
ஆலப்புழாவிற்கு வந்த காரணம் நிறைவேறும் நாள் இன்று என்பதால் முந்தய நாட் தூக்கம் சற்றுக் குறைச்சலாகவும், மனசுக்குள் சுற்றுலா ஆர்வம் அதிகப்படியாகவும் ஏறி உட்கார்ந்துகொண்டது. இப்படியான இரண்டும் கெட்டான் நிலையில் தூக்கம் என்ன தூக்கம் என்று நினைத்துக்கொண்டே வாரிச்சுருட்டி எழுந்துகொண்டேன். ஜன்னலால் எட்டிப்பார்த்த போது வருணபகவான் தொடர்ந்தும் ஓவர் டைமில் தூறிக்கொண்டே இருந்தார். கதகதப்பான அந்த சூழ்நிலை யாழ்ப்பாண மார்கழிக் குளிரை நினைவுபடுத்தியது. இருந்தும், சோம்பலை மூட்டை கட்டி வைத்துவிட்டுக் காலைக் கடன்களை முடித்து நன்றாகக் குளியல் ஒன்று எடுத்தேன். முதல் நாள் இரவு கெளரி ரெசிடென்ஸ் இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவான பொரிச்ச இறாலும், வட இந்திய ரொட்டித்துண்டங்களும் வெகு சீக்கிரமாகவே ஜீரணமாகிவிட்டதால் , காலை சீக்கிரமாகவே பசியெடுத்தது. புது உடை பூண்டு, மழைத்தூறலை மதியாமல் கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓட்டமுமாக ஆலப்புழா நகரை நோக்கி வேகமெடுத்தன என் கால்கள். கெளரி ரெசிடென்ஸ்ஸிலிருந்து ஒரு 10 நிமிட தூரத்துக்கும் குறைவாகவே ஆலப்புழா நகர் இருந்தது.
என் கால்கள் ஈரமண் வீதியில் பதிக்க, கண்களோ வீதியோரக்கடைகளை நோட்டம் விட்டவாறே உணவகத்தைத் தேடின. என்ற புத்தம் புதிய Flash Restaurant என்ற உணவகம் கண்களில் மாட்டியது. விறு விறுவென உள்ளே போனேன். இருக்கையில் அமர்ந்த போது உணவக முதலாளியும், பணியாளும் சிரித்து வரவேற்று, இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இந்த உணவகம் திறந்ததாகவும், இன்னும் உணவுப் பட்டியல் அச்சில் அடிக்கவில்லை என்றும் சொல்லித் தலையைச் சொறிந்தார்கள்.காலை உணவாக இடியப்பமும், அப்பமும் கிடைக்கும் என்றார்கள். கேரளப் புட்டை ஒருகை பார்க்கலாம் என்றால் எனக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
கேரளப் புட்டு , கேரள உணவகங்களில் கிடைப்பது அரிது என்று நினைக்கிறேன். ஏனெனில் கேரளாவில் மற்றைய உணவகங்களிலும் எனக்கு இதே ஏமாற்றம் தான். மலையாளிகள் தம் வீட்டில் தான் இதை ஆக்குவார்கள் போலும். முட்டை அப்பம் சாப்பிடலாம் என்று நினைத்து ( அப்பத்துக்குள் முட்டை போட்டிருக்கும்) முட்டை அப்பத்துக்கு ஓடர் செய்தேன். கிடைத்தது தனியாக வெறும் அப்பமும், வெங்காயச் சட்னிக்குள் புதைந்த அவிச்ச முட்டையும் தான். முட்டை அப்பம் கேட்ட எனக்கு உள்ளுரச் சிரிப்பு வந்தாலும், அட இது கூட நல்லாயிருக்கே என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டு சாப்பாட்டை ஒரு கை பார்த்தேன். பக்கத்து இருக்கைகளில் இருந்தோரில் பலர் இடியப்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

காலைச் சாப்பாடு முடிந்து மீண்டும் கெளரி ரெசிடென்ஸ் போகிறேன்.மதியம் 12 மணிக்குத் தான் என் படகுச் சுற்றுலா என்பதால் கிடைத்த நேரத்தில் அங்குள்ள கணினியில் இணையத்தளங்களை மேய்கின்றேன். கேரளாவில் இருந்து வரும் ஆங்கிலப் பத்திரிகையில் முதல் நாள் மறைந்த ஒடுவில் உன்னிகிருஷ்ணன் பற்றிய சிறப்புச் செய்திகளும், அவர் பற்றி சக கலைஞர்களின் அனுதாப நினைவுகளும் வந்திருக்கின்றன.
சரி, இனி என் ஆலப்புழா கடற்கழிப் (Backwater) பயணத்தை ஆரம்பிக்க முன்னர், கேரளாவின் இந்தக் கடற்கழிப் பிரதேசங்கள் பற்றிய குறிப்பைக் கேரளச் சுற்றுலாத் தளங்களின் உதவியுடன் தருகின்றேன். அனைத்துப் புகைப்படங்களும் என் கமராவில் சுட்டவை.
கேரளா மாநிலம் 900 கீ மீ பரப்பளவிற்கு மேல் நீர்வழித் தடங்கள், ஆற்றுப்படுக்கைகள், பரவைக்கடல் ஆகியவற்றால் சூழவும், மத்தியிலும் கொண்ட ஒரு பிரதேசம். இப்படியான புவியியல் அமைப்பின் ஆற்று வழித்தடங்கள் எங்கணும், வரலாற்றுச் சிறப்புமிக்க, பழமை பேணும் கிராம அமைப்பும்,கண்கவரும் நீர்வழி நெடும்பயணங்களும், நாகரீகச் சாயம் பூசிக்கொண்டு வரும் கிராமங்களுமான கலவையாக அமைந்து காணப்படுகின்றது. இந்தப் படகு வீட்டின் முக்கியமான பயண இலக்குகள், உங்களுக்கு இந்தப் பயணத்தை ஒழுங்கு செய்து தரும் படகு வீட்டு உரிமையாளர்களாலோ அன்றிப் பயணிகளாலோ தீர்மானிக்கப்படுகின்றது. இந்தப் பயணத்தில் தொடும் பயண இலக்குகளில் குறிப்பிடத்தக்க இடங்களாவன:
( இவை அனைத்துமே உங்கள் ஒரு நாட் பயணத்தில் பார்க்கமுடியாது, மாற்று ஒழுங்குகள் செய்யவேண்டும்).

கொச்சின் (இப்போது கொச்சி என்ற பெயர்) (Cochin) - அரபிக்கடலின் மகாராணி என்று அழைக்கப்படும் கொச்சி மிகப்பிரபலமான பயணப்படுக்கைகளில் ஒன்று.
காரணம், வரலாற்று ரீதியான அம்சங்களையும், சீன வலை எனப்படும் மீன்பிடித் தொழிலைப் பார்க்கும் வாய்ப்புமாகும். கொச்சின் பற்றி நிறையப் பேச இருக்கிறது, பின்னர் கவனித்துக்கொள்கிறேன்.
ஆலப்புழா (Alappuzha ) - என்னுடைய பிரயாணம் ஆலப்புழாவில் மையம் கொண்டிருந்த காரணத்தால், இந்தப் பயணம் பற்றிய வரலாற்று மற்றும் காட்சிக் குறிப்புக்கள் அடுத்த பதிவுகளில் வரும்.

கசர்கொட் (Kasargod) - வட கேரளாவில் அமைந்துள்ள இப்பிரதேசம், வல்லியப்பரம்பா என்று ஆற்றுப் படுக்கை தாங்கியது. பச்சைப் பசேலென்ற இந்தப் பிரதேசம் கேரளத்தின் பசுமைப் புரட்சியைக் காண விரும்புபவர்களுக்கு ஓர் நல்விருந்து.
கொல்லம் (Kollam) - கேரளத்தலைநகர் திருவனந்தபுடத்திலிருந்து 70 கீ.மீ தொலைவில் உள்ள இப்பிரதேசம், அஸ்தமுடி என்ற ஏரி தழுவி அமைந்துள்ள மிகப்பழைமையான துறைமுகமாகும்.
கோட்டயம் (Kottayam) - கடற்பயணம் செய்பவர்களுக்கு இயற்கை வனப்புள்ள மலைப் பிரதேசங்களைக் காணவேண்டுமென்றால் தவறாது போகவேண்டிய இடம். இங்கு விளையும் ரப்பர் பயிர் உற்பத்தியையும் கண்டு களிக்கலாம்.கோழிக்கோடு (Kozhikode) - வட கேரளாவில் உள்ளது. பல தெரிவுகளில் கோடு போட்ட பருத்தி ஆடைகளுக்கு மவுசு கிடைத்த ஊர், அதனாலேயே கோழிக்கோடு என்ற பெயரும் வந்ததாகச் சொல்லப்படுகின்றது. நாடுகாண் பயணி வஸ்கொடகாமா 1498 இல் வந்திறங்கிய இடம். 16 கீ.மீ தொலைவில் கப்பட் என்ற கடற்கரையும் உண்டு.
குமரகம் (Kumarakom) - பூலோக சொர்க்கம் என்றழைக்கப்படும் இவ்வூர் வேம்பநாடு வாவியை ஒட்டி அமைந்துள்ளது. பறவைகள் சரணாலயமும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

குத்தநாடு (Kuttanad) - கேரளாவின் அரிசிக்கோப்பை (Ricebowl of Kerala) என்று செல்லமாக அழைக்கப்படும் இவ்வூர், நெற்கதிர்ப் பாசனத்துக்குப் புகழ் பெற்றது. கடல்மட்டத்துக்குக் கீழேயே நெற்கதிர்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இம்மாதிரியான பாசனச் செய்கையில் கடலுக்குக் குறுக்கே அணை போடப்பட்டுப் நெற்செய்கை விளைவிக்கப்படுகின்றது. இந்த ஒப்பீடுகைக்குக் கடல்மட்டத்துக்குக் கீழே உள்ள நாடான நெதர்லாந்து நாட்டுப் புவியியல் அமைப்பும் பொருந்தப்படுகின்றது.
திருவல்லம் (Thiruvallam) - திருவனந்தபுரத்தில் இருந்து 6 கீ.மீ தொலைவில் இருக்கும் இவ்விடம் கிள்ளி மற்றும் காரமன்னா ஆகிய இரண்டு ஆறுகளின் இணைப்பில் அமைந்து காணப்படுகின்றது. நான் முன்னர் சொன்ன வேலி என்ற சுற்றுலாத்தலத்திற்கு அண்மையிலும் திருவல்லம் இருக்கின்றது.
திருவனந்தபுரம் (Thiruvananthapuram) - கேரளக் கடற்கழிச் சுற்றுலாப் பயணங்களின் ஆரம்பத்தொடுகையாக இப்பிரதேசம் விளங்குகின்றது. இந்த இடத்தைப் பற்றித் தானே நிறையச் சொல்லிவிட்டேனே? :-)

கெளரி ரெசிடென்ஸ்காரரே என் படகு வீட்டுப் பயணத்தை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். ஒரு அறையுடன் கூடிய அந்தப் படகு வீடு என் 22 மணி நேரப் பயணத்துக்காக ரூ 3500 மட்டுமே செலவாகியது. இந்தச் செலவில் படகு வாடகை, மதிய உணவு, மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு, அடுத்த நாட் காலை உணவு ஆகியவை அடக்கம். இந்த ஒரு அறையுடன் கூடிய படகு வீடு நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கும் மிகவும் பொருத்தமானது. மேலதிக கட்டணம் எதுவுமில்லை. இந்தப் படகு வீட்டிற்குள்ளேயே மேற்கத்தேயத் தரத்தில் கழிப்பறையும் உண்டு. இந்தப் படகுவீடுகளை அரை நாள் வாடகை அல்லது ஒரு நாள் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். நான் போன படகு வீட்டைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. அதுவரை,
ஷமிக்கோ... (Excuse me)



நான் தியேட்டரை அடைந்தபோது மாலை 6.10, படமோ 6.20 இற்கே ஆரம்பமாகிவிட்டிருந்தது. இருக்கைகள், இதுவரை நான் போன தமிழ் சினிமாத் தியேட்டர்களின் இருக்கைகளை விட நல்ல தரத்தில் இருந்தன. நான் பார்த்த படம், பார்க்கவேண்டும் என்று பிரியப்பட்ட "ரச தந்திரம்".









கெளரி ரெசிடென்ஸ் (Gorwri Residence), இது தான் நான் ஆலப்புழாவில் இருக்கும் வேளை தங்குவதற்காகத் தேர்ந்தெடுத்த இடம். இணையம் மூலமாக இந்தத் தங்குமிடம் பற்றி அறிந்து, அதில் கொடுக்கப்பட்ட தொலைபேசி மூலமாக நான் அவுஸ்திரேலியாவில் இருந்து புறப்பட முன்னதாகவே முற்பதிவு செய்துவிட்டேன். 

வீட்டின் முகப்பில் கிடுகால் அமைந்த பாதுகாப்புக் கொட்டிலின் முதிய காவலாளி இருக்கிறார். ஓய்வில் இருக்க வசதியாக முன்முகப்பில் தனிக்கொட்டகை அமைந்திருக்கிறது. பக்கத்து மாமரத்தில் ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கிறது. பகலில் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் அதில் விளையாடி மகிழ்கிறார்கள். பின் வளவில் பல தென்னை மரங்கள் இருக்கின்றன.
காலையில் இந்தத் தென்னை மரங்களில் ஏறிக் கள் இறக்கிக் கொண்டுபோகிறார் ஒரு வாலிபர். கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது, ஈரம் படிந்த அந்தத் தென்னைமரங்களில் சரசரவென ஏறி அவர் செய்யும் கள் இறக்கும் ஜாலத்தைப் பார்க்கவேண்டும் நீங்கள். ஒவ்வொரு மரமாக ஏறிச் சேர்த்த கள்ளைத் கொண்டுவந்த பீப்பாயில் நிறைத்தவாறே நகர்கிறார் அவர்.




திருவனந்தபுரம் Highland ஹோட்டலில் இருந்து மதியம் 1.00 மணிக்கு ஆலப்புழா நோக்கிக் காரில் பயணித்தேன். போகும் பாதை நன்கு சீரமைக்கப்பட்ட பெருந்தெருவாக இருந்தது. அடூர் (Adoor) என்ற கிராமத்தை நெருங்குகையில் போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் நம்மவர் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீத் சர்வாணியுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.
பயணிக்கும் போது தென்படும் ஊர்ப்பலகைகள் பல கேரளக்கலைஞர்களை ஞாபகப் படுத்துகின்றன. கேரளக் கலைஞர்கள் பலர் தம் ஊரின் பெயரையும் இணைத்துச் சொல்வது நீங்கள் அறிந்ததே.



ஆலபுழா நகரவீதிகளில் அதிகம் தென்படுவது வாழைக்குலை தொங்கும் கடைகள். ஓவ்வொரு வாழைக் குலைகளும், மம்முட்டியினதும், ஜெயராமினதும் உடல் வாகை நினைவுபடுத்துமளவுக்குப் பென்னான் பெரியவை. 



வாசலில் செருப்பைக் கழற்றிப் பாதுகாப்பிடத்தில் வைத்துப் போகுமாறு கட்டளையிடுகிறாள் ஒரு அனியத்தி (தங்கச்சிங்கோ). எனக்கு முன்னே வந்த குடும்பத்தின் தலைவர் "நாங்க தமிழ்நாட்டுக்காரங்கம்மா! புரியும்படி சொல்லு" என்று சொல்லவும், அதுவரை மலையாளத்தில் விளித்த அவள் மலையாளத்தில் சிரித்தவாறே தமிழில் கட்டளையிடுகின்றாள், மீராஜாஸ்மின் தமிழ் பேசியதுபோலிருக்கிறது.

கேரள சட்டமன்றத்தைப் பார்க்கின்றேன். அழகே உருவானதாக எந்தவித உச்ச பாதுகாப்புக் கெடுபிடிகளும் அற்று ஒரு சாதாரண கம்யூனிஸ்ட் தொண்டரைப் போல எளிமையாக நிற்கின்றது. கேரளா தலைமைச்செயலகத்தை எம் கார் கடக்கும் போது அங்கும் அதே நிலை.அதனாலோ என்னவோ மக்கள் கூட்டமும் அதிகப்படியாக அங்கு நிறைந்திருக்கின்றது.




எனது ஹோட்டல் போய் உடை மாற்றிவிட்டு முன்னே அமைந்துள்ள அசைவ உணவகம் சென்று கடலுணவுக் கலப்பு அரிசிச் சோறுடன், கேரளாவிற்கே தனித்துவமான கறிமீன் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கின்றேன். நல்ல மலிவான விலையில் சுவையான சாப்பாடு.

Hotel highland இடமிருந்து விடைபெற்று காரில் அமர்கின்றேன். கண்டே இராத காதலியைக் காணும் ஆவலில் பறக்கிறது என் மனம் ஆலப்புழாவை நோக்கி.