Social Icons

Pages

Monday, December 27, 2010

Hong Kong இல் ஒரு குட்டி இந்தியா

"நம்ம தமிழங்கள இப்பிடிக் கஷ்டப்படுத்துறவங்க நல்லாவே இருக்கமாட்டாங்க, பாருங்க" இப்படிச் சொன்னவர் Chungking Mansions பகுதியில் இருக்கும் ஹோட்டல் சரவணாவில் உணவு பரிமாறும் அந்த தஞ்சாவூர்க்கார முதியவர். Hong Kong இற்குப் பயணப்படும் போது அங்குள்ள இந்தியர்களது வாழ்வியலின் ஒரு பரிமாணமாக, அவர்களது வியாபார ஸ்தலங்களைச் சென்று பார்வையிட வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு உதவியாக இருந்தவர் நண்பர் மாயவரத்தான். Chungking Mansions பகுதிக்குச் செல்லுங்கள் அந்த இடத்தில் நிறைய உணவுக் கூடங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனையாகும் கடைகளை இந்தியர்களே நடத்துகின்றார்கள் என்று என் பயணத்துக்கு முன்னதாகவே சொல்லி வைத்திருந்தார்.
Tsim Sha Tsui என்ற ரயில் நிலையத்தில் இறங்கி Nathan Road என்ற வழிப் பக்கமாக நடந்தால் சில நொடிகளில் எதிர்ப்படுகின்றது Chungking Mansions.


அந்தக் கட்டிடத் தொகுதி 17 அடுக்குகளைக் கொண்டது. அந்தக் கட்டிடத்தில் சீன, இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடியிருப்புக்கள் மேலே இருக்க, கீழே இருக்கும் இரண்டு அடுக்குகளை நிறைக்கின்றன இந்திய உணவங்கள், மற்றும் தொழில் நுட்ப, இலத்திரனியல் உபகரணங்கள் விற்கும் கடைகள். சீனர்களது வியாபார ஸ்தலங்கள் இருந்தாலும் அங்கே பெரும்பான்மையாக நிறைந்திருப்பது இந்தியர்களது கடைகளே.
வட இந்திய உணவகங்களோடு ஒன்றிரண்டு தென்னிந்திய உணவகங்கள் இருந்தாலும், "ஹோட்டல் சரவணா" என்ற தமிழ்ப்பெயரைத் தாங்கிய ஹோட்டல் தென்படவே. அந்த உணவகம் நோக்கிச் சென்றேன். ஒரு முதியவர் வாங்க தம்பி என்று சொல்லியவாறே இருக்கையைக் காட்டுகிறார். உணவுப்பட்டியலில் இருந்து "வெஜிடேரியன் தாலி மீல் வாங்கிக்குங்க, நல்ல சப்பாத்தி சுட்டுக் கொடுப்பாங்க" என்று அவரே பரிந்துரைக்க நானும் அதையே சொல்லி விட்டு அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.


"நான் தஞ்சாவூர்க்காரன் தம்பி, நீங்க எந்தப்பக்கம்?" என்று அவர் கேட்க
"நான் சிலோன் ஐயா"
"ஓ சரி சரி, ராஜபக்க்ஷ ஏதாச்சும் பண்றானா"
"இன்னும் ஒண்ணும் பண்ணல ஐயா" இப்படி நான் சொல்லவும் அதற்கு அந்த முதியவர் சொன்ன பதிலைத் தான் முதல் பந்தியில் சொல்லியிருக்கிறேன். அவர் அப்படிச் சொன்னதும் உண்மையில் நெகிழ்ந்து போனேன். எங்கோ இரண்டு மூலைகளில் இருந்து வந்து இன்னொரு அந்நிய தேசத்தில் இரண்டு தமிழர்களாக நாம் இருவரும் நம் மனப்பாங்கை அந்த நிமிடங்கள் பகிர்ந்த கணங்கள் மறக்கமுடியாதவை.

ஹோட்டல் சரவணாவில் சாப்பிட்டுவிட்டுக் கடைகளைச் சுற்றிப் பார்க்கின்றேன்.

ஒரு தமிழரின் நாணய மாற்று நிறுவனம், கண்ணாடிக்குப் பின்னால் " தமிழ் வாழ்க" ;-)

இந்திய மளிகைச் சாமான்கள் விற்கும் கடை, இந்தியத் திரைப்படங்களின் டிவிடிக்கள், இசைத்தட்டுக்கள் விற்கும் கடைகள், சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் மொபைல் போன்களில் இருந்து ஐபாட் வரை நிறைந்திருக்கும் கடைகள் எல்லாப் பக்கங்களிலும் இருக்கின்றன.



000000000000000000000000000000000000000000000000000000000
ஹொங்கொங்கில் சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாகச் செல்லவேண்டிய இன்னொரு இடம் The Peak என்ற இடம். இந்த நாட்டின் உயர்ந்த இடமிது. Hong Kong Central ரயில்வே நிலையத்தில் இருந்து ஒரு பத்து நிமிஷ நடையில் இந்த உச்சிக்குச் செல்லும் ட்ராம் வண்டிச் சேவையைப் பிடிக்கலாம். இரவு 12 மணி வரை தொடர்ந்து இந்த ட்ராம் வண்டிகள் கீழிருந்து மேலும், மேலிருந்து கீழுமாக ஓடித் திரிகின்றன. ஒரு நாள் மாலை ஏழுமணி வாக்கில் நானும் இந்தப் புதிய அனுபவத்தைப் பெற அங்கு சென்று ட்ராம் டிக்கட்டையும் வாங்கிக் கொண்டு பயணிக்கின்றேன்.



செங்குத்தான பாதையில் பல்லிபோல உரசிக்கொண்டே பயணிக்கும் இந்த ட்ராம் வண்டிகள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து விடாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய வண்டிகளையும் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். அந்தப் பயணத்தின் போது ஹொங்கொங்கின் அழகை ஒவ்வொரு பாகமாகப் பிரித்துக் காட்டிக்கொண்டே பயணிக்கிறது வண்டி. மெல்ல மெல்ல இருள் கவிய, அந்தக் கறுப்பு நிலப்படுக்கை எங்கும் ஒளிரும் வைரங்களை வைத்து இழைத்து போலத் தெரிகின்றது.

உச்சிக்குச் சென்றால் உணவகங்களுடன், இந்த நாட்டுக் கலைச் செல்வங்கள் ஓவியங்களாகவும் கைவினைப்பொருட்களாகவும் விற்பனையாகின்றன. இப்படியான இடங்களில் வழக்கத்தை விடப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே நியாயமான விலையில் கிட்டுகின்றன.

இந்த இடத்துக்குப் பயணித்து உச்சியில் நின்று கீழே இருக்கும் நிலப்பகுதியைக் கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாதைகளில் நின்று இந்த நாட்டின் முழு அழகையும் ஒரே பார்வையில் பார்க்கக் கூடியாக இருக்கின்றது. ட்ராம் வண்டிப்பயணத்தின் டிக்கட்டோடு The Sky Terrace இற்குச் செல்லும் டிக்கட்டையும் வாங்கி வைத்தால் அங்கிருந்து இன்னும் ஒரு அழகான தரிசனத்தைக் காணலாம்.

Madame Tussauds Hong Kong இங்கே அமைந்திருப்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம். மெழுகு சிலைகளில் உயிர்பெற்றிருக்கும் ப்ரூஸ்லீயும், ஜாக்கி சானும் முகப்பில் நிற்கின்றார்கள்.

ஒவ்வொரு பகுதியாக நின்று நிதானித்துச் சுற்றிப்பார்த்து முடிக்க 11 மணியை அண்மிக்கிறது. ஹோட்டல் திரும்பலாம் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு ட்ராமைப் பிடிக்கின்றேன்.
Hong Kong உலாத்தலில் விடுபட்ட இடங்களை இன்னொரு பயணத்தில் கவனித்துக் கொள்ளலாம் என்று மனதைத் தேற்றியவாறு உலாத்தலை நிறைவு செய்கின்றேன்.

Tuesday, December 14, 2010

Hong Kong இல் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு

இன்றைய வலையுலகச் சூழல் பல கோப்பெருஞ்சோழர்களையும், பிசிராந்தையார்களையும் உருவாக்கியிருக்கின்றது. அப்படி ஒரு முகமறியா நட்புத் தான் இதுநாள் வரை எனக்கும் Hong Kong அருண் இற்கும் வாய்த்திருந்தது. ஈழத்து உறவு என்ற வகையில் பல சந்தர்ப்பங்களில் எனது குணாதிசியத்தோடு பொருத்திப் பார்க்கும் நண்பர்களில் இவரும் ஒருவர். Hong Kong செல்வதற்கு முதல்நாள் தான் இவருக்கு ஒரு மின்னஞ்சல் இட்டிருந்தேன். உடனேயே தொடர்பிலக்கத்தோடு பதில் வந்திருந்தது. அங்கு சென்ற மூன்றாம் நாள் அருண் ஐச் சந்திக்கும் சந்தப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இருந்த Toast Box என்ற தேனீர்ச்சாலையில் தான் சந்திக்க ஏற்பாடானது. அருண் உடன் அவருடைய நண்பர், மட்டக்களப்பைச் சேர்ந்த குமாரும் இணைந்து கொண்டார். வலையுலக நட்பு வாயிலாக ஏற்கனவே ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமானதால் அருணைச் சந்திக்கும் போது முன்னர் சந்தித்துப் பிரிந்த நண்பரை நெடு நாளுக்குப் பின் சந்தித்த உணர்வே ஏற்பட்டது.

தான் சந்திக்கும் முதல் வலைப்பதிவர் சந்திப்பு இதுதான் என்றார் அருண். எனக்கோ Hong Kong இல் முதல் உலாத்தலிலேயே ஒரு வலைப்பதிவர் சந்திப்பும் இணைந்த திருப்தி. நான் நினைக்கிறேன் Hong Kong இல் நடந்த முதல் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு இதுவாகத் தான் இருக்கும்.

கொழும்பில் இந்த ஆண்டில் சந்தித்த தாயக நண்பர்களுடான வலைப்பதிவர் சந்திப்புக்கு அடுத்து Hong Kong அருணை அதே உணர்வோட்டத்தோடு சந்திக்க முடிந்தது. வலையுலகத்தைக் கடந்து நமது தாயகம் என்று சுழன்று பாரத்தை ஏற்றி வைத்த பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம். அருணோடு வந்த குமாரும் சகஜமாக Hong Kong இல் நம்மவர் வாழ்வைப் பற்றிச் சொல்லி வைத்தார்.

படத்தில் இடமிருந்து வலம்: குமார், அருண், நான்

பிரித்தானியர் ஆளுகையில் இந்தியர்கள் பலர் Hong Kong இற்கு வந்து குடியேறியிருக்கின்றார்கள். அவர்களின் தலைமுறைகள் இப்போது ஒரு பக்கம். அதைத் தவிர தொழில் நிமித்தமாக வந்து சேர்ந்த இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என்று ஒரு பக்கம். இவர்களைத் தவிர உலகெங்கும் சிதறுண்டு வாழ்வைத் தேடி வாழ்வைத் தொலைத்த ஈழத்தமிழர்கள் என்று இன்னொரு பக்கமாக இருக்கின்றார்கள். மேற்கத்தேய நாடுகள் பலவற்றில் நிரந்தர வதிவுடமை பெற்று ஓரளவு நிலையான எதிர்காலம் பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்க, கீழைத்தேய நாடுகளில் இருக்கும் இறுக்கமான குடிவரவு நடைமுறைகளால் எதிர்காலம் தேடி நிதமும் காத்திருக்கும் அகதிகளில் இவர்களும் சேர்த்தி. ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கின்றார்கள், எப்போதாவது ஒரு நம்பிக்கை விடிவெள்ளி வருமென்று. பின்னொரு நாளில் எமது தாயக உறவுகள் சிலரைச் சந்தித்தேன், ஓவ்வொருவருக்குப் பின்னாலும் விதவிதமாய் அறுநூறு பக்க நாவல் அளவுக்கு எழுதக்கூடிய கதைகள் இருக்கும்.

நண்பர் அருண், குமார் ஆகியோரோடு மாலை ஏழரை மணி வாக்கில் அமைந்த சந்திப்பு பத்து மணியைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. இன்னொரு தினம் சந்திக்க வேண்டும் என்று பிரிந்து கொண்டோம் அப்போது.


Hong Kong இல் தங்கியிருந்த ஐந்தாம் நாள் மாலை மீண்டும் அருணைச் சந்திக்க ஆவல் கொண்டு அழைத்தேன். அதே உற்சாகமான குரலில் கண்டிப்பாக வருகின்றேன் என்றார். வேலை முடிந்து ஹோட்டலுக்கு திரும்பும் போது வரவேற்புப் பகுதியில் காத்திருந்தார்.

Hong Kong Central புகையிரத நிலையம் வரை ரயிலில் பயணித்து அங்கிருந்து Star Ferry மோட்டார் படகு மூலம் Kowloon பகுதியை வந்தடைந்தோம். அந்த இடத்தில் காலாற நடக்கும் போது எதிர்ப்பட்டது Harbour City. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்காக இப்போதே களை கட்டத் தொடங்கியிருந்தது அந்தப் பகுதி. எங்கும் வண்ண விளக்குகள்,வித விதமான அலங்காரங்களாக ஏதோ புராண திரைப்பட செட் மாதிரி இருந்தது அந்தப் பகுதி. திருவிழாக் கூட்டமாய் எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கிறார்கள் அவ்வூர் மக்களும் வெளிநாட்டு யாத்திரீகர்களும்.



"இந்த இடத்துக்கு முன்னால் வந்திருக்கிறேன், அதோ தெரிகிறதே மரம், அது மட்டும் இருந்த பகுதி இப்போது அந்த மரத்தை வெட்டாமல் அதைச் சுற்றியே அழகான கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள் பாருங்கள்" என்று இந்த நாட்டினரின் இயற்கைச் செல்வம் குறித்த கவனத்தைச் சிலாகிக்கையில் எனக்கோ எம் தாயகத்தில் சொந்தத் தகப்பனை உயிரோடு சுவரில் மெழுகி மூடிய பரம்பரையின் கதை ஞாபகத்துக்கு வந்தது.

அந்தப் பகுதியின் துறைமுகப்பகுதியை ஒட்டி கூட்டம் கூடத்தொடங்கியது. "இந்த இடத்தில் ஒவ்வொரு நாளும் இரவு 8.10 மணிக்கு லேசர் விளக்குகளின் ஜால விளையாட்டு இடம்பெறும்" என்று அருண் சொல்லி சிறிது நேரத்தில் மெல்ல ஒளிக்கற்றையை கடலின் மறு அந்தத்தில் இருந்த பெருங்கட்டடத்தின் வாயில் இருந்து செலுத்தியது. மெல்ல மெல்ல கலர் ஜிகினாத் துணிகளைச் சுழற்றி ஆட்டுமாற்போலக் கடலின் நடுவிலே லேசர் ஒளி ஆட்டம் நடந்து பார்வையாளர்களைக் கவர்ந்தது.







லேசர் ஆட்டம் முடிந்ததும், அங்கிருந்து மெல்ல நகர்ந்தால் சில அடி தூரத்தில் சினிமா உலகின் நினைவுச் செதுக்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. Hong Kong இன் பிரபலமான திரை நட்சத்திரங்களின் கை அடையாளத்தை அவர்களைக் கொண்டே பதிப்பித்து நடைபாதையில் பொருத்தியிருக்கின்றார்கள். Hong Kong இற்கு வெளியே ஹாலிவூட் வரை தடம்பதித்த ஜாக்கிசானின் உடைகளை விற்கும் கடை, ப்ரூஸ்லீயின் நினைவுச் சிலை என்று தொடர்கின்றது. அந்த இடமே ஒரு குட்டி சினிமா நகரில் நுழைந்த பிரமையை ஏற்படுத்த இவையெல்லாவற்றையும் ரசித்தவாறே நடக்கின்றோம். குளிர்காற்று துன்புறுத்தாமல் இதமாக வீசுகின்றது அந்த இரவில்.









Hong Kong இன் உயர்ந்த கட்டிடம் இது

Sunday, December 12, 2010

Hong Kong உலாத்தல் ஆரம்பம்

1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம், அன்று தான் தாயகம் கடந்த வெளிநாட்டுப் பயணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்ட நாள். Cathay Pacific விமானத்தில் ஏறி அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்கின்றேன். இடையில் Hong Kong விமான நிலையத்தில் இடைத்தங்கலாகச் சில மணி நேரங்கள் விமானம் நிறுத்தப்பட, அந்த விமான நிலையத்தைச் சுற்றுகிறேன். செம்பாட்டு மண் வீதிகளில் சைக்கிள் ஓட்டிய கால்கள் மொசைக் தரையில். என்னைச் சுற்றிய கண்ணாடிக் கூண்டுகளுக்குள் கடை விரிக்கப்பட்டிருக்கும் நவீன உலகத்தின் காட்சிப் பொருட்களை ஏதோ புதிய லோகத்தில் இறங்கியது போன்ற பிரமையோடு பார்த்துக் கொண்டு வருகின்றேன். அந்தச் சில மணி நேர விமான நிலைய அனுபவம் மட்டுமே Hong Kong இல் எனக்கு அப்போது வாய்த்தது.

15 வருஷங்கள் கழிந்த நிலையில், கடந்த வாரம் திடீரென்று அலுவலக வேலை காரணமாக Hong Kong பயணிக்க வேண்டியிருந்தது. ஒரு வாரப் பயணம் என்றாலும் அலுவலக நேரம் தவிர்ந்த நேரத்தில் Hong Kong உலாத்தலைக் கவனிக்கலாம் என்று நினைத்தபோது நண்பர் மாயவரத்தான் இந்தியக் கடைகள் இருக்கும் இடம் பற்றிய விபரத்தைக் கொடுத்தார். ஈழத்துப் பதிவர் நண்பர் Hong Kong அருண் இற்கும் ஒரு மின்னஞ்சல் இட்டேன். கண்டிப்பாகச் சந்திப்போம் என்று தன் தொடர்பிலக்கத்தையும் தந்தார் அவர். Hong Kong காலநிலை குளிரை அரவணைக்கும் என்று வேலைத்தலத்தில் பயமுறுத்தினார்கள். எனவே அடுக்கிய உடுப்புக்களோடு குளிரைத் தாங்கும் உடையைம் இணைந்து கொண்டது.



அலுவலகத்தின் சார்பில் Hong Kong East என்ற ஐந்து நட்சத்திர விடுதி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது. இந்த ஹோட்டல் வர்த்த நிறுவனங்களுக்குத் தொழில் ரீதியான பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே ஏதுவாக இருக்கின்றது. Hong Kong தீவில் எனது அலுவலகம் இருந்ததால் ஐந்து நிமிட நடை தூரத்தில் இருக்கின்றது.

முதல்நாள் வேலை முடிந்து மாலை வேளை ஊரைச் சுற்றிப்பார்க்கலாம் என்று நினைத்தபோது எமது சிங்கப்பூர் அலுவலகத்தில் இருந்து வந்த தான்யா இணைந்து கொண்டாள். அவள் அடிக்கடி Hong Kong வந்து போனவள். வியட்னாமில் பிறந்தாலும் சீன மொழியைச் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டு விட்டாள். Hong Kong இல் எனக்குக் கிடைத்த முதல் அனுபவம் அவ்வூர் ரயில் பயணம் தான். எமது ஹோட்டலுக்கு அருகில் Tai Koo என்ற ரயில் நிலையம் இருந்தது. சிங்கப்பூரில் இருக்கும் MRT என்ற ரயில்சேவைக்கும் Hong Kong இன் MTR என்ற ரயில் சேவைக்கும் இடையில் ஆறு வித்தியாசங்கள் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிங்கப்பூர் போன்றே நவீனமயப்படுத்தப்பட்ட ஒரு ரயில் சேவை இது. தான்யா என்னை அந்த ரயில் நிலையத்தின் டிக்கற் விற்பனை முகவரிடம் அழைத்துப் போகின்றாள். சீன மொழியில் "இவருக்கு ஒரு Octopus Card கொடுங்கள் என்கிறாள்" ஐம்பது Hong Kong டொலர் வைப்புப் பணமாகக் கொடுக்க வேண்டும், மேலதிகமாக 100, 200, 500 என்று விரும்பும் அளவுக்கு ரீசார்ஜ் அளவை இந்தக் கார்டில் ஏற்றிக் கொள்ளலாம் என்கிறார் டிக்கற் கொடுப்பவர். என்னடா இது இவள் என்னை ஆக்டோபஸ் காட்டக் கொண்டு போகிறாளோ என்று அப்பாவித்தனமாக மனசு யோசிக்க, தான்யா தொடர்ந்தாள்.
இந்த Octopus Card ஐ நீங்கள் வாங்கி வைத்துக் கொண்டால் இது ரயில் பயணத்துக்கான டிக்கற் ஆக எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கூடவே கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்யவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாள். பின்னர் தொடர்ந்த நாட்களில் Octopus Card என் உற்ற தோழன் ஆனான். இந்த கார்டை ஒரு கிரடிட் கார்ட் போலப் பாவிக்க முடியும். நாடு திரும்பும் போது வைப்புப் பணமாகக் கொடுத்த அந்த 50 Hong Kong ஐத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். இந்த Octopus Card அட்டை குறித்து நண்பர் அருண் விக்கிபீடியாவில் விபரமாகக் கொடுத்திருக்கின்றார், அது இங்கே





Hong Kong இன் ரயில்சேவை உண்மையில் உலகத்தரமானது ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் Hong Kong இன் எல்லா மூலைகளை இணைக்கும் ரயில் சேவைகளும் கிட்டுகிறது. ஒவ்வொரு வழித்தடங்களுக்கான பாதையை வெவ்வேறு நிறங்கள் மூலம் வேறுபடுத்திக் காட்டுகின்றார்கள். அத்தோடு ஓவ்வொரு ரயில் நிலையமும் குட்டி ஐந்து நட்சத்திர ஹோட்டல் தரத்தில் சுத்தமாகமும் வெவ்வேறு நிறத்தால் வேறுபடுத்தியும் காட்டப்படுகின்றது. ரயில் நிலையத்தின் உள்ளேயும், பயணிக்கும் ரயிலிலும் சாப்பாட்டை, நீராகாரத்தை நுகர்வதைத் தடை செய்திருக்கின்றார்கள். மீறினால் தண்டப்பணம் கட்டவேண்டியது தான். ரயில் நிலையங்களை ஒட்டி எங்கும் ஒரு சின்ன கடை வளாகத்தைக் காணலாம். கூடவே வெளியே இணைக்கும் ஒவ்வொரு பாதைக்குமான வெளியேறும் பாதைகளை A, B, C, D என்று வகைப்படுத்தி எந்த எழுத்துக்கு எந்த வீதிகள் கிட்டிய வெளியேறும் பாதைகளாக உள்ளன என்று காட்டப்பட்டிருக்கின்றது. ஒரு ரயில்சேவையை மக்களுக்குக் களிப்பூட்டும் வகையில் வெற்றிகரமாகக் கொடுக்கும் உத்தியை இவர்களிடம் இருந்து தான் பெரியண்ணன்கள் கற்றுக் கொள்ள வேண்டும் போல. நவீன தரத்திலான Hong Kong ரயில்களில் பயணிக்கும் போது சிட்னியில் நிதமும் பயணிக்கும் சுடுகாட்டு ரயில் ஞாபகத்தில் வந்து பயமுறுத்தியது.




ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற எச்சங்களில் ஒன்றாக Hong Kong இன் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இரண்டு அடுக்கிலான ட்ராம் வண்டிகள் இன்னும் தம் ஓட்டத்தைத் தொடர்கின்றன. அவுஸ்திரேலியாவில் சிட்னியின் மைய நகர்ப்பகுதியில் மட்டும், மற்றும் மெல்பனின் எல்லா இடங்களிலும் இந்த ட்ராம் வண்டிகள் இன்னும் ஓடுவது குறிப்பிடத்தக்கது. Hong Kong இல் பஸ் போக்குவரத்தில் குட்டி மினி பஸ்களின் சேவையையும் காணக்கூடியதாக இருந்தது.

Hong Kong இல் இறங்கினாலே ஏதோ ஒரு பெரும் கடை வளாகத்தில் இறக்கி விட்ட பிரமை தான். எங்கு திரும்பினாலும் பிரமாண்டமான அடுக்குகளில் கடைத் தொகுதிகள். உலகின் முன்னணி நிறுவனங்களில் இருந்து சீனாவில் இருந்து உற்பத்தியாகும் மலிவான சரக்குகள் வரை எல்லாமே கிட்டுகின்றது. மொத்தத்தில் இந்த Hong Kong ஐ shopping paradise அதாவது நுகர்வோரின் சொர்க்கம் என்றால் அது மிகையில்லை.

ஒரு மூலையில் இருந்த சின்னதொரு கடைவளாகத்தின் அட்டகாசமான விளம்பரப்பலகைகள்

தானியங்கி விற்பனைக்கருவியில் குடை விற்பனைக்கு ;-)

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் இற்கு இரண்டு முறை பயணப்படவேண்டி இருந்தது. சீனா என்றால் ஏதோ குடிசை வீடுகள் நிறந்த தேசம் என்ற என் நினைப்பில் மண் அள்ளிப்போட்ட பயணங்கள் அவை. அங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள், தரமான போக்குவரத்து சேவைகள் என்றிருந்தாலும் அங்கே ஒரு பெரும் தலையிடியாக இருந்தது மொழிப்பிரச்சனை. ஒரு முறை பெரும் கடைத்தொகுதிக்குள் சுற்றிக் கொண்டிருந்த நான் நம்பர் 1 போகவேண்டும் என்று எதிர்ப்பட்டவர்களை எல்லாம் பாத்ரூம் எங்கே டாய்லெட் எங்கே என்று கேட்டுக் களைத்து ஐந்து விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக் காட்டியும் யாரும் புரிந்து கொள்ளாத அவஸ்தை இருந்தது. ஆனால் Hong Kong அந்தப் பிரச்சனை இல்லை. ஆங்கிலத்தை கடைக்கோடி மனிதனும் சரளமாகப் பேசுகின்றார், புரிந்து கொள்கின்றார்.


Hong Kong, 1 ஜீலை வரை ஆங்கிலேயர் ஆளுகைக்குக் கீழ் இருந்து பின்னர் சீனாவின் நிர்வாக அலகுகளில் ஒன்றாகத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டிருந்தது. சீனாவின் கைக்கு இந்த நாடு போகும் போது Hong Kong மக்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதை இப்போதும் என் மனத்தின் டிவி திரை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. எங்கே சீனாவின் கம்யூனிச வைரஸ் நம்மைத் தாக்கிவிடுமோ என்று அப்போது Hong Kong மக்கள் பயத்தின் எல்லையில் இருந்ததும் நியாயமான ஒன்று. சிங்கப்பூரில் மலேசியர்கள் என்றால் ஒரு எள்ளல் பார்வை இருக்கும் அதே தோரணை சீனாவில் இருந்து வருபவர்களை நோக்கி Hong Kong காரரிடம் இருக்கும். Hong Kong இன் முக்கிய பேச்சு மொழியாக சீன மொழியின் கூறு Cantonese இருக்கின்றது.


Hong Kong பாராளுமன்றக் கட்டடம்

"Hong Kong சீனாவிடம் போனதால் என்ன நன்மை கிட்டியிருக்கு" என்று தான்யாவிடம் கேட்டேன்.
"நிறைய விடுமுறைகள் கிட்டியிருக்கு, அவ்வளவு தான்" என்றாள் அவள்.

அடுத்த நாள் வலைப்பதிவூடாகக் கிட்டிய நம் தாயக உறவு அருண் ஐ சந்திக்கும் ஆவலோடு காத்திருந்தேன்.

Sunday, November 28, 2010

சிங்கைக்கு ஒரு அதிரடி விஜயம் ;-)


சிங்கையில் இருக்கும் நண்பர் வெற்றிக்கதிரவன் போன வார ஆரம்பத்தில் "இனி எப்ப சிங்கை வர்ரீங்க" என்று கேட்கும் நேரம் அடுத்த வாரம் சிங்கைக்கு ஒரு திடீர் விஜயம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை. திடீரென்று ஒரு அலுவலக விஷயமாக மூன்று நாட்கள் சிங்கையில் தங்கல்.
தங்கியது என்னமோ மூன்று நாட்கள் தான் என்றாலும் அவற்றில் கண்டதையும் கேட்டதையும் கன்னாபின்னாவென்று கண்டபடி பதிவாக்க விரும்பினேன்.


சிங்கைக்கு எப்போது சென்றாலும் சிங்கைப்பதிவுலகம் இருகரங் கூப்பி வரவேற்கும், இந்த முறை அவர்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைத்திருந்தாலும் தம்பி டொன் லீ எப்படியாவது சைக்கிள் கேப்பில் கிடைக்கும் நேரத்தில் சந்திக்கலாம் என்று உசுப்பேற்றினார். வெள்ளிக்கிழமை மாலை வேலைகள் முடியும் போல இருந்ததால் ட்விட்டரில் சிங்கைப் பதிவர்கள்/ட்விட்டர்களுக்கு ஒரு பகிரங்க அழைப்பை வைத்தேன், முருகன் இட்லிக்கடையில் சந்திக்கலாம் என்று.
திடீர் பகல் நேர அழைப்பின் பிரகாரம் தம்பி டொன் லீ, ஜோசப் பால்ராஜ், ஜெகதீசன், வெற்றிக்கதிரவன், விஜய் ஆனந்த் ஆகியோர் முருகன் இட்லிக்கடை முன்பாகச் சந்தித்தோம். நண்பர் கிஷோரை அடுத்த முறை கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும், நிஜம்ஸ் இம்முறையும் அஞ்சப்பர் அழைத்துச் செல்லவில்லை.
அரசியல், உலகம், சினிமா என்று சுற்றுச் சுழன்று சாப்பிட உட்காரும் போது, ஜோசப் பால்ராஜ் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்தார்.
"தற்போதுள்ள தமிழ் வலைப்பதிவுலகத்தைப் புரட்டிப் போட என்ன செய்யலாம்?"என்று அவர் கேட்கவும்
ஆடர் செய்த இட்லியும் சட்னியும் வரச் சரியாக இருந்தது.
இட்லியைப் புரட்டிப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தோம். (நோ உள்குத்து)

முருகன் இட்லிக்கடையில் ஒரு மணி நேரமும், இன்னொரு கடையில் மேலதிகமாக இன்னும் ஒன்றரை மணி நேரமாக உலக விஷயங்களை தோய்த்துக் காயப்போட்டு விட்டு, நந்தலாலா படம் பார்க்கும் எண்ணத்தையும் ஒதுக்கி விட்டுக் கிளம்பினோம். முருகன் இட்லிக்கடை உரிமையாளர் சுப்ரமணிய சுவாமி அனுதாபியாம். இப்போது சுப்ரமணிய சாமி(க்கு) சீசன் போலிருக்கு

பதிவர் சந்திப்புக்குப் பின் நெட் கபேக்குச் சென்று வலை மேய்ந்தேன், பன்னிரண்டு மணியைத் தொடும் நேரம் வந்தும் தூக்கம் வராததால் காலாற நடக்க ஆரம்பித்தேன். லிட்டில் இந்தியா பக்கம் இருக்கு ரெக்ஸ் சினிமாவுக்குள் நுழைந்தேன். "மைனா" போடப்போகின்றார்கள். டிக்கட்டை வாங்கிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தேன். நள்ளிரவு 12 மணிக் காட்சிக்கு என்னுடன் சேர்த்து ஒன்பது பேர் இருக்கும். மைனாவின் செண்டிமெண்ட், சோகக் காட்சிகளில் எல்லாம் கைதட்டி விசில் அடித்து ஆர்ப்பரிப்போடு பார்த்தார்கள் மற்றைய எட்டு ரசிகப்பெருமக்கள். படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டிய பின் திட்டிக்கொட்டே போனார்கள். மைனா என்னைக் கொத்திக் குதறி விட்டது. இந்தப் படத்துக்காடா இவ்வளவு பெரிய பில்ட் அப்பு என்று திகைத்தேன்.

சிங்கைக்கு ஒவ்வொரு முறை வரும் போதும் டாக்சி எடுப்பது பெரும் சவாலாகப்படுகின்றது எனக்கு. இவ்வளவுக்கும் ரோட்டை நிறைக்கும் டாக்சிக்கள் என்றாலும் எல்லாமே பிசி என்று போர்டை மாட்டி வெறும் சீட்டோடு பயணிக்கின்றன. ஒப்பீட்டளவில் இங்கே டாக்சி கட்டணம் மிகக்குறைவு என்பதால் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு எடுக்கின்றார்கள். ஒவ்வொரு முறை டாக்சியில் ஏறும் போதும் "எப்படிப் போனது இன்றைய நாள்" என்று ஒட்டுனரின் வாயைக் கிளறுவேன்.
ஒவ்வொரு டாக்சிக்காரரும் சொல்லி வைத்தாற் போல
"ஒக்க்கே...லாஆஆ" என்பர்கள்.
ஒருமுறை சீன மொழி பேசும் டாக்சிக்காரர் ஒருவர் நான் சிட்னியில் இருந்து வந்ததைப் பேச்சில் பிடித்துக் கொண்டு
"அங்கு நிறவெறி அதிகமாமே" என்று கேட்கவும், நான் சொன்னேன்
"உனக்கும் எனக்கும் இல்லாத நிறவெறியா, இதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லையே?"

முஸ்தபா 24 மணி நேரமும் கடைபரப்பி இருப்பதால் எப்போதுமே தூக்கம் கலைத்த நுகர்வோர் கூடும் இடமாக இருக்கின்றது. அதே நேரம் பகல் நேரமும் துணி அடுக்குகளுக்குள் தூக்கம் போடும் விற்பனைச் சிப்பந்தியும் வழக்கம் போல்.
முஸ்தபாவில் எல்லாமும் நிறைந்திருந்தாலும், ஒரு அங்காடியில் இருப்பது இன்னொரு அங்காடியில் இருக்கும் விற்பனை முகவருக்குத் தெரியாமல் இருக்கிறது. நாலாவது மாடியில் புத்தக விற்பனைக் கூடம் இருக்கின்றது. அம்புலிமாமாவில் இருந்து அம்பானி வரை புத்தகங்கள் உண்டு.
கிழக்குப் பதிப்பக வெளியீடுகள் அதிகமாக வும், விகடன் பிரசுரம், அல்லயன் வெளியீடுகள் அடுத்த நிலையிலும் உண்டு.
"ஆண்"மீகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள நூல்களில் நாடோடித் தென்றல் ஸ்வாமி நித்தியானந்தாவும் இருக்கிறார்.

ஐந்து மாத இடைவெளியில் லிட்டில் இந்தியா பகுதி பலவகையில் மாறியிருப்பதாகப்பட்டது. புதிதாக வட இந்திய உணவகங்கள் வந்திருக்கின்றன. கூடவே சென்னையின் பிரபல "பொன்னுச்சாமி உணவகம்" கூட வந்திருக்கிறது. பொன்னுச்சாமி உணவகம் சென்றும் ஒரு நாள் இரவு உணவு சாப்பிட்டேன். நியாயமான விலை, தரமான சுவையான உணவுப்பரிமாறல். ஈரல் வறுவல் கேட்டதுக்கு மட்டன் வறுவல் கொடுத்து சாரி கேட்டதை மன்னிக்க முடியாது பொன்னுச்சாமி ;-)

டீக்கடைகளில் ஒலிக்கும் 80 களின் இளையராஜா, பூக்கடைகளில் மெல்லிசைக்கும் எம்.எஸ்.வி எத்தனை வருஷங்கள் கடந்தாலும் இதே போல் இருக்க வேண்டுகிறேன்.

சிங்கப்பூரர்களின் கலைத்தாகத்துக்கு ஒரு எல்லையே கிடையாது போல. இராமநாதபுரத்தின் சூப்பர் (பிரியாணி) ஸ்டார் ரித்தீஷ் கலைப்பயணம் செய்ய இருக்கிறாராம்.

ஆசியாவுக்குக் கிடைத்த கடந்த மற்றும் இந்த நூற்றாண்டின் உருப்படியான தலைவர் லீ க்வான் யூவின் From Third World to First : The Singapore Story: 1965-2000 சிட்னியில் தேடிக் கிடைக்காத புத்தகம் கடைகளில் இருந்தாலும் இரண்டு பெரிய வால்யூமே 5 கிலோ கொள்ளுமோ என்று நினைத்து Success stories - Lee Kuan Yew என்ற விவரணச் சித்திர டிவிடியை மட்டும் வாங்கினேன்.


நண்பர் ஒருவர் எலக்ட்ரானிக் சுருதிப்பெட்டி வாங்கிவருமாறு கேட்டார். சிராங்கூன் சாலை எல்லாம் அளந்து இறுதியில் ஒரு சந்துக்குள் இருந்த இசைக்கருவிகள் விற்குமிடத்தில் அதைக் கண்டேன். அந்த விற்பனைக்கூடத்தை நடத்துபவர் உஸ்தாத் ஷராப் கான் என்ற முதியவர் கடைக்குள்ளேயே ஹிந்துஸ்தானி வகுப்பெடுத்துக்கொண்டு இசைக்கருவிகளை விற்கின்றார். சிங்கையில் இருக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் இந்த விஷயம் தெரியாததால், அடுத்த முறை என்னைப் போலவே யாராவது இந்த சமாச்சாரத்தை விசாரித்தால்
Indian Classical Music Centre
26 Clive Street (Junction of Campbell Lane, besides Little India Arcade)
இற்கு அனுப்பி விடுங்கள்.

புலம்பெயர்ந்த சூழலில் தமிழ் தமிழ் என்று பெருங்கோஷம் போடுவதும், தமிழ் சார்ந்த முயற்சிகளும் பெரும்பாலும் அவரவரின் பிள்ளைகள் தமிழ் சார்ந்த பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுப்பொருட்களை வாங்கிக் குவிக்க உதவும் சமாச்சாரமாகவே இருக்கும் ஒரு கள்ளத்தனமான சூழலில் சிங்கப்பூரில் அரசாங்க மட்டத்திலும், நடைமுறை வர்த்தக உலகிலும் தமிழை நேர்மையான ஊடகமாகப் பயன்படுத்துவதைப் பல சந்தர்ப்பங்களில் பார்த்து வியக்கின்றேன், இந்த முறையும் கூட.

வழக்கம் போல சிங்கை தமிழ்முரசை தங்கியிருந்த நாட்களில் வாங்கிப்படித்தேன். உள்ளூர்ச் செய்திகளைத் தவிர தமிழ் சினிமா சார்ந்த செய்திகளுக்கு அவர்களுக்குப் பெரிதும் துணை நிற்பது தமிழ்சினிமா இணையத்தளம் என்பது தெரிகிறது. கரு பழனியப்பன் பதிவர்களை அழைத்து ஸ்பெஷல் காட்சி போட்டதைச் சொல்லும் அதே வேளை முன்று வாரங்களுக்கு முன் வந்து ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டு ஓடிய சுந்தர்.சி இன் "வாடா" படம் இனிமேல் தான் வர இருக்கின்றது என்ற ஷீட்டிங் செய்தியைப் போட்டது உள்குத்தா என்ன? அடுத்த முறை சிங்கை தமிழ்முரசு ஆசிரியர் தமிழ் சினிமா இணையத்தை ரிப்ரெஷ் செய்து பார்த்தால் புது செய்திகளுக்கு உதவும்.

தமிழ் முரசு பத்திரிகையால் ஒரு மன நிறைவான நிகழ்வும் இடம்பெற்றது எனக்கு. தமிழகத்தின் பிரபல ஓவியர் மணியன் செல்வன் அவருடைய தந்தை மணியனின் ஓவியங்கள், மற்றும் இவரின் ஓவியங்களோடு ஒரு கண்காட்சி நடத்த இருப்பதாகச் செய்தி கண்ணில்பட்டது. விமான நிலையம் போக ஒன்றரை மணி நேரமே இருக்கும் தறுவாயில் மூன்று ரெயில்கள் பிடித்து திக்குத் திணறு ஐந்து ஆறு பேரை வழி கேட்டு ஒருவாறு கிளார்க் கீ பகுதியில் நடந்த அந்தக் கண்காட்சிக்குப் போனேன். அங்கே இந்தியாவின் பலவகை உணவுகளின் விற்பனை, நேரடி ஹிந்துஸ்தானி இசைக்கச்சேரி இவற்றோடு மணியம் செல்வனின் ஓவியக்கண்காட்சிக் கூடமும் கண்ணிற்பட்டது. ஓவியக்கூடத்துக்குள் நுழைகிறேன். நான் நினைத்தது போலவே மணியன் செல்வன் அங்கே இருக்கிறார்.


மும்முரமாக அன்று மாலை நடக்க இருக்கும் நிகழ்வுக்காக ஓவியம் ஒன்றைத் தீட்டிக் கொண்டிருக்கும் அவரை வலியப் போய் என்னை அறிமுகப்படுத்தினேன். சிட்னியில் இருந்து வந்ததை அறிந்து பெருமகிழ்வோடு உரையாடித் தன் தொடர்பிலக்கம், மின்னஞ்சலையும் தருகின்றார். உங்களை என் வானொலிப்பேட்டிக்காக நேர்காணல் செய்ய வேண்டும் என்ற என் அன்பு வேண்டுகோளை ஏற்று "தாராளமா பண்ணலாம்" என்கிறார்.
ஓவியக்கண்காட்சியை வலம் வருகின்றேன். பொன்னியின் செல்வனின் பாத்திரங்கள் மணியம் அவர்களின் தூரிகையில் உயிர்பெற்று ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன, மணியம் செல்வனின் முக்கியமான படைப்புக்களும் அணி செய்கின்றன.


சாங்கி விமான நிலையம் வந்தடைகின்றேன். நான் போன விமான நிலையங்களிலேயே பயணிகளை ஏதோ ஒருவகையில் குஷிப்படுத்தி ஜாலம் காட்டுவதில் சாங்கி சிங்கி தான்.
அன்று இந்தியப் பாரம்பரியக் கண்காட்சி Terminal 2 இல் நடப்பதாகச் சொன்னார்கள். இந்தியக் கண்காட்சி அரங்கத்தில் கிளி ஜோசியக்காரரும் இருக்கிறார். கிளி ஜோசியம் பார்க்க ஆர்வப்பட்டேன்.
கிளி ஒரு துண்டை எடுத்துப் போட்டது.
"எதிர்பாராத பல நன்மைகள் வர இருக்கின்றது" என்று சொன்ன கிளி ஜோசியத்தை ஹாஸ்யமாக எடுத்துக் கொண்டு நகர்ந்தேன். ஐயோடா நான் பயணப்பட இருக்கும் குவண்டாஸ் விமானம் வழக்கம் போல் ஒரு மணி நேரம் தாமதமாம்.