Social Icons

Pages

Friday, February 13, 2009

கம்போடிய போர்த்தளபாடக் காட்சியகம் (Civil War Museum)

நட்பு, பகைமை, குரோதம், நம்பிக்கைத் துரோகம், ஆட்சிக் கவிழ்ப்பு, நில ஆக்கிரமிப்பு, அரச பயங்கரவாதம் இவையெல்லாம் விளைந்த ஏனைய யுத்தபூமிகளுக்கு கம்போடியா எந்த வகையிலும் சளைத்தது இல்லை. ஒரு காலத்தில் இரத்தம் தோய்ந்த இம்மண்ணில் எழுதியதற்கான வினையை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதல பாதாளத்தில் போன கம்போடிய நாணத்தின் வீழ்ச்சியும் அதனால் எல்லாப் பொருட்களையும் குத்துமதிப்பாக ஒரு அமெரிக்க டொலரில் இருந்து பாவிக்கும் வழக்கமும், வாழ்க்கைத் தர வீழ்ச்சியும், கை கால் முடமான சந்ததியும், அப்பா, அம்மா, உற்றார் உறவினர்கள் யாரென்றே தெரியாத பரம்பரையுமாக போரின் வடுக்களை இன்னமும் சுமந்து கொண்டு தான் இருக்கின்றது இந்த கம்போடிய சமூகம். பதவி வெறியும், என்னை விட்டால் யாரிங்கே உண்டு என்று எகத்தாளம் இட்ட ஆட்சியாளரும் அவர் தம் அடிப்பொடிகளும் இன்று காணாமல் போனோர் பட்டியலிலும், சிறைக்கதவுகளின் பின்னாலும். கொடுமையான போர் என்ற அரக்கன் ஓய்ந்தாலும் வினை விதைத்தோர் மட்டுமன்றி வினையற்றிருப்போரும் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்குக் கண் முன்னே சாட்சியமாக நிற்கின்றது இப்போது தான் ஓரளவு அமைதிச் சுவாசத்தை ஏற்றி கொண்டிருக்கும் கம்போடிய மண்.

கி.பி முதலாம் நூற்றாண்டில் Funan பேரரசோடு ஆரம்பித்த கம்போடிய மன்னராட்சி கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் ஜெயவர்மனின் கைமர் பேரரசுக் காலத்துக்கு மாறி கம்போடியாவின் ஆளுகையை வந்தேறி வென்றார்களிடம் கைமாற்றுகின்றது, இந்து மதத்தின் பரம்பலையும் கோயில்கள் மடாலயங்கள் மூலம் விதைக்கின்றது. அதனைத் தொடர்ந்து வந்த கி.பி 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் தேரவாத பெளத்தத்தின் ஆளுகை அண்டை நாடான தாய்லாந்து மன்னர்களின் கம்போடியா மீதான படையெடுப்பால் வீரியம் பெற்று வளர்கின்றது. அத்தோடு கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரை இரு பக்கமும் இருந்த வியட்னாம், தாய்லாந்து நாடுகளின் படையெடுப்பும், அதன் விளைவாக ஏற்பட்ட ஸ்திரத்தன்மையும் கம்போடியாவின் கறை படிந்த நாட்கள். குறிப்பாக 1890 ஆண்டு இந்த நாடு பெரும் பேரவலத்தைப் போர் மூலம் சந்தித்தது. ஒரு காலத்தில் வீரம் விளைந்த மண்ணாக விளங்கிய கம்போடியப் பேரரசு பின்னாளில் வீரியம் குறைந்து ஆட்டம் காணத் தொடங்கியது. பக்கத்து நாடுகளும் ஆளுக்காள் இந்த நாட்டைக் கூறு போட முனைந்தன. எதிரிகளுக்கு செக் வைக்க கம்போடிய மன்னன் Norodom சரணாகதி அடைந்த பிரான்ஸ் நாடு காவலன் என்ற பேரில் கள்ளத்தனம் புரிந்து தொடர்ந்து 90 ஆண்டுகள் கம்போடிய மண்ணில் இருந்ததோடு நாட்டின் வளங்களையும் சூறையாடிக் கடல் கடந்து கொண்டு சேர்த்தது.

1953 ஆம் ஆண்டில் Sihanouk என்ற மன்னனின் காலத்தில் கம்போடியா பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது. கூடவே இம்மன்னன் People's Socialist Community (Sangkum Reastr Niyum) என்ற அரசியல் கட்சியையும் ஸ்தாபித்து 1955 இல் குடியாட்சி மூலம் வெற்றி பெற்றான் பின்னாளில் அரசுத் தலைவர் ஆனான். 1960 களில் நிலவிய வியட்னாமிய யுத்தத்தின் போது சோவியத் மற்றும் அமெரிக்க சார்பற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் பின்னர் அமெரிக்காவுடனான இராஜ தந்திர உறவினை வெட்டி விட்டு வியட்னாமிய கம்யூனிஸ்ட் போராளிகளுக்குத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டினான். வியட்னாமியப் போராளிகளின் பாசறைகள் கம்போடியா மண்ணில் பரவின. ஆனால் அன்றைய காலகட்டத்தில் அதல பாதாளத்தில் போன கம்போடியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப எண்ணி மீண்டும் இவன் அமெரிக்காவுடன் கை குலுக்கினான். அத்தோடு வியட்னாமியப் போராளிகளின் பாசறைகளை அமெரிக்க விமானங்களுக்கு இரையாக்கித் தன் எட்டப்பன் நிலைப்பாட்டை நிலை நிறுத்தினான்.

1970 இல் Sihanouk வெளிநாட்டில் தங்கியிருந்த தருணம் பிரதமராக இருந்த General Lon Nol இவனைக் கவிழ்த்து விட்டு ஆட்சிப் பீடம் ஏறக் கிடைத்த வாய்ப்பைப் சட்டெனப் பற்றிக் கொண்டான். Sihanouk சீனாவில் அடைக்கலம் புகுந்து அங்கிருந்து கொண்டே தன் ஆட்சிக்கு ஆப்பு வைத்த General Lon Nol இற்குப் பாடம் படிப்பிக்கும் வகையில் கைமருப் படையணி (Khmer Rouge) என்ற ஒரு விஷப்பாம்பிற்குப் பால் வார்த்தான். Saloth Sar என்ற கைமருப் படையணித் தலைவன், இவன் தான் பொல் பொட் என்று அழைக்கப்பட்ட கொடுங்கோலன் கையில் கம்போடியாவின் ஆட்சியதிகாரம் மாறுகின்றது. குழிக்குள் விழுந்த Sihanouk இற்கும் குழி பறித்த General Lon Nol இற்கும் இல்லாமல் பொல் பொட்டின் கையில் குரங்கின் கைப் பூமாலையாகப் போய்ச் சேர்ந்த கம்போடிய மண் தொடர்ந்து Democratic Kampochea (DK)என்ற பொல் பொட்டும் , படிப்பறிவற்ற கிராமப்புறத்து இளைஞர் படையணியோடும் மானபங்கப்படுத்தப்படுகின்றது.

அறிவுஜீவிகள், சமயப்பற்றுள்ளோர் எல்லோருமே பொல் பொட்டின் ஆட்சியில் வேண்டப் பொருட்களாகின்றன. மதச் சுதந்திரத்திற்கும் தடை விதிக்கப்படுகின்றது. சனத்தொகையில் ஏறக்குறைய 26% மான கம்போடியர்களை அதாவது 750,000 இலிருந்து 1.7 மில்லியன் மக்களை அதாவது குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பொல்பொட் பல்வேறு காரணங்களால் கொடூரமாக இவன் கொன்று குவித்தான். இவனின் கொலைக்களம் (Killing Field) இன்றும் தலைநகரான Phnom Penh இல் மண்டையோடுகள் கொண்ட காட்சியகமாக விளங்குகின்றது. பல கம்போடியாவில் ஒரு அனாதைச் சந்ததியை உருவாக்கி வைத்து விட்ட கொடுங்கோலன் இவன்.

அத்தோடு சும்மாயிருக்கவில்லை. பக்கத்து நாடான வியட்னாமோடு போர் தொடுத்துச் சீண்டினான். சோவியத் யூனியனின் பலத்தோடு விளங்கிய வியட்னம் இதுதான் தருணம் என்று தன் பெரும்படையணியோடு 1975 இல் வியட்னாம் தொடுத்த போரினால் பொல்பொட்டின் படையணி அலறியடித்துக் கொண்டு கம்போடிய - தாய்லாந்து எல்லை வரை ஓடியது. அப்போது வியட்னாமின் எதிரியாக விளங்கிய தாய்லாந்து பொல்பொட்டிட்டிற்கும், அவன் கூட்டாளிகளுக்கும் ஆதரவுக் கரம் நீட்டியது. காடுகளில் மறைந்திருந்த பொல் பொட் 1988 இல் சுற்றி வளைப்பின் போது கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கின்றது. இல்லையில்லை அவன் இன்னும் உயிரோடு தான் எங்கோ இருக்கின்றான் என்றும் இன்னமும் நம்பும் கம்போடியர் கூட்டமும் இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் கம்போடியாவிற்கு வெளியே வியட்னாமை எதிர்த்து உருவாக்கிய Democratic Kampochea (DK)என்ற கைமரு ஆதரவு அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்தனர். பொல் பொட்டில் கையாட்களில் ஒருவராக இருந்த Hun Sen என்பவரே தான் ஜனநாயக வழிக்குத் திரும்பி விட்டோம் என்ற பெயரோடு இந்தக் கட்சியை கொண்டு நடாத்துகின்றார்.

1989 வரை வியட்னாமின் ஆளுகையோடு விளங்கிய கம்போடியாவின் விடுதலை சோவியத் யூனியனின் சிதறலோடு கைவிடப்பட்டு Hun Sen ஐ பிரதமராகக் கொண்ட ஆட்சியோடு இப்போது பயணிக்கின்றது. கொடுமை என்னவென்றால் இந்த நாட்டின் மன்னர் Norodom Sihanouk இனால் வியட்னாமுக்கு எதிராக வளர்த்து விடப்பட்ட கைமரு இயக்கம் இன்று ஜனநாயக வழியில் வந்ததாகச் சொல்லி மன்னர் மகன் Norodom Ranariddh ஐக் கூட ஆட்சியேற விடாமல் செய்தது பின்னாள் வரலாறு.

தான் இப்போது பொல்பொட்டின் ஆள் இல்லை என்று Hun Sen வெளிப்படையாகச் சொன்னாலும், பொல்பொட்டின் படையணியில் இருந்தவர்களுக்கு ராஜமரியாதையோடு கெளரவங்களும் பதவிகளும் வழங்கப்பட்டு இவரால் இன்று வரை வழிநடத்தப்படுவது கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். முன்னர் கைமருப் போராளிகளாக இருந்தவர்கள் இரத்தினக் கல் விளையும் பிரதேசமொன்றில் குடியமர்த்தப்பட்டு இன்று கெளரவமாக வாழ்கின்றார்கள் என்றார் என் வழிகாட்டி. ஆக, பொல் பொட்டால் உருவாக்கப்பட்ட அமைப்பு இன்று அவன் இல்லாவிட்டாலும் இன்னொரு வடிவில் ஆட்சி செலுத்துகின்றது.

1975 இல் நடந்த வியட்னாமிய கம்போடிய யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட இராணுவத் தளபாடங்களை சியாம் ரீப்பில் Civil War Museum என்ற பெயரில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள். ஒரு நாள் எனது வாகனச் சாரதி இந்த இடத்துக்குப் போவோம் வாருங்கள் என்றழைத்து அங்கே கொண்டு போய்க் காட்டினார். வரலாறுகள் எல்லா இடங்களிலும் ஒரே விதமான விதைகளைத் தான் போட்டு விட்டுப் போயிருக்கின்றன. வெளிக்கிளர்ந்த பெருமூச்சுடன் ஒவ்வொரு ஆயுதத் தளபாடங்களைப் பார்த்து விட்டு வெளியேறினேன்.
























கம்போடிய வரலாற்றுக் குறிப்புக்கள் உசாத்துணை:
Asianinfo.org
wikipedia.org
Civil War Museum படங்கள்: என் கமரா வழியே எடுத்தவை
ஆட்சியாளர் படங்கள்: பல்வேறு இணையத்தளங்கள்

Thursday, February 12, 2009

கம்போடியாவில் கிட்டிய லிங்காபிஷேகம்

நான் முன்னர் உலாத்திய Beng Melea ஆலயத்தைத் தொடர்ந்து அதே நாள் பயணத்தில் பார்க்க வேண்டிய தல யாத்திரையாக இருப்பது Koh Ker என்ற ஆலயங்களின் தொகுதி. இந்த Koh Ker ஆலயத்தொகுதிக்கு வருவதற்கு Siem Reap நகரில் இருந்து Damdek என்ற பிரதேசத்துக்கான கிழக்கு வழித்தடம் உபயோகப்படுக்கின்றது. இங்கே வருவதற்கான பாதைகள் இன்னமும் சீரமைப்பில் இருப்பதனால் கொஞ்சம் மேலதிக எச்சரிக்கையுடனும், முன் கூட்டிய நேர ஒழுங்கிலும் வருவது நல்லது. எனவே ஒரு நாட் பயணமாக இந்தத் தல யாத்திரையை வைத்துக் கொள்ளலாம்.

Koh Ker என்ற கோயிற் தொகுதி சியாம் ரீப் நகரில் இருந்து வடகிழக்கு நோக்கிய பிரதேசத்தில் இருக்கின்றது. கி.பி 928 ஆம் ஆண்டில் இருந்து கி.பி 944 ஆம் ஆண்டு வரையான கைமர் பேரரசின் தனித்துவமான ஆட்சிக் காலத்தின் எச்சங்களாக இந்த ஆலயங்கள் விளங்கி நிற்கின்றன கி.பி 928 இல் நான்காம் ஜெயவர்மன் அங்கோர் வாட்டில் இலிருந்து 100 கிலோ மீட்டர் தள்ளி Koh Ker என்ற இடத்தில் போட்டி இராசதானியாக அமைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. இந்த அரசன் மிகுந்த செல்வாக்கும் செல்வமும் கொழித்த இராச்சியத்தைக் கொண்டு நடாத்தியதால் இந்த Koh Ker நகரத்தைச் சூழவும் பரந்து விரிந்த பரப்பில் இந்து ஆலயங்களையும், மடாலயங்களையும் Rahal எனப்படும் பாரிய நீர்த்தேக்கத்தையும் அமைத்திருக்கின்றான்.


மேலே படத்தில் Koh Ker ஆலயத் தொகுதிகளில் ஒன்று


இந்த நான்காம் ஜெயவர்மன் கி.பி 941 ஆம் ஆண்டில் இறக்கும் வரை 20 ஆண்டுகள் Koh Ker ஐத் தலைநகராகக் கொண்ட ஆட்சியை நடாத்தியிருக்கின்றான். அவனைத் தொடர்ந்து வந்த அவன் மகன் இரண்டாம் ஹாஷாவர்மன் தொடர்ந்து இதே நகரினை மூன்றாண்டுகள் தலைநகராக வைத்து ஆட்சி நடாத்தி விட்டுப் பின்னர் அங்கோர் நகரத்துக்கு தனது தலைநகரை மாற்றிக் கொண்டான். Koh Ker இன் ஞாபகச் சின்னங்களாக விளங்கும் முக்கிய ஆலயங்கள் நீர்தேக்கத்தை அண்டிய பாதை வழியே தொடர்ந்து அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது Prasad Thom எனப்படும் ஆலயம் 7 அடுக்குகள் கொண்ட பிரமிட் வடிவினதான ஆலயமே இந்த Prasad Thom ஆகும்.

Prasad Thom

மேலே படங்கள் Prasad Thom ஆலயம்

முதலில் நாங்கள் சென்றது Prasad Thom இற்குத் தான். முப்பது மீட்டர் நீளமான நீண்ட பெரிய ஏழு அடுக்குகளோடு பிரமிட் வடிவினதாக இருந்தது இவ்வாலயம். மேலே பார்த்தால் கழுத்தைச் சுழுக்கி விடும் போல இருந்தது. நாங்கள் போன கெட்ட நேரம் இந்த ஆலயத்தின் திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மேல் உச்சிக்குப் போக முடியவில்லை.
ஆவென்று இந்தக் கோயிலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிக்குவும், அவரைச் சூழச் சிலருமாக ஏதோ பேசிக் கொண்டே கடந்தார்கள். சுற்றுலா வழிகாட்டி என்னைச் சுரண்டிச் சொன்னார், அந்தப் பிக்குவோடு போகின்றவர்களில் ஒருவர் முன்னர் பொல் பொட்டின் படையில் இருந்தவராம்,வியட்னாமுக்கும் பொல் பொட்டின் படைகளுக்கும் சண்டை நடந்த போது இந்தக் கோயிலின் மேல் உச்சியில் தாங்கள் மறைந்திருந்ததாக அவர் பிக்குவுக்குச் சொல்கிறார் என்று சொல்லிச் சிரித்தார். முன்னர் நாங்கள் போன Beng Melea போன்ற ஆலயங்களின் பிரமாண்டமும், உறுதியான கட்டிட வேலைப்பாடுகளும், மக்களால் பல ஆண்டுகளாகக் கைவிடப்பட்ட நிலையில் புதிர் மண்டிப் போய் பொல் பொட்டின் படைகளின் மறைவிடமாகப் பயன்பட்டிருக்கின்றன. பின்னர் யுத்தம் ஓய்ந்து பொல் பொட்டின் ஆட்சி களையெடுக்கப்பட்டதும் அவனோடு பணியாற்றிய படையணிகள் இயல்பு வாழ்க்கைக்கு மாறி விட்டனர். 2002 ஆம் ஆண்டு வரை சன நடமாட்டமோ, புழக்கமோ இல்லாந்த இப்பிரதேசம் அவர்களால் தான் இந்த ஆலயங்கள் பலவும் உலகுக்குக் கண்டு பிடிக்கப்பட்டு சொல்லப்பட்டன. இன்று சுற்றுலா வருவாயை இந்த ஆலயங்கள் அள்ளிக் கொடுக்க இந்த பொல் பொட்டின் ஆட்கள் ஒருவகையில் காரணமாகி விட்டார்கள்.

மேலே படங்கள் வெள்ளை யானைச் சமாதி

Prasad Thom கோயிலின் பின்புறத்துக்கு அழைத்துச் சென்றார் வழிகாட்டி அங்கே ஒரு மலை போன்ற திட்டியும், உச்சியில் ஏதோ சிறு பீடமும் தெரிந்தது. அரசனின் பிரியத்துக்குரிய வெள்ளை யானை ஒன்று இறந்த கவலையில் அந்த யானையை இவ்விடத்தில் சமாதியாக்கி விட்டு நினைவிடமாக ஆக்கிவிட்டான். எதுவிதமான வழித்தடங்களும் இல்லாமல் அகப்படும் சிறு சிறு செடிகளைப் பற்றியவாறே இந்தச் சமாதியின் மேல் உச்சியை அடைவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. ஆனாலும் தன் யானை மேற் கொண்ட பிரியத்தின் வெளிப்பாடாக அமைந்த இந்த இந்தச் செயலை நினைத்து வியந்தேன் அப்போது.

அங்கிருந்து நானும் வழிகாட்டியும் அகன்று எமது வாகனச் சாரதியைத் தேடினோம். எங்கே போனார் இவர் என்று தேடினால் அங்கே கோயில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பெண்களிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார் இவர். கம்போடியாவின் எல்லாக் கோயில்களுக்குமே சீருடை தரித்த காவலாளிகள் ஆணோ பெண்ணோ இருக்கின்றார்கள். நமது சாரதி பெண் காவலர்களை விடமாட்டார் போல என்று என்று கிண்டலடித்தார் வழிகாட்டி. சாரதி கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டார்.

வாகனச் சாரதி கடலை போட்ட பெண் காவலர்கள் இவர்கள் தான் ;)

மேலே படத்தில் கோயிலைக் காக்கும் காவலர்கள்

நாம் இருந்த அந்தப் பிரதேசம் கம்போடியாவுக்கும் தாய்லாந்து நாட்டுக்கும் இடையேயான எல்லைக் கிராமம். இங்கிருந்து வெறும் 70 கிலோ மீட்டரில் தாய்லாந்தை அடைந்து விடலாம். தாய்லாந்து போவது சிரமமான காரியமா என்று கேட்டேன் நம்மவரிடம். தாய்லாந்து எல்லைக் காவலர்களுக்குச் சம்திங் வெட்டினால் எல்லாம் சுலபம் என்று சொல்லிச் சிரித்தார் வழிகாட்டி.


மேலே படங்கள் கண்ணி வெடிப்பிராந்தியம்


நாம் வந்திருந்த இந்தப் பிரதேசம் எங்கும் க்டந்த வியட்னாமிய படையெடுப்பின் போது விதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாத பல காணிகள் இருக்கின்றன. அதை உறுதி செய்யுமாற் போல கண்ணிவெடிகள கவனம் என்ற எச்சரிக்கைப் பலகைகள் முளைத்திருக்கின்றன.

Koh Ker ஆலயங்கள் விஷ்ணுவுக்கும் சிவனுக்குமாக அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வூர் மக்கள் சித்திரையில் வரும் தமது புதுவருஷக் கொண்டாட்டங்களை கொண்டாடுவதற்கு ஏற்பாக அவர்களுக்கு அண்மித்த பகுதியிலேயே இவ்வாலயங்களை நான்காம் ஜெயவர்மன் அமைத்துப் புண்ணியம் தேடிக் கொண்டான் என்று சொல்லப்படுகின்றது.

ஆலயமொன்றில் பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுச் சாசனங்கள்

Prasat Balang மற்றும் Prasat Thneng ஆகிய சிறு சிறு ஆலயங்களில் இன்னமும் பிரமாண்டமான சிவலிங்க விக்கிரகங்கள் இருக்கின்றன. இவ்வகையான பன்னிரண்டு ஆலயங்கள் இந்தப் பகுதியில் மட்டுமே எழுப்பப்பட்டிருப்பது ஆச்சரியத்தை உண்டு பண்ணுகின்றது. Prasat Balang இருக்கும் சிவலிங்க விக்கிரகத்தைப் பார்த்தவாறே உறைந்து நின்ற என்னைத் தட்டி கையில் இருந்த உடைக்காத தண்ணீர்ப் போத்தலைக் கொடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யுமாறு சொன்னர் என் வழிகாட்டி. நானும் ஆவல் மேலிட தண்ணீர்ப் போத்தலை வாங்கி அந்த லிங்கத்தின் உச்சியில் எல்லாப் பக்கமும் நீரைச் சிதற விட்டேன். உள்ளத்தில் ஆண்டவனை ஒருகணம் நினைத்துப் பிரார்த்தித்தேன். தூரத்தில் நின்ற வழிகாட்டி கைகள் இரண்டையும் கூப்பியவாறே கண்களை மூடிப் பிரார்த்தித்துக் கொண்டார்.

மேலே படத்தில் Prasat Chreng என்ற ஆலயம்
மேலே படத்தில் Prasat Pram ஆலயம்
மேலே படத்தில் Prasat Thneng ஆலயம்
மேலே படத்தில் முற்றாக அழிந்த ஆலயம் ஒன்று புதருக்குள்

இந்த நாள் பயணத்தோடு என்னோடு இதுவரை நாள் பயணித்த சுற்றுலா வழிகாட்டி Sib Chong விடைபெறும் நேரம் வந்தது. எனது கம்போடியப் பயணத்தில் நான் திட்டமிட்டதற்கு மேலாக பலவகையிலும் வழிகாட்டி என்ற வரையறைகளைக் கடந்து கிளிப்பிள்ளை போல எனக்கு வரலாற்றுப் பாடம் சொல்லித்தந்த அவரைப் புகழ்ந்து நன்றி சொல்லி அவரின் மின்னஞ்சலையும் பெற்று வழியனுப்பி வைத்தேன். அடுத்த நாள் நானும் கார்ச்சாரதியுமாக மட்டுமே உலாத்தலைத் தொடரவேண்டும்.



உசாத்துணை:
சுற்றுலா வழிகாட்டி
கம்போடிய சுற்றுலாக் கையேடு

Monday, February 09, 2009

கம்போடியாவில் இந்திய உணவைத் தேடிய அபலை ;)

எல்லாம் சரியாகத்தான் நடந்தது, நடுவில் ஏதோ ஒன்று வந்து எல்லாவற்றையும் குழப்பி விட்டது என்பது போலத் தான் சாப்பாட்டு விஷயத்தில் எனக்கும் நடந்தது. நான் தங்கியிருந்த அங்கோரியானா ஹோட்டலில் பெரும்பாலும் எல்லா ஹோட்டல்கள் போல காலை உணவையும் சேர்த்தே கட்டணம் அறைவிட்டிருந்தார்கள் என்பதால் முதல் நாட் காலை ஆறு சீக்கிரமாகவே உணவாராய்ச்சி செய்ய ஹோட்டலின் உணவு பரிமாறும் இடம் போனேன்.

அங்கோரியானா ஹோட்டலின் உணவு பரிமாறும் இடம்

எங்கள் ஊரில் வரும் நாட்டுக் கோழி முட்டைகளின் சுவையே தனி, அதே வகை முட்டைகளை பல வருஷங்கள் கழித்து அங்கே கண்டதும் காதல் மேலிட்டது. பக்கத்தில் பாண் (பிரெட்) துண்டங்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் தட்டில் போட்டு, முட்டைகளை அங்கே நின்ற சமையற்காரரிடம் உடன் பொரிக்க வைத்து சாப்பிடுவது இதமாகத் தான் இருந்தது. கம்போடியப் பாணும் மெதுமெதுப்பாகவும் பதமாகவும் இருந்தது. அங்கே பரிமாறிய காலை உணவில் பாண் துண்டங்கள், முட்டை தவிர்த்து, சீரியலும், பழவகைகளும், தேனீரும் மட்டுமே இருந்தன. எனவே அதிகம் ஆசையும் வைக்க முடியாமல் கிடைத்ததை வைத்து வயிற்றை நிரப்பிக் கொண்டேன்.

அந்த நாள் காலை முழுவதும் அங்கோர் வாட் எல்லாம் ஏறி இறங்கிக் களைப்பாகி எங்காவது வயிற்றை நிரப்பலாம் என்று நானும், சுற்றுலா வழிகாட்டியும், ருக் ருக் வண்டிக்காரரும் ஒதுங்கியது ஒரு பாரம்பரிய கம்போடிய உணவகத்தில். உணவுப்பட்டியலில் புரியாத உணவை ஓடர் செய்து ரிஸ்க் எடுக்காமல் பச்சை மிளகாய் கலந்த கோழிக்கறியையும், வெள்ளை அரிசிச் சோற்றையும் ஓடர் செய்தேன். என்னோடு வந்த வழிகாட்டியும் ஏதோ ஒன்றை தன் மொழியில் கடைச்சிப்பந்திக்குச் சொல்லி வைத்தார். உணவும் வந்தது. பார்க்க அம்சமாகத்தான் இருந்தது கோழிக்கறி. எனது வழிகாட்டியின் உணவுத்தட்டைப் பார்த்தேன் வாழைப்பூவியில் பச்சடி செய்தது போல ஏதோ ஒரு கறியும், அரிசிச்சாதமும் அவர் தட்டில். பேசாமலேயே இருந்திருக்கலாம், என் ஆர்வக்கோளாறு அது என்னவென்று கேட்டுத் தொலைத்து விட்டேன். அவரும் மிகவும் இயல்பாக "இது! கரப்பான் பூச்சியில் செய்த துவையல்" என்று விட்டு அதைக் குழைத்தவாறே சுவைக்க ஆரம்பித்தார். எனக்கு சப்த நாடியும் ஒருகணம் அடங்கிப் போனது போல பிரமை. ஆடு, கோழி , மீன்வகையறாக்கள் என்று பறப்பது, நடப்பது, பாய்வது என்று ஒன்றும் விடாமல் சாப்பிடும் என்னையே உலுக்கிப் போட்டது நான் கண்ட காட்சி. என் உடம்பெல்லாம் ஓராயிரம் கரப்பான் பூச்சிகள் நெளிவது போல ஒரு பிரமை. இராணுவ முகாமில் அகப்பட்ட கைதியைப் போல சோற்றையும், கோழிக்கறியையும் அவுக் அவுக் என்று சாப்பிட்டேன் இல்லையில்லை விழுங்கினேன். அப்போதே மனதில் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டேன். இனிமேல் பாரம்பரிய கம்போடிய உணவகத்தின் வாசற்படியே மிதிப்பதில்லை என்று.

கம்போடியர்களைப் பொறுத்தவரை கரப்பான் பூச்சி தவிர, தவளை, நத்தை போன்றவற்றின் அருமை பெருமையையும் தெரிந்து தம் பாரம்பரிய உணவாக மாற்றிக்கொண்டவர்கள். இதுக்கு மேல் என்ன சொல்ல ;)

எனவே கம்போடியாவிற்கு வருபவர்கள் முன் கூட்டிய பாதுகாப்பு வேலைகளோடு களம் இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சைவ உணவு மட்டும் உண்போர் மேற்கத்தேய அல்லது இந்திய உணவகங்களில் தயார் செய்தவற்றை வாங்கிப் பத்திரப்படுத்தி அந்தந்த நாள் உண்டு களிக்கலாம்.

மேலே படத்தில் மஹாராஜா உணவகம்

மதியம் திருப்தியில்லாத சாப்பாடு சாப்பிட்ட கொடுமை மாலையில் வயிற்றில் கொடும்பசி என்னும் துன்பத்தைக் கொடுத்தது. சுற்றுலாக் கையேட்டினை விரித்து ஏதாவது இந்திய உணவகங்கள் அண்மித்ததாக இருக்கின்றதா என்று தேடினால் வந்தது மகாராஜா என்னும் இந்திய உணவகம். ருக் ருக் வண்டியொன்தைப் பிடித்து அந்த உணவகம் சென்றேன். உணவுப் பட்டியலில் வட இந்திய உணவுக்குவியலில் போனாப் போகுது என்று ஒரு சில தென்னிந்திய உணவும் இருந்தன. மகாராஜா ஸ்பெஷல் புரியாணி என்ற சொல்லில் என் கண் பதிந்து வாய் வழியே ஓடர் செய்தது. ஹோட்டல் உரிமையாளர் பாகிஸ்தானியாம் ஐந்து வருஷத்துக்கு மேலாக இதை நடத்துகிறாராம். அரை மணிக்கு மேல் சமையல் அறையில் ஏதோ போராட்டம் நடந்து ஒரு வழியாக வந்த போது என் பசியும் பறந்து விட்டது. இரண்டு கரண்டியை மட்டும் வாயில் வைத்து விட்டு மீதியை பார்சல் செய்து ஹோட்டலில் வந்து சாப்பிட ஆரம்பித்தால் புரியாணியில் இருப்பது அரிசியா? உப்பா? என்று சாலமன் பாப்பையாவை அழைத்துப் பட்டிமன்றம் வைக்கச் சொல்லலாம் போலிருந்தது. முன்னர் பசியோடு சாப்பிட்டதால் சுவை தெரியவில்லை.

மேலே படத்தில் தாஜ் இந்தியா உணவகம்

அடுத்த நாள் மாலைக்கு மஹாராஜா வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு நான் போன இடம் தாஜ் இந்தியா என்ற உணவகம். அங்கே போய் இருக்கையில் இருந்தும் பதினைந்து நிமிடத்துக்கு மேல் மயான அமைதி. வெளியே இருந்து ஒரு இந்தியர் போல தோற்றமளித்தவர் ஆங்கிலமும் கம்போடிய மொழியும் கலந்து சமையலறையில் இருப்பவரைக் கூவி அழைத்தார். அவர் தான் உரிமையாளர், பங்களாதேஷ் நாட்டவராம். (என்ன கொடும சார் இந்திய உணவகங்களில் ஒன்று பாகிஸ்தானி மற்றது பங்களாதேஷியா?)
உள்ளேயிருந்து அலறியடித்துக் கொண்டே ஓடிவந்தாள் ஒரு கம்போடிய மங்கை. அரிசிச் சாதமும், சிக்கன் டிக்காவும் ஓடர் செய்தேன். ஓடர் செய்து சாப்பிட்டு முடியும் வரைக்கும் தன் கடையில் வேலை செய்யும் அந்த கம்போடிய மாதை திட்டித் தீர்த்துக் கொண்டேயிருந்தான் அந்த பங்களாதேஷி. எனக்கு ஆச்சரியமாக இருந்தது, இந்நேரம் பொல்பொட்டில் ஆட்சியென்றால் இவனைக் கூறு போட்டு சிக்கன் டிக்காவாக அவள் மாற்றியிருப்பாள். இங்கும் என் சாப்பாடும் திருப்திப்படவில்லை, சூழ்நிலையும் சரிப்படவில்லை.
மேலே படத்தில் காமசூத்ரா உணவகம்

சற்றுத் தள்ளி காமசூத்ரா என்னும் இந்திய உணவகம் தென்பட்டது. அது இந்திய உணவகம் என்பதை விட மேற்கத்தேய நடனங்களும், மதுவும் கலக்கும் இடம். எனவே காமசூத்ராவுக்கும் "கா". காமசூத்ரா உணவகத்தை நடத்துவது மூன்றாம் தலைமுறை இந்தியராம் யாரோ சொன்னார்கள்.



மேலே படத்தில் அங்கோரியானா ஹோட்டலுக்குப் பக்கத்தில் இருந்த Coffee Shop

அடுத்த நாட் காலையும் பயணம், ஊர் சுற்றும் இடங்களில் எல்லாம் வெளிநாட்டு உணவகங்கள் மருந்துக்கும் இல்லை. எனவே என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே நான் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கமாக இருந்த நடைபாதையில் நடக்கத் தொடங்கினேன். அடுத்த கட்டிடத்திலேயே Coffee Shop ஒன்று பல்லிளித்து வரவேற்றது.
உள்ளே போனால் அரை மணி நேரத்துக்கு ஒரு அமெரிக்க டொலர் என்று இன்ரநெட் வசதியுடன் மேற்கத்தேய காபி ஷாப் அது. உள்ளே இருந்த அலங்காரங்களும் பக்காவாக இருந்தன. அங்குள்ள சிப்பந்தி ஒரு பதினெட்டு வயசு மதிக்கத்தக்க பையன், பாவாடை போன்ற ஒரு வஸ்தை ஆடையாகப் போட்டிருந்தான்,தலையை கீழே சாய்த்து வரவேற்றான்.
அரைமணி நேரம் இணையத்தில் தமிழ் மணம் பக்கம் வலம் வந்து கொண்டே மதியத்துக்குத் தேவையாக சாண்ட் விச் பொட்டலங்களை ஓடர் செய்தேன். அந்தப் பையன் என் பக்கத்தில் வந்து பேச்சுக் கொடுத்தான். எனக்கு விஷயம் மெல்லப் புரிந்தது. இந்த மாதிரி அனுபவம் எனக்கு முன்னர் சீனப்பயணத்தின் போதும் ஏற்பட்டது. அதாவது இப்படியான நாடுகளில் இருக்கும் இளம் பிள்ளைகள் வெளிநாட்டவரைக் கண்டதும் தாமாகவே பேச்சுக் கொடுத்து சம்பாஷணையை வளர்ப்பதன் மூலம் ஆங்கில மொழியறிவை விருத்தியாக்க விரும்புகின்றனர். நானும் அவனுக்கு என் சொந்த ஊரில் இருந்து ஆதியோடந்தமாக சம்பாஷித்தேன். அவன் கூட கம்போடிய கிராமம் ஒன்றிலிருந்து வறுமையின் கொடுமையால் நகரத்துக்கு வந்தவனாம். இரவுப்பள்ளியும், வேலையுமாகத் தன் இளமையைக் கழிக்கின்றான் இவன். நான் கம்போடியாவில் தங்கிருந்த அடுத்த சில நாட்களுக்கு அவன் தான் எனக்கு நல்ல பேச்சுத் துணையாக இருந்தான்.