Social Icons

Pages

Sunday, February 24, 2008

Dr K.J.ஜேசுதாஸின் சாஸ்திரிய இசையருவியில் கலந்தேன்..!

என்னுடைய இத்தனையாண்டு வாழ்வில் சாஸ்திரிய சங்கீதக் கச்சேரிகளுக்கு இதுவரை மினக்கெட்டுப் போன அனுபவமே கிடையாது. வானொலியில் நிகழ்ச்சி செய்யும் போது சில தகவல் துணுக்குகளின் உதவியோடு ஒரே ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப்பாடல்களையும் திரையிசையில் வந்த பாடல்களையும் இணைத்து நிகழ்ச்சி படைத்த அனுபவம் மட்டுமே உண்டு. டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் சிட்னிக்கு வருகின்றார் என்ற விளம்பரங்கள் வந்ததும் இம்முறையாவது ஒரு நேரடி நிகழ்ச்சியைக் காண வேண்டும் என்ற ஆவலில் நேற்று சிட்னி Hills Centre, Castle Hill இல் நடந்த சாஸ்திரிய இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.

வழமையாக இப்படியான இசை நிகழ்ச்சிகளைத் திறம்பட ஒருங்கிணைத்துத் தரும் Sydney Symphony entertainers மற்றும் Pyramid Spice centre ஸ்தாபனத்தாரோடு இணைந்து கொடுத்திருந்தார்கள். மாலை ஆறு மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியின் ஆரம்பப் பகுதியில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த கலைஞர்கள் குறித்த அறிமுகமும் இடம்பெற்றது. கடம் -ராதா கிருஷ்ணன், வயலின் - மகாதேவ சர்மா, மிருதங்கம் - திருவாரூர் பக்தவத்சலம், தம்புரா - பாபு அனில் குமார் என்று அவர்களின் இசைப்பின்னணி குறித்த தகவல்கள் அப்போது தரப்பட்டது. இந்த அறிமுகப் பகுதியில் பக்கவாத்தியக் கலைஞர்கள் மேடைக்கு வராமல் இடம்பெற்றதை தவிர்த்து, ஒவ்வொருவர் மேடையில் அமரும் போது கொடுத்திருக்கலாம்.

தொடர்ந்து கலைஞர்கள் சகிதம் ஜேசுதாஸ் அவர்கள் வந்து அமர்ந்து கொண்டார். முதல் வரிசையில் இருந்த எனக்கு நேர்முன்னே ஜேசுதாஸ் அவர்களைக் கண்டதும் மெய்சிலிர்த்தது. 68 வயது நிரம்பிய சங்கீதப் பாரம்பரியம் ஒன்று கண்முன்னே சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தது.

இப்படியான நிகழ்ச்சிகளை வெளிநாடுகளில் வைப்பதில் உள்ள சவால் என்னவென்றால் பல்வேறு மொழிபேசும் இந்தியர்கள் வந்து கலந்திருப்பார்கள். அவர்கள் எல்லோரையுமே திருப்திப்படுத்தக் கூடியவாறு அந்தந்த மொழியின் பாரம்பரியமான பாடல்களைக் கொடுக்க வேண்டும். இதையே தன்னுடைய அறிமுக உரையில் ஜேசுதாஸ் குறிப்பிட்டு என்னால் முடிந்த அளவிற்கு நான் என் பங்கைச் செய்கின்றேன் என்றார். கூடவே மொழிவாரியான பகுப்பை இந்த இசையில் புகுத்தாமல், ஒருவர் ஹிந்துஸ்தானி படித்தாலோ அல்லது கர்னாடக இசை படித்தாலோ அந்தத் துறையில் தம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுத் தனது சாஸ்திரிய சங்கீத மடையைத் திறந்தார். கர்னாடக இசையினைத் தெளிவுறக் கற்றதால் தான் எனக்கு ஹிந்திப்பாடல்களை அந்த மொழி ரசிகர்களைக் கவரும் விதத்தில் பாட முடிந்தது. காரணம் கர்னாடக சங்கீதம் என்றாலும் சரி, ஹிந்துஸ்தானி என்றாலும் சரி அடிப்படையில் இருக்கும் இசை இலக்கணம் பொருந்தி வரக்கூடியது என்றும் கூறினார்.

எனக்கு சாஸ்திரிய சங்கீதம் குறித்த பரிச்சயம் இல்லையென்றாலும், ஜேசுதாஸின் கணீரென்ற குரலைக் கண்மூடிக் கேட்பதே சுகமாகப் பட்டது."வாதாபி கணபதிம்" கீர்த்தனையை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு, "அழுதோம் அணைக்கும் அன்னை" என்ற பாடலையும், "என்ன புண்ணியம் செய்தனை சற்குரு நாதா" பாடலைக் குருவுக்கும் அர்ப்பணித்தார்.

எமது இசைவளர்த்த முன்னோர்கள் ராகம், தானம், பல்லவி இவற்றுக்கெல்லாம் தனித்தனி நாள் கொடுத்து, ராகத்துக்கு ஒரு நாள், தாளத்துக்கு இன்னொரு நாள் என்று இடைவிடாது தொடர்ந்து தமது சங்கீதத்தை, தம்மை மறந்து இசைத்த காலம் எல்லாம் வரலாற்றில் இருந்தது என்றார். தொடர்ந்து ஹிந்துஸ்தானியில் அமைந்த "நிர்தோனம்" என்ற பாடலை கர்நாடகப் பாணியில் பாடுகின்றேன் என்ற அறிமுகக் குறிப்புடன் தொடர்ந்தார். "மா பவானி துர்கா" பாடலும் பரவசப்படுத்தியது. ஓவ்வொரு பாடலைப் பாடும் போதும் ஒரு பக்கம் அமர்ந்த வயலின் வித்துவானையும், மறுப்பக்கம் அமர்ந்திருந்த மிருதங்க வித்துவானையும் பார்த்து ஜேசுதாஸின் கண்கள் அடிக்கடி முறுவலித்துக் கொண்டிருந்தன. நாங்களும் கூடவே வருகின்றோம் என்று அவர்களும் தம் வாத்திய வல்லமையால் நிரூபித்துக் கொண்டிருந்தார்கள்.

பாடல்களுக்கு இடையில் ஒரு முறை ஏதோ காரணமாக எழுந்த தம்புரா வாசித்த இளைஞர் வேட்டி தடக்கி விழுந்து விட்டார். கொஞ்சம் பதறி விட்டு " நாமளும் சின்ன வயசில் நிறைய சந்தர்ப்பங்களில் இடங்களில் தடக்கி விழுந்து எழுந்தவங்க தான், இப்படி தடக்கி விழுந்து தான் ஒரு உயந்த நிலையை அடைய முடியும் " என்று சடுதியாகச் சொல்லி அரங்கத்தைக் கொல்லிட வைத்தார் ஜேசுதாஸ்.

வயலின்காரரைப் பார்த்து உங்களுக்குப் பிடிச்ச ராகம் எது என்று ஜேசுதாஸ் கேட்க அவரும் "சங்கராபரணம்" என்று சொல்லி வைக்க, தொடர்ந்தது சங்கராபரணம் குறித்த ஜேசுதாசின் சிலாகிப்பு தகுந்த விளக்கங்களோடு தாவியது. இப்படிப் பல இடங்களில் வெறுமனே இசை நிகழ்ச்சியாக இல்லாது கொண்டு போனது புதிதாக இசை கற்பவர்களுக்கும், வெறும் கேள்வி ஞானம் இருப்பவர்களுக்கும் நிச்சயம் உபயோகமாக இருந்திருக்கும்.

"எந்தரோ மஹானு பாவலு" என்று திடுதிப்பென்று எந்த அறிமுகமும் கொடுக்காது இவர் தாவியபோது அரங்கம் கரகோசத்தால் நிறைத்தது. அந்த இடத்திலேயே சற்றே நிறுத்தி விட்டு மிருதங்கக்காரரைப் பார்த்து "பார்த்தீங்களா! எந்தரோ மஹானு பாட்டுக்கு சிட்னியில் கூட மகத்துவம் கிடைக்குது இல்லையா" என்று ஜேசுதாஸ் கேட்கவும், அவரும் கண்கள் குவியச் சிரித்தவாறே ஆமோதித்துத் தலையாட்டினார்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பே ஜேசுதாஸ் அவர்கள் முழுமையான சுதந்திரத்துடன், பாடியும் பேசியும் கொடுக்க முடிந்தது முதற்காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் மொழி தெரியாத பாடல்களுக்கெல்லாம் இரண்டு வரி பாடி பின் தமிழிலோ ஆங்கிலத்திலோ அவற்றுக்கு அர்த்தம் கொடுத்து மீளவும் விட்ட இடத்தில் பாடியது வெகு சிறப்பு.

"முன்பெல்லாம் ஒவ்வொரு ஸ்வரங்களின் ஒலிக்குறிப்புக்கள் கொடுத்து எப்படியெல்லாம் இந்த கர்னாடக இசையை பின்னாளில் வரும் தலைமுறைக்கெல்லாம் இலகுவாகப் புரியும் படி கொடுக்கவேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றார்கள் நம்முன்னோர்கள்" என்று விட்டு உதாரணங்களோடு ஒரு குறும் சங்கீத விரிவுரையைக் கொடுத்து "இப்பல்லாம் பாஸ்ட் பூட் கேட்டு வர்ரவங்க தான் ஜாஸ்தி, வேகவேகமா சங்கீதத்தைக் கத்துக்கணும், வேக வேகமா பணம், புகழ் சம்பாதிச்சு செட்டிலாகணும்கிறது தான் இப்ப இருக்கும் யங்கர் ஜெனரேஷனின் மனோபாவம்" என்று தன் ஆதங்கத்தைக் கொடுத்தார்.

"கெளசல்ய குமாரனை தினமும் துதிப்பாய் மனமே" பல்லவியை எடுத்துக் கொண்டு, ஒரு பூ மெட்டை எடுத்து மெது மெதுவாக அதன் இதழ்களைப் பிரித்து விரித்து வைப்பதுபோல நிறையச் சங்கதி கொடுத்து நீண்டதொரு பாயாசப் பந்தியைக் கொடுத்தார். தொடர்ந்து பக்க வாத்தியமாக இருந்த வயலின், மிருதங்கம், கடத்தின் அமர்க்களமான ஆலாபனை களைகட்டி இடைவேளைக்குக் கொண்டு போய் நிறுத்தியது.

இடைவேளையில் எதிர்பாராத அனுபவமாக கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கின்றது. அவரைக் கண்டதும் பேச வாயில் இருந்த வார்த்தைகள் அழிந்து விட்டன. கிடைத்த இருபது நிமிட இடைவேளையில் தன்னை ஆசுவாசப்படுத்த இருந்தவர் சிரித்த முகத்துடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கவும் வருகின்றார். புகைப்படம் எடுத்து விட்டு அவரின் கையை இறுகப் பற்றி விட்டுப் பிரிகின்றேன்.

இந்தக் கச்சேரி இடைவிடாது தொடர்ந்து நிறைவெய்தும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் தொடர்ந்த இடைவேளைக்குப் பின் தனிப்பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைந்த நிகழ்வாக "திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே" யோடு தொடங்கியது. "ஜெப தீப் ஜலே" ஹிந்துஸ்தானிப் பாடலைத் தொடர்ந்து வந்தது "சந்தனம் ஜவ்வாதும் சேர்ந்து மணங்கமிழ".

"சந்தனமும் ஜவ்வாதும்" பாடலுக்கு இசையமைத்தவர் ஜெய விஜயா என்ற இந்து, இந்தப் பாடலை பக்தி மணம் கமிழ எழுதியவர் சிங்கப்பூர் வாழ் ஒரு முஸ்லீம் நண்பர், நான் பிறப்பில் எந்த மதம் என்று உங்களுக்கே தெரியும். ஆனால் மதங்களைக் கடந்து என்னைப் போல எத்தனையோ பில்லியன் மானுடர்கள் வந்து போனாலும் நிலைத்திருக்கும் இறைவன் ஒருவனே, என்னுடைய குரு தட்சணாமூர்த்தி ஸ்வாமிகளை நான் இறைவனாகவே போற்றி வணக்குகின்றேன்" என்று இந்தப் பாடலைத் தொடர்ந்து தகவலோடு கூடிய நல்ல கருத்தை விதைத்துச் சென்றார் ஜேசுதாஸ்.

"என்னைத் தன் வீட்டிலேயே தங்க இடம் கொடுத்து ஆளாக்கி விட்டவர் குருநாதர் செம்பை வைத்யநாத பாகவதர். அவர் இறந்த பின் என்னுடைய கச்சேரிகளுக்கெல்லாம் வரும் போது முன் வரிசையில் இருந்து அந்தம்மா (செம்பை வைத்யநாதர் புத்திரி) தவறாமல் கேட்கும் பாட்டு இது" என்று "தேனினினுமையிலும் ஏசுவின் நாமம் திவ்யமதுரமே" என்ற சுத்தபத்தமான தமிழ்ப்பாட்டைப் பாடிக்கொண்டிருக்கும் போது நாம் எங்கோ அகண்ட வெளிப்பரப்பில் மாசுபடாத சூழ்நிலையில் சுதந்திரப்பறவையாய் பறப்பது போல மனம் இலேசாகியது. "எந்தே கண்ணனு கறுப்பு நிறம்" என்ற மலையாளப்பாடலைப் பாட ஆரம்பித்த போது மூலைகளில் இருந்து எழும்பிய கரவொலிகளைக் கேட்டு ஜேசுதாஸ் முறுவலித்துக் கொண்டு மிருதங்கக்காரரையும், வயலின் காரரையும் கண்களால் வெட்டி விட்டுத் தொடர்ந்தார். இந்தப் பாடல் "போட்டோகிராபர்" என்ற மலையாளப் படத்திலும் வந்திருக்கின்றது. அதைக் காண:


"அன்னபூர்ணி விசாலாட்சி" பாடலைப் பாடும் முன் இந்தப் பாடலை நிறையப்பேர் பாடும் போது "வீசாலாட்சி" என்று நீட்டி முழக்கி அதன் அர்த்தத்தைச் சிதைப்பதாகக் குற்றம் சாட்டி விட்டுப் பாடினார்.

"பம்பை மன்னவன் துணையோடு
செம்பை நாதனின் நினைவோடு
பந்த பாசம் இணையோடு
உலகம் எனக்கொரு தாய் வீடு"

என்ற தமிழிசைப்பாடலும் அர்த்தம் புரியவைக்கும் வரிகளோடு கலந்து சிறப்பித்தது.
"கிருஷ்ணா நீ பேகனே" பாடலை ஓவ்வொரு வித்வான்களும் தமக்கேயுரிய பாணியில் கொடுப்பார்கள். அதையே ஜேசுதாஸும் செய்தார். ஐயப்பனுக்கான ஒரு தோத்திரத்தை எந்த விதமான ஆலாபனையும் இல்லாமல் கொடுத்து விட்டு திடுதிப்பென்று "ஹரிவராசனம் விஸ்வ மோகனம்" என்ற நதியில் கலந்த போது ஏற்கனவே அறிந்த அந்தப் பாட்டு இன்னும் உச்சபட்ச ரசிப்பையும், இறையுணர்வையும் கொடுத்தது.

நிகழ்ச்சி முடியப் போகின்றது என்பதைப் பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு ஜாடையில் சொல்லிவிட்டு அதே ஜாடையை சபைக்கும் காட்டிவிட்டு முறுவலிக்கின்றார் ஜேசுதாஸ். தொடர்ந்து மங்களமும் பாடியாயிற்று. அரங்கம் அசைவற்று இன்னும் யாசிக்கின்றது அவரிடம். ஆனால் மிகுந்த தன்னடக்கத்தோடு "என்னால் முடிஞ்ச அளவுக்கு உங்களைத் திருப்திப் படுத்தியிருக்கேன்" என்று ஜேசுதாஸ் சொன்னதும், அரங்கத்தை நிறைக்கும் கரகோஷமே அவருக்குக் காற்று வழி கைகுலுக்குகின்றது. இது தான் அந்தக் கலைஞனுக்குத் தொடர்ந்தும் கிடைக்கும் உயரிய விருதும் வெற்றியும்.


விழாப்படங்கள் அனைத்தும் என் ஒளிப்படக்கருவியால் சுட்டவை.

Thursday, January 03, 2008

ஒபரா ஹவுஸில் பாடிய நிலா பாலு

உலாத்தல் பதிவுகளில் எனது பெங்களூர் பயணத்தை ஆரம்பித்து விட்டு மற்றைய வலைப்பக்கங்களில் இரு மாதமாகச் செலவிட்டு விட்டேன். எனவே இனியும் நீண்ட இடைவெளி இருக்கலக் கூடாது என்பதற்காக நான் கண்டு ரசித்த இசை நிகழ்ச்சி குறித்த என் பார்வையை இங்கே இடுகின்றேன்.

கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி Sydney Symphony entertainers ஒருங்கிணைப்பில் Pyramid Video & Spice அனுசரணையுடன் சிட்னி ஒபரா ஹவுஸில் ஒரு இசை நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது. இவர்கள் கடந்த 2006 இல் கே.ஜே.ஜேசுதாஸின் இசை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த அந்த நிகழ்வையும் முன்னர் பதிவாக இட்டிருந்தேன். இந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாதனா சர்க்கம், வசுந்தரா தாஸ்,ராஜ் டிவி ராஜகீதம் புகழ் சுஜித்ரா மற்றும் மலையாளப் பாடகர் நிஷாத் ஆகியோர் ஷியாமின் இசைக்குழுவோடு வந்து சிறப்பித்திருந்தார்கள்.


அவுஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் இசை நிகழ்ச்சிக்குப் பின் நடைபெறும் இரண்டாவது தமிழ் நிகழ்ச்சி என்பதால் முன்னர் இந்த அரங்கத்தைப் பார்க்காதவர்களும், முன்னர் ஜேசுதாசின் இசை நிகழ்ச்சியினை நன்கு ரசித்தவர்களுமாக அரங்கத்தை நோக்கிப் படையெடுத்தார்கள். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பே அத்தனை இருக்கைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.


சரி, இனி இந்த இசை நிகழ்ச்சிக்குச் செல்வோம். வழக்கமாக ஒரு கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிக்கும் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு விலக்காக மெளன ராகம் திரையில் இருந்து "மன்றம் வந்த தென்றலுக்கு" என்ற பாடலோடு மேடையில் காட்சி தந்தார் பாலு அவர்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைக் காண வேண்டும் என்று வந்த இசை ரசிகர்களுக்கு இன்னுமொரு இன்ப அதிர்ச்சியாக பி.ஹெச்.அப்துல் ஹமீத் மேடையில் தோன்றினார். அதுவரை எந்த விளம்பரங்களிலுமே ஹமீத் வருவதாக அறிவிப்பும் வராததால் இந்தத் திடீர் அறிவிப்பு விருந்தாளியைக் கண்டதும் முறுவலித்துக் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். வழக்கமாக இசை நிகழ்ச்சிகளில் பாடுபவர் ஒரு மணி நேரம் என்றால் அறுவைப்பாளர் இரு மணி நேரம் எடுத்துத் தன் சாகித்யங்களை எல்லாம் காட்டி எம்மை இருக்கையில் வைத்தே கொலை செய்து விடுவார். ஆனால் ஹமீத் போன்ற மேடை நாகரீகம் தெரிந்தவர் இந்த இசைப்படையலுக்கு வந்தால் சொல்லவும் வேண்டுமா? அதை மெய்ப்பிப்பது போல் நிகழ்ச்சியின் இறுதி வரை அப்துல் ஹமீத் பாலு கூட்டணி அசைக்கமுடியாத கூட்டணியாகப் பயணித்தது. எடுத்த எடுப்பிலேயே "நிலவும் உருண்டை, பாலுவும் உருண்டை" என்றுபாலுவுக்கும் நிலவுக்கும் ஒரு புதிய ஒற்றுமையைக் காட்டிக் கலகலக்க வைத்தார் ஹமீத். தொடர்ந்து மூச்சு வாங்கிப் பாடிய "மண்ணில் இந்தக் காதல் இன்றி" பாடல் வந்தது.

தனது அன்னை Neelatai Ghanekar இடம் ஆரம்பத்தில் இசை பயின்று, இளையராஜா இசையில் "அழகி" திரைக்காக "பாட்டுச் சொல்லி" பாடலைப் பாடிய சாதனா சர்க்கம் "கொஞ்சும் மைனாக்களே" என்று கூவிக் கொண்டு வந்தார். ஸ்வரலயா ஜேசுதாஸ் விருது, உட்பட ஏ.ஆர்.ரகுமானின் பாராட்டு மழை வரை சாதனா சர்க்கத்திற்குக் கிடைத்த பெருமைகளைச் சொல்லி வைத்தார் அப்துல் ஹமீத்.

இனியதொரு ஹோரஸ் கலக்க, நியூ திரையில் இருந்து " காலையில் தினமும் கண் விழித்தாலே" பாடலை மலையாளப் பாடகர் நிஷாத் கலக்கினார்.

தொடர்ந்து பின்னணியிலும் முன்னணியிலுமாக பரத்வாஜ், ஏ.ஆர்.ரகுமான் போன்றோர் இசையில் பாடிய ராஜ் டீவி புகழ் சுஜித்ராவும் எஸ்.பி.பியுடன் ஜோடி போட்டு எஸ்.ஜானகி இல்லாத குறையை நிரப்பிக் கொண்டிருந்தார்.
"ஆறு முறை தேசிய விருது கண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், இவற்றில் சங்கராபரணம் விருது கிடைத்ததால் விருதுக்குப் பெருமை" என்று ஹமீத் அறிவிக்க தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் சங்கராபரணத்தில் தான் பாடிய அந்தப் பசுமை நினைவை அசைபோட்டார். கூடவே அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் உதவியாளராக இருந்த திரு புகழேந்தி அவர்கள் தனக்குக் கொடுத்த கடுமையான பயிற்சி தான் தேசிய விருதாக அங்கீகாரம் பெற்றது என்று புகழ்ந்து, பார்வையாளர்கள் மத்தியில் இருந்த சிட்னியில் வாழ்ந்து வரும் புகழேந்தியின் மகனின் 25 வது திருமண நாள் இன்று என்றவாறே அவர்களை எழுந்திருக்கச் செய்து கெளரவப்படுத்தினார். புகழேந்தியின் மகன், மற்றும் புகழேந்தியின் தாய் இருவரையும் நான் ஒரு வானொலிப் பேட்டி செய்திருக்கின்றேன். புகழேந்தியின் இசை அனுபவங்களை அதில் இருவரும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். நேரம் வாய்க்கும் போது அப்பேட்டியை ஒலியில் பின்னர் தருகின்றேன்.

ஒவ்வொரு பாட்டுக்கும் விதவிதமான ஒளியலங்காரத்தைப் பாய்ச்சியது ஒபரா ஹவுஸ் அரங்கம்.

சிப்பி இருக்குது பாடலைப் பாடும் போது "மயக்கம் தந்தது யார் தமிழோ, கண்ணதாசனோ" என்று இலாகவமாக மாற்றிச் சிறப்பித்தார் பாலு. கூடவே பாடிய சுஜித்ராவும் குறை வைக்கவில்லை. கடந்த யூன் 14, தனது 61வது பிறந்த நாளை எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொண்டாடியபோது கிடைத்த பிறந்த நாள் பரிசுப் பொருட்கள் அனைத்தையுமே மயிலாப்பூரில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு அளித்தார் என்று அப்துல் ஹமீத் அவர்கள் பாடல் இடைவேளையில் சொல்லவும் பாலுவின் மீதான மரியாதை ஒருபடி ஏறியது. தொடர்ந்து காதல் ஓவியம் திரையில் இருந்து "சங்கீத ஜாதி முல்லை" பாடலைப் பாடியபோது அவரின் ராஜாங்கத்தில் மெய்சிலிர்த்தது.

அக்கம் பக்கம் யாருமில்லா (கிரீடம்), மற்றும் சுவாசமே (தெனாலி), வெண்ணிலவே வெண்ணிலவே (மின்சாரக் கனவு) என்று சாதனா சர்க்கம் தொடர்ந்தார். இளங்கோவின் வரிகளில் "மஞ்சக்காட்டு மைனா" பாட்டை சாதனாவும் நிஷாத்தும் அச்சொட்டாகப் பாடிச் சிறப்பித்தனர்.


பாடகர் நிஷாத் புதிய தலைமுறைக்கேற்ற பாடல்களைப் பாடியதோடு கடலினக்கரை போனோரே பாடலையும் பாடி வந்திருந்த சேட்டன்களைக் குளிர்வித்தார். ஆனால் சில தமிழ்ப்பாடல் வரிகளை இவர் சுயிங்கம் மென்றுகொண்டு பாடுவது போல வாயில் வைத்துக் குழைந்தது கண்டு கொண்ட ஒரு குறை.

திடீரென்று நுழைந்த நவநாகரீகமான வசுந்தரா தாஸ் மேடையில் பாடிய அனைத்துப் பாடல்களையுமே புத்தகம் பார்த்துப் படிக்காமல் மனப்பாடத்தோடு மிக இயல்பாகப் பாடினார். -நிகழ்ச்சிக்கு வந்த இளசுகளுக்கு ஏற்ற ஆட்டம் பாட்டமும் வசுந்தரா குத்தகைக்கு எடுத்தது போல் கலக்கினார். தான் பின்னணி பாடியதோடு வசீகரா பாடலையும் சேர்த்துக் கொண்டார்.ஆனால் இவர் இறுதியாகப் பாடிய குரு படப்பாடல் ஒரு கரும்புள்ளி. பாட்டும் சரி, பின்னணியில் ஏற்கனவே ஒலிப்பதிவு செய்து வழங்கிய இசையும் சரி (இந்தப் பாட்டுக்கு மட்டும்) மகா இரைச்சல்.

"பம்பாயில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து இசையமைத்த படம் தளபதி. அதில் வரும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாடலுக்கு 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டன. அதே இசை இங்கே இருக்கக்கூடிய வாத்தியங்களோடு ஷியாம் இசைக்குழு தரப்போகின்றார்கள்" என்ற அறிமுகத்தோடு வந்த அந்தப் பாடலைக் கேட்கும் போது இசையும், குரலும் எம்மை ஒபராவின் மேற்கூரைக்கு மிதக்க வைத்தது. என் கைத்தொலைபேசியில் சிறைவைத்த அந்தக் காட்சியின் ஒரு பகுதி இதோ.


அது போல் அஞ்சலி அஞ்சலி பாடலில் வரும் சாக்ஸபோன் வாத்திய இசையை நடராஜ் வாசித்தபோது பாலுவே நெகிழ்ந்தார். நடராஜ், மெல்லிசை மன்னரின் பாராட்டையும் பெற்றிருக்கின்றாராம். மெளனமான நேரம், போன்ற வழக்கமாக மேடையில் பாடும் பாடல்களைப் பாடும் பாலு, வழக்கமாக அதிகம் மேடையில் பாடாத "ஆயிரம் நிலவே வா" பாடல், மற்றும் நிறைவாக எனக்குள் ஒருவன் திரையில் இருந்து "மேகம் கொட்டட்டும்" என்ற பாடலையும் நிறைவு செய்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் இசை ரசிகர்களிடமிருந்து பலவிதமான விமர்சனங்கள். முதல் தடவை ஒபரா ஹவுசுக்கு வந்து ரசித்தவர்களைப் பெருமளவு திருப்திப்படுத்திய இந்த இசை நிகழ்ச்சி, முன்னர் கே.ஜே.ஜேசுதாஸ் பரிவாரங்களோடு வந்து கொடுத்த ஓணம் படையல் போன்று இல்லை ; எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு இன்னொரு அவர் காலகட்டத்துப் பாடகி வந்திருக்கலாம்; பாலுவே அதிகம் தனியாவர்த்தனம் வைத்திருக்கலாம் போன்ற விமர்சனங்களையும் கொடுத்திருந்தது. இன்னொரு உறுத்தல் கடைசிப் பாடலைப் பாட முன்னரும், பாடிய பின்னரும் ரசிகர்களுக்குத் தகுந்த பிரியாவிடை கொடுக்காமல் நாலு வரி கூடப் பேசாமலே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் போனது இன்று வரை இசை ரசிகர்களுக்கு உறுத்தலாகவே இருக்கின்றது.

தமது பிரத்தியோகப் படங்களைத் தந்துதவிய Sydney Symphony entertainers இற்கு என் நன்றிகள்.

Friday, October 26, 2007

பெங்களூர் Kemp Fort இல் கண்ட சிவனாலயம்




கர்னாடக உலாத்தலை ஆரம்பித்து விட்டுப் பாட்டுப் போட ஓடிவிட்டார் என்று நினைப்பவர்களின் கருத்தை மாற்ற என் கர்னாடக உலாத்தல் விட்ட இடத்தில் இருந்து தொடர்கின்றது. வேலைத்திட்டத்திற்காக பெங்களூர் அலுவலகம் வந்தாயிற்று. ஆனால் வேலை முடிந்த மாலை வேளைகளில் பொழுதைக் கழிக்க ஒரே வழி பெங்களூரின் உள்ளூர் அமைவிடங்களைப் பார்த்து முடித்துவிட வேண்டியது தான். அதுவும் அதிக தூரம் அற்ற இடங்களைத் தெரிவு செய்வோம் என்று நினைத்து உதவிக்கு எனக்காக நியமிக்கப்பட்ட வாகனம் ஓட்டும் நண்பரிடம் பேச்சும் கொடுத்தேன்.

அவர் பெயர் ஹனீப், வட நாட்டில் இருந்து இரண்டு தலைமுறைக்கு முன் பெங்களூருக்குப் பிழைப்புக்காக வந்தவராம். தமிழைச் சரளமாகப் பேசுகின்றார். அவ்வப்போது காரின் குறுக்கே ஹீரோ ஹொண்டாவை நுளைக்கும் ஐ.டி பசங்களையும், பொண்ணுகளையும் சம உரிமை கொடுத்து, இறக்கிய கார்க் கண்ணாடி இடுக்கால் எட்டிப் பார்த்துத் திட்டியவாறே, பெங்களூரில் இருக்கும் முக்கியமான பார்க்கவேண்டிய இடங்களைச் சொல்லிக் கொண்டே போகின்றார்.

அப்படி நாங்கள் முதலில் தேர்ந்தெடுத்தது பெங்களூர் விமான நிலையத்துக்குப் போகும் சாலையில் உள்ள Kemp Fort என்ற உடுபிடவை வணிக வளாகமும் அதனோடு ஒட்டியிருக்கும் சிவனாலயமும் ஆகும்.

Kemp Fort தன் பெயருக்கேற்றாற்போல் கோட்டை ஒன்றின் முகப்பு வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் நான்கு மாடி விற்பனை வளாகம். ஆடை ஆபரண இத்தியாதிகளுக்கு ஒரே கூரையின் கீழ் ஆண் பெண் இருபாலாருக்குமாக அமைக்கப்ப்ட்டிருக்கின்றது. அவுஸ்திரேலியாவில் இருக்கும் உடுப்பு விற்பனை நிலையத்துக்குச் சென்று, கவர்ந்திழுக்கும் நாலைந்து நல்ல சட்டைகளை எடுத்து விரித்தால் Made in India என்றிருக்கும். ஆனால் விலையோ நடிகர் ஜெயராம் வளர்க்கும் செல்லப்பிராணி விலை(அதாங்க ஆனை விலை)
டொலர் கணக்கில் கொட்டித் தீர்த்து, வயிறெரிந்து வாங்குவதை விட Kemp Fort இலேயே அள்ளிக் கொள்ளலாம் என்றால் என் ஆசையில் மண். அவுஸ்திரேலியாவில் விற்கும் விலைக்கு கிட்டும் அளவுக்கே Kemp Fort இல் இருக்கும் தரமான உடுபிடவைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. எல்லாம் பில் கேட்ஸ் ஆளுங்க செய்யும் வேலை. பின்னே, அமெரிக்கர்கள் அதிகளவில் வந்து போகும் ஸ்தலமாக பெங்களூர் மாறிவிட்டதால், இப்பொது எல்லாமே அங்கு கொள்ளை விலை தான். ஒரு சில உடுப்பு வகைகளை வாங்கி விட்டு, வெளியில் கார் அருகே நிற்கும் ஹனீபிடம் போகின்றேன்.




"பிரபா சார், வாங்க டெம்பிள் போகலாம் என்கிறார் ஹனீப். அவருக்குப் பின் நான் தொடர, Kemp Fort விற்பனைக் கூடத்தோடு பின் பக்கமாக அமைந்திருக்கின்றது சிவனாலயம் ஒன்று.
வாயிலில் விளங்கும் விநாயகப் பெருமான் சிலையும், உள்ளே நுளையும் போது காணும்
மிகப் பெரும் சிவபெருமானின் சிலையும் கண்டதும் தானாகவே கைகளைக் கூப்பித் தொழ வைக்கின்றன. அமைதியான கூட்டுப் பிரார்த்தனை ஒன்று அந்த இரவுப் பொழுதைத் தூசி தட்டிப் பெருக்குகின்றது. சில மணித்துளிகள் அந்த இறைலயத்தில் ஒன்றி விட்டு மெல்ல நகர்கின்றேன் அவ்விடத்தை விட்டு.

பெங்களூர் வந்தால் தவற விடக்கூடாத இடங்களில் இதுவுமொன்று.

இப்பதிவில் இருக்கும் முதற் புகைப்படம் மட்டும் Douglas Whitby ஆல் எடுக்கப்பட்டு இணையம் வழி பெறப்பட்டது. மற்றயவை என் சொந்தத் தயாரிப்புக்கள்.

Sunday, August 12, 2007

கர்நாடகா உலாத்தல் ஆரம்பம்



இந்தியப் பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் தேடி வாசித்து இந்தியா குறித்த வரலாற்று, அரசியல், சமூக விடயங்களை அறிந்த எனக்குப் பாரத தேசத்தை நேரில் காணும் வாய்ப்பு 2001 ஆம் ஆண்டில் தான் முதலில் வாய்த்தது. இவ்வளவு நாளும் கற்பனைக்கு மட்டுமே எட்டியிருந்த இந்தக் கனவு தேசம் எப்படியிருக்கும் என்பதைக் கண்ணால் கண்டு எனது வாசிப்பனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு அப்போது ஓரளவு கிடைத்தது.

நான் வேலை செய்த Oracle நிறுவனத்தின் திட்ட அமுலாக்கல் பிரிவின் (Project implementation) சார்பிலேயே எனது இந்த இந்தியப் பயணம் அமைந்தது.2001 ஆம் ஆண்டில் ஏதோ ஒரு கட்டிடடங்களில் பங்கு போட்டுக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக Indian Development Centre (IDC Oracle)மற்றும் Oracle Consulting ஆகிய பிரிவுகள் சில நூறு பணியாளர்களுடன் மட்டுமே அப்போது இயங்கிக் கொண்டிருந்தது.

மீண்டும் கடந்த 2006 ஆம் ஆண்டு வாய்த்த பெங்களூர்ப் பயணம் கூட மீண்டும் அலுவலக நிமித்தமே அமைந்திருந்தது.பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் வாசலில் அமெரிக்காவிலிருந்தோ அவுஸ்திரேலியாவிலிருந்தோ வரப்போகும் யாரோ ஒரு வெள்ளைத்தோல் மென்பொருள்காரனை வரவேற்க ஐந்து நட்சத்திர ஹோட்டல்காரர்களின் பெயர்ப் பதாதைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

Oracle India கடந்த ஆறு ஆண்டுகளில் அசுரத்தனமான வேகத்தோடு முன்னேறியிருந்தது என்பதற்கு இந்த நிறுவனம் தொழில் கொள்ளவைத்திருக்கும் பல்லாயிரம் பணியாளர் என்ணிக்கையே உதாரணம் கற்பித்தது. Garden City என்று செல்லமாக அழைக்கப்படும் பெங்களூரு Concrete City ஆக மாறிப்போயிருக்கின்றது. ஒரு சின்ன சந்து கிடைத்தால் போதும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் சந்தில் சிந்து பாடிக் கட்டிடம் எழுப்பிவிடும் அளவிற்கு இந்த நகரம் முன்னேறிக்கொண்டிருக்கின்றது. அயலக மாநிலங்களிலிருந்து இளைஞர்களும், இளைஞிகளும் தாம் கற்ற 65 ஆவது கலையான மென்பொருள் அறிவோடு முற்றுகை நடாத்திக் குடியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.ராஜ்குமாரின் படங்களையே போட்டுப் போட்டு அலுத்த திரையரங்குகள் திரையைக் கிழித்து ரியல் எஸ்டேட் பதாதைகளுடன் புதியதொரு மென்பொருள் நிறுவனத்தைக் கம்பளம் போட்டு வரவேற்கின்றன. காங்கிரஸ் - ஜனதள் கூட்டணியில் ஆட்சியோட்டிக் கொண்டிருந்த தரம்சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்து அரியாசனம் ஏறிய குமாரசாமிக் கவுடாவின் பதாதைகள் புதிதாக முளைத்திருக்கின்றன.

வீதியெங்கும் வாரியிறைக்கப்பட்ட டாக்ஸிகளும், கொம்பனி கார்களும், ஆண்டாண்டு காலமும் வாழ்ந்து கொண்டிருக்கும் மத்தியதர பெங்களூர்க்காரனின் வாகனத்தை முந்திக் கொண்டு பாய்கின்றன. புதிய புதிய மேம்பாலங்கள் பனர்கட்டா ரோட்டை மேவிப் பாய்கின்றன. சில வழித்தடங்கள் மூடப்பட்டு வேற்றுப்பாதையால் நாளாந்தப் பயணங்கள் மாற்றி விடப்படுகின்றன. புழுதி விலக்கத் தம் முகத்தைக் கைத்துணியால் மறைத்த இளைஞர் பட்டாளமொன்றின் டூவீலர் அணிவகுப்பு ஏதோவொரு மென்பொருள் நிறுவனம் நோக்கிப் போகின்றது. புழுதி அப்பிய கண்களோடு விடிகாலைச் சூரியக் கதிர்கள் வியாபிக்கின்றன. பெங்களூரின் சாபக் கேடாக இருக்கும் கெட்டுப் போன வீதிகளோடு சண்டை போட்டுக் கொண்டு கார்ச்சக்கரங்கள் நகர்கின்றன.


என் கம்பனியால் ஒழுங்கு செய்யப்பட்ட ஹோட்டலின் டாக்ஸி Leela Palace உள் நுளைகின்றது. லீலா பாலஸ் பெங்களூரின் விமான நிலையத்திற்கு ஒப்பீட்டளவில் மற்றைய தங்குமிடங்களை விட குறுகிய தூரத்தில் இருக்கின்றது. அரச பிரதிநிகள், உயர்மட்டத் தலைவர்கள் அதிகம் வந்து போகும் பெரிய ஹோட்டல்களில் ஒன்று. தன் பெயருக்கு ஏற்ற விதத்தில் பெரியதொரு அரண்மனையாக எழுந்து நிற்கின்றது இது. மும்பை, பெங்களூர், கோவா, மற்றும் கோவளம் ஆகிய இடங்களிலே இந்த ஹோட்டலின் அமைவிடங்கள் உள்ளன.








பூங்கா நகரமான பெங்களூர் காங்கிறீற் நகரமாக மாறிக் கொண்டிருக்கையில், லீலா பாலஸ் ஹோட்டலின் உள்ளேன் ஒரு மினி அந்தப்புரமே இருந்தது. நீர்ச்சுனைகளும், செயற்கையாக அமைத்த இயற்கை மலர்ச்சோலைகளுமாக உள்ளே ஒரு ரம்யமான சூழ்நிலை விளங்கியது. நான் தங்கியிருந்த காலத்தில் சீக்கிரமே காலையில் எழுந்து நடை போட இந்தச் சூழ்நிலை ஒரு இதமான வாய்ப்பையளித்தது.

எம் நிறுவனப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய நல்ல தரமான தங்குமிடங்களில் இருக்கவேண்டும் என்ற நோக்கில், இப்படியான ஹோட்டல்களோடு முற்கூட்டிய ஒப்பந்த அடிப்படையிலும் தங்கல் பதிவுகளைப் பேணிவருகின்றது. பெரும்பாலும் பெரிய கம்பனிகள் இப்படியான திட்டத்தையே பின்பற்றுகின்றன.






இந்த லீலா பாலஸ் ஹோட்டல் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் இருக்கின்றது. காரை விட்டு ஹோட்டல் உள்ளே நுளைகின்றேன். சிறு கூட்டம் ஒன்று லீலாவில் ஏற்கனவே நடந்து முடிந்த ஏதோவொரு சந்திப்பு நிகழ்வினை முடித்துக் கொண்டு வெளியேறுகின்றது. அதில் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டே நகரும் கறுப்பு உருவம் ஈர்க்கின்றது. "அட! முன்னாள் கிறிக்கெற் வீரர் கபில்தேவ் போகின்றாரே " என்று ஒரு கணம் நின்று அவரைப் பார்த்துவிட்டு ஹோட்டலின் உள்ளே நுளைகின்றேன். இனியதொரு வயலின் இசையை வாத்தியக்காரர்கள் வரவேற்பறையில் தவழவிடக் காதில் தேனாகப் பாய்கின்றது இந்த இசை வரவேற்பு.



தொடரும் ......!

Wednesday, July 18, 2007

புகைப்படப் போட்டிக்கு நானும் வாறன்

தமிழில் புகைப்படக்கலை கூட்டு வலைப்பதிவு நடத்தும் போட்டிக்கு என்ர சார்பிலை நான் எடுத்த படங்களை அனுப்புறன் , பார்த்து ஏதாவது பண்ணுங்க சாமி ;-)


யாழ்ப்பாணம் பூநாறி மடத்தடிக் கோயிலடியில் வசிக்கும் நாய்களுக்கும் தமிழ் புரியும் போல?


ஹைதராபாத் Golconda கோட்டையில் ஓய்வெடுக்கும் நாய்


கடவுளைத் தேடித் தீப ஒளி


ஆலப்புழாப் படகுவீட்டுக்குள்ளிருந்து.....


படகுப் பயண ஏற்பாடுகளில் கடலோடி



கடற்கழியில் துணி துவைக்கும் நங்கை


நீராடும் காளைகள்