Social Icons

Pages

Thursday, August 03, 2006

படகுவீட்டுப்பயணம் ஆரம்பம்

மே 28, மதியம் 12.00 மணி (இந்திய நேரம்)
நான் முன்னர் சொன்னது போல ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த படகு வீட்டுப் பயணத்துக்கான நேரமும் வந்தது. நான் தங்கியிருந்த அறையைப் பூட்டி என் சூட்கேசை கெளரி ரெசிடென்ஸ் இன் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டுக் காத்திருந்தேன். அந்த விருந்தினர் விடுதி இளைஞர்கள் ஓடி ஓடிப் படகுப் பயணத்துக்காகக் காத்திருந்த என்னைப் போன்ற விருந்தினர்களை பொருத்தமான படகுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து பதிவேட்டில் குறிக்கின்றார்கள். இங்கே வங்கி அட்டைப் பணக்கொடுப்பனவு இல்லாததால் 3,500 ரூபாவிற்கான இந்திய நோட்டுக்களை நீட்டுகின்றேன். தன் ஈரக்கைகளைத் தன் கட்டிய வேட்டியில் தடவி விட்டுச் சுறுக்காகப் பணத்தை வாங்கிப் பெட்டியில் போடுகின்றார் கெளரி ரெசிடென்ஸ் மேலாளரான அந்த இளைஞர். ஆட்தொகைக்கு ஏற்ப கார்களிலும் ஜீப்பிலும் படகு வீடு காணப் போகும் விருந்தினர்களை அள்ளியேற்றிவிட்டுப் பயணப்படுகின்றார்கள்.
குறுகலான சந்துக்குள்ளால் பயணப்பட்டுப் பின் ஒரு வேலிப் பொட்டுக்கு முன்னால் ஜீப் நின்றது. என் படகுவீட்டுக்குப் பொறுப்பான கடலோடி நண்பர்கள் எனக்காகக் காத்திருக்கின்றார்கள். கொட்டும் மழைச் சாரல் வழிந்தோடும் தம் முகத்தைப் புறங்கையால் துடைத்து எறிந்துகொண்டே வாயெல்லாம் பல்லாக வரவேற்கின்றார்கள், இவர்களில் ஒரு கிழவனார், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு இளைஞன் அடக்கம்.
மழைவெள்ளத்தில் புதையாமல் இருக்க என் சப்பாத்துக்களைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டே வருமாறு பணித்தார் ஒருவர். குச்சொழுங்கை இருபக்கமும் வேலி மறைக்கக், செம்பாட்டுத் சதுப்பில் கால்கள் பொத்துப் பொத்தென வெள்ள நீருக்குள் புதைய நடப்பதும் இனிமை. நான் சின்னப் பிள்ளையாக இருக்கும் போது பள்ளிக்கூடம் விட்டுவரும் போது வெள்ளம் காணும் பக்கம் எங்கும் என் கால்கள் அலைந்து அலைந்து வெள்ள நீரைத் துளாவியதும், வீட்டுக்கு வந்ததும் பாட்டா செருப்பிலும் என் காற்சட்டையிலும் ஒட்டிக் கிடந்த சேற்றுப் படலங்களையும் கண்ட என் அம்மா தந்த கிள்ளுப் பரிசும் ஞாபகத்துக்கு வந்து உள்ளுரச்சிரித்தேன்.
ஒருவாறு படகுத்துறையை வந்தடைந்தோம், இதற்கு ஐந்து நிமிட நேரமும் பிடித்திருக்காது. ஆலப்புழாவின் பிரசித்திபெற்ற அந்தத்துறையில் பரந்த கரையெங்கணும் படகு வீடுகள், போருக்குத் தயாராகக் காத்து அணிவகுத்து நிற்கும் வீரர்கள் போலக் கம்பீரமாக நிற்கின்றன. எல்லாப்படகுகளுமே மதியம் 12 மணிக்குத் தான் புறப்படுமாம். உங்களின் வசதிக்கேற்ப அரை நாள் அல்லது முழு நாள் வாடகைக்கு இவற்றை நீங்கள் ஒழுங்கு செய்யலாம். அரை நாள் வாடகைக்குக் கட்டணமும் பார்க்கும் இடங்களும் குறைவு. நான் ஒரு நாள் வாடகையாக இப்படகுவீட்டை ஒழுங்கு செய்திருந்தேன். அதாவது முதல் நாள் நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த நாட் காலை 10 மணி வரை. இப்படகு வீடுகள் அழகான நேர்த்தியான கைவேலைப்பாடுகளுடன் உள்ளன. நடுத்தர வயதுக்காரர் எட்டிப் பாய்ந்து படகினுள் ஏறிவிட்டு என்னைக் கை தூக்கி உள்ளே அனுப்புகின்றார். நான் ஒப்பந்தம் செய்த படகு வீடு காதலர்களும் புதிதாகக் கல்யாணமாகித் தேனிலவு வருபவர்களும் விரும்பித் தேர்தெடுப்பதாம். படகு வீட்டு இளைஞன் இதைச் சரளமாக ஆங்கிலத்தில் சொல்லியவாறேப் படகின் அருமை பெருமைகளை அள்ளிவிட்டான், இங்கு சமையல் செய்பவரும் கூட இவன் தான். சுத்தமான ஒற்றைப் படுக்கையும், கழிப்பறையும் கொண்டதாக இருந்தது என் புகலிடம். ஹோர்ண் அடித்துச் சல்யூட் செய்தவாறே பக்கத்துப் படகுக்காரர்களும் இணையப் பயணம் ஆரம்பமாகின்றது. இளைஞர்கள் சைக்கிள்களில் சம பயணத்தில் இரட்டைச் சவாரி செய்வது போல இருக்கிறது. உற்சாகமும் மகிழ்ச்சியும் எனக்குள் பரவ, ஒரு குழந்தை போல எட்டிக் கடலைப் பார்க்கின்றேன். அரைகுறை ஆடை பூண்டு இருக்கும் காட்டு ராணிகள் போலக் கடற் தாவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதக்கின்றன. கரையெங்கணும் தென்னை, விலாட் மா மரங்கள், வாழை, பூவரச மரங்கள் சாமரம் வீசுவதுபோல நிரையாக நிற்கின்றன. அட... கடந்து போன கடலை ஒட்டிய குட்டிச்சுவர்களைக் கூட அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் நிரப்பியிருக்கின்றன. பாலத்துறை பொலிஸ் ஸ்டேசன் B டிவிஷன் தெரிகின்றது. கரைப் பாதையில் எழுந்து நிற்கும் மின்சாரத்தூண்கள் இந்தக் கடற்கழிப் பிரதேசத்திலும் மின்சாரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கடற்கழிப் பரப்பு நன்னீர் ஓடையாக உள்ளதாம். சந்தன நிற வேட்டிகளோடு தூரத்தே புள்ளிகளாகக் கேரளத்துச் சேட்டன்கள். கரையை ஒட்டிய வீட்டு முற்றங்களை சுங்க இலாகா அதிகாரிகள் போலச் சல்லடை போடுகின்றன அவர்களின் வளர்ப்புப் பிராணிகளான வாத்துகளும் கோழிகளும். கடற்கழியை ஒட்டிய கிராம வாழ்க்கையைக் கைபிடித்துக் கொண்டு காட்டும் சுற்றுலா வழிகாட்டி போலப் படகும் மெதுவாகத் தள்ளாடியவாறே அமைதியாகப் பயணிக்கின்றது.


ஞான் இவிடே வரும்.....

Wednesday, July 19, 2006

கேரளாவின் கடற்கழிச்சுற்றுலா

மே 28, காலை 8.00 மணி (இந்திய நேரம்) ஆலப்புழாவிற்கு வந்த காரணம் நிறைவேறும் நாள் இன்று என்பதால் முந்தய நாட் தூக்கம் சற்றுக் குறைச்சலாகவும், மனசுக்குள் சுற்றுலா ஆர்வம் அதிகப்படியாகவும் ஏறி உட்கார்ந்துகொண்டது. இப்படியான இரண்டும் கெட்டான் நிலையில் தூக்கம் என்ன தூக்கம் என்று நினைத்துக்கொண்டே வாரிச்சுருட்டி எழுந்துகொண்டேன். ஜன்னலால் எட்டிப்பார்த்த போது வருணபகவான் தொடர்ந்தும் ஓவர் டைமில் தூறிக்கொண்டே இருந்தார். கதகதப்பான அந்த சூழ்நிலை யாழ்ப்பாண மார்கழிக் குளிரை நினைவுபடுத்தியது. இருந்தும், சோம்பலை மூட்டை கட்டி வைத்துவிட்டுக் காலைக் கடன்களை முடித்து நன்றாகக் குளியல் ஒன்று எடுத்தேன்.

முதல் நாள் இரவு கெளரி ரெசிடென்ஸ் இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவான பொரிச்ச இறாலும், வட இந்திய ரொட்டித்துண்டங்களும் வெகு சீக்கிரமாகவே ஜீரணமாகிவிட்டதால் , காலை சீக்கிரமாகவே பசியெடுத்தது. புது உடை பூண்டு, மழைத்தூறலை மதியாமல் கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓட்டமுமாக ஆலப்புழா நகரை நோக்கி வேகமெடுத்தன என் கால்கள். கெளரி ரெசிடென்ஸ்ஸிலிருந்து ஒரு 10 நிமிட தூரத்துக்கும் குறைவாகவே ஆலப்புழா நகர் இருந்தது. என் கால்கள் ஈரமண் வீதியில் பதிக்க, கண்களோ வீதியோரக்கடைகளை நோட்டம் விட்டவாறே உணவகத்தைத் தேடின.

என்ற புத்தம் புதிய Flash Restaurant என்ற உணவகம் கண்களில் மாட்டியது. விறு விறுவென உள்ளே போனேன். இருக்கையில் அமர்ந்த போது உணவக முதலாளியும், பணியாளும் சிரித்து வரவேற்று, இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இந்த உணவகம் திறந்ததாகவும், இன்னும் உணவுப் பட்டியல் அச்சில் அடிக்கவில்லை என்றும் சொல்லித் தலையைச் சொறிந்தார்கள்.காலை உணவாக இடியப்பமும், அப்பமும் கிடைக்கும் என்றார்கள். கேரளப் புட்டை ஒருகை பார்க்கலாம் என்றால் எனக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

கேரளப் புட்டு , கேரள உணவகங்களில் கிடைப்பது அரிது என்று நினைக்கிறேன். ஏனெனில் கேரளாவில் மற்றைய உணவகங்களிலும் எனக்கு இதே ஏமாற்றம் தான். மலையாளிகள் தம் வீட்டில் தான் இதை ஆக்குவார்கள் போலும். முட்டை அப்பம் சாப்பிடலாம் என்று நினைத்து ( அப்பத்துக்குள் முட்டை போட்டிருக்கும்) முட்டை அப்பத்துக்கு ஓடர் செய்தேன். கிடைத்தது தனியாக வெறும் அப்பமும், வெங்காயச் சட்னிக்குள் புதைந்த அவிச்ச முட்டையும் தான். முட்டை அப்பம் கேட்ட எனக்கு உள்ளுரச் சிரிப்பு வந்தாலும், அட இது கூட நல்லாயிருக்கே என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டு சாப்பாட்டை ஒரு கை பார்த்தேன். பக்கத்து இருக்கைகளில் இருந்தோரில் பலர் இடியப்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

காலைச் சாப்பாடு முடிந்து மீண்டும் கெளரி ரெசிடென்ஸ் போகிறேன்.மதியம் 12 மணிக்குத் தான் என் படகுச் சுற்றுலா என்பதால் கிடைத்த நேரத்தில் அங்குள்ள கணினியில் இணையத்தளங்களை மேய்கின்றேன். கேரளாவில் இருந்து வரும் ஆங்கிலப் பத்திரிகையில் முதல் நாள் மறைந்த ஒடுவில் உன்னிகிருஷ்ணன் பற்றிய சிறப்புச் செய்திகளும், அவர் பற்றி சக கலைஞர்களின் அனுதாப நினைவுகளும் வந்திருக்கின்றன.

சரி, இனி என் ஆலப்புழா கடற்கழிப் (Backwater) பயணத்தை ஆரம்பிக்க முன்னர், கேரளாவின் இந்தக் கடற்கழிப் பிரதேசங்கள் பற்றிய குறிப்பைக் கேரளச் சுற்றுலாத் தளங்களின் உதவியுடன் தருகின்றேன். அனைத்துப் புகைப்படங்களும் என் கமராவில் சுட்டவை.

கேரளா மாநிலம் 900 கீ மீ பரப்பளவிற்கு மேல் நீர்வழித் தடங்கள், ஆற்றுப்படுக்கைகள், பரவைக்கடல் ஆகியவற்றால் சூழவும், மத்தியிலும் கொண்ட ஒரு பிரதேசம். இப்படியான புவியியல் அமைப்பின் ஆற்று வழித்தடங்கள் எங்கணும், வரலாற்றுச் சிறப்புமிக்க, பழமை பேணும் கிராம அமைப்பும்,கண்கவரும் நீர்வழி நெடும்பயணங்களும், நாகரீகச் சாயம் பூசிக்கொண்டு வரும் கிராமங்களுமான கலவையாக அமைந்து காணப்படுகின்றது. இந்தப் படகு வீட்டின் முக்கியமான பயண இலக்குகள், உங்களுக்கு இந்தப் பயணத்தை ஒழுங்கு செய்து தரும் படகு வீட்டு உரிமையாளர்களாலோ அன்றிப் பயணிகளாலோ தீர்மானிக்கப்படுகின்றது. இந்தப் பயணத்தில் தொடும் பயண இலக்குகளில் குறிப்பிடத்தக்க இடங்களாவன:
( இவை அனைத்துமே உங்கள் ஒரு நாட் பயணத்தில் பார்க்கமுடியாது, மாற்று ஒழுங்குகள் செய்யவேண்டும்).
கொச்சின் (இப்போது கொச்சி என்ற பெயர்) (Cochin) - அரபிக்கடலின் மகாராணி என்று அழைக்கப்படும் கொச்சி மிகப்பிரபலமான பயணப்படுக்கைகளில் ஒன்று.
காரணம், வரலாற்று ரீதியான அம்சங்களையும், சீன வலை எனப்படும் மீன்பிடித் தொழிலைப் பார்க்கும் வாய்ப்புமாகும். கொச்சின் பற்றி நிறையப் பேச இருக்கிறது, பின்னர் கவனித்துக்கொள்கிறேன்.

ஆலப்புழா (Alappuzha ) - என்னுடைய பிரயாணம் ஆலப்புழாவில் மையம் கொண்டிருந்த காரணத்தால், இந்தப் பயணம் பற்றிய வரலாற்று மற்றும் காட்சிக் குறிப்புக்கள் அடுத்த பதிவுகளில் வரும்.
கசர்கொட் (Kasargod) - வட கேரளாவில் அமைந்துள்ள இப்பிரதேசம், வல்லியப்பரம்பா என்று ஆற்றுப் படுக்கை தாங்கியது. பச்சைப் பசேலென்ற இந்தப் பிரதேசம் கேரளத்தின் பசுமைப் புரட்சியைக் காண விரும்புபவர்களுக்கு ஓர் நல்விருந்து.

கொல்லம் (Kollam) - கேரளத்தலைநகர் திருவனந்தபுடத்திலிருந்து 70 கீ.மீ தொலைவில் உள்ள இப்பிரதேசம், அஸ்தமுடி என்ற ஏரி தழுவி அமைந்துள்ள மிகப்பழைமையான துறைமுகமாகும். கோட்டயம் (Kottayam) - கடற்பயணம் செய்பவர்களுக்கு இயற்கை வனப்புள்ள மலைப் பிரதேசங்களைக் காணவேண்டுமென்றால் தவறாது போகவேண்டிய இடம். இங்கு விளையும் ரப்பர் பயிர் உற்பத்தியையும் கண்டு களிக்கலாம்.

கோழிக்கோடு (Kozhikode) - வட கேரளாவில் உள்ளது. பல தெரிவுகளில் கோடு போட்ட பருத்தி ஆடைகளுக்கு மவுசு கிடைத்த ஊர், அதனாலேயே கோழிக்கோடு என்ற பெயரும் வந்ததாகச் சொல்லப்படுகின்றது. நாடுகாண் பயணி வஸ்கொடகாமா 1498 இல் வந்திறங்கிய இடம். 16 கீ.மீ தொலைவில் கப்பட் என்ற கடற்கரையும் உண்டு.

குமரகம் (Kumarakom) - பூலோக சொர்க்கம் என்றழைக்கப்படும் இவ்வூர் வேம்பநாடு வாவியை ஒட்டி அமைந்துள்ளது. பறவைகள் சரணாலயமும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

குத்தநாடு (Kuttanad) - கேரளாவின் அரிசிக்கோப்பை (Ricebowl of Kerala) என்று செல்லமாக அழைக்கப்படும் இவ்வூர், நெற்கதிர்ப் பாசனத்துக்குப் புகழ் பெற்றது. கடல்மட்டத்துக்குக் கீழேயே நெற்கதிர்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இம்மாதிரியான பாசனச் செய்கையில் கடலுக்குக் குறுக்கே அணை போடப்பட்டுப் நெற்செய்கை விளைவிக்கப்படுகின்றது. இந்த ஒப்பீடுகைக்குக் கடல்மட்டத்துக்குக் கீழே உள்ள நாடான நெதர்லாந்து நாட்டுப் புவியியல் அமைப்பும் பொருந்தப்படுகின்றது.

திருவல்லம் (Thiruvallam) - திருவனந்தபுரத்தில் இருந்து 6 கீ.மீ தொலைவில் இருக்கும் இவ்விடம் கிள்ளி மற்றும் காரமன்னா ஆகிய இரண்டு ஆறுகளின் இணைப்பில் அமைந்து காணப்படுகின்றது. நான் முன்னர் சொன்ன வேலி என்ற சுற்றுலாத்தலத்திற்கு அண்மையிலும் திருவல்லம் இருக்கின்றது.

திருவனந்தபுரம் (Thiruvananthapuram) - கேரளக் கடற்கழிச் சுற்றுலாப் பயணங்களின் ஆரம்பத்தொடுகையாக இப்பிரதேசம் விளங்குகின்றது. இந்த இடத்தைப் பற்றித் தானே நிறையச் சொல்லிவிட்டேனே? :-)

கெளரி ரெசிடென்ஸ்காரரே என் படகு வீட்டுப் பயணத்தை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். ஒரு அறையுடன் கூடிய அந்தப் படகு வீடு என் 22 மணி நேரப் பயணத்துக்காக ரூ 3500 மட்டுமே செலவாகியது. இந்தச் செலவில் படகு வாடகை, மதிய உணவு, மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு, அடுத்த நாட் காலை உணவு ஆகியவை அடக்கம். இந்த ஒரு அறையுடன் கூடிய படகு வீடு நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கும் மிகவும் பொருத்தமானது. மேலதிக கட்டணம் எதுவுமில்லை. இந்தப் படகு வீட்டிற்குள்ளேயே மேற்கத்தேயத் தரத்தில் கழிப்பறையும் உண்டு. இந்தப் படகுவீடுகளை அரை நாள் வாடகை அல்லது ஒரு நாள் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். நான் போன படகு வீட்டைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. அதுவரை,

ஷமிக்கோ... (Excuse me)

Tuesday, July 04, 2006

ரச தந்திரம் - ஆலப்புழாவில் பார்த்த சினிமா

மே 27, மாலை 6.10 (இந்திய நேரம்)
ஆலபுழாவிற்கு மாலை 5 மணிக்கே வந்ததால் இரவு தழுவும் நேரம் வரை கடைத் தெருக்களை வலம் வரலாம் என்று நினைத்துச் சுற்றினேன், மிகச் சிறிய நகர் என்பதால் அதிக நேரம் உலாவத் தேவை இருக்கவில்லை. திடீரென்று ஒரு யோசனை வந்தது. ஆலப்புழாவில் ஒரு சினிமாவில் நல்ல மலையாளப்படம் பார்க்கலாமே என்ற முடிவு தான் அது. ஒரு ஆட்டோக்காரரை வழி மறித்து நல்ல படம் ஓடும் தியேட்டருக்குக் கொண்டுபோகும்படி கூறினேன். அந்தப்பக்கம் அடல்ஸ் ஒன்லி படங்கள் தான் ஓடும் (தயாரிப்பாளர்கள் கவனிக்க), நல்ல தியேட்டர் கொண்டு போகிறேன் என்றவாறே சாந்தி தியேட்டர் என்ற வளாகத்துக்கு அழைத்துச் சென்றார். நல்ல புத்தம் புதுத் தியேட்டராக அது இருந்தது. நான் தியேட்டரை அடைந்தபோது மாலை 6.10, படமோ 6.20 இற்கே ஆரம்பமாகிவிட்டிருந்தது. இருக்கைகள், இதுவரை நான் போன தமிழ் சினிமாத் தியேட்டர்களின் இருக்கைகளை விட நல்ல தரத்தில் இருந்தன. நான் பார்த்த படம், பார்க்கவேண்டும் என்று பிரியப்பட்ட "ரச தந்திரம்".

ரச தந்திரம் என்றால் இரசாயனம் (வேதியியல்) என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திரைப்படத்திற்கு மலையாளத் திரையுலகில் நல்லதொரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் மோகன்லால், மீரா ஜாஸ்மின் இணைமும் முதல் படம், மலையாளத்திரையுலகின் நல்லதொரு இயக்குனர் சத்தியன் அந்திக்காடு மற்றும் மோகன்லால் 12 வருடத்திற்குப் பின் இணையும் படம் என்ற எதிர்பார்ப்புக்களே அவை. கூடவே இசைஞானி இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் வேறு. படமும் அந்த எதிர்பார்ப்புக்களை ஏமாற்றாமல் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது.

படத்தின் கதைக் கரு இதுதான். தச்சுச் தொழிலாளியாக வேலை பார்ப்பவன் பிறேமச்சந்திரன் (மோகன்லால்) , கூடவே தன் தந்தையை மட்டுமே குடும்ப உறுப்பினராகக் கொண்டிருக்கிறான். ஒரு சமயம் இவன் தன் தச்சுத் தொழிலாள நண்பர்களுடன் ஒருவீட்டின் திருத்தவேலைகள் செய்யும் போது அவ்வீட்டுக்காரர்களால் கொடுமைப்படுத்தப் படும் கண்மணி (மீரா ஜாஸ்மின்) என்ற வேலைக்காரி மீது அனுதாபப்படுகின்றான். கண்மணி சேலத்தைச் சேர்ந்த தமிழ்பெண் என்றும், அநாதையாகிப் போன அவள் தன் வயிற்றுப்பிழைப்புக்காகவே இப்படிக் கஷ்டப்படுகின்றாள் என்பதையும் தெரிந்துகொண்ட பிறேமச்சந்திரன் அவளை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றி இன்னோர் இடத்தில் வேலைக்கமர்த்த முயற்சி செய்கின்றான். இதற்கிடையில் அந்தக் குடும்பத்தாரின் தொடர் துன்புறுத்தல்களைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்யமுயற்சி செய்கிறாள் கண்மணி. இதைக் கண்ட பிறேமச்சந்திரன் அவளைக் காப்பாற்றி தற்காலிகமாக ஒரு இடத்தில் மறைத்து வைக்கின்றான். அவளும் விடலைப் பையன் போல மாறுவேடம் பூண்டு நடிக்கிறாள். இதற்குள் கண்மணியைக் காணவில்லை என்று வீட்டார் கொடுக்கும் புகார் , தொடர்ந்த குழப்பங்களால் கண்மணி, தான் பிறேமச்சந்திரன் மேல் கொண்ட காதலால் தான் ஓடி வந்ததாகக் கூறுகிறாள். பின்னர் அவன் மேல் உண்மையான அபிமானமும் அவளுக்கு ஏற்படுகின்றது. ஆனால் கண்மணியின் காதலை ஏற்கமறுத்து விலகி விலகிப் போகும் பிறேமச்சந்திரன் ஒரு கட்டத்தில் தான் ஒரு ஜெயில் தண்டனைக் கைதி என்ற உண்மையைச் சொல்லும் போது படம் இன்னொரு திசையில் பயணப்படுகின்றது.முழுக்கதையையும் சொன்னால் VCD இல் கூட நீங்கள் பார்க்கமாட்டீர்கள்.

படத்தின் முதற்பாதியில் மீரா ஜாஸ்மின் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் , மறுபாதி மோகன்லால் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் காட்டியிருப்பது இந்தப் படத்தின் திரைக்கதையின் சிறப்பு. போரடிக்காமல் நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படமாக சத்தியன் அந்திக்காடு தந்திருப்பது அவரின் இயக்குனர் முத்திரையில் இன்னொரு முத்து.

மலையாளப்படங்களில் கவனிக்கக் கூடிய இன்னொரு அம்சம் , ஒரே நடிகர் குழுவே பெரும்பாலான படங்களில் நடிப்பது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் தம் வித்தியாசமான பாத்திரத்தேர்வைச் செய்வது.

மோகன்லாலின் தச்சுத் தொழில்கூட முதலாளியாக வந்து ஆபாசம்/அடி உதையற்ற நல்லதொரு நகைச்சுவை நடிப்பை வழங்கியிருக்கிறர் இன்னசென்ட் , (இவர் சந்திரமுகி மூலப் பதிப்பான மணிச்சித்திர தாழு படத்தில் வடிவேலு பாத்திரத்தில் வந்தவர்) . இவர் ஒரு காட்சியில் சும்மா வந்து போனாலே தியேட்டர் கதிரைகள் சிரிப்பால் குலுங்குகின்றன.

அதே போல் இன்னொரு நகைச்சுவை நடிகர் ஜெகதி சிறீக்குமார் , மீரா ஜாஸ்மினின் தாய்மாமனாக வந்து தமிழ் பேசிக் கலக்கல் நடிப்பை வழங்கும் போது எம். ஆர்.ராதாவை நினைவுபடுத்துகின்றார்.

படம் முழுக்கவே தனியான நகைச்சுவைக் காட்சி இல்லாது பெரும்பாலான நடிகர்களே கதையோட்டத்தோடு நகைச்சுவை நடிப்பையும் வழங்கியிருக்கிறார்கள்.

கவியூர் பொன்னம்மாவிற்கு வழக்கமாக தமிழ் சினிமாவில் மனோரமா அதிகம் செய்யும் செண்டிமெண்ட் பாத்திரம்.
அநாதை வேலைக்காரியாக அல்லற்படுவதாகட்டும் , டீன் ஏஜ் பையனாக படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பதாகட்டும், மீரா ஜாஸ்மின் பின்னியெடுக்கிறார். குறிப்பாக இவரின் ஆண் வேடம் எவ்வளவு இயல்பானது என்று தெரிந்து கொள்ள, மோகன் லால் கடைக்கு அனுப்பி சாமான் வாங்கிவரச் சொல்லிவிட்டு மாடியின் சாளரம் வழியே அவர் பார்க்கும் போது , இளம் பையன் போல நடை நடந்து கடையில் இருந்து தொங்கும் வாழைக்குலையில், ஒரு பழத்தை எடுத்து இலாவகமாக உரித்து மோகன்லாலைப் பார்த்தவாறே மிடுக்காகச் சாப்பிடும் போது , ஆஹா என்னவொரு இயல்பான நடிப்பு.

ம் தமிழ்சினிமா நாயகர்கள் 60 வயதிலும் உம்மா உம்மம்மா பாடிக்கொண்டும், வீர அரசியல் பேசிக்கொண்டும் இருக்கையில் மோகன்லால் போன்ற மலையாளத்து நாயகர்கள் வியப்பளிக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இப்படமும் ஓர் சான்று. குறிப்பாக ஒரு காட்சியில் தன் நெருக்கடியான சூழ்நிலையிலும் அசட்டுச் சிரிப்பை வரவளைத்து நடிக்கும் காட்சியே நல்ல உதாரணம்.இவர், பாரதியின் " நிமிர்ந்த நன்னடையும்" என்ற கவிதையை மலையாளத்தமிழில் பேசும் போது நெருடலாக இருந்தாலும், மலையாளக் கதாபாத்திரமே அவ்வாறு பேசுவது போலக் காண்பிப்பதால் மன்னித்துவிடலாம்.

80 களில் தமிழ் சினிமா உலகில் இசைச்சக்கரவர்த்தியாக இருந்த இளையராஜா இப்போது கேரளாவின் சக்கரவர்த்தியாகி விட்டார் போலும். மனுஷர் பின்னணி இசையிலும் சரி பாடல்களிலும் சரி பின்னியெடுத்துவிட்டார். இந்தப்படத்துக்கு இளையராஜாவின் இசை இல்லை என்றால் என்ற கற்பனை வந்து பயம்கொள்ள வைக்குமளவிற்கு அவரின் ஈடுபாடு தெரிகிறது. பொன்னாவணிப் பாடம், பூ குங்குமப் பூ, ஆத்தங்கரையோரம், என்று எதையும் ஒதுக்கிவிட முடியாத அருமையான பாடல்கள். இன்னும் மலையாளப் பாடல் தேர்வில் முதல் 10 பாடல்களில் முதலாவாதாகவே பொன்னாவணிப் பாடம் பாடல் இருக்கிறது.

Bangalore Landmark இல் இசைத்தட்டை வாங்கி என் காரில் ஒலிக்கவிட்டிருக்கிறேன். இன்னும் எடுக்கவே மனசு வரவில்லை.
இப்படப்பாடல்களை இணையத்தில் கேட்க
http://www.raaga.com/channels/malayalam/movie/M0000961.html

தந்தை மகன் பாசக்காட்சிகளும் தொடரும் பாடலும் மட்டும் இப்படத்திற்கு ஒரு திருஷ்டிகழிப்பு.

மீரா ஜாஸ்மின் வேலை பார்க்கும் வீட்டின் அரை லூசு மூதாட்டியின் குறும்புகள், இதுவரை நான் எந்தப்படங்களிலும் காணாத பாத்திரம்.

இப்படத்தில் குறிப்பிடவேண்டிய இன்னொரு பாத்திரம் , பண்ணையாராக வந்த ஒடுவில் உன்னிகிருஷ்ணன் பாத்திரம். பல படங்களில் இவரின் குணச்சித்திர நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்படத்தில் வழக்கத்துக்கு மாறாக இவர் முக வீங்கியிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. அடுத்த நாள் ஆலப்புழாவில் வைத்து பத்திரிகை பார்த்தபோது தான் தெரிந்துகொண்டேன். நான் இப்படம் பார்த்த இதே நாள் (27/05/06) ஒடுவில் உன்னிகிருஷ்ணனும் இறந்துவிட்டாராம். அடூரின் தேசிய விருது பெற்ற "நிழல் கூத்து" திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகராக நடித்தமைக்கு விருதும் வாங்கியவர். ரச தந்திரம் நடிக்கும் போதே டயாலிஸிஸ் நோய் கண்டு சிரமப்பட்டே நடித்ததாக இயக்குனர் தன் அஞ்சலியில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தில் இவர் நாதஸ்வரத்தை பொழுது போக்காக வாசிக்கும் காட்சியிலேயே இந்த அற்புதக் கலைஞனின் சிறப்பு விளங்கும். இக்கட்டுரை மூலம் அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

இப்படம் முழுமையான ஒரு மசாலாப் படமாக இருந்தாலும் நுட்பமான மனித உணர்வுகளை அது காட்டத்தவறவில்லை. தொடர்ந்து ஹொலிவூட் படங்களைப் பார்த்துப் பிரதிபண்ணும் தமிழ் சினிமா இயக்குனர் பலர் , கேரளாப் பக்கமும் தம் பார்வையைத் திருப்பினால் நல்ல பல திரைக்கதைகளைத் தமிழ் ரசிகனும் பார்க்கும் வாய்ப்பு அதிகப்படும். அதை விடுத்து படம் வெற்றி பெற வேறொரு தந்திரமும் அவர்கள் செய்யத் தேவையில்லை.

படம் முடிந்து சாந்தி தியேட்டரை விட்டு வெளியேறுகின்றேன். நேரம் இரவு 9.15, ஆலப்புழாக் கடைத்தெருக்கள் இரவின் போர்வையில் தூங்கிக்கிடக்கின்றன.

திருச்சு வரும்.....

Friday, June 30, 2006

தங்குமிடம் தந்த சுகம்

மே 27, மாலை 5.00 (இந்திய நேரம்)

கெளரி ரெசிடென்ஸ் (Gorwri Residence), இது தான் நான் ஆலப்புழாவில் இருக்கும் வேளை தங்குவதற்காகத் தேர்ந்தெடுத்த இடம். இணையம் மூலமாக இந்தத் தங்குமிடம் பற்றி அறிந்து, அதில் கொடுக்கப்பட்ட தொலைபேசி மூலமாக நான் அவுஸ்திரேலியாவில் இருந்து புறப்பட முன்னதாகவே முற்பதிவு செய்துவிட்டேன்.

ஒரு அறை தனிப்பாவனைக்கான நவீன வசதிகொண்ட கழிப்பறை குழியலறை ஆகியவற்றோடு சேர்த்து ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? வெறும் 500 இந்திய ரூபாய் மட்டுமே. இவ்வளவு மலிவாகக் கிடைக்கிறதே ஏதேனும் கோளாறு இருக்குமோ என்று தான் இந்தத் தங்குமிடம் போகும்வரை சந்தேகத்துடன் இருந்தேன். ஆனால் கிடைத்ததோ ஒரு இன்ப அதிர்ச்சி.

துடிப்பான நாலைந்து இளைஞர்களின் பராமரிப்பில், சுத்தமான, அப்பழுக்கற்ற நல்ல தங்குமிடமாக கெளரி ரெசிடென்ஸ் இருந்தது. எப்போது பார்த்தாலும் சிரித்தமுகத்தோடு உதவி தரும் அந்த இளைஞர்கள் 24 மணி நேரமும் அடுப்பெரித்து நளபாகம் செய்து தரவும் தயாராக இருக்கிறார்கள். சாப்பாடு தனிக்கட்டணம்.

ஒரு முன்மாதிரியான கேரளப் பண்பாட்டில் அமைந்த பெரிய வீடு அது. 24 இன்ரநெற் வசதியும் உண்டு. கட்டணம் வெறும் 40 ருபா. அந்தப்பெரிய வீட்டில் பகுதி பகுதியாக 2, 3 அறைகளாகப் பிரித்து தனி வாசலும், பிரத்தியோக நவீன வசதி செய்யப்பட்ட கழிப்பறையுடன் கூடிய குழியல் அறையும் உண்டு. அவுஸ்திரேலியாவிலிருந்து சில வெள்ளையர்களும் வந்து தங்கியிருந்தார்கள். மிகச்சுத்தமாகச் சுற்றாடல் இருக்கின்றது. நான் தங்கியது அந்த வீட்டின் பின்னே கட்டப்பட்ட தனிஅறையுடன் கூடிய வசதிகள். வீட்டின் முகப்பில் கிடுகால் அமைந்த பாதுகாப்புக் கொட்டிலின் முதிய காவலாளி இருக்கிறார். ஓய்வில் இருக்க வசதியாக முன்முகப்பில் தனிக்கொட்டகை அமைந்திருக்கிறது. பக்கத்து மாமரத்தில் ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கிறது. பகலில் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் அதில் விளையாடி மகிழ்கிறார்கள். பின் வளவில் பல தென்னை மரங்கள் இருக்கின்றன.

காலையில் இந்தத் தென்னை மரங்களில் ஏறிக் கள் இறக்கிக் கொண்டுபோகிறார் ஒரு வாலிபர். கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது, ஈரம் படிந்த அந்தத் தென்னைமரங்களில் சரசரவென ஏறி அவர் செய்யும் கள் இறக்கும் ஜாலத்தைப் பார்க்கவேண்டும் நீங்கள். ஒவ்வொரு மரமாக ஏறிச் சேர்த்த கள்ளைத் கொண்டுவந்த பீப்பாயில் நிறைத்தவாறே நகர்கிறார் அவர்.

இந்தத் தங்குமிடம் அமைந்த காணியே நம் கலாச்சார நூதனசாலையோ என எண்ணுமளவிற்கு, தற்போது பயன்பாட்டில் அருகிப் போகும், ஆட்டுக்கால், கப்பிக்கிணறு, துளசிமாடம், பழைய சாய்மனைக்கதிரை, நுணுக்கமான வேலைப்பாடமைந்த கதிரைகள், இருக்கைகள், அலுமாரிகள்,1900 ஆம் ஆண்டுகாலப் புகைப்படங்கள், இலாந்தர் விளக்கு என்று இந்த வீட்டில் அணிசெய்கின்றன. நல்ல சித்திரத் தொகுப்புக்களும், சிலைகளும் கூட இங்கிருக்கின்றன.


காற்சட்டை போட்ட இருபதின் விளிம்பில் இருக்கும் பையன், விருந்தினர் மனம்கோணாதபடி தன் உதவிகளைச் செய்கின்றார்.
இங்குள்ள முகாமையாளராக இருக்கும் முப்பத்து வயதுக்குள் இருக்கும் இளைஞன், நான் முன் சொன்ன உடன்படிக்கையோடு ஒத்து மலையாளத்தில் சில ஆங்கிலச் சொல்லத் தூவியவாறே சொன்னர். " துபாயில் இருக்கும் முதலாளியின் ஆசை, விருந்தினராக இங்கு வரும் யாரும் நிறைவான சந்தோஷத்துடனே போகவேண்டும், பணம் இரண்டாம் பட்சம் தான்"
உண்மை, அந்த முதலாளி காணும் கனவை நனவாக்குகிறார்கள் இந்த இளைஞர்கள்.

இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களில் யாராதல் ஆலப்புழா சென்றால் தங்குவதற்கு நான் 100% சிபார்சு செய்வேன் இந்த கெளரி ரெசிடென்ஸ் ஐ. எத்தனையோ ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருந்தும் கிடைக்காத திருப்தி இங்கு எனக்குக் கிடைத்தது.

கெளரி ரெசிடென்ஸ் இன் இணைய முகவரி இதோ.
http://www.gowriresidence.com/

இன்றுவரை எனக்கிருக்கும் கேள்வி இதுதான்.
"துபாய்வாசியாகிப் போய்விட்ட கெளரி ரெசிடென்ஸ் உரிமையாளரே! இந்த அழகான வீட்டையும், நல்ல இடத்தையும் விட்டுப் போக எப்படி மனசு வந்தது உங்களுக்கு?"


பின்ன பறயான்.......

Tuesday, June 27, 2006

ஆலப்புழாவில் காலடி வைத்தேன்

மே 27, மதியம் 1.00 (இந்திய நேரம்) திருவனந்தபுரம் Highland ஹோட்டலில் இருந்து மதியம் 1.00 மணிக்கு ஆலப்புழா நோக்கிக் காரில் பயணித்தேன். போகும் பாதை நன்கு சீரமைக்கப்பட்ட பெருந்தெருவாக இருந்தது. அடூர் (Adoor) என்ற கிராமத்தை நெருங்குகையில் போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் நம்மவர் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீத் சர்வாணியுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். பயணிக்கும் போது தென்படும் ஊர்ப்பலகைகள் பல கேரளக்கலைஞர்களை ஞாபகப் படுத்துகின்றன. கேரளக் கலைஞர்கள் பலர் தம் ஊரின் பெயரையும் இணைத்துச் சொல்வது நீங்கள் அறிந்ததே.

ஹரிபட் (Haripad) என்ற இடத்தில் இறங்கி, நானும் கார்ச்சாரதியுமாக சூடான நெஸ்கபே அருந்திவிட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்தோம். வழிநெடுகக் காணும் கிராமியக் காட்சிகள், தாம் தம் பழைமை நிலையை மாற்றமாட்டேன் என்று அடம் பிடிப்பது போல எனக்குப் பட்டது. ஆலப்புழாவைக் கார் அண்மித்தபோது மாலை 5.00 ஐக் கைக்கடிகாரம் காட்டியது.

ஆலப்புழா என்ற பெயர்க்காரணம் இதன் புவியியல் அமைப்பைக் கொண்டே ஏற்பட்டது. ஒருபக்கம் கடலையும், மற்றோர் பக்கம் பல்வேறு ஆற்றுக்கூட்டங்களைக்கொண்ட நிலப்பரப்பே ஆலப்புழா என்ற பெயர்க்காரணம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இது அலப்பி (Alleppy) என்றும் அழைக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் தேசாதிபதி கேர்ஸன் பிரபுவால் (Lord Curzon) என்பவரால் கிழக்கின் வெனிஸ் (Venice of the East) என்று சிறப்பிக்கப்பட்டது இந்தப் பிரதேசம். மலையாளத்தில் புழா என்றால் ஆறு என்று குறிக்கப்படும். ஆலப்புழா மாவட்டம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது, சேர்த்தலை (Cherthala), அம்பாலபுழா (Ambalappuzha), குத்தநாடு (Kuttanad),கார்த்திகபள்ளி (Karthikappally), செங்கனூர் (Chengannur), மாவிலேக்கரை (Mavelikkara), ஆகிய ஆறு தாலுகாக்களைக் (நிர்வாகப் பிரிவு) கொண்டு 1414 சதுர கீ.மீ பரப்பளவில் உள்ளது.இதன் மேற்குப் பகுதி லட்ஷ தீவுகளை அணைக்கின்றது. மணிமாலா, பம்பை, அச்சன்கோவில் ஆகிய பேராறுகள் இந்தமாவட்டத்தை யொட்டியுள்ளன. இதில் பம்பை ஆறு கேரளாவின் மூன்றாவது பெரிய ஆறு ஆகும்.

தென்னை உற்பத்திகள் (தேங்காய், கொச்சி, மட்டை, ஈர்க்கு), பாக்கு, நெற்செய்கை, கரும்பு போன்றவை முக்கிய விளைபொருட்களாகவும். தவிர இங்குள்ள மண் தன்மையும் அதிக வருவாய ஏற்படுத்தும் வல்லமையை வழங்கியுள்ளது. குறிப்பாக சீனக் களிமண், lime shell போன்றவை அதிக வருவாயைப் பெற்றுத் தரும் கனியவளங்களாகும்.

கடற்கழி (Backwater) பலவும், ஆழமற்ற களப்பு, நீர்நிலைகள்,பெரிய மலைகள் அற்ற ஆனால் அதிகப் படியான மேட்டு நிலப்பரப்பையும், குன்றுகளையும் கொண்டுள்ளது. வருடத்தில் மார்ச் தொடங்கி மே மாதம் வரை அதிகப்படியான வெப்பத்தையும், யூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றையும்,ஒக்டோபர் தொடங்கி நவம்பர் வரை வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றையும், டிசம்பர் தொடங்கி பெப்ரவரி மாத காலப் பகுதி வரட்சியானதாகவும் அமைந்த காலநிலையை இப்பிரதேசம் கொண்டது.

மக்கட் தொகை 2,105,349 பேர், கல்வியறிவு விகிதாசாரம்: 93.66 % (கேரளாவின் 3 வது நிலையில் இருக்கும் விகிதாச்சாரம்),(தகவல்: கேரளா சுற்றுலாத்துறை)

கிட்டத்தட்ட 4 மணி நேரம் பிடித்த இப்பயணத்தைச் சுருக்கவேண்டுமென்றால் நீங்கள் செய்யவேண்டியது கொச்சினில் இருந்து ஆலப்புழா நேக்கிவருவது. கொச்சினிலும் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. கொச்சினிலிருந்து ஆலப்புழாவிற்கு வெறும் ஒன்றரை மணிநேரம் மட்டுமே பிடிக்கும். திருவனந்தபுரத்திலிருந்து ஆலப்புழாவிற்குப் புகையிரத்திலும் வரலாம். புகையிரத சேவை மாலை 5 மணிக்கு மட்டுமே உண்டு. தவிர சொகுசு பஸ் சேவைகளும் உண்டு. எனக்கு வாடகைக் கார் செலவு ரூ 2200 ஆயிற்று (திரும்பும் செலவு உட்பட). அதிக பயணப் பொதியோடு செல்பவர்களுக்கு வாடகைக்காரே உகந்த வழி. திருவனந்தபுரத்திலிருந்து வாடகைக்கார் மூலம் வந்தால் திரும்பிப் போகும் வாடகைக் கட்டணமும் கொடுக்கவேண்டும். எது வசதியென்று நீங்களே முடிவெடுங்கள்.

ஆறு தாலுகாவைக் கொண்ட தலைநகராக ஆலப்புழா இருந்தாலும் இது ஒரு சிறு நகரமே. கேரளப் பாரம்பரிய அமைப்பில் கோயில்கள் இருக்கும் அதே வேளை நவீன காலக் கோயில்களும் உள்ளன. ஆலப்புழாவில் தங்கிய நாட்களில் அங்குள்ள உடுப்பி சிறீ கிருஷ்ணா ஆலயம், புவனேஸ்வரி அம்மன் ஆகிய கோயில்களுக்குப் போனேன். முகப்பில் தமிழும் மலையாளமும் இணைந்த அறிவிப்புக்கள் புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் உண்டு. ஆலபுழா நகரவீதிகளில் அதிகம் தென்படுவது வாழைக்குலை தொங்கும் கடைகள். ஓவ்வொரு வாழைக் குலைகளும், மம்முட்டியினதும், ஜெயராமினதும் உடல் வாகை நினைவுபடுத்துமளவுக்குப் பென்னான் பெரியவை.

முன்னதாகவே நான் இணையம் மூலம் தகவல் பெற்று முன் பதிவு செய்த கெளரி ரெசிடன்ஸ் ( Gowri Residence) என்ற தங்குமிடத்தில் கார் தரித்து நின்றது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது.

திருச்சு வரும்..........