Social Icons

Pages

Monday, March 26, 2007

தொட்டிற் பழக்கம் - ஒரு weird பதிவு


பதிவர்கள் ஒவ்வொருவராக தம் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பித் தம் தனிக்குணங்களைக் காட்டும் வேளை இது.சகோதரி உஷாவின் அழைப்பில் நானும் களமிறங்குகின்றேன். தொட்டிலில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள், என்னைப் பொறுத்தவரை
இங்கே நான் சொல்லப்போகும் என் தனிக்குணங்கள் இனிமேலும் மாறுமா என்பது சந்தேகமே ;-))

இங்கே என் மனச்சாட்சியின் குரலாக என் குணாதிசயங்கள் வெளிவருகின்றன. இவற்றில் பலவற்றை முதன்முதலாக இன்னொருவருடன் நான் பகிரும் என் தனிப்பட்ட விஷயங்களாகவும் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை குழந்தைப் பருவத்திலிருந்து தொடரும் சில பழக்கங்களோடு இடையே புகுந்த சில பழக்கங்களாகவும் இவை இருக்கின்றன.

என்னுடைய அம்மா, கூடவே இரண்டு சகோதரிகள், ஒரு தம்பி (இரண்டு மூன்று வயது இடைவெளியில்) என்று பெத்துப் போட்டுவிட்டு அவர்களின் இளவயதிலேயே தாத்தா (அம்மாவின் அப்பா) இறந்துவிட்டார். எனவே என் அம்மாவைப் பொறுத்தவரை ஒரு பெண்ணின் இளமைக்கால எதிர்பார்ப்புக்கள் ஆசாபாசங்கள் மட்டுப்படுத்தப்பட்ட உண்ண உணவு, உடுக்க உடை, படிப்பு என்ற எல்லையோடு சாதாரண வாழ்க்கையாகவே கழிந்து போனது. அவரின் அடிமனதில் இருந்த சங்கீதம், நடனம் போன்ற நுண்கலைகள் மீதான ஆசை, ஆசை அளவிலேயே நின்று , ஒரு ஆசிரியையாக மட்டும் தன்னை வளர்த்துக்கொண்டார். சரி, என்னுடைய ஆசைகளைப் பெண் குழந்தை பிறந்தால் அவளுக்கு என் விருப்பம் போல வளர்த்துவிடலாம் என்ற என் அம்மாவின் நினைப்பில் விழுந்தது மண். இரண்டு அண்ணன்மாருடன் மூன்றாவதாக நான் பிறந்தேன். அதனாலோ என்னவோ இயன்றவரை என் பிள்ளைப் பிராயத்திலிருந்தே ஒரு பெண்பிள்ளை போல வளர்த்து வந்தார். அதுவே பின்னாளில் என்னுடைய சில குணாதிசயங்களில் பெண்களுக்கே உரிய சில பண்புகளும் வாய்த்துவிட்டன.

1. பயங் கொள்ளல்

ஆயிரம் ஜெனமங்கள் என்றொரு பாழாய்ப்போன படத்தை என் சிறுபிராயத்தில் பார்த்துத் தொலைத்துவிட்டேன். அது முதல் இரவு வேளைகளில் அம்மா காவல் காக்க ஓண்ணுக்குப் போவது, கை கால் மறைத்து தலையின் மூக்கு வாய்ப்பாகம் மட்டும் வெளியே தெரிய
போர்வையால் மூடிக்கொண்டே தூங்குவது, பேய்ப்படங்களின் பாடல்கள் வானொலியில் வந்தால் இருகாதிலும் விரலால் இறுகமூடிக்கொள்வது சில உதாரணங்கள். ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் வரும் வெண்மேகமே பாடலை இன்றும் எனக்குக் கேட்டால் குலை நடுங்கும். ( வெளிநாடு வரும் வரை அம்மா தான் சாப்பாடு ஊட்டிவிட்டார்)

என்னுடைய பதினோராம் ஆண்டில் ( பிளஸ் ஒன்) படிக்கும் போது ஆச்சி (அப்பாவின் அம்மா) இறந்தபோது தான் நான் முதன்முதலில் ஒரு மரணவீட்டுக்கே போனேன். இதுவரை நான் மரணவீடுகளுக்குச் சென்ற எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். புலம்பெயர்ந்து வந்த பின் நான் தவிர்க்கமுடியாது சென்ற மரணச்சாலைகளில் பார்வைக்காக வைக்கப்படும் உடலைப் பார்க்கும் வரிசையில் நின்று உடலைப் பார்க்காமல் அந்தக் கணம் மட்டும் கண்ணை மூடிக்கொள்வேன். விதிவிலக்கு மலரக்காவின் இறுதிச்சடங்கு.

2. பாட்டு கேட்டல்

என்னைப் பொறுத்தவரை சினிமாப்பாடல்களைப் படங்களில் வரும் இடைச் செருகலாக இல்லாமல் என்னை ஆக்கிரமிக்கும் சோகங்களுக்கான ஒத்தடமாகவும், அதி உச்சபட்ச மகிழ்ச்சியின் போது பங்கு போடும் பங்காளியாகவும் பல தடவை அனுபவித்திருக்கின்றேன். காதல் அரும்பிய காலங்களில், இளையராஜாவின் எண்பதுகளில் வந்த படப்பாடல்களை ரேப்றெக்கோடரில் போட்டுக் கேட்டுக்கொண்டே மேசையில் தலைசாய்த்துக் கனவு காண ஆரம்பித்துவிடுவேன்.

ஒன்று சொன்னால் சிரிக்காதீர்கள். பாடலில் வரும் ஆண் குரலாக நானும் பெண்குரலாகக் காதலியையும் உருவகப் படுத்தி அப்பாடலை ஒரு படப்பாடல் போலத் தான் பகற்கனவு காண்பேன். என் ஜீவன் பாடுது படத்தில் வரும் எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற இளையராஜாவின் பாடலைத் தலை சாய்த்துக் கேட்கும் நாள் என் காதலியை டியூசனில் நான் காணாத நாள் என்பது என் ரேப் றெக்கோடருக்குத் தெரியும்.

3. படம் பார்த்தல்

சிம்பு தனுஷ் காலமும் வந்துவிட்டது, இளையராஜாவின் மகன் யுவனும் இசையமைக்க வந்துவிட்டார். ஆனால் எனக்கு இன்னும் பிடித்தவை எண்பதுகளில் ராமராஜன் நடித்த படங்களும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே, அரண்மனைக் கிளி வகையறாக்கள். கரகாட்டக்காரன் வீசீடி போதாதென்று டீ.வீ.டியும் வைத்திருக்கிறேன். என் காரில் ஐந்து இசைத்தட்டுக்களைப் பொருத்திக் கேட்கலாம். அந்த ஐந்தும் பெரும்பாலும் எண்பதுகளில் ராஜா போட்ட மெட்டுக்கள்.
அதிகம் சென்ரிமென்ற் கலந்த அன்பே சிவம், பிளாக் போன்ற படங்களைப் பார்த்தால் கண்ணீர் வருவது என்னை மீறிய சக்தி ;-).




4. குழந்தைகள் மீதான நேசிப்பு

Finding Nemo என்ற படத்தை வெள்ளைக் குழந்தைகள் தம் பெற்றோருடன் தியேட்டர் வந்து பார்க்கும் போது தனி ஆளாக அந்தக்கூட்டத்தில் படம் பார்த்த பயல் நானாகத்தான் இருப்பேன். Lion King மூன்று பாகங்களையும் டீவீடியில் வாங்கிப் பொக்கிஷமாக வைத்திருக்கின்றேன். கூடவே Madagascar, டிஸ்னியின் பெரும்பாலான கார்ட்டூன் தொகுப்பு வீடியோக்கள் இன்னும் சில உதாரணங்கள்.

என்னுடைய படுக்கையில் tickle me Elmo என்ற பொம்மை இருக்கிறது (பார்க்க படம் ), அதனுடைய வயிற்றை அமுக்கி அது குலுங்கிக் குலுங்கிச் சிரித்து ஓய்ந்த பின் தான் எனக்குத் தூக்கம் வரும்.

ஊரில் இருக்கும் போது பக்கத்து வீட்டுப் பிள்ளைகளைப் பிராய்க்குக் காட்ட உப்பு மூட்டை, நுள்ளுப்பிறாண்டு கிள்ளுப் பிறாண்டு விளையாட்டுக் காட்டிய பழக்கம் இன்னும் தொடர்கிறது. வார இறுதி நாட்களில் காலை 10 மணிக்கு முன் Mc Donalds சென்று அங்கு காலை உணவு சாப்பிட வரும் குழந்தைகளை வேடிக்கை பார்ப்பது ஒரு சுகம். விருந்து நடக்கும் வீடுகளில் பெரும்பாலும் பெரியோரின் பேச்சுக் கச்சேரியைத் தவிர்த்துக் குழந்தைகளோடு விளையாட்டுக் காட்டி அவர்கள் சிரிப்பதை ஆயுள் முழுவதும் பார்க்கப்பிடிக்கும்.

சமீபத்திய சாதனை: கடந்த இரு வாரம் முன் ஒரு கலியாண இரவு விருந்தில், பிறந்து பத்து மாதமான ஒரு குழந்தையோடு வந்த பெற்றோர் இசைக்கு ஆடத் தொடங்கத் தனியே தன் வண்டியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை வாரியெடுத்து என் தோளில் சாய்த்து தூக்கம் கொள்ளவைத்து விருந்து முடிவிற் தான் அதன் தாயிடம் கொடுத்தேன்.

5. வாசிப்பும் உலாத்தலும்



1995 ஆம் ஆண்டு நான் அவுஸ்திரேலியா வந்த நாள் முதல் ஆனந்த விகடனைச் சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. உதாரணத்துக்கு இப்பதிவில் நான் மேலே இணைத்துள்ள ஆனந்த விகடன் வெளிவந்த ஆண்டுகளைப் பாருங்கள். இன்னும் எனக்கு காமிக்ஸ் புத்தகங்கள் கொள்ளைப் பிரியம் (பார்க்க படம்). 1995 ஆம் ஆண்டு மணிச்சித்ரதாளு படம் வெளிவந்து ஷோபனாவுக்குத் தேசியவிருது அறிவித்ததை ஒரு ஆனந்த விகடனில் வாசித்துத் தெரிந்துகொண்டு முதன் முதலில் மணிச்சித்ர தாளுவில் ஆரம்பித்த மலையாளப் படம் பார்க்கும் அவா இன்னும் தொடர்கிறது. அதுவே பின் என் கேரள உலாத்தலாகவும் மாறிவிட்டது. கேரளாவில் கொஞ்சக் காலம் வாழக்கூடாதோ என்பதே இப்போது முளைத்திருக்கும் என் weird நினைப்பு.


போதுமா உஷா ;-)))

Friday, March 09, 2007

கொச்சின் - விட்ட குறை, தொட்ட குறை


கடந்த பதிவில் கொச்சின் பற்றிய புவியியல் மற்றும் வரலாற்று அம்சங்களைப் பின்னர் தருவதாகச் சொல்லியிருந்தேன்.கொச்சின் பற்றி அறியாத அன்பர்களுக்கு இது சிறு விளக்கத்தையும் ஆர்வத்தையும் உண்டுபண்ணும் என்ற ரீதியில் இப்பதிவு அமைகின்றது. அத்தோடு அங்கு நான் எடுத்த படங்களின் மீதியையும் காட்ட ஒரு சந்தர்ப்பம் இது. கேரள சுற்றுலாத்தலங்களின் உதவியுடன் தகவல்களைப் பெற்று இப்பதிவைத் தருகின்றேன்.

கொச்சி என்றும் கொச்சின் என்றும் அழைக்கப்படும் இத்துறைமுகப்பட்டினம்
எர்ணாகுளம் என்ற மாவட்டத்தில் உள்ளடங்குகின்றது. அரபியன் கடல் தொட்டு நிற்க தெற்கே குமாரகம், ஆலப்புழா மாவட்டத்தையும் கிழக்கே இடுக்கி, மேற்கே திரிச்சூர் பிரதேசங்கள் சூழ கொச்சின் அமைந்துள்ளது.

அரபிக்கடலின் மகாராணி என்ற செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இவ்விடம் கேரளாவின் வர்த்தகப் பட்டினமாகவும் கொள்ளப்படுகின்றது. அதை உணர்த்துமாற் போலப் பண்டைய கால வரலாற்றுத் தரவுகளின் படி பிரிட்டிஷார், அரேபியர்கள், சீனர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் வந்து வாணிபம் நடாத்திப் போன இடமாக இருக்கின்றது. மேற்குலகத்தவர் முதன்முதலில் கைப்பற்றிய இந்தியப் பிரதேசம் இதுவாகும். கொச்சின் துறைமுகம் ஒரு வர்த்தகக் கேந்திரமாக இருந்ததால் அதிகம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விடயம் இல்லாவிட்டாலும், குறிப்பாக கோவளம் கடற்கரையில் காணும் சுகம் இல்லாவிட்டலும், வரலாற்றுப் பெருமை மிக்க துறைமுகத்தைப் பார்க்கும் வாய்ப்பாகவும் சீன வல என்று மலையாளத்தில் அழைக்கப்படும் chinese net ஐப் பார்க்கவும் இந்தப் பயணத்தை ஏற்படுத்த வேண்டும். சீன வலை முறைப்படி சீனாவிற்கு வெளியே கொச்சினில் மட்டுமே மீன் பிடிக்கப்படுகின்றது. சமாந்தரமாக நீண்ட வலையமைப்பு ஏற்படுத்தி வலையின் மேற்புறம் மீனவர் நடந்து சொல்வதற்கான வசதியையை உருவாக்கி வித்தியாசமானதொரு முறையில் மீன் பிடிக்கப்படும் முறையைக் கட்டாயம் பார்க்க இது ஒரு அரிய சந்தர்ப்பம். (பார்க்க, இப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள்)

ஒல்லாந்தர் 1530 இல் கோவாவிற்குத் தம் பிராந்தியத் தலைநகரை மாற்றும் வரை 1503 ஆம் ஆண்டிலிருந்து கொச்சினே தலைப்பட்டினமாகத் திகழ்ந்தது. 2408 சதுர கி.மீ பரப்பளவில் இந்தப்பிரதேசம் உள்ளது. என்னுடைய அனுபவப் படி திருவனந்தபுரப் புறச்சூழ்நிலையிலிருந்து மாறுபட்டே இப்பிரதேசம் உள்ளது. ஒரே மாநிலத்துக்குள்ளேயே சில வாழ்வியல் மற்றும் நடைமுறை வேறுபாடுகளையும் காணக்கூடியதாக இருந்தது.
கொச்சினில் நான் பார்த்த சில இடங்களை அடுத்த பதிவில் தருகின்றேன்.
வரும்........

Sunday, February 11, 2007

கொச்சின்துறைமுக வலம்!

மே 29, 2006 மதியம் 1.00 மணி (இந்திய நேரம்)மத்தன்சேரிக் கோட்டையிலிருந்து வெளியேறி மதிய உணவிற்காக எங்காவது நல்ல உணவகம் செல்லுமாறு கார்ச்சாரதியைப் பணித்தேன். மதிய உணவை நாம் அடுத்துப் பார்க்கப் போகும் கொச்சின் துறைமுகப் பகுதியிலேயே எங்காவது எடுக்கலாமே என்று ஆலோசனை சொன்னார். செரி என நான் பதிலுறுக்க நேரே கொச்சினிலுள்ள "மலபார் ஹவுஸ்" க்கு காரை எடுத்துச் சென்றார்.

வழியோரக்கடைகளில் ஏதாவது சாப்பிட்டு வயிற்றில் வம்பை விலைக்கு வாங்க என் மனம் இடங்கொடாததால் விலை அதிகம் என்றாலும் ஒரு உயர்தர உணவகத்தைத் தேடிச்செல்வது நல்லது என்று நான் முன்னரே கார்ச்சாரதியிடம் சொன்னதை நினைவில் வைத்துத் தான் அவர் இந்த ஹோட்டலுக்கு இட்டுச் சென்றார்.

மலபார் ஹவுஸ் கொச்சின் பிரதேசத்தின் முக்கியமான நினைவிடங்களில் ஒன்றாக இருக்கின்றது. Jan Herman Clausing என்ற டச்சுக்காரர் 27, மே , 1755 ஆம் ஆண்டு Mathew Henrich Beyls இடமிருந்து இதை வாங்கியதாகச் சொல்லப்படுகின்றது. 1795 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் கொச்சினைக் கைப்பற்றியபோது இதன் உரிமையும் அவர்களிடம் சென்றுவிட்டது. மலபார் ஹவுஸ் கொச்சின் துறைமுகத் தலைவர் Mr. Wrinkler இன் குடும்பத்தின் வாசஸ்தலமானது. 1889 ஆம் ஆண்டு ஜனவர் 4ஆம் திகதி, பாரியதீ விபத்தைச் சந்தித்ததைத் தொடர்ந்து Wrinkler இன் மகள் Harrisons மற்றும் Crossfield இற்கு விற்றார். காலவோட்டத்தில் தேசிய வங்கியின் நிர்வாகிகளின் வாசஸ்தலமாகி, இப்போது 1995 ஆம் ஆண்டிலிருந்து Cochin Residency (P) Ltd இதை நிர்வகிக்கின்றது.
(ஆதாரம் : மலபர் ஹவுஸ் தகவல் தளம்)


நல்ல வசதிகளோடு விளங்கி கொச்சினைச் சுற்றிப்பார்க்கவும் ஏற்புடைய வாசஸ்தலமாக மலபார் ஹவுஸ் விளங்கிவருகின்றது. டொலரோ யூரோவையோ மணிப்பையில் கொண்டுபோவோருக்குத் தான் லாயக்கு.

ஒரு நட்சத்திர உணவகம் என்பதால் வெள்ளைத் தலைகள் தான் அதிகம் தென்பட்டன. எனக்குப் பிடித்த முன்பே திருவனந்தபுரத்தில் ருசித்த கறிமீன்வறுவலுடன் சாப்பாடு கிடைத்தது. சாப்பிடும் போது ஏதோ செயற்கைத் தன்மையை உணரமுடிந்தது. சாதாரண உணவகங்கள் என்றாலும் அவற்றில் சுவை அதிகம். இங்கேயோ அதிகம் விலை கொடுத்து சப்பென்று சாப்பிட்டமாதிரி என்று நினைத்துக் கொண்டேன்.
சாரதியும் உண்டு களைத்து காரில் ஓய்வெடுத்துக்கொண்டார்.
அவரைத் தொந்தரவு செய்யாமல் நடை தூரத்தில் இருந்த கொச்சின் துறைமுகத்தை நோக்கி நடை போட்டேன். அப்போது தான் வழி நெடுக உள்ள துறைமுகத்தை அண்டிய உண்வகங்களைக் காண நேர்ந்தது. அவற்றைக் கடக்கும் போது மூக்கின் நாசியை தயாரித்துக்கொண்டிருக்கும் கடலுணவின் மணம் கைது செய்துகொண்டிருந்தது.
மலபார் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் வகை வகையான மீன், இறால், நண்டு இத்தியாதி கடலுணவுகள் வாரியிறைக்கப்பட்டுக் குவியல் குவியல்களாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. அவற்றை அங்கேயே வாங்கிப் பக்கத்தில் உள்ள அந்த நடைபாதையோர உணவகங்களில் கொடுத்தால் சுவையான கறியை உடனேயே சமைத்துத் தருகின்றார்கள். அடடா நல்லதொரு அனுபவத்தைத் தவறவிட்டுவிட்டோமே என்று மனம் புழுங்கியது. கொச்சின் கடற்கரையைத் தொட்டு அழுத்தமாக முத்தம் கொடுத்தவாறே பாரிய கப்பல்கள் அணிவகுக்கின்றன. Chinese net எனப்படும் நீண்டவலைக்கட்டமைப்பும் , ஆங்காங்கே சிற்றரசர்கள் போல தெல்லுத் தெல்லாகச் சிறுபடகுகளும் தென்படுகின்றன. போர்த்துக்கேயர் பாவித்த பீரங்கி ஒன்று கடற்கரை நடைபாதையை விட்டுவிலகிய முட்புதர் ஒன்றில் தென்படுகின்றது. எதுவித கவனிப்பாரும் இன்றிக் கடல் மேல் விழி வைத்துக் கரள் கட்டிய தேகத்தோடு காத்திருக்கின்றது அது. இந்தத் துறைமுகம் எந்தவிதமான தங்கி இளைப்பாறும் தரத்தில் உள்ள கடற்கரையாக இல்லாமல் கடல்வணிகத்தின் கேந்திரமாகவே தென்படுகின்றது. ஆனாலும் காதலர்கள் உட்பட கூட்டம் கூட்டமான சனத்திரளுக்குக் குறைவில்லை.
அடுத்த பதிவில் மேலும் சில படங்களுடன் கொச்சின் பற்றிய பார்வை தொடரும்.

வீண்டும் காணாம்......

Saturday, January 27, 2007

கொச்சினில் கண்ட கள்ளுக்கடை

மே 29, நண்பகல் 12.00 மணி (இந்திய நேரம்)

ஒரு சிறு இடைவேளைக்குப் பின் கேரளச் சுற்றுப் பயணம் தொடர்கிறது. கெளரி ரெசிடென்ஸ் இலிருந்து அவர்கள் ஒழுங்கு செய்த வாடகைக் கார் மூலம் கொச்சின் நோக்கிப் பயணப்பட ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். ஆலப்புழாவிலிருந்து கொச்சினுக்கு வாடகைக்கார் ரூ 900 வரை முடிகிறது, ஏனெனில் திரும்பிவரும்போது வண்டி வெறுமையாக வரவேண்டியதால் தான் இந்த இரட்டைக்கட்டணம். நான் மேலதிகமாக 5 மணி நேரம் கொச்சினைச் சுற்றிப்பார்க்கவும் இதே காரைப் பாவிக்கலாமேயென்று மொத்தமாக 1500 ரூபா செலவில் கார் ஒழுங்கு செய்யப்பட்டது. காரில் அமர்கின்றேன். கொச்சின் ஹனீபாவைத்தவிர (பாசப்பறவைகள் இயக்குனர், நடிகர்) வேறொன்றுமே கொச்சின் பற்றி அறியாத எனக்கு, அந்தப் புது உலகம் தேடி என் மனம் ஆலாய்ப் பறக்கப் பயணப்படுகிறது கார் கொச்சின் நோக்கி.

கேரள நகரங்களில் நான் கண்ட ஒரு விஷயம் ஒவ்வொரு நகரமும் எதோ ஒரு வகையில் பண்பாட்டு ரீதியாகவோ அல்லது சுற்றுச் சூழல் அமைப்பிலோ சில மாறுதல்களோடு இருக்கின்றன. காரில் போய்க்கொண்டிருக்கும் போது எதிர்ப்படும் இயற்கைக் காட்சிகளை அனுபவித்தவாறே பயணிக்கிறேன். வழக்கம் போல நிறைய மலையாளப் படங்கள் பார்த்துக் கோர்த்துவைத்த மலையாளச் சொற்களைக் கலந்து தூவி வாகனச் சாரதியோடு பேச்சுக் கச்சேரியும் சேர்ந்துகொள்கிறது. பசுமைப் புரட்சி செய்தது போல வழியெங்கும் எதிர்ப்படும் தென்னை, கமுகு (பாக்கு), மாமரங்கள் சாட்சியங்களாக வீதியோரங்களில் கை கோர்த்து நிற்கின்றன.

முன்னர் நான் திருவனந்தபுர வலத்தில் சொன்னது போல மலையாளமும் தமிழும் கலந்த பெயர்ப்பலகைகள் தான் அதிகம் தென்படுகின்றன. TEA /சாய் என்ற ஒரு பெயர்ப்பலகையும் கள்ளு என்று தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகையும் கண்ணாற் கண்ட சில சான்றுகள்.


கொச்சின் போனதும் முதலில் நேரே போனது Mattancherry Palace என்ற இடம்.
இது 1555 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை பின்னர் கொச்சின் ராஜாவாக இருந்த வீரகோளவர்மாவிற்கு (1537 - 1561) அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. தங்களால் அழிக்கப்பட்ட கோயில் ஒன்றிற்கு மாற்றீடாக இலஞ்சமாகவே இதனைப் போர்த்துக்கேயர் இந்த மன்னனுக்குக் கொடுத்ததோடு கூடவே தாம் சில சலுகைகளையும் நன்மைகளையும் பெறவேண்டும் என்பதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. பின்னர் 1663 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் இந்தப் பிரதேசத்தைப் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றி இந்த மத்தன்சேரி பாலஸ் என்ற பெயரையும் Dutch Palace என்று மாற்றிக்கொண்டார்கள்.


இந்தக் கோட்டையை ஒட்டிய தகவற் பலகை மூலம் இதை அறிந்துகொண்டேன்.நுளைவுச் சீட்டை வாசலில் இருக்கும் அன்பர்களிடம் பெற்றுக்கொண்டு உள்ளே நுளைகிறேன். இங்கே Cental Hall , Coronation Hall ஆகிய பகுதிகள் உள்ளன. 1864 ஆம் ஆண்டிலிருந்து கொச்சினை ஆண்ட மகாராஜாக்களின் உருவங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு சுவற்றை நிறைக்கின்றன. உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்பதால் அவற்றைச் சுடமுடியவில்லை.

ராமாயணம், மகாபாரதம், கிருஷ்ண லீலை போன்ற இதிகாசக்கதைகளின் நிகழ்வுகள் சுவர்ச் சித்திரங்களாக (murals) இன்னொரு பக்கம் நிறைக்கின்றன. பழங்கால நாணயங்கள், பல்லக்கு, முத்திரைகள், அதிலும் குறிப்பாக ராஜா ராம வர்மா (1914 - 1939), ராஜா ரவி வர்மாவின் படம் பொறித்த முத்திரைகள். 1897, 1783 ஆண்டுக்காலப் பகுதியில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள் கண்ணாடிப் பெட்டிகளில் அணி செய்கின்றன. மலபார் பிரதேசத்தின் அன்றைய எல்லை வரைபடமும் இருக்கின்றது. இந்த வரைபடம் JAN THIN என்பவரால் இது ஆக்கப்பட்டு 1687 ஆம் ஆண்டு மீள் புதுப்பிக்கப்பட்டதாகக் குறிப்பொன்று அதிலே சொல்கின்றது. எவ்வளவு பழமை வாய்ந்தது பார்த்தீர்களா?

மேலும் 1696 ஆம் ஆண்டில் இருந்த கொச்சினின் வரைபடம், ANNO என்பவரால் கீறப்பட்ட 1677 ஆம் ஆண்டு காலகட்டத்தினதும், 166ம் ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் காலத்துக் கொச்சினின் வரைபடமும் தென்படுகின்றன. சோபா, ப்ரெய்லி(braille) எழுத்தில் விளக்கப்படும் கலாச்சாரப் பிரிவுகள், தலைப்பாகை, வாட்கள், ஊஞ்சல், குடைகள், ஆபரணங்கள் போன்றவையும் வரலாற்றின் சாட்சியப் பதிவுகளாக இருக்கின்றன. பார்வதி, சிவன் திருமணம் கீற்று ஓவியமாக வரையப்பட்டிருக்கின்றது.



கடற்கரையை ஒட்டிய இந்த மாளிகையின் அருகே ஒரு இந்து ஆலயம் உள்ளது. (பார்க்க படம்) இந்த ஆலயத்திற்கு இந்துக்கள் மட்டுமே அனுமதி என்றும் வெளியே உள்ள தகவற் பலகை சொல்லுகின்றது.

திருச்சு வரும்.......

Thursday, December 28, 2006

சிட்னி வலைப்பதிவர் சந்திப்புக்கள்

ஜூன் 17, சனிக்கிழமை இரவு 10.00 மணி

இரு தினங்களுக்கு முன் கனக சிறீ அண்ணா என் ஜீ மெயிலுக்கு மடல் ஒன்று தட்டி விட்டார். இப்படி

கானா பிரபா,

எமது சக வலைப்பதிவாளர் நா. கண்ணன் (கொரியா) தற்போது அவுஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். இவ்வார இறுதியில் சிட்னிக்கு வருகிறார்.

சனியன்று இரவு கருத்துக்களத்தில் ஒரு பேட்டி எடுத்தால் எப்படி?

கரும்பு தின்னக் கூலியா? மடல் பார்த்த மறு கணமே, "தாராளமாகச் செய்யலாம், கூட்டிவாருங்கள் வானொலி நிலையத்துக்கு, என்றேன் நான்.
படம் இடமிருந்து வலம் : திருநந்தகுமார், நா.கண்ணன் மற்றும் கானா

சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் நா.கண்ணன், திரு.நந்தகுமார் (உயர் கல்வி மாணவர்களுக்கான கல்வி ஒருங்கமைப்பாளர், ஆசிரியர்) கூடவே சிறீ அண்ணா ஆகியோர் வந்தார்கள்.

"இவர் தான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" பதிவு எழுதியவர் என்று சிறீ அண்ணா, நா.கண்ணனுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். (ஆஹா, நல்ல அறிமுகம்:-))

எனக்கும் கண்ணனை அறிவது அன்றுதான் முதல் முறை, அவருக்கும் அப்படியே. ஆனால் கூடவந்தவர்களுக்கோ அவரோடு நீண்ட காலம் மடல் மூலமாகவும், இணையத்தில் தமிழ்ச் செயற்பாடுகள் மூலமாகவும் பார்க்காமலே நல்ல அறிமுகம் இருந்தது (கோப்பெருந்தேவன் பிசிராந்தையார் நட்போ).

சம்பிரதாயமான உரையாடல்களைத் தொடர்ந்து கண்ணனுடனான நேர்காணல் ஆரம்பமாயிற்று. பேசவந்தவருக்கு ஒரு தூண்டில் போட்டு அவரை நிறையப் பேசவைக்கும் சுதந்திரம் கொடுப்பது என் நேர்காணல் பாணி. அதுவே கண்ணனுக்கும் நடந்தது.
படம்: நா.கண்ணன் மற்றும் கானா

மதுரையில் தான் மாணவராக இருந்த காலத்தில் எழுந்த ஈழத்தமிழர் ஆதரவு முன்னொடுப்புக்கள், தன் எழுத்து அனுபவம், மதுரைத் திட்டம், புளக்கர் பயன்பாடு பற்றி நிறையவே சுவையாகப் பேசினார் அவர். முழுமையான பேட்டியைக் கேட்க
கங்காரு நாட்டில் கண்ணனின் குரல்

ஆகஸ்ட் 18, 2006, வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி
இவர் தான் நெல்லைக்கிறுக்கன்

சிங்கார சிட்னி என்று இப்படி ஒரு தலைப்பில் தன் பதிவாக இட்டார் நெல்லைக்கிறுக்கன். யாரப்பா இந்த ஆளு, நம்மூர் வந்து சிட்னி முருகனைச் சந்திச்சவரை நாமும் சந்திக்கவேணும் என்று நினைத்து அவருக்கு மடல் போட்டேன். வெள்ளைக்கிழமை சிட்னியில் சந்திப்பதாக முடிவாயிற்று. நம்மூரில் காதலர்கள் தான் கோயிலுக்கு வந்து சந்திப்பார்கள், நம்ம கொடுப்பினை, சிட்னியில் நடந்த ஒவ்வொரு வலைப்பதிவர் சந்திப்புமே இதுவரை சிட்னி முருகன் ஆலயத்தில் தான் நடந்திருக்கின்றன.

அந்த வகையில் வெள்ளி மாலை ஏழு மணிக்கு ஆலயம் போய் முதலில் பிரகார தரிசனம் முடித்து விட்டு ஆலயத்தின் வெளியே வந்து நெல்லைக்கிறுக்கனை செல்போனில் அழைக்கிறேன். இருவருமே முன் பின் பார்த்திராதவர்கள் என்பதால் அடையாளம் கிடையாது. காதில் செல்பேனை ஒத்தியபடி வெளியே வந்தவரை கை நீட்டி வரவேற்க அவரும் பளிச்சென்று சிரிப்போடு கை குலுக்க அவர் தான் நெல்லைக் கிறுக்கன்.என் கணிப்பில் அவரின் புனைப்பெயரை வைத்து ஆள் ஒரு நாற்பது வயசுக்காரர் என்று நினைத்த வேளை பச்சப் புள்ளைக்கு மீசை வச்ச மாதிரி அவர் இருந்தார். பேச்சை விட அதிகம் புன்சிரிப்பு தான் அவரிடமிருந்து வெளிப்பட்டது. "திருநெல்வேலி சிங்கம்லே நீரு, பேசும்லே" என்று கேட்டுத் தான் பேசவைக்க முடிந்தது.

நானும் அவரும் சிட்னி முருகன் ஆலயக்குருக்கள் ரவி ஐயருடன் தமிழக நிலவரங்களை ஊர்வாரியாக மேய்ந்தோம். முழுமையாகப் படிக்க, நெல்லைக்கிறுக்கனின் சிட்னியில் பண்பாளர்களைச் சந்தித்தேன்

அப்போது கஸ்தூரிப் பெண்ணும், மழை ஷ்ரேயாவும் , கார்திக் வேலுவும் கூட வருவதாகச் சொன்னார் நெல்லையார். கஸ்தூரிப் பெண், கார்திக் வந்தாயிற்று, சிவாஜி சூட்டிம் முடித்து தாமதமாக ஷ்ரேயா வந்தார். இவர்கள் எல்லோரையும் அன்று தான் நான் சந்திக்கக் கூடியதாக இருந்தது, நெல்லையார் புன்ணியத்தில்.கஸ்தூரிப் பெண்ணின் நாகப்பட்டினம், கோவை, ரெக்ஸ்டைல் துறை, டெல்லி, சிட்னி வாழ் குழந்தைகளின் தமிழ்ப் படிப்பு என்று பேச்சுத் தாவலிடையே கார்திக்வேலுவும் சேர்ந்து அணி செய்தார். நானும் நெல்லைக்கிறுக்கரும் நல்ல மலையாளப்படங்களையும், கேரளாப் பயணத்தையும் பேசித்தீர்த்தோம். ஷ்ரேயா அதிகம் பேசவில்லை. கோயிலின் சாப்பாட்டுக்கடையில் வாங்கிய தோசை, இட்லி வடை, (போண்டா கிடையாது) அன்றைய நம் இரவு விருந்தாக இருந்தது. ஆளுக்கொரு பக்கம் கலைந்து போனோம்.

படம்: சிட்னி ஹெலன்ஸ்பேர்க் சிவா விஷ்ணு ஆலயம்

சிட்னி ஹெலன்ஸ்பேர்க் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு நெல்லைக்கிறுக்கரை நம் நண்பர் படை புடை சூழ கணேஷ விசர்ஜனுக்கு அழைத்துப் போனேன். தன் விடியோ கமராவால் ஆசை தீரப்ப் படமெடுத்தார் அவர். பெரும் திரளான கூட்டத்தில் திக்குமுக்காடி மதியச் சாப்பாட்டை வாங்கி கால்வயிறு நிரப்பினோம். வரும் வழியில் 80 களில் வெளிவந்த இசைத்தட்டுக்கள் என் காரில் ஒலிக்க , இளையராஜாவின் இசை ராஜாங்கத்தை சிலாகித்து மகிழ்ந்தோம். குறிப்பாக அக்னி நட்சத்திரம், வருஷம் 16, பன்னீர்ப்புஷ்பங்கள்.

தன் பாட்டனார் கொழும்பில் பலகாலம் இருந்ததாகப் பேச்சின் நடுவே சொன்னார். பேசிக்கொண்டே மெய்மறந்து போய் வழி மாறி 2 மணிநேரச் சுற்றில் ஆறு, மலை, காடு தாண்டி வழியில் கோர்ன் ஐஸ்கிரீமும் வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்து வீடு திரும்ப இரவு 7 மணி ஆயிற்று.எதிர்பாராமல் வந்த சந்திப்பு நெல்லைக் கிறுக்கருடன் இன்னும் தொடர்கின்றது.

ஒக்டோபர் 14, 2006, சனிக்கிழமை காலை 11.20 மணி


சிட்னி வலைப்பதிவர்கள் சந்திப்பில் வந்தவர்கள் தம் புகைப்படத்தை வெளியிடவேண்டாமென்ற கோரிக்கைக்கு மதிப்பளித்து மூத்த வலைப்பதிவர் Spider-man இன் படம் இடம் பெறுகின்றது.


"துளசி கோபால் அம்மையார் வரும் 14 ஆம் திகதி சிட்னிக்கு வருகிறார், நம் வலைப்பதிவர் சந்திப்பு ஒன்று கூடுவோமா" என்ற மின் மடல், தென் துருவ வலைப்பதிவர் சங்கத்து கொ.ப,செ மழை ஷ்ரேயாவிடமிருந்து வந்தது. அநானிகள் தவிர்த்த அனைத்து சிட்னி வலையர்களின் சம்மத மடல் இந்தச் சந்திப்பை உறுதி செய்தது. சிட்னி சிங்கார வேலர் சந்நிதியில் காலை 11.20 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு. அப்படியே நானும் காலையில் என் தேரைக் கிளப்பிக்கொண்டு போய்ச் சந்நிதியை அடைந்தேன்.

முதலில் இனங்கண்டது பொட் டீ கடையாரை. முன் பின் இதுவரை சந்திக்காவிட்டாலும் ஏதோவொரு அலைவரிசை (மொபைல் போனாக இருக்குமோ) நம் இருவரின் சந்திப்பை தானாக ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் கனக்ஸ் என்ற சிறீ அண்ணாவும் வந்து இணந்து கொண்டார். பின்னர் மழை ஷ்ரேயா, கஸ்தூரிப் பெண், துளசிம்மா அவர் கணவர் சகிதம் வந்தார்கள். சம்பிரதாயபூர்வமான அறிமுகப்படுத்தல்கள், போட்டோ செஷன் போன்றவை முடிந்து சனீஸ்வரனுக்கு காக்காய் பிடிக்க பெண்மணிகள் கிளம்பிச் சென்றனர்.

சில மணித்துளிகள் பொட் டீ கடையாரும் , சிறீ அண்ணரும் , நானும் ஈழப் பிரச்சனையில் இருந்து வலைப் பிரச்சனை வரை ஒரு சுற்று வரவும், பெண்மணிகள் மீண்டு(ம்) வந்து இணைந்து கொண்டனர். ஏதாவது ஒரு உணவகம் செல்வோமென்றால் சுவாமியின் பிரசாதமே மதிய உணவு ஆகட்டும் (சாமிக்குத்தம் ஆகிரும்ல) என்று மழை அடம்பிடித்தார். ஒரு உணவு பரிமாறும் கியூவின் பின்னால் துளசிம்மா போய் நிற்கவும் கோயிற் தொண்டர் ஒருவர் வந்து " அம்மா , இங்க வயசானவங்க மட்டும் தான் நிற்கலாம்", உங்க கியூ அப்பால் இருக்கு என்று ஒரு திசையைக் காட்டினார்", துளசிம்மாவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. (இருக்காதா பின்ன)

அடுத்த கியூ சென்று நாம் நிற்க பெண்மணிகள் பின்னால் அணிவகுத்தார்கள். ஆனால் அவர்கள் மெய்மறந்து அரட்டைக் கச்சேரியில் வரிசையை மறந்து நிற்க இடையில் பல புத்திசாலிகள் வரிசை கட்டி நின்றார்கள். தாமதமாகத் தம் நிலை உணர்ந்த அம்மணிகள் முகத்தில் புரட்டாசி சனி எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஒருவாறு முட்டி மோதி மதிய உணவை எடுத்து கோயிற் பின்புறமுள்ள கலாச்சார மண்டபத்துள் நுளைந்து கதிரை மேசை தேடி அனைவரும் ஒருகே ஆகாரம் கழித்தோம்.சாப்பாட்டின் நடுவே வலைப்பதிவுகள் பற்றிய அலசல்.

கோயிலிலிருந்து மீண்டு கஸ்தூரிப்பெண் வீட்டில் அனைவரும் அடைக்கலமானோம். சூடான வடை பரிமாறலுடன் மீண்டும் வலையுலக அலசல். குறிப்பாக மா.சிவகுமாரின் பொருளாதாரக் கட்டுரைகள் பற்றி துளசிம்மா விதந்து பாராட்டினார். இன்னும் சில நல்ல வலைப்பதிவர்கள் பற்றிய பதிவுகள் பற்றிச் சிலாகித்தோம்.

தன் வலைப் பதிவுகளில் சூடாகப் பரிமாறும் பொட் டீ கடை, நிஜத்தில் அளந்து அளந்து தான் தன் வார்த்தைகளை விட்டார். துளசிம்மா தன் எழுத்தைப் போலவே கல கல, இவரின் முதற் சந்திப்பிலேயே பல வருஷ நட்பு என்ற தோரணையில் பழகினார். கஸ்தூரிப் பெண் விருந்தோம்பலின் சிறப்பை தன் வீட்டில் காட்டினார், இவர் வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் பிள்ளையார் சிலை, (தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைவினை விற்பனை நிலையம் வந்த மாதிரி ;-)))
சிறீ அண்ணரும் அளவெடுத்துத் தான் ஏற்கனவே மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போலப் பேசினார் :-)
மழை ஷ்ரேயாவுக்கு சிட்னி புன்னகை அரசி பட்டம் கொடுக்கலாமா என்று சொல்லுமளவுக்கு வாயைத் திறந்தால் சிரிப்பைத் தவிர வார்த்தைகள் அவ்வளவு இல்லை. இவ்வளவு தான் நன் சந்தித்த வலைப்பதிவர் பற்றிய என் மதிப்பீடு. மிச்சத்தை வந்து கலந்து கொண்டவர்களும் சொல்லலாம்.

வலைப்பதிவுகளை எப்படித் தேர்ந்தெடுத்து வாசிக்கின்றோம் என்பதற்கு வந்த கருத்துக்களில் சில அவற்றின் விடயதானத்தைக் கொண்டு என்றும், கவர்ச்சிகரமாக தலைப்பு மற்றும் தமிழ் மணத்தில் காட்டப்படும் சுருக்கமான வலைப்பதின் முதற் பந்தியை வைத்து என்றும், அதிக பின்னூட்டலை வைத்து என்றும், குறிப்பிட்ட சில வலைப்பதிவர்களின் பதிவை (பின்னூட்டம் உட்பட) மட்டுமே படிப்பேன் என்றும் கருத்துக்கள் வந்தன.

வலைப் பதிவில் படம் போடுவதில் சிக்கல் என்ற உரிமைப் பிரச்சனை கிளப்பப்பட்ட போது பனங்காட்டு நரியைப் (Fire fox) பயன்படுத்தினால் சுலபமாக வலையேற்றலாம் என்ற என் யோசனை ஏற்கப்பட்டு பின் சந்திப்புக்கு வந்த சில வலையர்களால் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டது. பனங்காட்டு நரியில் (Fire fox) சில பதிவுகளின் எழுத்துருக்கள் தெரிவதில்லை என்ற கேள்விக்கு, Formatting ஐ எடுத்துவிட்டு மீள் பதியுங்கள் சரியாகிவிடும் என்ற யோசனை ஏற்கப்பட்டது. ஒருவாறு மாலை ஐந்து மணிக்குச் சபை கலைய ஆரம்பித்தது. வலைப்பதிவுகள் பற்றிப் பேசப்பட்ட முதற் சிட்னி சந்திப்பு என்ற திருப்தியோடு நகர்ந்தோம்.


பிறக்கப் போகும் 2007 ஆம் ஆண்டு நம் எல்லோருக்கும் சுபீட்சமான ஆண்டாக மலர (ஹிம்...ஒவ்வொருவருஷமும் முடியேக்கை இதைத்தானே சொல்லுறம், என்னத்தக் கண்டனாங்கள்) வலைப்பதிவு
ஐயாமார், தாய்மார்கள், அண்ணைமார், அக்காமார், தம்பி, தங்கையருக்கு என் வாழ்த்துக்கள்.