Social Icons

Pages

Tuesday, July 31, 2012

லண்டன் நல்ல லண்டன்

The Original Tour பஸ்கம்பனியின் சிவப்பு பஸ் வந்து விட்டது. மேல் தளத்தில் சென்று கொடுக்கப்பட்ட இயர்ஃபோனைக் காதில் செருகி, மறுபாதியை இருக்கையின் முன்னேயிருந்த துளையில் இட்டால் பஸ்ஸில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பேழை வழியாக நாம் பயணிக்கும் பாதைகளையும், வரலாற்றுச் சிறப்பு மிக்க அம்சங்களையும் கூறிக்கொண்டே வந்தது. மிகத்துல்லியமாக பஸ்ஸின் ஓட்டத்தோடு ஒலியும் சேர்ந்து ஈடுபாட்டோடு பயணத்தை அர்ப்பணிக்க, கண்கள் பாதையின் இருமருங்கும் அளைந்தன.

"உங்கள் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம் லண்டனில் தங்கியிருந்து பிரித்தானிய விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் உற்சாகப்படுத்துங்கள்"
"வெளிநாட்டுக்கு விமானச் சீட்டு கிட்டவில்லையா, ஒரு இடமும் போகாமல் இங்கேயே இருந்து ஒலிம்பிக்ஸ் ஐ கண்டு ரசியுங்கள்"
இப்படியெல்லாம் மிரட்டலான விளம்பரங்களை விட்டதே ஒரு விமான நிறுவனம் என்றால் நம்புவீர்களா? பிரிட்டிஷ் ஏர்வேஸ் தான் அது. பெரிய பெரிய விளம்பரப்பதாகைகளில் லண்டன் ஒலிம்பிக்ஸ் ஐ ஆதரித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானக்கம்பனி தன் நாட்டுப்பற்றைக் காட்டியது. கூடவே ஏற்கனவே இருக்கும் வழித்தடங்களில் ஒரு விசேட பாதை உருவாக்கப்பட்டு லண்டன் ஒலிம்பிக்ஸ் இற்காகப் பயணிக்கும் உத்தியோகபூர்வ வாகனங்களே பயணிக்கமுடியும், மீறி யாராவது டயர் வைத்தால் தண்டப்பணம் கட்டவேண்டும் என்றுவேறு ஏற்பாடுகள். நான் பணிபுரியும் British Telecom, எங்கெங்கும் தொங்கும் துணியில் பொறிக்கப்பட்ட அறிவிப்புக்கள் லண்டன் ஒலிம்பிக்ஸ் இன் உத்தியோகபூர்வ தொடர்புசாதனப் பங்காளி என்பதைக் காற்றில் அலைந்தாடிக் கட்டிக்கொண்டிருந்தன.


இங்கிலாந்து பல நூற்றாண்டு பழமையைப் பேணும் நாடுகளில் ஒன்று என்பதைக் கட்டியங்கூறும் விதமாக, பிரமாண்டமாக எழுப்பப்பட்ட கட்டடங்கள் அவற்றில் பொறிக்கப்பட்ட ஆண்டுகள் காட்டி நிற்கின்றன. லண்டன் நகரில் அமைந்திருக்கும் ஒவ்வொரு கட்டிடமுமே ஒரு திறந்தவெளி அருங்காட்சியகங்களாக. இவற்றோடு ஒப்பிடும் போது இங்கிலாந்தவர்களின் புகுந்த வீடு அவுஸ்திரேலியாவின் உச்சபட்ட கட்டிடங்களின் வயதே நூற்றுச் சொச்சம் தான், வயதில் கொள்ளுப்பேத்தி வகையறா. தாயகத்தில் 1980 களில் கட்டிய கட்டிடங்களே யுத்தத்தின் அகோர தாண்டவத்தால் உருத்தெரியாமலும், கழுத்துக்குக் கீழ் முண்டமாகவும் கண்ட கண்களுக்கு லண்டனின் பெரும்பாகத்தில் நடப்பட்டிருக்கும் இந்தக் கட்டிடத்தொகுதிகளை வாய் பிளக்கப்பார்த்துக் கொண்டே போனேன்.

Trafalgar Square ஐ காட்டிக் கொண்டு போனது பஸ், நெப்போலியனின் ஆட்சிக்காலத்தில் பிரெஞ்சு மற்றும் ஸ்பானியப் கடற்படைகளுக்கு எதிராக ஸ்பெயினின் Cape Trafalgar இல் இங்கிலாந்துக் கடற்படையயினர் சந்தித்த வெற்றியை நினைவு கூரும் முகமாக இந்த நாமாகரம் எழுப்பப்பட்டதாம். இன்று அரசியல் மற்றும் பொதுவான நோக்கில் நிகழும் சந்திப்புக்களுக்கான ஒரு மையமாக இது பயன்பட்டு வருகின்றது.




Tower Bridge, Westminster Abbey, Big Ben, Buckingham Palace, London eye, Tower of London என்று ஒவ்வொரு இடமாகவும், அல்லது அதையொட்டிய வீதிகளினூடாகவும் பயணித்தது பஸ். விரும்பிய இடத்தில் இறங்கி அங்கு சுற்றிப் பார்த்து விட்டு அடுத்த பஸ்ஸில் ஏறினால் அதே வழித்தடத்தில் இன்னும் பார்க்கவேண்டிய மிச்ச இடங்களிலும் நின்று செல்லும். ஒரே பயணச்சீட்டைக் காட்டிக் கொண்டே பயணிக்கலாம், முழு நாளும். முதலில் எல்லா இடத்தையும் ஒரு சுற்று வைத்து விட்டு பிறகு ஒவ்வொன்றாகப் பார்ப்போம் என்று நினைத்து பஸ்ஸிலேயே நான் ஒட்டிக் கொள்ள, கூட வந்தவர்களோ ஒவ்வொரு இடங்களில் ஏற, புதுசுகள் சேர்ந்து கொண்டன. எல்லோருமே பெரும்பாலும் ஐரோப்பியர்கள். பக்கத்து நாடுகளில் இருந்து வந்திருக்கிறார்கள்.

இலேசாக மழை தூறத் தொடங்கியது. லண்டனில் இந்தவேளை கடும் கோடை என்றாலும் வர்ணபகவான் இங்கிலாந்துச் சனம் போல டபுள் ஷிப்டில் வேலை பார்க்கிறார். பஸ்ளின் மேலடுக்கில் திறந்தபக்கமாக இருந்த நான் முன்னே வந்து கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தேன்.

Hyde Park ஐக் காட்டினார்கள். என்ன கைப்பாட்டோ என்று எங்கள் ஊரில் சொல்லுமளவுக்கு பிரசித்தம், அது இந்த Hyde Park ஓ தெரியவில்லை. ஏனென்றால் இங்கே Speakers' Corner என்ற பகுதி இருக்கு, யாரும் இங்கு நின்று எதுவும் துணிச்சலாகப் பேசலாமாம்.

விளக்கேந்திய பெருமாட்டி என்று புகழப்பட்ட ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் Nightingale Training School என்ற தாதியர் பயிற்சிப் பள்ளியை அமைத்த St. Thomas' Hospital ஐ நாம் இப்போது பார்க்கிறோம், காதுக்குள் ஒலி சொல்ல முன்னே அந்த வைத்தியசாலை.

மழை பலமாக அடிக்கத் தொடங்க, இனி பஸ் பிரயாணம் சரிப்பட்டுவராது எங்காவது இறங்குவோம் என்று காத்திருந்தால், லண்டனின் புகழ்பெற்ற மெழுகுச் சிலைகளின் கண்காட்சியகம் Madame Tussauds ஐ அண்மிக்கிறோம் என்ற அறிவிப்பு வர, மெல்ல இறங்கி Madame Tussauds திசையில் நடந்தேன். அங்கே போனால் ஒரு திருவிழாக் கூட்டம் உள்ளே நுழையக் காத்திருந்தது. சரி, நுழைவுச் சீட்டை எடுப்போம் என்று போனால் அங்கே இன்னும் இரண்டு மடங்கு கூட்டம். சரி நானும் கூட்டத்தில் ஐக்கியமாவோம் என்று நினைத்து வரிசையில் நின்றேன். நாற்பத்தைந்து நிமிடம் கடந்தும் பாதி வழி தானாம், இன்னும் பாதி வழி இருக்கு என்றார்கள். பாதி வழியிலேயே சில மெழுகுச் சிலைகளைக் கண்ட திருப்தியோடு, இது ஆவுறதில்லை என்று சொல்லிக் கொண்டே, உள்ளே இருந்து வெளியேறினேன். Madame Tussauds இற்கு வருவதென்றால் முன்கூட்டியே இணைய மூலம் நுழைவுச் சீட்டைப் பதிவு செய்வதுதான் உசிதம் போல.

பசி வயிற்றைக் கிள்ள ஒரு Pizza Hut Restaurant இல் அடைக்கலமானேன். வெளியேறும் போது ஏண்டா இங்கே வந்தாய் என்று மனச்சாட்சி கேட்கும் அளவுக்கு மோசமான உணவு அனுபவம். மீண்டும் சிவப்பு பஸ்ஸை நோக்கி ஓடினேன், இம்முறை நிதானமாக ஒவ்வொரு இடத்தையும் இறக்கிச் சென்று உலாத்திப் பார்க்கவேண்டும் என்ற திடசங்கற்பத்தோடு

Sunday, July 22, 2012

லண்டன் நகர் வலம்

லண்டனில் வந்திறங்கிய இரவு எட்டு மணிக்கே கண்ணைச் சொக்கியது காரணம் சிட்னியில் அந்த நேரம் நடுச்சாமம் தாண்டியிருந்தது. அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே எழுந்துவிட்டேன். காலை எழுந்தவுடன் படிப்பு என்பது போல, காலை எழுந்தவுடன் உலாத்தலும் எனக்குப் பொருந்தும். காலை ஏழு மணிக்கெல்லாம் குளித்து முடித்து ஊர் சுற்றக் கிளம்பிவிட்டேன். தனியாளாக ஊர் சுற்றுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. காரணம், விரும்பிய நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம், ஆசைதீரப் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்துத் தள்ளலாம். ஆனால் லண்டனுக்குப் போகும் வரை அங்கே எதையெல்லாம் பார்க்கவேண்டும் என்று எந்தவிதமான திட்டமும் இல்லாமல் தான் இந்தப் பயணம் அமைந்திருந்தது.

நான் இருந்த ஊர் North Cheam, அங்கிருந்து பஸ் மூலம் தான் Morden என்ற ரயில் நிலையத்தை எட்டவேண்டும். North Cheam இல் இருந்து காலையில் ஐந்து நிமிட இடைவேளையில் பஸ் போக்குவரத்து இருந்தது. ரயில், பஸ், மற்றும் படகுச் சேவை முக்கியமான போக்குவரத்து ஊடகங்களாக இருக்கின்றன.
ஒவ்வொரு வலையங்களாகப் (Zone) பிரித்து வலையம் 6 வரை எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன. வலையம் 1 (Zone 1) லண்டனின் பெருநகரப்பகுதியோடு சேர்ந்த பகுதியாகவும், வலையங்கள் கூடக் கூட அவை புறநகர்ப்பகுதிகளாகவும் அமைந்துள்ளன. Zone 6 என்பது அண்மைய வருஷங்களில் லண்டன் பெரும்பாகத்தோடு இணைக்கப்பட்ட பகுதிகளாகவும் விளங்குகின்றன. Oyster Card எனப்படும் பயணச்சீட்டை நீங்கள் விரும்பிய வலையத்துக்கு ஏற்ப வாங்க முடியும். சுற்றுலா செல்வோர் அனைத்து வலையங்களுக்குமானது வாங்கினால் விரும்பிய நேரம் விரும்பிய இடத்துக்குப் போய் வர இந்தப் பயணச் சீட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

லண்டன் நகர பஸ்


அங்கு பயன்பாட்டில் இருக்கும் பஸ்கள் எல்லாமே இரண்டு அடுக்குக் கொண்டவை. சின்னப்பிள்ளையின் ஆசையோடு மேல் அடுக்கில் போய் உட்கார்ந்து கொண்டேன். ஒவ்வொரு தரிப்பாக நிற்கும் போது Morden ரயில் நிலையம் வந்துவிட்டதா என்று எட்டிப்பார்த்தேன். ஒரு முப்பது நிமிட வாக்கில் ரயில் நிலையத்தை அடைந்து விட்டேன். வடபிராந்திய ரயில் சேவையின் கடைசி ரயில் நிலையம் இது. அங்கே ரயில் போக்குவரத்து நிலத்துக்குக் கீழான போக்குவரத்திலும் (underground) அதிக சேவையில் ஈடுபடுகின்றது.
காலையில் அதிக கூட்டம் இல்லை. படுத்துக் கொண்டே போகலாம் போல, லண்டனில் சனக்கூட்டம் அதிகம் என்றார்களே என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் என் நினைப்பில் மண். ஒவ்வொரு ரயில் நிலையமாக கும்பல் கும்பலாக ஏறினார்கள். இறுதியில் நான் இறங்கவேண்டிய Bank என்ற முக்கிய தரிப்பில் வரும்போது ரயில் கொள்ளாத அளவு கூட்டம். கிட்டத்தட்ட தி.நகர் ரங்கநாதன் சாலை மாதிரி.

இன்னும் பழமை பேணும் பொதுத் தொலைபேசி நிலையங்கள்
லண்டனில் ஓடும் Taxi பெரும்பாலும் Fiat தயாரிப்புக்கள்

லண்டனின் கேந்திர முக்கியத்துவம் பெற்ற பகுதியாக Bank என்ற இடம் விளங்குகின்றது. முக்கியமான வங்கிகளின் அலுவலகங்களும் அமைந்துள்ளன. ரயிலில் இருந்து இறங்கியாச்சு, கெளரவம் சிவாஜி கணக்கில் "நான் எங்கே போவேன் எப்படிப் போவேன்" என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். ஆபத்பாந்தவராய் அங்கே கடமையில் இருந்த போலீஸ்காரரை அணுகி பக்கத்தில் ஏதாவது சுற்றுலாப்பயணிகளுக்கான தகவல் நிலையம் உள்ளதா என்று கேட்டேன். அவர் காட்டிய வழியில் ஒரு பத்து நிமிட நடையில் St Paul's Cathedral ஐ அடைந்தேன், அதற்கு அருகாமையில் தான் சுற்றுலாப்பயணிகளுக்கான தகவல் நிலையம் உள்ளது.
வானைத் தொடும் St Paul's Cathedral ஐ ஆவென்று பார்த்தேன். என்னைப் போல ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் இன்னபிற சுற்றுலாப் பயணிகள். லண்டன் சுற்றுலாவின் முக்கியமானதொரு ஸ்தலமாக இந்த St Paul's Cathedral விளங்குகின்றது. கி.பி 1675 and 1710 காலப்பகுதியில் கட்டப்பட்ட இந்தத் தேவாலயம் பல முக்கியமான நிகழ்வுகளை நடத்திய பெருமைக்குரியதானது. விக்டோரியா மகாராணி 1897 ஆம் ஆண்டில் தனது வைரவிழா ஆண்டையும், இரண்டாவது எலிசபெத் மகாராணி 2006 ஆம் ஆம் ஆண்டில் தனது 80 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியதும் இங்கே தான், அத்தோடு முழு உலகே தொலைக்காட்சியில் கண்டு கழித்த சார்ல்ஸ், டயானா திருமணக் கொண்டாட்டம் நடந்ததும் இங்கே தான். உள்ளே சுற்றிப்பார்க்க நுழைவுக்கட்டணமாக 15 இங்கிலாந்து பவுண்ட் அறவிடப்படுகின்றது.

பிரபல கவிஞர், சட்டவல்லுனர் இந்த St Paul's Cathedral இன் பரிபாலகராக இருந்த John Donne (கி.பி 1572 - கி.பி 1631) இன் உருவச் சிலை இந்த ஆலய வளவில் அமைக்கப்பட்டுள்ளது.

வந்தவேலையை விட்டு தேவாலயத்தைச் சுற்றுகிறானே என்று மூளை சொல்லியது. அங்கிருந்து கிளம்பி பொடிநடை தூரத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் நிலையம் சென்றேன். அங்கே புன்னகையை முகத்தில் குத்திக் கொண்டே ஒரு ஆடவரும் இரு அம்மணிகளும். லண்டனைச் சுற்றிப் பார்க்கவேண்டும் விபரமான தகவல் தரமுடியுமா என்று கேட்டேன். கையில் இரண்டு தகவல் புத்தகங்களைத் திணித்து விட்டு, இங்கிருந்து இரண்டு சுற்றுலாப் பேரூந்துக்கள் பயணப்படுகின்றன. அவை ஒவ்வொரு முக்கியமான இடங்களையும் தொட்டுச் செல்லும். The Original Tour எனப்படும் பஸ் கம்பனி நாள் ஒன்றுக்கு 23 பவுண்ட்களை அறவிடுகின்றது, ஒரு நாள் முழுக்கப் பயன்படுத்தலாம், இன்னொன்று Big Bus Sightseeing Tour என்ற பஸ் கம்பனி இரண்டு நாள் பாஸ் முறையில் 29 பவுண்ட்களை அறவிடுகின்றது. ஆனால் அந்த இரண்டு நாட்களும் தொடர் நாட்களாக இருக்கவேண்டும் என்றார்.

நாளை நடப்பது யாருக்குத் தெரியும் என்று The Original Tour இல் பயணப்படுவதற்கான டிக்கெட்டை வாங்கிக் கொண்டு பஸ் தரிப்பை அடைந்தேன். ஐந்து நிமிடத்தில் பஸ் வந்தது. மேலே அரைப்பாகம் மூடிய பஸ், மேல் பாகம் சென்று அமர்ந்து கொண்டேன். ஒவ்வொரு இருக்கைக்கும் இயர்ஃபோன் ஒன்று கொடுக்கிறார்கள். அதைக் காதில் செருகிவிட்டால் பஸ் பயணப்படும் ஒவ்வொரு வழித்தடத்திலும் இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பற்றி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு மூலம் சொல்லப்படுகின்றது. உண்மையில் இது மிகவும் பயனுள்ளதொரு விஷயமாக இருக்கின்றது. ஒவ்வொரு இடத்திற்கும் பஸ் கடக்கும் போது அச்சொட்டாக அந்த இடம் குறித்த வரலாற்றுப் பின்னணியைக் கொடுப்பது மிகுந்த சுவாரஸ்யம் கொண்டதாக அமைந்தது.

அப்படி நான் கடந்த இடங்கள் அடுத்த உலாத்தல் பதிவில்

Thursday, July 19, 2012

லண்டன் உலாத்தல் ஆரம்பம்

புலம்பெயர்ந்த 17 வருஷ வாழ்வில் அவுஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள ஆசிய நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளுக்குச் சென்றிருந்தாலும் இந்த ஆண்டின் கடந்த மாதம் வரை ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லாத கடன் ஒன்று இருந்தது. அதுவும் ஓரளவுக்கு நிரப்பப்பட்டிருக்கின்றது இந்த மாதம் லண்டன் உலாத்தல் மூலம். ஆனால் இந்தப் பயணம் முன்னர் எனக்கு வாய்த்த பயணங்களை விட ஏகப்பட்ட தில்லாலங்கடி ஆட்டங்களோடு நிறைவேறியிருக்கின்றது. மூன்று வாரப் பயணம் அதில் ஒருவாரம் தாயகத்தில் மற்றைய இரண்டு வாரமும் இங்கிலாந்தும் அதனைச் சூழவுள்ள ஐரோப்பிய நாடுகள் சிலதையும் பார்க்கலாம் என்ற வகையிலேயே இந்தப் பயணம் ஆரம்பத்தில் அமையவிருந்தது. ஆனால் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் மூன்று வாரம் என்பது பத்து நாட்களாகக் குறைய அதில் நான்கு நாட்கள் சிட்னியில் இருந்து லண்டன் வரைக்குமான போக்குவரத்துக்குத் தியாகம் செய்ய வேண்டிய நிலை வந்து விட்டது. இதில் நிறையப் படிப்பினைகளும் கூட.

முதல் பாடம், விலை மலிவு கருதி முகம் தெரியாத விமானப்பயண முகவரை நாடக்கூடாது. வழக்கமாக நான் பயண ஏற்பாடுகளைச் செய்யும் முகவரை என் அவசரத்துக்குப் பிடிக்க முடியாத நிலையில் இன்னொரு தெரியாத ஒரு பயண முகவரிடம் சென்றேன். அவரோ "ஜூலை மாதம் விமானப்பயண டிக்கெட்டுக்களை எடுப்பது சிரமம்,காரணம் பள்ளி விடுமுறை, அவுஸ்திரேலியாவில் கடும் குளிர் பற்றிக் கொள்ளும் மாதம் மற்றும் லண்டனில் வரவிருக்கும் ஒலிம்பிக்ஸ், ஆனால் நான் சகாய விலையில் டிக்கெட்டைக் கொடுக்கிறேன் என்று என்று சொல்லித் தேன் தடவிய வார்த்தைகளால் பேசவும் நானும் அவரிடமே விமானப்பயண ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னேன். பின்னர் மூன்று கிழமைப் பயணத்தைப் பத்து நாளாக மாற்றும் நிலை வந்தபோது அதெல்லாம் செய்யச் செலவாகும் என்று முரண்டு பிடித்தார். நேராக விமான நிறுவனத்துக்கே தொடர்பு கொண்டால் அவர்களோ உங்களின் ஆரம்பம் பயணத்தை மேற்கொள்ளும் வரை எந்த மாற்றமும் பயண முகவரால் தான் செய்ய முடியும் என்று கைவிரித்து விட்டார்கள். மீண்டும் முகவரிடமே வந்து எவ்வளவு செலவானாலும் மாற்றம் செய்யுங்கள் என்று கேட்டேன். எல்லாமாக எழுநூறு டாலர்களை மேலதிகமாகக் கேட்டு ஆப்பு வைத்தார். வேறுவழியில்லாமல் மேலதிக பணத்தைக் கொடுத்து திகதிகளில் மாற்றம் செய்து கொண்டேன். இதனால் கிடைத்த இரண்டு நீதிகள்.
1. ஏற்கனவே அறிமுகமான நிறுவனம் இருக்க, பழக்கமில்லாத முகவர்களின் வலையில் விழக்கூடாது
2. கொஞ்சம் அதிகம் செலவானாலும் Fully Flexible எனப்படும் டிக்கெட்டை ஆரம்பத்திலேயே வாங்கிவைத்து விட்டால் ஆபத்துக்குப் பாதகம் இல்லாமல் திகதிகளை விரும்பியது போல மாற்றிக்கொள்ளலாம்.

சிட்னியில் இருந்து கொழும்பு வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கொழும்பில் இருந்து லண்டன் வரை ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்று பயண ஏற்பாடு. அந்த நாளும் வந்தது. சிட்னி ஏர்போர்ட்டில் கூட்டம் அதிகம் இல்லை. பள்ளி விடுமுறை முந்திய வாரம் என்பதால் மக்கள் கூட்டம் காலியாகியிருந்தது. எனது iPad இல் 12 முழு நீளப்படங்களையும் நூற்றுச் சொச்சம் பாடல்களைச் செருகியிருந்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறியிருந்ததும் முதலில் தேடியதே பயணிக்கும் விமானத்தில் என்னென்ன படங்களைப் போடுவார்கள் என்று விபரப்புத்தகத்தில் மேய்ந்தேன். வழக்கம் போலப் பெரிய ஆப்பு. ஏனோ தெரியவில்லை சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் தமிழ் பாடல் தெரிவுகளும் சரி தமிழ்ப்படங்களின் தெரிவும் சரி ஒரு மார்க்கமாகவே இருக்கும். தனுஷ் தம்பி நடித்த வேங்கை, கலைஞானி கமல்ஹாசன் பழிவாங்கிய மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு என்ற விவரணப்படம் இவற்றோடு பாடல்களில் விஜய் ஆண்டனி மற்றும் முகவரி மாறி இசையமைப்பாளர்களாகிய உப்புமா பாடல்களுமாக நிரவியிருந்தது. ஹிந்தியில் தபாங் படம் இருப்பதாகக் காட்டியிருந்தது. சரி அதையாவது பார்ப்போம் என்று படத்தை நெட்டித் தள்ளினேன். சத்தியாமாகப் புரியவில்லை இந்த திரபை தபாங் படத்தையா ஆகா ஓஹோவென்று தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். அடுத்ததாக இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் குறித்த ஒரு விபரணப் படம் ஒன்று இருப்பதாகத் தெரிந்து அதை முழுதுமாகப் பார்த்தேன். ஆகா இந்த இசைமேதை குறித்து வெகு சிறப்பாக எடுத்த அருமையான படைப்பு இது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன் முழுதும் பார்த்த பின்னர்.

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இரவு 11.55 இற்குச் சறுக்கி நின்று நிதானித்தது விமானம். ஏற்கனவே ஒன்லைனில் விசா எடுத்து வைத்திருந்தேன். அடுத்த நாள் மதியம் 1 மணிக்குத் தான் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிய பயணம். கொழும்பு சென்று திரும்ப நேரம் போதாது என்று கட்டுநாயக்காவை அண்மித்திருந்த Ramada Inn என்ற ஹோட்டலில் தங்கிச் செல்ல ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். அதன்படி விமான நிலைய டாக்ஸி மூலம் ஹோட்டலுக்கு வந்து ஒரு ஒரு வென்னீர் குளியல் எடுத்து விட்டு பயணக்களைப்பில் சரிந்தேன். அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். டிவியை முடுக்கினேன், சக்தி டிவியில் காலை நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்த ஆண்மகன் எப்படி இருக்கவேண்டும் என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது, பெண் மக்கள் தமக்கு சூர்யா மாதிரி வேணும், அறிவிப்பாளர் அண்ணா மாதிரி வேணும் என்று ஆளாளாளுக்குத் தங்கள் உள்ளக்கிடக்கையைக் கொட்டித் தீர்த்தார்கள். ஹோட்டலில் இருக்கும் உடற்பயிற்சிக்கூடம் எங்கே என்று விசாரித்தேன். நீச்சல் குளத்தைத் தாண்டி ஓரமாக இருக்கும் ஒரு அறையைக் காட்டினார்கள். அங்கு போனால் ட்ரெட் மில் இல் இருந்து அங்கிருக்கும் உபகரணங்கள் தூசி படர்ந்து சந்திரமுகி அரண்மனை கணக்காக இருந்தது. தும்மிக் கொண்டே அரைமணி நேரம் உடற்பயிற்சிக்கடனை முடித்து விட்டு குளியலோடு அங்கே காலை ஆகாரத்தையும் முடித்துக் கொண்டேன். விமான நிலையத்துக்குத் திரும்பும் வழியில் ரம்புட்டான் பழங்கள் குவியல் குவியலாக. என்னை ஏற்றிவந்த டாக்ஸிக்காரர் என்னை ஏதோ வேறு நாடுக்காரர் என்று நினைத்து "ரம்புட்டான் சேர் ரம்புட்டான்" என்று விளக்கம் கொடுத்தார்.

ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். வழக்கம் போல, திரையிடும் படங்களின் பட்டியலைப் பார்த்தால் அதில் மன்மதன் அம்பு த்ரில்லர் வகைக்குள். ஆகா ஆளாளுக்கு ரவுண்டு கட்டி அடிக்குறாங்களே என்று வடிவேலு குரலில் சொல்லிப் பார்த்தேன். சரக்கரைத்துச் செய்த மீன் குழம்போடு சோறு மட்டும் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன் பேர் சொல்ல வைத்தது. விமானத்தில் தந்த போர்வையை விரித்து முகர்ந்தேன். அரைகுறை ஈரத்தில் காய்ந்திருக்கும் போது ஒரு கெட்ட வாசனை வருமே அந்த வாசனை வந்து நாசியைக் கூறுபோட்டது. போர்வையைச் சுருட்டி வைத்து விட்டு உடம்பைச் சுருட்டிக் கொண்டு படுத்தேன்.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததாக அறிவிப்பு. விமான நிலையத்தின் குடிவரவுப் பிரிவில் நிற்கும் போது சென்னை விமான நிலையத்தில் நிற்பது போல ஒரு பிரமை, சுற்றம் சூழலில் ஒரே தமிழ் வாடை. போதாக்குறைக்கு ஒரு வெள்ளைக்காரக் குடிவரவு அதிகாரி "இங்கே தமிழில் இருந்து மொழிபெயர்ப்புச் செய்யக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா?" என்று குரல் கொடுக்க, ஒரு மடிசார் மாமி "ஐ கேன்" என்று கையை உயர்த்திக் கொண்டு முன்னே சென்றார்.

உலாத்தல் தொடரும்.....

Sunday, May 06, 2012

இன்று மட்டும் இரண்டு காட்சிகள்


பத்து வருஷங்களுக்கு முன் தொழில் நிமித்தம் சீனாவுக்குப் போனபோது ஒரு மாலைப்பொழுதில், சக வேலையாட்களோடு சென்ற நிகழ்வு சீனர்களின் கலை, பண்பாட்டு அம்சங்களைத் தழுவி அமைக்கப்பட்ட நடனங்களைத் தாங்கியிருந்தது. அந்த இரண்டு மணி நேர நிகழ்வில் சீனர்கள் தங்களின் வரலாற்றை, வாழ்வியலை தம் பாரம்பரிய இசைக்கருவிகளின் துணையோடு நடனங்களாகக் கொடுத்த போது சொக்கிப் போனேன் நான். அதற்குப் பின்னான தாய்லாந்து, மலேசிய, கம்போடியப் பயணங்களில் தவறாது அந்த நாட்டின் கலாச்சார நடன நிகழ்வுகளைக் காண வேண்டும் என்ற முனைப்பை அமுல்ப்படுத்திக் கொண்டேன். அவற்றைப் பார்த்ததோடு அந்த நடனங்களின் பரிமாணங்களைப் பற்றியும் முன்னர் எழுதியிருக்கின்றேன். நான் சென்று வந்த ஆசிய நாடுகளிலே தத்தமது நாடுகளில் நிரந்தரமாக ஒரு கலாச்சார அமைப்பை நிறுவி நாள் தோறும் இரண்டு காட்சிகளாகத் தம் கலாச்சார நடனங்களை நிதமும் கொடுத்து வருகின்றார்கள். இதன் மூலம் அந்த நாடுகளுக்குச் சுற்றுலான் நோக்கில் சென்று வரும் பயணிகளுக்குக் குறித்த நாடுகளின் பண்பாட்டு விழுமியத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அரச சார்பான அமைப்புக்கள் மட்டுமன்றி, கம்போடியா போன்ற நாடுகளிலே தனியாரும் இந்த முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள். அதாவது பெரும் உணவகங்களில் நீண்ட கொட்டில்கள் அமைக்கப்பட்டு முன்னே பாரிய மேடை அமைக்கப்பட்டு அங்கே நடன நிகழ்வு நடந்து கொண்டிருக்க, அந்த நாட்டு இரவு உணவை ரசித்தவாறே பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்.



இந்த நிலையில் சிட்னியில் சீன நடன அமைப்பு ஒன்று பெரும் எடுப்பிலான நிகழ்வை நடத்தப் போகின்றது என்றபோது கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த எண்ணினேன். Shen Yun என்ற நடன நிகழ்வு சிட்னியில் Capital Theatre இல் ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் மே 6 ஆம் திகதி வரை தினமும் இரண்டு காட்சிகளாக அமைக்கப்பட்டிருந்தது. மே 5 ஆம் திகதிக்கு நுளைவுச் சீட்டை வாங்கி வைத்துக் கொண்டேன். ஒரு மணி நேரம் முன்னதாகவே நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போய்க் காத்திருக்கிறேன். சாரை சாரையாக மக்கள் வருகின்றார்கள், சிட்னியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த அரங்கத்துப் படையெடுத்தோரில் பெரும்பாலானோர் முதிய பிராயத்தில் இருக்கும் வெள்ளையர்கள், கால்வாசி சீனர்கள். மதியம் இரண்டுமணிக்குச் சொல்லிவைத்தாற் போல ஆரம்பித்தது நிகழ்வு, இடையில் இருபது நிமிட இடைவேளை (இருபது நிமிடம் என்றால் இருபது நிமிடம் தான்) நான்கு முப்பது மணி வரை அரங்கத்தில் இருந்தோரை இருக்கைகளில் கட்டிப்போட்டது இந்த நிகழ்வு.



Shen Yun என்றால் தெய்வத்தன்மை பொருந்திய அழகியலை நடனத்தின் மூலம் வெளிப்படுத்துதல் என்று பொருள்படும். 5000 ஆண்டுகள் பழமை பொருந்திய சீனர்களின் கலாச்சாரத்தை சீனக்கம்யூனிசம் தின்று விழுங்கிய நிலையில் இவற்றை மீள நிறுவ நடனங்களின் மூலம் வெளிப்படுத்திப் புத்துயிர் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டு இந்த Shen Yun Performing Arts என்ற அமைப்பு தென் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த சீனர்களால் அமைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த அமைப்பு வருடம் தோறும் நிகழ்த்தும் நடனங்கள் தனித்துவமானவை என்றாலும் அவற்றின் அடி நாதமாக விளங்குவது, தாம் கட்டிக்காத்துப் போற்றி வாழ்ந்த தமது தொன்மைத்தைத் கிளறும் முயற்சியே. இந்த அமைப்பில் 200 பேர்வரை தேர்ந்தெடுத்த கலைஞர்கள் இருக்கின்றார்கள். சீனாவில் இந்த நிகழ்வு தடைசெய்யப்பட்ட நிலையில் இதுவரை 130 நகரங்களில் அரங்கேறிய நிகழ்வு தொடர்ந்தும் பயணிக்கின்றது. எடுத்துக் கொண்ட கொள்கையும், அதைச் சிறப்பாக நடத்தவேண்டும் என்ற கருத்தொருமித்த கூட்டும் இருந்தால் இப்படியான உயரிய இலக்கை அடையலாம் என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தப் புலம்பெயர் சீனர்களின் Shen Yun.


திறமானதொரு படைப்பை எடுத்துக் கொள்வது மட்டுமன்றித் தகுந்த அரங்கமும் கிடைத்தால் பாதி வெற்றி. அதை சிட்னியின் Capital Theatre உறுதி செய்தது. அரங்கத்தின் உள்ளமைப்பே ஏதோவொரு அரண்மனையில் நிலாவொளியில் அமர்ந்து மேலே நட்சத்திரக் கூட்டங்கள் கண்காணிக்கச் சுற்றிவரக் கொத்தளங்களில் சிற்பச் செதுக்குகளுமாக அமைய இருக்கும் அந்தச் சூழ்நிலையே இப்படியான படைப்பை மனம் ஒன்றித்து ரசிக்க வைக்கின்றது. சொன்ன நேரத்துக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கின்றது. வெள்ளையர் ஒருவர் ஆங்கிலத்திலும், சீனப்பெண்மணி சீனத்திலுமாக நச்சென்ற வர்ணனைகளை வழங்கி வழிவிட ஒவ்வொரு நிகழ்வும் அரங்கேறுகின்றன. அரங்கத்துக்கும் மேடைக்கும் இடையில் உள்ளே மறைப்பான அடித்தளம் அந்தத் தளத்திலே முப்பதுக்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் நேரடியாக இசை வழங்க, மேடைக்குப் பின் புறம் பெருந்திரை அங்கே அரங்கத்திற்கு எடுத்து வரமுடியாத அம்சங்கள் நகரும் காட்சிகளாக,அந்தக் காட்சிகள் அப்படியே மெல்ல மெல்ல மேடையிலே உள்வாங்கப்பட்டு காட்சியில் தோன்றிய மாந்தர்கள் மேடையிலே கலை படைக்கின்றார்கள். ஒவ்வொரு நடனமும் 5000 ஆண்டு பழமை வாய்ந்த சீனக் கலாச்சாரத்தின் கூறுகளை இனங்காட்டுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முப்பதுக்கும் மேற்பட்ட சீன இளையோரும், யுவதிகளும் எல்லோருமே ஒரே அச்சில் வார்க்கப்பட்டது மாதிரி அளவிலும் உருவ அமைப்பிலும். ஒரு கணினி இயந்திரத்தின் மூலம் உருவாக்கப்பட்ட எந்திர மனிதர்கள் சொன்ன கட்டளைக் கேற்ப ஒரே நேரத்தில் அபிநயிக்கும் அனுபவம் அங்கே.


Falun Gong என்ற தனிமனித மேம்பாட்டு நெறி 1992 ஆம் ஆண்டில் Li Hongzhi என்ற போதகரால் ஏற்படுத்தப்பட்டது. தனி மனித ஒழுக்கங்களும், நெறிமுறைகளுமே உலகில் குற்றச் செயல்களைத் தடுக்க வல்லன என்ற நோக்கில் பல்வேறு நெறிமுறை சார்ந்த ஒழுக்க நடைமுறைகளோடு அமைக்கப்பட்ட இதன் செயல்வடிவம் சீன அரசுக்குக் கண்குத்திப் பாம்பாகத் தோன்றவே 1999 இல் தடை செய்து விட்டது. இன்று Li Hongzhi அமெரிக்காவில் வாழ்கின்றார். அவரின் போதனைகளைப் பின்பற்றுவோர் உலகில் தத்தம் நாடுகளில் அமைப்புக்களை நிறுவி ஒரே குடையின் கீழ் பணியாற்றுகின்றனர். சீனா மட்டும் விதிவிலக்கு, அங்கு இந்த Falun Gong நெறி சட்டவிரோதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இதைப் பின்பற்றுவோர் கடூழியச் சிறை மற்றும், தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

ஒவ்வொரு நடனமும் சீன தேசத்தின் பாரம்பரியம், வரலாறு பேசும் கதைகளாக, காட்சிகளாக விரிகின்றன. முன்னே நேரடியாக வாத்திய விருந்து முழங்க விதவிதமான நிற ஆடை அலங்காரங்களோடு தோன்றி ஆடும் நடன மாந்தர் எல்லோருடைய அசைவுகளிலும் நேர்த்தி, இந்த நேர்த்திக்கு அடிப்படை சுயகட்டுப்பாட்டோடு சொல்ல வந்த விடயத்தைக் கொடுக்கும் அந்தப் பாங்கு. நடனத்தில் வெளிப்படும் அனாயாசமான வித்தைகள் இந்த நடனக்காரர்கள் கழைக்கூத்தாடிகளாவும் தம்மைக் காட்டுகின்றனர். அவர்களின் உடல்வலிகள் தெரியாது சிரித்துப் பகிரும் நாட்டியத்தில் தாம் படைப்பில் கொண்டுள்ள காதலின் மேன்மை வெளிப்படுகின்றது. நடனங்கள் ஓய்வெடுக்க இடையில் பியானோ வாத்தியம் பின்னிசைக்க தேர்ந்த சீனப்பாடகர் ஒருவர் பாடுகின்றார். பின்னே ஒளித்திரையில் பாடலின் அர்த்தம் வெளிப்படுகின்றது.

நமக்கான அடையாளத்தைப் புதிதாகத் தேடவேண்டியதில்லை. இருந்ததை மீளவும் புத்துயிர் கொடுத்து இனங்காட்டவேண்டியதே நம் பணி இது ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பொருந்தும். இந்த நோக்கைக் கச்சிதமாகப் பின்பற்றியே Falun Gong நெறியைப் பின்பற்றுவோர் இத்தகு கலாச்சார நிகழ்வுகள் மூலம் தம் அடையாளத்தைக் காட்டுகின்றார். திறமையும் அதைக்கொடுக்கும் ஆற்றலும் எல்லோருக்கும் உண்டு ஆனால் அதைக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையும் இன்ன பிற சாக்குகளும் அவற்றைக் கொண்டு வராமல் அமுக்கிவிடும். அதைக் கடந்து கொடுக்கும் படைப்பை மொழி, நாடு கடந்து எல்லோருமே ஏற்றுக் கொள்வர் என்ற வெற்றித் தத்துவத்தை இவர்கள் நிரூபித்திருக்கின்றார்கள்.
சமரசம் கடந்து கொடுக்கும் படைப்பு காலத்தை வென்று நிற்கும். Shen Yun அடுத்த முறை உங்கள் ஊரில் வந்தால் தவறவிடாதீர்கள், வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய கலைப்படைப்பு இது.


0000000000000000000000000000000000000000000000000000000

கஹானி என்ற ஹிந்திப்படத்தின் போஸ்டரைப் பார்த்ததோடு சரி, இதுவும் பத்தோடு பதினொறாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் படம் வெளிவந்து ஒரு சில நாட்களுக்குள் பாரபட்சமில்லாமல் இந்தப் படம் குறித்த நேர்மையான விமர்சனங்கள் வந்த போது சிட்னியை விட்டே கஹானி போய்விட்டது. சரி ஆங்கில சப் டைட்டிலோடு வரும் தரமான பிரதிக்காகக் காத்திருப்போம் என்று நினைத்தபோது கடந்த வாரம் கிட்டிய கஹானி தான் இரண்டாவது காட்சி.

ஒருமுறை நடிகர் மம்முட்டி விழா மேடை ஒன்றில் "ஹிந்திப்படங்கள் மட்டும் தான் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை அல்ல, வேற்று மொழிகளும் சினிமா படைக்கின்றன அவற்றையும் உலகம் கண்டுகொள்ளவேண்டும்" என்ற ரீதியிலான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவரின் ஆதங்கம் நியாயமானது என்றாலும் இப்போதுள்ள இந்திய சினிமாவின் போக்கைப் பார்த்தால் மற்றைய மொழிகள் எவ்வளவு தூரம் தனித்துவமாகத் தம் படைப்புக்களை இனங்காட்டுகின்றன என்பது முன்னே நிற்கும் கேள்விக்குறி. தமிழ்சினிமா இன்றைக்கு எதிர்கால முதல்வர்களைப் படைக்கும் பஞ்ச் ஹீரோக்கள் படையோடு முன்னிற்க, தொண்ணூறுகளின் முற்பகுதி வரை செழுமையான, யதார்த்தபூர்வமான கதைக்களங்களைக் கொண்டு திரைக்கதை படைத்த மலையாள சினிமாவின் முகமும் இப்போது கோரத்தாண்டவம். மம்முட்டி, மோகன்லால் மட்டுமன்றி புதிதாக வந்திருக்கும் நண்டு, சிண்டுக்களும் இளைய தளபதிகளாக வரவே முனைப்புக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கே வரும் ஒரு சில படங்கள் திருஷ்டி கழிப்புக்கள். இந்த நிலையில் ஹிந்தி சினிமா உலகம் என்னதான் மசாலா படங்களை அள்ளி எறிந்தாலும், அவற்றுக்கு நிகராகப் புதிய புதிய கதைக்களங்களோடும் கருவோடும் வருகின்ற படங்கள் மசாலா சினிமாக்களையே ஓரங்கட்டி மக்கள் மத்தியில் எடுபடுகின்றன. ஹிந்தி சினிமாவுக்குக் கிட்டியுள்ள மிகப்பெரிய உலக சந்தை என்பது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பது ஒருபக்கம், இன்னொரு பக்கம் இப்படியான புதிய உத்திகளோடு வருகின்ற படைப்புக்களுக்கு மக்கள் கொடுக்கும் அதீத ஆதரவு என்பது இன்னும் இன்னும் படைப்பாளியை நம்பிக்கை கொள்ள வைக்கின்ற இன்னொரு காரணம்.

"எனது கணவரைக் காணவில்லை, கண்டு பிடித்துக் கொடுக்கவும்" நிறைமாதக் கர்ப்பிணியாக கொல்கத்தா விமான நிலையத்தில் இறங்கும் வித்யா பாக்க்ஷி (வித்யா பாலன்) என்ற இளம் பெண் நேரே பொலிஸ் நிலையம் சென்று கொடுக்கும் புகாரோடு ஆரம்பிக்கிறது படம். அந்நிய நிலம், புதிய மனிதர்கள், தன்னைச் சுற்றிப் பின் தொடரும் அபாய முடிச்சு, இவற்றோடு தனி ஆளாக லண்டனில் இருந்து வந்த வித்யா பாக்க்ஷி என்ற இந்த இளம் பெண் மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்க்க அவிழ்க்க அவை இன்னொரு திசை நோக்கிப் பயணித்து ஈற்றில், இதுவாக இருக்குமோ என்று ஒரு முடிவை எடுத்து நிற்கும் பார்வையாளரின் முடிவைப் பூச்சியமாக்கி இன்னொரு திசையில் இறக்குகிறது கஹானி என்ற இந்தப் படம். வித்யா பாக்க்ஷி சந்திக்கும் மனிதர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று முடிவு வரை அனுமானிக்க முடியாத அளவுக்குக் கண்கட்டு வித்தை நடத்தியிருக்கிறது இப்படம்.
தமிழில் மர்மப்படங்கள் பல வந்திருக்கின்றன. அதே கண்கள் படத்தை அந்தக் காலத்தில் ரூபவாஹினி அருமை பெருமையாகப் போட்டபோது படம் கொடுத்த மர்மத்தில் பக்கத்து வீட்டு மாமி இரவில் நடமாடவே பயந்து தன்னை ஊரடங்குச் சட்டத்தில் அமுல்படுத்திக் கொண்டவர். இன்னும் பல படங்கள் மேஜர் சுந்தர்ராஜன் வகையறா போன்ற வில்லங்கமான வில்லன்களை இருட்டறைக்குள் வைத்து மர்மம் என்று சொல்லி வந்தவை. ஆனால் ஒரு மர்மப் படம் என்றால் என்ன என்பதை மிகவும் நேர்த்தியான வகையில் புதிய உத்திகளோடு பாடம் எடுக்கின்றது இந்த கஹானி.

ஆண்டவன் உலகில் சில விஷயங்களைப் படைக்கும் போது அவை இயற்கைக்கு எதிராக மாறும்போது மீண்டும் அவன் தன் சக்தியை அனுப்பி தீயவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்படுகின்றது" இதுதான் கதையின் அடிநாதம். கொல்கத்தா என்ற கதைக்களனைத் தேர்ந்தெடுத்துப் படத்தை இயக்கியதற்குப் பின்னால் உள்ள நேர்த்தியான காரணத்தில் ஒன்று கொல்கத்தா சார்ந்த மேற்கு வங்கம் மாகாளியைக் குலதெய்வமாகப் போற்றித் துதிக்கும் சமூகத்தைக் கொண்டது. இந்தப் படத்தின் காட்சிகள் மெல்ல மெல்ல தேர்ந்தெடுத்த கதைக்களனை நியாயம் செய்வதாக அமைவது ஒரு தேர்ந்தெடுத்த இயக்குனரின் வெற்றியின் அணிகலன்களில் ஒன்று. இந்தப் படத்தை இயக்கியதோடு கதையின் உருவாக்கத்திலும், தயாரிப்பிலும் துணை நின்றவர் Sujoy Ghosh என்ற இயக்குனர்.
இப்படியான மர்ம முடிச்சுக்களோடு நகரும் கதையில் பார்வையாளனைச் சமரசம் செய்வதற்குப் பல வழிகளைத் தேடுவார்கள், அவ்வ்வ் வகையறா நகைச்சுவைகளும், நாலு பாட்டு அதில் ஒன்று சோகம், இன்னொறு டிஸ்கோ என்று கலந்து கட்டி ஈற்றில் படத்தை ஒரு வழி பண்ணி விடுவார்கள். ஆனால் இந்தவிதமான எந்தவொரு சமரசங்களையும் இயக்குனர் ஏற்படுத்தவில்லை. விஷால் சேகர் இரட்டையர்களின் பின்னணி இசை மட்டுமே படத்துக்குப் பயன்பட்டிருக்கிறது. தேவையான நேரத்தில் வாத்தியங்களுக்கு ஓய்வு கொடுத்து இருப்பது கூட ஒரு நல்ல இசையின் அடையாளம். 128 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு இந்திய சினிமாவில் மாமூலான எந்தவொரு விஷயத்தையும் உள் நுளைக்காமல் படம் பண்ண முடியும் என்ற உண்மையையும் காட்டி நிற்கின்றது இப்படம்.

ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா கூறியிருந்தார், ஒரு நல்ல சினிமாவின் முக்கிய பாத்திரங்கள் படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே ஏதோவொரு வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அவற்றை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும் என்று. இந்தப் படத்திலும் அந்த உத்தி கையாளப்பட்டிருக்கின்றது. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் வந்து போகும் பாத்திரங்கள் அவை பார்வையாளனுக்கு எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தாது பின்னர் மர்மம் விலகும் போது முக்கியமானவர்களாக காட்டப்பட்டிருக்கும் புத்திசாலித்தனம் வெளிப்படுகின்றது. கொல்கத்தா நகரத்தின் மாந்தர்கள், வாழும் சூழ்நிலை எல்லாமே அப்படியே அள்ளி எடுக்கப்பட்டிருக்கின்றன மிகையில்லாமல்.

The Dirty Picture படம் வித்யா பாலனுக்கு ஒரு பெரிய கொடை என்று தான் சொல்லவேண்டும், அந்தப் படத்தின் மூலம் தேசிய விருதைக் கடந்த ஆண்டு தட்டிக்கொண்ட அவர் தனக்குக் கிடைத்த விருதை நியாயப்படுத்த, அடுத்து வந்த கஹானியைப் பயன்படுத்தியிருக்குமாற்போல அமைந்திருக்கின்றது இந்தப் படத்தில் அவரின் நடிப்பு. சொல்லப் போனால் படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை வித்யா பாலனை விலத்தி எடுக்கப்பட்ட காட்சிகள் மிகச் சில, மற்ற எல்லாமே முடிவிடம் நோக்கிய அவரின் பயணமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றது. கணவனைத் தொலைத்த ஒரு நிறைமாதக் கர்ப்பிணியின் கவலை, ஆற்றாமை, சமூகம் மீதான கோபம் எல்லாமே வித்யா பாக்க்ஷி என்ற பெண்ணாக வார்த்தெடுக்கப்பட்டிருக்கின்றார் இவர். படத்தில் இவரோடு பயணிக்கும் ஒவ்வொரு பாத்திரங்களும் குறிப்பாக Parambrata Chatterjee, Nawazuddin Siddiqui ஆகியோரும் நேர்த்தியான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

எட்டுக் கோடியில் எடுக்கப்பட்ட படம் இன்று 104 கோடியை வசூலித்ததாகச் சொல்லப்படுகின்றது. இப்படியான படங்களுக்கு திரை ரசிகர்கள் கொடுக்கும் பெரும் விருதாக இதை எடுத்துக் கொள்ள வேண்டியது தான். எந்த விதமான செயற்கைச் சாயமும் இன்றித் தான் சொல்ல வந்த கருத்தைத் திருத்தமாகச் சொல்லி முடிக்கிறது கஹானி. கஹானி என்றால் கதை என்று அர்த்தம் ஆமாம், ரசிகர்களுக்குக் கதைவிடாது சொல்லும் கதை சொல்லிகள் என்றும் தோற்பதில்லை.

Sunday, February 12, 2012

சிட்னியில் நிகழ்ந்த "பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலத்திற்கு"

நேற்றைய சனிக்கிழமை மாலைப்பொழுது செந்தமிழும்,சைவமும் கலந்த செவிக்குணவு வாய்த்த மணித்துளிகளோடு கழிந்தது. சனிக்கிழமை மாலை என்பது நம் தமிழர் மரபுப்படி விருந்துண்டு கழித்து இலங்கைப்பிரச்சனையில் இருந்து சூடான் வரைக்கும், சிவாஜியில் இருந்து சிம்பு காலம் வரைக்கும் அலசி ஆராய்ந்து பேசி மகிழ்வது அல்லது அந்த வாரம் வந்த படங்களைச் சூட்டோடு சூடாக இரண்டு டொலர் டிவிடியில் பார்த்து முடிப்பது போன்ற இன்னோரன்ன அரும்பணிகளுக்காக ஒதுக்கப்படுவது.

இப்படியானதொரு கலாச்சாரச் சூழலில் உலக சைவப்பேரவை ஆஸ்திரேலியக் கிளை நிகழ்த்திய "பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலம் வரை" என்ற நிகழ்வை அமைத்த ஏற்பாட்டாளர்களும் அவ்விதமே எண்ணத்தலைப்பட்டு ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப்பாடசாலையின் ஒரு சிறு வகுப்புக் கூடத்தை இந்த நிகழ்ச்சிக்காக எடுத்திருந்தனர். ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கைப்படி ஒரு இருபது பேர் வந்தாலே பெருங்கூட்டம் என்ற நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அன்பர்கள் குழுமி, வகுப்பறையை நெருக்கியவாறு கூட்டம் களைகட்ட, ஏழுமணிக்கு ஆரம்பமாக வேண்டிய நிகழ்வு சம்பிரதாயப்படி மாலை 7.20 இற்கு ஆரம்பமாகியது. இரவு ஒன்பது மணிக்கு முடியவேண்டிய நிகழ்வு 10.30 மணி வரை ஒரு செல்போன் அழைப்பொலி கேட்டாலே பூகம்பம் வந்தது போன்ற அமைதியோடு, வந்திருந்த அனைத்து அன்பர்களும் தமிழின்பமும், பக்திச் சுவையும் கலந்த அந்த மாலைப்பொழுதைப் பெருவிருப்போடு கழித்தனர்.

உலக சைவப்பேரவை ஆஸ்திரேலியக் கிளை சிட்னியில் இருக்கும் நூற்றுச் சொச்சம் தமிழ் அமைப்புக்களில் மிகவும் சின்னது. ஆனால் என்ன மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பதற்குச் சான்றாக இந்த "பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலம்" என்ற நிகழ்ச்சியை நேர்த்தியோடு வழங்கிய அவர்களின் செயற்திறனைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
செல்வி யாகவி.சோமசுந்தரம் தேவாரத்தோடு நிகழ்வை ஆரம்பிக்க, தொடர்ந்து திரு. கணபதிப்பிள்ளை தம்பதியினர் மங்கல விளக்கேற்றி, கடந்த ஆண்டில் இருந்து சமீபம் வரை தமிழுக்கும் சைவத்துக்கும் உழைத்த ஆன்றோர்களின் மறைவுக்கு அஞ்சலி நிகழ்த்தும் விதமாக எல்லோரும் ஒன்று கூடிக் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" பாடி மனமாரப்பிரார்த்தித்தோம்.

உலக சைவப்பேரவையின் துணைத்தலைவர் திரு.பொ.இளங்கோ வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மறைந்த சைவப்பெரியார்கள் குறித்த அஞ்சலிப்பகிர்வு அமைந்தது. திரு மா. அருச்சுனமணி அவர்கள் சைவப்பெரியார் கு.வைத்தியநாதன் அவர்கள் பற்றிப் பேசும் போது அவர் வாழும் காலம் முழுதும் சைவத்துக்குச் செய்த பணியைச் சுருக்கமாகவும் அழகாகவும் சொல்லி வைத்தார். கடந்த 2010 ஆம் ஆண்டில் கனடாவில் நிகழ்ந்த உலக சைவப்பேரவை நிகழ்வில் கு.வைத்தியநாதன் அவர்களைச் சந்தித்தபோது கண்டிப்பாக ஆஸ்திரேலியா வருவேன் அழையுங்கள் என்று சொன்ன கு.வைத்தியநாதன் ஐயா அவர்களின் இழப்பைப் பேரிழப்பாகக் கருதுவதோடு, சிட்னியில் சைவ சித்தாந்த வகுப்புக்களை நடத்துவதற்கு முதலில் கு.வைத்தியநாதன் அவர்களையே அணுகியதாகவும் ஆனால் அப்போது அவரது உடல் நலம் குன்றியிருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார். கு.வைத்தியநாதன் அவர்கள் சைவ சித்தாந்த வகுப்பைக் கொடுக்கும் அனுபவத்தைத் தான் தமிழகம் சென்று பார்த்த போது முன்னூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் மாணவர்களாகக் கூடியிருக்க, ஆறேழு மணித்தியாலங்கள் அவர் கொடுக்கும் அழகான பொருள் பொதிந்த விளக்கங்கள் சிறப்பு மிகுந்தவை, பலர் ஆறேழு வருடங்களாக இந்த இனிய அனுபவத்தைப் பெறுவதற்காகவே மீண்டும் மீண்டும் இவ்வகுப்புக்களில் சேர்ந்து கொள்வார்கள் என்றபோது கு.வைத்தியநாதன் அவர்களின் இழப்பின் கனத்தைப் புரிய முடிந்தது.

அடுத்து தூத்துக்குடி சண்முகவேல் என்ற சைவப்பெரியார் குறித்து அதே இடத்தில் இருந்து வந்த அன்பர் திரு மா.நாராயணன் தம் அஞ்சலிப்பகிர்வை வழங்கியிருந்தார். இந்த நிகழ்வின் விழா நாயகர் திரு மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் செய்து கொண்டிருக்கும் பெரும்பணியான இணையத்தில் தேவாரப்பதிகங்களைத் திரட்டும் பணியில் தூத்துக்குடி சண்முகவேல் அவர்களின் முனைப்பும், பங்களிப்பும் பின்னர் இது இசைவடிவத் தளமாக மாறுவதற்கான பணியாக இருந்ததையும் குறிப்பிட்டிருந்தார்.


தருமபுரம் சுவாமிநாதன் அவர்களின் பெயரை அறியாதோர் பலர் இருக்கக் கூடும் ஆனால் அந்தப் பெரியாரின் கணீர்க்குரலில் பதிந்து ஆலயங்கள் தோறும் பரவும் தேவாரப்பாடல்களின் குரலுக்குச் சொந்தக்காரர்.தருமபுரம் சுவாமிநாதன்
அவர்கள் கடந்த ஆண்டு இறையடி சேர்ந்தார், அவர் குறித்த அஞ்சலியைப் பாடல்களைப் பாடிப் பகிர்ந்தார் திரு வனதேவா அவர்கள்.

அஞ்சலிப் பகிர்வுகளைத் தொடர்ந்து ஹோம்புஷ் சைவப்பாடசாலை இளநிலை மாணவர்கள் வந்து திருமுறை இசைக்கச் சபையோரும் சேர்ந்து பாடிப் பரவசம் கொண்டனர்.
இந்த நிகழ்வின் நாயகர் திரு.மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்கள் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிக்கொண்டிருக்கும் பெரும் பணியைத் தம் கவித்திறத்தால் பாடி அவருக்கு ஒரு வாழ்த்துப் பா இனை சட்டம் இட்டுப் பகிர்ந்து சிறப்பித்திருந்தார் நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பேரனார் டாக்டர் பாரதி இளமுருகனார்.

தமிழிற்கும் சைவத்திற்கும் அளப்பரிய தொண்டாற்றி
உயர்ந்த பெரியார்
திரு, மறவன்புலவு க சச்சிதானந்தன் அவர்களுக்கு
உலக சைவப்பேரவை (அவுஸ்திரேலியா)
சிட்னியில் அளித்த பாராட்டு விழாவின்போது வழங்கப்பெற்ற
வாழ்த்துப்பா - 11 02 2012

அருட்குணங்கள் அத்தனையும் உன்னிற் பொலிய
அகத்தொழிரும் அழகெல்லாம் முகத்திற் கொண்டோய்!
இருந்ததமிழ்த் திருமறையை நீயும் பிற
இனத்தவரும் பயின்றவற்றின் பயனைப் பெற
தெருட்சியதன் முதிர்ச்சியினால் தடைகள் வென்று
சீர்பொங்கத் திருவருளால் மின்னம் பலத்தில்
திரட்டிவகுத் தேற்றிநின்ற சச்சிதா னந்தா!
சிட்னிசைவப் பேரவையும் வாழ்த்த வாழி!

அந்தமிலெம் மந்திரமாம் திரு மறைகள்
அத்தனைக்கும் இசைகூட்டி வரலா றுடனே
விந்தையென வியனுலகம் விதந்து வக்க
வித்தகனே பலமொழியிற் கேட்க வைத்தாய்!
சுந்தரனே வடிவமைத்து மின்னம்ப லத்திற்
தொகுத்தளித்தாய்! தூயபணி என்றும் வாழி!
சந்ததமும் சைவருன்னைத் தினமும் போற்றச்
சச்சிதா னந்தாநீ வாழி! வாழி!

எண்ணமதைச் செப்பனிட்டுச் செயலுந் தீட்டி
ஈரைந்து ஆண்டாக அறிஞர் கூட்டிக்
கண்ணனைய பதிணெண்ணா யிரம்பா டல்கள்
களிப்போடு சைவர்கள் இல்லந் தோறும்
பண்ணமுதாய்த் தினங்கேட்டு மகிழ வைத்தாய்!
பலன்கருதாச் சேவைக்குக் கைமா றுண்டோ?
தண்ணொளிசேர் பிறையடி வரதஞ் சேர்க்கத்
தகைமைசேர் வித்துவனே வாழி! வாழி!

முறையாக முத்தமிழோ டுயர்சைவ மோங்க
மூபத்து ஆண்டாக இந்தி யாவில்
நிறைவான பதிப்பகமாய்க் ்காந்த ளகத்தை்
நிறுவிநறுஞ் சேவையினால் உயர்ந்தாய்! இந்தத்
துறைதனிலே உனக்கிணையே இல்லை யென்று
தூயபுக ழாரம்பலர் சூட்டக் கண்டோம்
பிறையடி மன்றுளாடி அருளப்பா ரதியும்
பெரிதுவந்து வாழ்த்துவளே வாழி! வாழி!,

"வாழ்க வளமுடன்்"

சிட்னிவாழ் சைவப் பெருமக்கள்

இயற்றியவர் - பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி


திரு மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள், "பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலம் வரை" என்ற விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வை கணினித் திரையைப் பெருந்திரைக்குக் கடத்தியவாறே, தேவாரத் திருப்பதிகங்கள் தோன்றிய காலத்தில் இருந்து பின்னர் நம்பியாண்டார் நம்பி ராஜ ராஜ சோழனிடம் சிதம்பரத்தில் செல்லரித்துக் கிடக்கும் தேவாரப்பதிகங்களைத்திரட்டக் கோரிய வரலாற்றினைக் கதை விளக்கப் படங்களோடுச் சுவையாகப் பகிரத் தொடங்கினார். சிதம்பரத்திலே தீட்சதர்கள் இந்தப் பணிக்கு முட்டுக்கட்டை போட, தனக்கு இருக்கும் அரச பலத்தைப் பிரயோகிக்காமல் புத்தி சாதுர்யத்தால் இந்தப் பணியை நிறைவேற்றிய ராஜராஜ சோழனின் அறிவுத்திறனைச் சொல்லியதோடு தமிழ் மன்னர்களில் இவ்வளவு தூரம் தமிழுக்கும் சைவத்துக்கும் அவன் ஆற்றிய பணி எவ்வளவு உயரியது என்பதைத் தக்க ஆதாரங்களோடு சொன்னார். தொடந்து சேக்கிழார் சுவாமிகளின் பணியை விதந்தது பகிர்ந்து நிறைவாக இணையமூடாகத் தேவாரப் பதிகங்களைத் திரட்டி உலகெங்கும் வாழும் அன்பர்களின் தேவைக்காகக் கொடுக்கும் பணியை விரிவாக விளக்கினார் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள்.

தேவாரம் http://www.thevaaram.org/ என்ற இணையத்தளத்தின் பங்களிப்பைப் பொறுத்தவரையில் தமிழோடு, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம், பர்மிய, தாய் உள்ளிட்ட மொழிகளோடு பன்னிரு திருமுறைகளைத் திரட்டிச் சேமித்து வைத்திருக்கும் ஒரு அரிய தளம். இது எமது அடுத்த தலைமுறைக்கும், தமிழைத் தாய் மொழியைக் கொண்டிராதவர்களுக்கும், ஏன் நம் எல்லோருக்குமே பண்ணோடு பொருள் அறிந்து பாட வழிவகுக்கின்றது. மேலும் ஆலயங்கள் குறித்த விளக்க உள்ளீடுகளும், தேவாரங்களைத் தேடும் தேடுபொறிகளும் இந்தத் தளத்தில் இருப்பது வெகுசிறப்பு, காலத்தின் தேவைகளுக்கேற்பத் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்தும் மேலும் விரிவாக்கியும் தன் பணியைச் செய்து வருகின்றது இந்தத் தளம்.

தேவாரம் என்ற தளத்தை ஆரம்பித்து வெறுமனே எழுத்துருவில் பன்னிரு பதிகங்களைத் திரட்டி வந்த நிலையில், தூத்துகுடி சைவ சித்தாந்த சபையில் சைவப் பெரியார் திரு. சண்முகவேல் அவர்கள் அறிமுகப்படுத்த திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள், இந்தத் தளம் குறித்து விளக்கிக் கொண்டிருந்த போது இந்தத் தளத்தில் பாடலுண்டு, பொருளுண்டு ஆனால் இசை இல்லையே என்று அங்கு வந்திருந்த பிரபாகர் என்ற அன்பர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாராம். அதற்குப் பொருளாதாரத் தேவை

இருக்கும் என்றபோது உடனடியாகவே பிரபாகர் என்ற தூத்துக்குடி உப்பள அதிபர் உடனேயே ரூபா ஐந்தாயிரம் கொடுத்து, குரலிசையைச் சேர்க்கும் பணியைச் செய்ய கால்கோளாக அமைந்ததாம்.
திரு. பிரபாகர் அவரது துணைவியார், மகனோடு உப்பு வணிகர், அவர், அவரது துணைவியார், அவரது திரு மகனார் யாவரது பங்களிப்பால் தேவாரம் தளத்தில் 24 பண்களுக்கும் உரிய மாதிரிப் பாடல்கள் சேர்ந்தன.
இன்று 15,500 திருமுறைப் பாடல்களுக்குக் குரலிசையைத் தேவாரம் தளத்தில் சேர்க்கவும், 18268 பாடல்களைக்கும் குரலிசை சேர்க்குமாறான முயற்சிக்கும், சைவப் பெரியார் திரு. சண்முகவேல் அவர்கள் வழிகாட்டலில் திரு. பிரபாகர் விதைத்தார் என்று சொன்ன மறவன்புலவு சச்சித்தானந்தம் அவர்கள் தொடர்ந்து தருமபுரம் சுவாமிநாதன் அவர்கள் தேவாரம் தளத்துக்குக் கொடுத்த பெரும் பங்களிப்பை விளக்கிச் சொன்னார்.
இந்த நிகழ்வில் அஞ்சலிப்பகிர்வில் பேசப்பட்ட மறைந்த சைவப்பெரியார்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பையும், அவர்கள் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய முக்கிய பங்களிப்பைச் சொல்லிவைத்தார். >தேவாரத்திருப்பதிகங்கள் தமிழின் 247 எழுத்துக்களைக் கடந்து எந்தவொரு பிற மொழிச் சொற்களும் ஊடுருவாத சிறப்புக் கொண்டவை. இந்தப் பதிகங்கள் வெறும் சைவ சமயம் சார்ந்த பக்தி இலக்கியங்கள் என்ற எல்லையைக் கடந்து பொதுவான தமிழ் இலக்கியங்களாக எடுத்து நோக்க வேண்டும் என்று உதாரண விளக்கங்களோடு சொன்னார். தேவாரத்திருப்பதிகங்கள் காலத்துக்குக் காலம் எதிர் நோக்கிய சவால்களை வரலாற்று விளக்கங்களோடு எடுத்துச் சொன்னார்.

நம்மை ஆக்கிரமிக்கும் மன அழுத்தத்துக்கு மருந்தாக "நாமார்க்கும் குடியல்லோம்" என்ற பதிகம் எவ்வளவு தூரம் அருமருந்தாக அமைகின்றது என்று அவர் சொல்லும் போது அதை உய்த்துணர்ந்து கொள்ள முடிந்தது,



ஹோம்புஷ் சைவப்பாடசாலை முது நிலை மாணவர்களின் பண்ணிசை விருந்து தொடர்ந்தது.

தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவ வகை செய்யும் தேவாரம் இணையத் தளத்தின் சிறப்பையும் புலம்பெயர்ந்த நம் வாழ்வில் அதன் தேவை குறித்தும் திரு எஸ்.வேலுப்பிள்ளை
(ஓபன் தமிழர் கழகம்), முனைவர் பாலு விஜய் (தமிழ் இலக்கியப்பேரவை), திரு அனகன் பாபு (தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்), திரு அண்ணாமலை சுந்தரம் (பாலர் மலர் தமிழ்க்கல்விக் கழகம்), எழுத்தாளர் மாத்தளை சோமு ஆகியோர் சுருக்கமாகவும் நிறைவாகவும் தம் கருத்துக்களைப் பகிர்ந்து சிறப்பித்திருந்தனர்.

தேவாரம் இணையத்தளம் காலத்துக் காலம் தொழில் நுட்பமும், தேவையும் எழும்போது அவற்றை உள்வாங்கி எழுத்துரு வடிவில் இருந்து ஒலி வடிவாகித் தற்போது செல்லிடப்பேசியில் இருந்து அப்ளிகேசனாக தருவிக்கும் பெரும் பணிக்கான பணத்தேவை குறித்தும் பேசப்பட்டது. இந்த நிகழ்வுக்காக வந்திருந்த அன்பர்கள் தம்மால் இயன்ற
பணத்தொகையைக் கொடுத்துச் சிறப்பித்திருந்தனர்.

திருமதி கலா அனந்த சயனன் நன்றி நவில, சைவ மரபுப்படி தேவாரம், திருப்புராணத்தைச் சபையோர் ஒன்று கூடிப் பாடிப் பிரார்த்தித்து நிறைவாகி செவிக்கும், விழிக்கும் மனத்துக்கும் பெரும் விருந்தாக அமைய, ஆங்கே சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று சைவ அமுது படைத்துச் சிறப்பித்தனர். இப்படியான நிறைவானதொரு நிகழ்வு இன்னும் வாய்க்கவேண்டும் என்ற உணர்வோடு கலைந்தோம். உலக சைவப்பேரவை சிட்னிக் கிளையின் அரும்பணி தொடரட்டும்.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்