
மாலை நேரச் சிற்றுண்டியை இரசித்துச் சாப்பிட்டுக்கொண்டே சாயாவைக் குடித்துக்கொண்டிருக்கும் போது அருகே வந்த சிஜி பேச்சுக்கொடுத்தார். நேற்று (மே 27) இந்தோனோசியாவின் சிலபகுதிகளில் பூகம்பம் வந்ததாகச் சொன்னார். அட இந்தப் பையன் தன் படகுத் தொழிலோடு உலகச் செய்திகளையும் கேட்டுவைத்திருக்கின்றானே என்று உள்ளுர வியந்தவாறே சிஜியின் மலையாளம் கலந்து ஆங்கிலம் சிறிதளவு தூவிய உரையாடலில் ஒன்றிப்போனேன். சிஜி கோட்டயத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர், இவரைப் பற்றி முன்பும் சொல்லியிருக்கிறேன். 
இந்தப் படகுச் சேவை அரை நாள் கணக்கிலும் உள்ளதாம். அதாவது நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரையானது இச்சேவை. குறுகிய பயணக்காரருக்கு ஏற்றது இது. என் படகு வீடு சற்றுத்திசை திரும்பி இன்னொரு பக்கமாகப் பயணப்பட்டு ஒரு கரையில் தரித்து நின்றது. படகிலிருந்து தாவி வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். நம்மூரில் கொட்டில் போட்ட ஆட்டிறைச்சிக் கடைகள் போல இரண்டு கடைகள் தென்பட்டன. அவை உடனே பிடித்து விற்கப்படும் புத்துணர்வான (fresh) கடலுணவுகள் விற்கும் மீன்கடைகள். Tiger Prawn, Karimeen ஆகிய வகையறாக்கள் பென்னான் பெருசாக இருந்தன. விலையும் அதிகம். கிட்டத்தட்ட ரூ 800 மட்டில் விற்கக்கூடிய கடலுணவு வகையறாக்கள் இருந்தன. இவ்வாறான படகுப்பயணம் செய்வோர் நடுவழியில் இங்கே கடலுணவை வாங்கிப் படகுக்காரரிடம் கொடுத்தால் இரவு உணவுப் படையலாக அவை மாறிவிடும்.இம்மாதிரிப் படகுவீடுகள் மலையாள நடிகர்களான ஜெயராம், திலீப் போன்றவர்களிடம் சொந்தமாக உண்டாம். திலீப் வைத்திருக்கும் படகுவீடு ஒரு மாளிகைக்கு ஒப்பானதாக அதிகவசதிகளோடு உள்ளதாம். அதன் ஒரு நாள் வாடகையே 1 லட்சம் ரூபா வரை செல்லும் என்று சிஜி சொன்னார். இயக்குனர் பாசில் 16 படகுவீடுகளைச் சொந்தமாக வைத்துப் படகுச்சேவையில் அவற்றை ஈடுபடுத்திவருகின்றாராம். யம்மாடி.

படகுப் பயணம் தொடர்ந்தது, கொஞ்சத்தூரம் சென்ற பயணம் சூரியன் வேலை முடித்துச் செல்ல ஆயத்தமாகும் வேளை தரை தட்டியது படகு. இன்றிரவு இங்கேயே தங்கிவிட்டு நாளை காலை தான் மீண்டும் பயணத்தை ஆரம்பிப்பது வழக்கம் என்று சொன்னார் சிஜி. அதை ஆமோதித்தது போல என் பயணத்தில் கூடவே வந்த படகு வீடுகள் சற்றுத்தொலைவான துறைகளில் தங்கியிருந்தன.என் படகுவீட்டுக்காரர்கள் அக்கரையில் இருந்த வீட்டில் இருந்து தற்காலிக மின்சார இணைப்பு கொடுத்ததும் படகில் இருந்த மின்விளக்குகள் எரியத்தொடங்கின. அதோடு கழிப்பறை போன்றவற்றிற்குத் தேவையான நீரையும் மோட்டார் பம்ப் மூலம் படகில் இருந்த நீர்த்தாங்கியில் நிரப்பினார்கள்.

கொஞ்சம் வெளியே சென்று நடப்போம் என்று நினைத்து வெளியே வந்தேன்.படகு தரித்த கரையின் முகப்பில் இருந்த வீடு நம்மூர்ச் சூழ்நிலையை நினைவு படுத்தியது. காரணம் தென்னை மரங்களும் , தீனி தேடும் கோழிகளும், இரைமீட்கும் ஆடுகளும் அந்த இடத்தில் நீக்கமற நிறைந்திருந்தன. சதுப்பான பாத்திகளூடே நடந்து போனேன். சிறு கோயில் ஒன்று தென்பட்டது, சுற்றுப்பிரகார மூர்த்திகளுக்கான பிரகாரங்கள் அரைகுறைச்சீமெந்து தடவிய செங்கற் சுரங்கமாக இருந்தன. கொஞ்ச நேரம் அந்தச்சூழ்நிலையில் நின்றுவிட்டு மீண்டும் படகுவீடு போய் அடைக்கலமானேன். 
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் இரண்டாம் சனிக்கிழமை நடக்கும் பிரமாண்டமான படகுப்போட்டி இங்கிருந்து தான் ஆரம்பமாகுமாம்.நேரு கோப்பை என்று அழைக்கப்படும் இந்தப்படகுப் போட்டி புன்னமடா என்ற வாவியில் ஆரம்பிக்கும். ஆலப்புழா மக்களுக்கு ஒரு கலாச்சாரவிருந்தாக இருக்கும் இந்தப் படகுப்போட்டி உலகின் பல பாகங்களிலிருந்து படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு களியாட்டமான விளையாட்டு விருந்தாக அமைகின்றது. 16 பெரிய படகுகள், 125 ஆட்கள் என்று இந்தப் படகுப்போட்டியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். 
நேரு கோப்பை என்று அழைக்கப்படும் இந்தப்படகுப் போட்டி புன்னமடா என்ற வாவியில் ஆரம்பிக்கும். ஆலப்புழா மக்களுக்கு ஒரு கலாச்சாரவிருந்தாக இருக்கும் இந்தப் படகுப்போட்டி உலகின் பல பாகங்களிலிருந்து படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு களியாட்டமான விளையாட்டு விருந்தாக அமைகின்றது.1952 ஆம் ஆண்டு திருவங்கூர் மற்றும் கொச்சினுக்கு வந்த பண்டித ஜவகர்லால் நேரு, கோட்டயத்திலிருந்து ஆலப்புழாவிற்குப் பயணப்படுகையில் பாம்புப் படகுகளின் போட்டியும் சிறப்பு விருந்தளித்தது, அதில் வெற்றியிட்டிய வீரருக்கு நேரு சுழற்கேடயம் வழங்கிக் கெளரவித்தார். அன்றிலிருந்து ஆரம்பித்த இப்போட்டிகள் வருடா வருடம் ஆகஸ்ட் 2 ஆம் சனிவாரம் நேரு கிண்ணப் போட்டிகளாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பாம்புப் படகுகள் சுண்டான் என்று அழைக்கப்படுகின்றன. (படகுப்போட்டிப் படங்கள் & தகவல் உதவி நேரு கோப்பைக்க்கான இணையம்)
சூரியன் தான் போவதாகப் போக்குக் காட்டியவாறே செல்ல தென்னைமரம் ஒன்றிலிருந்து ஒருவர் கள் இறக்கியவாறே இருந்தார், படகுவீட்டுக்காரர்கள் கரையில் இருந்து வலை போட்டு மீன் பிடித்துப் பிடித்தவற்றை இரவு உணவுக்காகச் சுத்தமாக வெட்டிக் கொடுக்க சிஜி இரவுச் சமையலை ஆரம்பித்தார். மீன் பொரியல், தேங்காய்ப் பூ கலந்த காரட் சம்பல், தேங்காய்ச் செட்டுத் துண்டம் கலந்த பயற்றங்காய்த் துவையல், இவற்றுடன் அரிசிச் சோறும் சப்பாத்தியும் சூடாகப் பரிமாறப்பட்டது.
இரவாக ஆக நுளம்புகளின் அட்டகாசமும், ஈசல்களின் ஆக்கிரமிப்பும் படகுவீட்டுக்குள் கொட்டமடித்தன. ஆனால் முன்னெச்சரிக்கையாக நான் வாங்கிச் சென்ற Mortein நுளம்புத்திரியைக் காலுக்கடியிலும் மேசையிலுமாகப் பற்றவைத்தேன், புகைக்குழல் இதமாக ஆடியவாறே நுளம்புகளை விரட்டத்தொடங்கியது. இப்படியான இரவுத் தங்கல் நண்பர் குழாமாக வந்து குடித்துக் கும்மாளமடிப்போருக்கு மிகவும் ஏற்றது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.மாலை 7.30 மணிக்குத் தரித்து நின்ற படகுவீடு அந்த இரவு முழுவதும் ஓய்வெடுத்துக்கொண்டது.
சுபராத்ரி....
இந்தியாவிற்கு ஒவ்வொரு தடவை நான் பயணிக்கும் போதும் என் பெரும்பாலான நாட்கள் பெங்களூரில் தான் கழிந்திருக்கின்றது. Garden City என்ற நிலை மாறி Concrete Ciyஆக மாறிவிட்ட பெங்களூரின் நிலை கேரளாவிற்கும் ஏற்படாதிருக்கக் கடவது, வெளிநாட்டுக்கம்பனிகளையும் கேரளாவைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள் வெள்ளைக்காரன்களை விடமாட்டார்கள் என்று மனதார நினைத்துக்கொண்டேன். இருக்காதா பின்னே, இவ்வளவு அழகான பசுமைப்புரட்சி பூமி யூ எஸ் கரன்சி பட்டு நாசமாகப் போகவேண்டுமா? 
என் படகுப்பயண உலாத்தலில் கடந்துபோகும் நாளாந்தப் பயணிகள் போக்குவரத்துப் படகுகளில் இருக்கும் பயணிகள் வயது வேறுபாடின்றிக் கையெத்தி ஆரவாரிக்கின்றார்கள். ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கும், ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குமாக பயணிகளை உப்புமூட்டை காவிக்கொண்டு போகின்றன படகுகள்.
நன்றாக வயிறுமுட்டச் சாப்பிட்டு நடக்கமுடியாமல் நடப்பவன் போல மெல்ல மெல்ல ஊர்ந்தே போகின்றது என் படகு.


அக்கரையில் தென்படும் வீடுகளில் ஆட்டுக்குட்டிகள் தென்பட்டன. எங்கே சிஜியைக் காணவில்லை என்று பார்த்தால் சாயங்காலப் பரிமாறல் செய்ய அடுக்களை போய்விட்டார். சில மணித்துளிகளில் வந்த சிஜி மேஜையில் ஏற்கனவே கொசுக்கள் சல்லாபித்துக் க கூடைக்குள் இருந்த கதலிப்பழங்களை ஒருபுறம் வைத்துவிட்டு சாப்பாட்டு மேஜையில் விரிப்பை அகற்றிப் புதிய விரிப்பைப் போட்டு அழகுபடுத்தினார்.



வயிறுமுட்டசாப்பிட்டவனைப் போல ஆடி அசைந்து மெதுவாகப் பயணப்படுகின்றது படகு வீடு. மெதுவான இப்பயணம் ஆங்காங்கு காணும் காட்சிகளை உள்வாங்கவும் வசதியாக இருக்கின்றது. கரைமருங்கில் அசோகா மரங்களும் கண்ணுக்குத் தப்பவில்லை. வாழைமரங்கள் கூட உள்ளேன் ஐயா என்கின்றன. கல் வீடுகளும், குடிசைகளுமாக மாறி மாறித் தென்பட்டது கடலுக்கும் வர்க்க ஏறத்தாழ்வு இருப்பதைக் காட்டியது.இந்த நீரோட்டம் நடுவே கொல்லம் 83KM சம்புக்குளம் 13 KM என்று தூரவழிகாட்டிகள் காட்டிநிற்கின்றன. 
ஒருபக்கக் கரையைப் பார்க்கின்றேன். அக்கரையில் கடலை மறித்து நெற்பாசனம் செய்யப்படுகின்றது. மறுபுறத்தே விரிந்த பரப்பில் இயற்கையாக அமைந்த ஆயிரம் தாமரை மொட்டுகளோடு தடாகப் பரப்பு.
கடலோரம் வாங்கிய காற்றும், படகு அலைச்சலும் இயல்பாகவே வயிற்றைக் கிளற்ப் பசியை வா என்று சொல்லும் வேளை அது. சிஜியின் கைவண்ணத்தில் மணம் குணம் நிறைந்த மீன்பொரியல் குண்டு குண்டாய் வெள்ளைச் சோறு, நறுக்கிய வெண்டைக்காய்த் துவையல், தக்காளிச்சாலட், என்று பெருவிருந்தே படைக்கப்படுகின்றது. வெள்ளை முத்துக்களாய் நம்மூர் அரிசியின் நான்கு மடங்கு பருமனில் குண்டு குண்டாய் அரிசிச்சோறு கோப்பையை நிறைத்திருந்தது. வகையான காய்கறிகளின் சேர்க்கையில் ரஜினி வாய்ஸ் கொடுத்தபோது இருந்த தி.மு.க, த.மா.க கூட்டணி போல அமர்க்களமாக இருந்தது. எனக்கும் பேச்சுக்கொடுத்துத் திறமையான சமையலையும் செய்து முடித்த சிஜியை வாயாரப் புகழ்ந்தேன் மீன் பொரியலைச் சுவைத்தவாறே.
மதிய உணவின் பின்னர் ஒருமணி நேர ஓய்வு. கிடைத்த அந்த நேரத்தில் கடலோடி நண்பர்கள் தரை விரிப்பை விரித்து மதியத்தூக்கம் கொள்கின்றார்கள். நானும் என் படுக்கை சென்றமர்ந்து "ஆச்சி பயணம் போகிறாள்" நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கின்றேன். ஒரு மணி நேர ஓய்வு கழிகின்றது. இப்பொது மழையும் ஒதுங்கிக்கொண்டது. அரை வட்டமடித்தது போன்ற நீர்ப்பரப்பில் மீண்டும் பயணப்படுகின்றது படகுவீடு. 


குறுகலான சந்துக்குள்ளால் பயணப்பட்டுப் பின் ஒரு வேலிப் பொட்டுக்கு முன்னால் ஜீப் நின்றது. என் படகுவீட்டுக்குப் பொறுப்பான கடலோடி நண்பர்கள் எனக்காகக் காத்திருக்கின்றார்கள். கொட்டும் மழைச் சாரல் வழிந்தோடும் தம் முகத்தைப் புறங்கையால் துடைத்து எறிந்துகொண்டே வாயெல்லாம் பல்லாக வரவேற்கின்றார்கள், இவர்களில் ஒரு கிழவனார், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு இளைஞன் அடக்கம். 
ஒருவாறு படகுத்துறையை வந்தடைந்தோம், இதற்கு ஐந்து நிமிட நேரமும் பிடித்திருக்காது. ஆலப்புழாவின் பிரசித்திபெற்ற அந்தத்துறையில் பரந்த கரையெங்கணும் படகு வீடுகள், போருக்குத் தயாராகக் காத்து அணிவகுத்து நிற்கும் வீரர்கள் போலக் கம்பீரமாக நிற்கின்றன. எல்லாப்படகுகளுமே மதியம் 12 மணிக்குத் தான் புறப்படுமாம். உங்களின் வசதிக்கேற்ப அரை நாள் அல்லது முழு நாள் வாடகைக்கு இவற்றை நீங்கள் ஒழுங்கு செய்யலாம். அரை நாள் வாடகைக்குக் கட்டணமும் பார்க்கும் இடங்களும் குறைவு. நான் ஒரு நாள் வாடகையாக இப்படகுவீட்டை ஒழுங்கு செய்திருந்தேன். அதாவது முதல் நாள் நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த நாட் காலை 10 மணி வரை. இப்படகு வீடுகள் அழகான நேர்த்தியான கைவேலைப்பாடுகளுடன் உள்ளன. நடுத்தர வயதுக்காரர் எட்டிப் பாய்ந்து படகினுள் ஏறிவிட்டு என்னைக் கை தூக்கி உள்ளே அனுப்புகின்றார்.
நான் ஒப்பந்தம் செய்த படகு வீடு காதலர்களும் புதிதாகக் கல்யாணமாகித் தேனிலவு வருபவர்களும் விரும்பித் தேர்தெடுப்பதாம். படகு வீட்டு இளைஞன் இதைச் சரளமாக ஆங்கிலத்தில் சொல்லியவாறேப் படகின் அருமை பெருமைகளை அள்ளிவிட்டான், இங்கு சமையல் செய்பவரும் கூட இவன் தான். சுத்தமான ஒற்றைப் படுக்கையும், கழிப்பறையும் கொண்டதாக இருந்தது என் புகலிடம். ஹோர்ண் அடித்துச் சல்யூட் செய்தவாறே பக்கத்துப் படகுக்காரர்களும் இணையப் பயணம் ஆரம்பமாகின்றது. இளைஞர்கள் சைக்கிள்களில் சம பயணத்தில் இரட்டைச் சவாரி செய்வது போல இருக்கிறது. உற்சாகமும் மகிழ்ச்சியும் எனக்குள் பரவ, ஒரு குழந்தை போல எட்டிக் கடலைப் பார்க்கின்றேன். அரைகுறை ஆடை பூண்டு இருக்கும் காட்டு ராணிகள் போலக் கடற் தாவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதக்கின்றன. கரையெங்கணும் தென்னை, விலாட் மா மரங்கள், வாழை, பூவரச மரங்கள் சாமரம் வீசுவதுபோல நிரையாக நிற்கின்றன. 
அட... கடந்து போன கடலை ஒட்டிய குட்டிச்சுவர்களைக் கூட அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் நிரப்பியிருக்கின்றன. பாலத்துறை பொலிஸ் ஸ்டேசன் B டிவிஷன் தெரிகின்றது. கரைப் பாதையில் எழுந்து நிற்கும் மின்சாரத்தூண்கள் இந்தக் கடற்கழிப் பிரதேசத்திலும் மின்சாரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இந்தக் கடற்கழிப் பரப்பு நன்னீர் ஓடையாக உள்ளதாம். சந்தன நிற வேட்டிகளோடு தூரத்தே புள்ளிகளாகக் கேரளத்துச் சேட்டன்கள். கரையை ஒட்டிய வீட்டு முற்றங்களை சுங்க இலாகா அதிகாரிகள் போலச் சல்லடை போடுகின்றன அவர்களின் வளர்ப்புப் பிராணிகளான வாத்துகளும் கோழிகளும். கடற்கழியை ஒட்டிய கிராம வாழ்க்கையைக் கைபிடித்துக் கொண்டு காட்டும் சுற்றுலா வழிகாட்டி போலப் படகும் மெதுவாகத் தள்ளாடியவாறே அமைதியாகப் பயணிக்கின்றது.
ஆலப்புழாவிற்கு வந்த காரணம் நிறைவேறும் நாள் இன்று என்பதால் முந்தய நாட் தூக்கம் சற்றுக் குறைச்சலாகவும், மனசுக்குள் சுற்றுலா ஆர்வம் அதிகப்படியாகவும் ஏறி உட்கார்ந்துகொண்டது. இப்படியான இரண்டும் கெட்டான் நிலையில் தூக்கம் என்ன தூக்கம் என்று நினைத்துக்கொண்டே வாரிச்சுருட்டி எழுந்துகொண்டேன். ஜன்னலால் எட்டிப்பார்த்த போது வருணபகவான் தொடர்ந்தும் ஓவர் டைமில் தூறிக்கொண்டே இருந்தார். கதகதப்பான அந்த சூழ்நிலை யாழ்ப்பாண மார்கழிக் குளிரை நினைவுபடுத்தியது. இருந்தும், சோம்பலை மூட்டை கட்டி வைத்துவிட்டுக் காலைக் கடன்களை முடித்து நன்றாகக் குளியல் ஒன்று எடுத்தேன்.
என் கால்கள் ஈரமண் வீதியில் பதிக்க, கண்களோ வீதியோரக்கடைகளை நோட்டம் விட்டவாறே உணவகத்தைத் தேடின. 





