள் நுளைந்தது போன்று அந்தப் பயணிகள் இருக்கைகள் சுத்தமான ராஜ சபை இருக்கைளை நினைவுபடுத்தும் பாங்கில் அமைக்கப்பட்டிருகின்றன.

" காசு போனாலும் பரவாயில்லை, இனிமேல் தரமான விமான சேவையில் தான் என் பயணம் இருக்கவேண்டும்" என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே. இரவு பத்து மணியை தொடுகின்றது. பெங்களூர் விமானத்துக்கான பயணிகளை ஏற்றும் ஆயத்தங்களை ஒலிபெருக்கி சொல்ல ஆரம்பிக்கின்றது.

................................................................................................


கடந்த 2006 ஆம் ஆண்டு மே 26 ஆம் திகதி கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம் வந்திறங்கி சுற்றிப்பார்த்தலோடு , மே 28 ஆம் நாள் ஆலப்புழாவின் படகுப் பயணத்துக்காக அங்கே உள்ள கெளரி ரெசிடென்ஸ் இல் இருந்தபோது தான் கேரளாவில் நான் அனுபவித்த இனிய பயண நினைவுகளைப் பதிவாக்கவேண்டும் என்று எண்ணினேன். உடனேயே நான் தங்கியிருந்த இடத்தில் இருந்த கணினியில் உலாத்தல் என்ற இந்த வலைப்பூவையும் சமைத்தேன். தொடர்ந்து என் பயணத்தில் இந்தப் பயணப்பதிவுகளுக்காகவே விசேடமாகப் படங்களையும் எடுத்துக் கொண்டேன். குறிப்பாக ஆலப்புழாவில் அமைந்த படகுப்பயணத்தில் ஒவ்வொரு கோணமாக நான் எடுத்த ஏராளமான புகைப்படங்களுமே என் கடந்த பகுதிகளில் இடம்பெற்று விட்டன.


நமது ஈழத்து நண்பர்கள் மட்டுமன்றித் தமிழக நண்பர்கள் கூட தமது நாட்டில் இப்படியான எழில் கொஞ்சும் பிரதேசம் குறித்த மகிமையை என் பதிவுகள் ஊடாக வாசித்து அவ்வப்போது என்னை எழுதத் தூண்டியிருந்தீர்கள். ஒரு சில நாட்கள் அமைந்த இந்தப் பயணம் ஒருவருடத்துக்கு மேலான காலப் பதிவுகளாக இழுத்துவிட்டனவே என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் சொல்லப் போனால் எனக்கு இந்தக் கேரளப் பயணம் தாயகத்தில் என் ஊரில் அனுபவிக்கும் இனிய சுகத்தைத் தான் தந்தது. அதை நான் அனுபவித்தே ஒவ்வொன்றாக இரசித்து இரசித்துப் பதிவுகளாகத் தந்திருந்தேன். கேரளத்தின் திருவனந்தபுரம், ஆலப்புழா, கொச்சின் ஆகிய இடங்களைத் தான் என் கடந்த பயணத்தில் அனுபவிக்க முடிந்தது. எனவே இந்தக் கேரள உலாத்தலுக்கு இது தற்காலிக ஓய்வு தான். அடுத்த வருடம் நான் போகவிருக்கும் எஞ்சிய கேரளப் பிரதேசங்களை இதே போன்ற நடப்பு, மற்றும் வரலாற்று அம்சங்களோடு கலந்து தர எனக்கு ஆவல் விஞ்சியிருக்கின்றது.

இந்தக் கேரளப் பதிவுகளைக் கண்ணுற்ற அவுஸ்திரேலிய "உதய சூரியன்" மாத சஞ்சிகை ஆசிரியர், தனது சஞ்சிகைக்கு ஏற்றவிதத்தில் இந்தத் தொடரை ஆக்கித் தரக்கேட்டார். இப்போது கடந்த முன்று இதழ்களைக் கடந்து கேரள உலாத்தல் 'உதயசூரியன்" சஞ்சிகையின் வாசகர்களையும் சென்றடைகின்றது. என்னைக் கண்ட சிலர் ஆலப்புழாவுக்கான தமது பயணம் ரெடி என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. எழுத்துச் சுமை பறந்து போகின்றது.

கடந்த கேரள உலாத்தல் பதிவுகள் முழுதும் எப்படி அமைந்திருந்தன என்பது குறித்த உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவல் கொண்டுள்ளேன்.


எனவே தற்காலிகத் தரித்தலோடு விடைபெறும் கேரள உலாத்தலைத் தொடந்து, என் உலாத்தல் பதிவுகளில் தொடர்ந்து பார்க்கவிருக்கும் பிரதேசம் கர்னாடகாவின் சில அமைவிடங்கள். கர்னாடகா உலாத்தலில் நான் உங்களைச் சந்திக்கும் வரை இப்போது உங்களிடமிருந்து விடை பெற்று மீண்டும் வருகின்றேன்.

நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா

Saturday, June 23, 2007

கேரளாவில் யூத சமூகம் - சில வரலாற்றுத் துளிகள்





கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேல் விடுபட்டுப் போன உலாத்தலைத் தொடர்கின்றேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.

கடந்த பதிவில் யூதர்களின் ஆலயம் குறித்த பகிர்வைத் தந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக யூதர்களின் இந்திய வருகை குறித்த சில அம்சங்களைப இப்பதிவில் பார்ப்போம்.

யூத ஆலயம் சூழவுள்ள பகுதி Jew Town என்றழைக்கப்படுகின்றது. இந்த பிரதேசம் கொச்சின் பிரதேசத்தின் வாசனைத்திரவிய வியாயாரத்தின் முக்கிய கேந்திரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இஞ்சி, கறுவா, உட்பட்ட வாசனைத் திரவியம் மணமணக்கும் கடைகளையும், யூத மொழியான ஹீப்ருவில் பொறிக்கப்பட்ட பெயர்களையும் காண்பது இங்கு சாதாரணம்.

கேரளாவில் யூதக்குடிகளின் பரம்பல் குறித்த Kerala & her Jews என்ற ஆங்கிலச் சிறுநூலை வாங்கிக்கொண்டேன். யூத ஆலயத்தின் முகப்பு அறையில் வெறும் சித்திரச்சுவராக கேரளாவில் யூதர் வருகை, மக்னா காட்டா உடன்படிக்கை கைச்சாத்திட்ட நிகழ்வு உட்பட்ட வரலாற்றுக் குறிப்புக்களை ஓவியங்களாகத்தீட்டியிருக்கின்றார்கள். அவற்றை வரிசைக்கிரமமாகப் பார்த்து வந்தால் பல வரலாற்று நிகழ்வுகளைக் கண்முன் கொண்டுவரமுடியும். 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Rabbi Nissim என்ற யூதக்கவிஞன் இப்படிச் சொல்கின்றார்,

"I Travelled from Spain
I had heard of the city of Shingly
I longed to see an Israel King
Him, I saw with my Own eyes"

Cranganore (கிரங்கனூர்), Muzhiris என்று கிரேக்கர்களாலும் Shingly என்று யூதர்களாலும் அழைக்கப்பட்ட ஒரு கடற்துறை, பண்டைய காலகட்டத்திலேயே மேற்குலகத்தாரால் அறியப்பட்ட இந்தியக் கடற்துறையும் கூட. இந்தக் கிரங்கனூர் நகர், திரிச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. யூதர்களின் இந்தியாவிற்கான குடியேற்றப் பரம்பல் கி.பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை அதிகம் செல்வாக்குச் செலுத்திய காலமாகும். Judeo-Malayalam என்பது காலப்போக்கில் மருவிவிட்ட ஹீப்ரூவும் (யூத மொழி) மலையாளக் கலப்புமான மொழியே இவர்களின் புழக்கத்தில் உள்ள மொழியாகும்.


கிரங்கனூரில் தம் குடியேற்றத்தை ஆரம்பித்த யூத இனம், உள்நாட்டு ஆட்சி மாற்றங்களின் போது துரத்தப்பட்டு கொச்சினில் இருந்த இந்து ராஜாவின் பாதுகாப்பில் அடைக்கலமானார்கள் என்கிறது வரலாறு. வாலில்லாக் குரங்கு (Ape), மற்றும் மயில் போன்ற தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஹீப்ரு மொழிவழக்கையும் வரலாற்றாசிரியர்கள் சுட்டுகின்றார்கள்.
பழந்தமிழ்ச் சொல்லான தகை (Takai) இதற்குப் பொருத்தமான சொல்லாக ஹீப்ரு மொழியில் உள்ள Tuki என்ற சொல் சுட்டப்படுகின்றது.
Moses de Paiva என்ற Dutch Jew, 70,000 இலிருந்து 80,000 வரையான யூதர்கள் 370 A.D இல் மலபார் கடற்கரையில் வந்திறங்கியதாகச் சொல்கின்றார். முதலாம் நூற்றாண்டில் (70 C.E) யூதர்களின் இரண்டாவது ஆலயம் ரோமானியர்களால் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பத்தாயிரம் வரையான யூதர்கள் இந்து ஆட்சியாளரின் கருணையினால் கேரளாவின் மற்றைய பாகங்களுக்கும் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.



Joseph Rabban என்ற யூத வியாபாரி 8 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மலபார் துறையில் காலடி வைத்தான். இவனுக்கு கொச்சின் யூதர்கள் மீதான நிர்வாக ஆளுமையை அப்போதிருந்த மலபாரின் சேர ஆட்சியாளர் இரண்டாம் பாக்ஷர ரவிவர்மன் (Bhaskara Ravivarman II )கொடுத்திருந்தார். இரண்டம் பாக்ஷர ரவிவர்மனை சேரமான் பெருமாள் என்றும் அழைப்பார்கள். இந்த நிர்வாக ஆளுமை கிரங்கனூர் என்ற பிரதேசத்தில் 72 இலவசக் குடியிருப்போடு, அஞ்சுவர்ணம் என்ற உடன்படிக்கையாக செப்புப் பட்டயம் பொறிக்கப்பட்ட சாசனத்தில் எழுதிக்கொடுக்கப்பட்டது. ஜோசப்பும் அவனைத் தொடந்த யூதத் தலைவர்களும் யூத சமூக நலனில் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டார்கள்.


போர்த்துக்கேயரின் காலத்தில் (AD 1500) அவர்களின் ஆட்சிமுறையினால் மிகுந்த அல்லற்பட்ட யூத சமூகம் AD 1662 இல் டச்சுக்காரர்களுக்கு உதவி போர்த்துக்கீசரை விரட்டியடிக்க உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்கள். AD 1662 இல் தோல்வியுற்ற டச்சுக்காரர்களின் முற்றுகை அடுத்த ஆண்டில் வெற்றியைத் தழுவியது. போர்த்துக்கேயர் விரட்டியடிக்கப்பட்டார்கள். கேரளாவில் டச்சுக்காரரின் ஆட்சிக்காலத்தை யூத சமூகத்தின் பொற்காலம் என்கின்றார்கள். 1687 இல் Amsterdam இல் இருந்து வந்த யூதப் பிரதிநிதி மூலம் "NOTSIAS DOS JUDEOS DE COCHIM" கொச்சின் யூத வரலாறு மீள் அச்சேறுகின்றது. போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட யூதர்களின் நூல்கள் மீள் அச்சேறுகின்றன. கொச்சினில் வாழும் யூத சமூகத்திற்கு டச்சு ஆட்சியாளர்களின் கருணைக் கண் சலுகைகளாகக் கிடைக்க உதவுகின்றது.

1795 இல் தொடந்த பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் கேரளாவின் குறிப்பாக கொச்சின் வாழ் யூத சமூகத்திற்கு சலுகைகளும், வசதிகளும் வாய்த்த நிறைவான காலமாக அமைந்துவிட்டது.


நல்லது நண்பர்களே, இந்தப் பதிவு கொஞ்சம் வரலாற்றுத் தகவல்களோடும் என் கமராவில் சுட்ட படங்களோடும் நிரம்பிவிட்டது.

உசாத்துணை: Kerala & her Jews மற்றும் சில வரலாற்றுத் தளங்கள்

வீண்டும் காணாம்......

Saturday, April 07, 2007

கொச்சினில் கண்ட யூத ஆலயம்

மே 29, 2006 மதியம் 3.00 மணி (இந்திய நேரம்)


கொச்சின் துறைமுகத்தை ரசித்துவிட்டு அடுத்து நான் பார்க்கச் சென்றது Jewish Town. கொச்சினில் இருக்கும் யூத மக்களின் குடியேற்றங்களின்எஞ்சிய சுவடுகளாய் இருக்கும் அந்த நகரப்பகுதியின் குறுகலான சந்துகளின் இரு மருங்கிலும் பண்டைய கலைப்பொருட்களைக் குவித்து வைத்து விற்கும் கடைகள் இருந்தன.


பண்டைய கலைப்பொருட்கள், வாசனைத்திரவியங்களை நிறைத்த கடைகளின் சங்கமம் அது. கடைகளைக் கடந்து போவோர் வருவோரைக் கூவிக் கூவி அழைத்துப் பொருட்களை வாங்குமாறு அன்புத் தொல்லை கொடுத்தார்கள் அவ்வியாபாரிகள். அவர்களையும் கடந்து போனால் வருவது Jewish Pardesi Synagogue என்ற யூதர்களின் வழிபாட்டிடம்.




கேரளாவில் யூதர்களின் குடியேற்றத்தையும் அவர்களின் வழிபாட்டு ஸ்தலத்தையும் முதன் முதலில் அறிந்த, கண்ட பிரமிப்பு விலகாமல் அவ்விடத்தின் உள்ளே நுளைந்தேன். இந்த புனித ஸ்தலம் காலை 10 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரையும், மாலை 3 மணி தொடக்கம் 5 மணி வரையுமே திறந்திருக்கும். சனிக்கிழமைகள் மற்றும் யூதர்களின் உத்தியோக பூர்வ விடுமுறை நாட்களிலும் இது பூட்டப்பட்டிருக்கும்.ஆலயத்தின் உள்ளே வீடியோ படம் எடுக்க அனுமதி கிடையாது. அரைக்காற்சட்டை போட்ட அல்லது அரைகுறையாக உடுத்திய பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. உள்ளே போகமுடியாது. வாசலில் நின்று கொண்டு புலம்பிக்கொண்டிருந்த அரைக்காற்சட்டை வெள்ளை இனப்பெண் அதற்குச் சாட்சியாக இருந்தாள்.




நுளைவு வாசலில் 1344 ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட சுவரில் யூத மொழியான ஹீப்ரு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் இருந்தன.இந்த ஆலயம் 1568 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதுவே பொதுநலவாய நாடுகளில் (Commonwealth countries)இருக்கும் Jewish Synagogue இல் மிகப் பழைமையானதாக விளங்குகின்றது. முன்னர் நான் தந்திருந்த மத்தன்சேரி பலேஸ் இற்கு அண்மையில் தான் இந்த இடமும் இருக்கிறது. நடை தூரத்தில் வந்து விடலாம். முன்னர் யூத மக்களின் பரம்பல் அதிகமாக இப்பிரதேசத்தில் இருந்ததற்கு இத் தலத்தில் தொன்மைச் சிறப்பு சான்று பகிருகின்றது. தொடந்த அரசியல் மாற்றங்களால் பல குடும்பங்கள் மீளவும் இஸ்ரேலுக்குச் சென்றுவிடமும் இப்போது 17 யூதர்கள் மட்டுமே இங்கே இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆலய வாசலில் ஒழுங்கு மற்றும் அனுமதி வேலைகளைக் கவனிக்கும் ஒரு யூதப் பெண்மணியைக் காணக்கூடியதாக இருந்தது. இந்த மத்தன்சேரி பிரதேசம் தவிர கேரளாவின் கொல்லம் பகுதியிலும் யூதக் குடியேற்றம் முன்னர் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

இந்த புனிதஸ்தலம் 1662 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டுப் பின்னர் 2 வருடங்களின் பின்னர் டச்சுக்காரர்கள் கொச்சினைக் கைப்பற்றியபோது மீள நிறுவப்பட்டது. கைச்சித்திர வேலைப்பாடுகளுடன் 18 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சலவைக்கல் (Marble) பதிப்புக்களும், பல வண்ண நிறக் கண்ணாடி விளக்குகளும் அலங்கரிக்கின்றன.


1760 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மணிக்கூட்டுச் சட்டமும் இன்னும் அசையாமல் நிற்கின்றது.

உள்ளே நுளைந்ததும் மேற் படிக்கட்டுக்களுக்கு அப்பால் சென்று பெண்கள் மட்டும் பிரார்த்தனை செய்யும் விசேட அனுமதியும் உண்டு. Orthodox முறையிலானது இத்தலம்.

தேவாலயப் பராமரிப்பாளரிடம் சென்று உரையாற்றியபோது நிறைய விஷயங்களைச் சொன்னார். 14 ஆம் நூற்றாண்டில் கொச்சினில் யூதர்கள் வருகையின் பின்னர் தொடர்ந்த அரசியல் மாற்றங்கள் இந்த ஸ்தலத்தின் முகப்புக் கட்டடமொன்றில் ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. இவை பற்றிய முழுமையான விபரங்கள், படங்கள், ஆவணங்களை இத்தொடருக்காகச் சேகரித்துக் கொண்டேன். அவற்றில் பொருத்தமான பகுதிகளை எடுத்து அடுத்த பதிவில் தருகின்றேன்.

வரட்டே....


(பதிவின் மேல் இரண்டு படங்களும் என் கமராவில் புகுந்தவை அல்ல, வலையில் சுட்டது)

Monday, March 26, 2007

தொட்டிற் பழக்கம் - ஒரு weird பதிவு


பதிவர்கள் ஒவ்வொருவராக தம் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பித் தம் தனிக்குணங்களைக் காட்டும் வேளை இது.சகோதரி உஷாவின் அழைப்பில் நானும் களமிறங்குகின்றேன். தொட்டிலில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள், என்னைப் பொறுத்தவரை
இங்கே நான் சொல்லப்போகும் என் தனிக்குணங்கள் இனிமேலும் மாறுமா என்பது சந்தேகமே ;-))

இங்கே என் மனச்சாட்சியின் குரலாக என் குணாதிசயங்கள் வெளிவருகின்றன. இவற்றில் பலவற்றை முதன்முதலாக இன்னொருவருடன் நான் பகிரும் என் தனிப்பட்ட விஷயங்களாகவும் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை குழந்தைப் பருவத்திலிருந்து தொடரும் சில பழக்கங்களோடு இடையே புகுந்த சில பழக்கங்களாகவும் இவை இருக்கின்றன.

என்னுடைய அம்மா, கூடவே இரண்டு சகோதரிகள், ஒரு தம்பி (இரண்டு மூன்று வயது இடைவெளியில்) என்று பெத்துப் போட்டுவிட்டு அவர்களின் இளவயதிலேயே தாத்தா (அம்மாவின் அப்பா) இறந்துவிட்டார். எனவே என் அம்மாவைப் பொறுத்தவரை ஒரு பெண்ணின் இளமைக்கால எதிர்பார்ப்புக்கள் ஆசாபாசங்கள் மட்டுப்படுத்தப்பட்ட உண்ண உணவு, உடுக்க உடை, படிப்பு என்ற எல்லையோடு சாதாரண வாழ்க்கையாகவே கழிந்து போனது. அவரின் அடிமனதில் இருந்த சங்கீதம், நடனம் போன்ற நுண்கலைகள் மீதான ஆசை, ஆசை அளவிலேயே நின்று , ஒரு ஆசிரியையாக மட்டும் தன்னை வளர்த்துக்கொண்டார். சரி, என்னுடைய ஆசைகளைப் பெண் குழந்தை பிறந்தால் அவளுக்கு என் விருப்பம் போல வளர்த்துவிடலாம் என்ற என் அம்மாவின் நினைப்பில் விழுந்தது மண். இரண்டு அண்ணன்மாருடன் மூன்றாவதாக நான் பிறந்தேன். அதனாலோ என்னவோ இயன்றவரை என் பிள்ளைப் பிராயத்திலிருந்தே ஒரு பெண்பிள்ளை போல வளர்த்து வந்தார். அதுவே பின்னாளில் என்னுடைய சில குணாதிசயங்களில் பெண்களுக்கே உரிய சில பண்புகளும் வாய்த்துவிட்டன.

1. பயங் கொள்ளல்

ஆயிரம் ஜெனமங்கள் என்றொரு பாழாய்ப்போன படத்தை என் சிறுபிராயத்தில் பார்த்துத் தொலைத்துவிட்டேன். அது முதல் இரவு வேளைகளில் அம்மா காவல் காக்க ஓண்ணுக்குப் போவது, கை கால் மறைத்து தலையின் மூக்கு வாய்ப்பாகம் மட்டும் வெளியே தெரிய
போர்வையால் மூடிக்கொண்டே தூங்குவது, பேய்ப்படங்களின் பாடல்கள் வானொலியில் வந்தால் இருகாதிலும் விரலால் இறுகமூடிக்கொள்வது சில உதாரணங்கள். ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் வரும் வெண்மேகமே பாடலை இன்றும் எனக்குக் கேட்டால் குலை நடுங்கும். ( வெளிநாடு வரும் வரை அம்மா தான் சாப்பாடு ஊட்டிவிட்டார்)

என்னுடைய பதினோராம் ஆண்டில் ( பிளஸ் ஒன்) படிக்கும் போது ஆச்சி (அப்பாவின் அம்மா) இறந்தபோது தான் நான் முதன்முதலில் ஒரு மரணவீட்டுக்கே போனேன். இதுவரை நான் மரணவீடுகளுக்குச் சென்ற எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். புலம்பெயர்ந்து வந்த பின் நான் தவிர்க்கமுடியாது சென்ற மரணச்சாலைகளில் பார்வைக்காக வைக்கப்படும் உடலைப் பார்க்கும் வரிசையில் நின்று உடலைப் பார்க்காமல் அந்தக் கணம் மட்டும் கண்ணை மூடிக்கொள்வேன். விதிவிலக்கு மலரக்காவின் இறுதிச்சடங்கு.

2. பாட்டு கேட்டல்

என்னைப் பொறுத்தவரை சினிமாப்பாடல்களைப் படங்களில் வரும் இடைச் செருகலாக இல்லாமல் என்னை ஆக்கிரமிக்கும் சோகங்களுக்கான ஒத்தடமாகவும், அதி உச்சபட்ச மகிழ்ச்சியின் போது பங்கு போடும் பங்காளியாகவும் பல தடவை அனுபவித்திருக்கின்றேன். காதல் அரும்பிய காலங்களில், இளையராஜாவின் எண்பதுகளில் வந்த படப்பாடல்களை ரேப்றெக்கோடரில் போட்டுக் கேட்டுக்கொண்டே மேசையில் தலைசாய்த்துக் கனவு காண ஆரம்பித்துவிடுவேன்.

ஒன்று சொன்னால் சிரிக்காதீர்கள். பாடலில் வரும் ஆண் குரலாக நானும் பெண்குரலாகக் காதலியையும் உருவகப் படுத்தி அப்பாடலை ஒரு படப்பாடல் போலத் தான் பகற்கனவு காண்பேன். என் ஜீவன் பாடுது படத்தில் வரும் எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற இளையராஜாவின் பாடலைத் தலை சாய்த்துக் கேட்கும் நாள் என் காதலியை டியூசனில் நான் காணாத நாள் என்பது என் ரேப் றெக்கோடருக்குத் தெரியும்.

3. படம் பார்த்தல்

சிம்பு தனுஷ் காலமும் வந்துவிட்டது, இளையராஜாவின் மகன் யுவனும் இசையமைக்க வந்துவிட்டார். ஆனால் எனக்கு இன்னும் பிடித்தவை எண்பதுகளில் ராமராஜன் நடித்த படங்களும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே, அரண்மனைக் கிளி வகையறாக்கள். கரகாட்டக்காரன் வீசீடி போதாதென்று டீ.வீ.டியும் வைத்திருக்கிறேன். என் காரில் ஐந்து இசைத்தட்டுக்களைப் பொருத்திக் கேட்கலாம். அந்த ஐந்தும் பெரும்பாலும் எண்பதுகளில் ராஜா போட்ட மெட்டுக்கள்.
அதிகம் சென்ரிமென்ற் கலந்த அன்பே சிவம், பிளாக் போன்ற படங்களைப் பார்த்தால் கண்ணீர் வருவது என்னை மீறிய சக்தி ;-).




4. குழந்தைகள் மீதான நேசிப்பு

Finding Nemo என்ற படத்தை வெள்ளைக் குழந்தைகள் தம் பெற்றோருடன் தியேட்டர் வந்து பார்க்கும் போது தனி ஆளாக அந்தக்கூட்டத்தில் படம் பார்த்த பயல் நானாகத்தான் இருப்பேன். Lion King மூன்று பாகங்களையும் டீவீடியில் வாங்கிப் பொக்கிஷமாக வைத்திருக்கின்றேன். கூடவே Madagascar, டிஸ்னியின் பெரும்பாலான கார்ட்டூன் தொகுப்பு வீடியோக்கள் இன்னும் சில உதாரணங்கள்.

என்னுடைய படுக்கையில் tickle me Elmo என்ற பொம்மை இருக்கிறது (பார்க்க படம் ), அதனுடைய வயிற்றை அமுக்கி அது குலுங்கிக் குலுங்கிச் சிரித்து ஓய்ந்த பின் தான் எனக்குத் தூக்கம் வரும்.

ஊரில் இருக்கும் போது பக்கத்து வீட்டுப் பிள்ளைகளைப் பிராய்க்குக் காட்ட உப்பு மூட்டை, நுள்ளுப்பிறாண்டு கிள்ளுப் பிறாண்டு விளையாட்டுக் காட்டிய பழக்கம் இன்னும் தொடர்கிறது. வார இறுதி நாட்களில் காலை 10 மணிக்கு முன் Mc Donalds சென்று அங்கு காலை உணவு சாப்பிட வரும் குழந்தைகளை வேடிக்கை பார்ப்பது ஒரு சுகம். விருந்து நடக்கும் வீடுகளில் பெரும்பாலும் பெரியோரின் பேச்சுக் கச்சேரியைத் தவிர்த்துக் குழந்தைகளோடு விளையாட்டுக் காட்டி அவர்கள் சிரிப்பதை ஆயுள் முழுவதும் பார்க்கப்பிடிக்கும்.

சமீபத்திய சாதனை: கடந்த இரு வாரம் முன் ஒரு கலியாண இரவு விருந்தில், பிறந்து பத்து மாதமான ஒரு குழந்தையோடு வந்த பெற்றோர் இசைக்கு ஆடத் தொடங்கத் தனியே தன் வண்டியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை வாரியெடுத்து என் தோளில் சாய்த்து தூக்கம் கொள்ளவைத்து விருந்து முடிவிற் தான் அதன் தாயிடம் கொடுத்தேன்.

5. வாசிப்பும் உலாத்தலும்



1995 ஆம் ஆண்டு நான் அவுஸ்திரேலியா வந்த நாள் முதல் ஆனந்த விகடனைச் சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. உதாரணத்துக்கு இப்பதிவில் நான் மேலே இணைத்துள்ள ஆனந்த விகடன் வெளிவந்த ஆண்டுகளைப் பாருங்கள். இன்னும் எனக்கு காமிக்ஸ் புத்தகங்கள் கொள்ளைப் பிரியம் (பார்க்க படம்). 1995 ஆம் ஆண்டு மணிச்சித்ரதாளு படம் வெளிவந்து ஷோபனாவுக்குத் தேசியவிருது அறிவித்ததை ஒரு ஆனந்த விகடனில் வாசித்துத் தெரிந்துகொண்டு முதன் முதலில் மணிச்சித்ர தாளுவில் ஆரம்பித்த மலையாளப் படம் பார்க்கும் அவா இன்னும் தொடர்கிறது. அதுவே பின் என் கேரள உலாத்தலாகவும் மாறிவிட்டது. கேரளாவில் கொஞ்சக் காலம் வாழக்கூடாதோ என்பதே இப்போது முளைத்திருக்கும் என் weird நினைப்பு.


போதுமா உஷா ;-)))