
சென்ற பதிவில் பல்லவ மன்னர்கள் குறித்த அறிமுகத்தை வரலாற்று ரீதியான உசாத்துணைகளோடு கொடுத்திருந்தேன். அதற்குக் காரணம் தொடர்ந்து வரும் பதிவுகள் இந்தப் பல்லவ மன்னர்களின் ஆதிக்கம் கம்போடியாவில் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தியிருந்தன என்றே தொடரவிருக்கின்றன.
தேதிவாரியாக என் பயணத் தொடரைக் கொடுப்பது வழக்கம். சற்று விதிவிலக்காக என் கம்போடியப் பயணத்தின் இறுதி நாளன்று சென்று பார்த்த அங்கோர் நூதன சாலையில் (Angkor Museum) நான் இந்தத் தொடருக்கு உதவும் என்ற வகையில் எடுத்துக் கொண்ட குறிப்புக்களின் அடிப்படையில் இப்பதிவு அமையவிருக்கின்றது. பயணத்தின் கடைசி நாளன்று அங்கோர் நூதன சாலையில் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் செலவழித்திருப்பேன். அவவளவுக்கு அங்கே வரலாற்று ஆதாரங்களும், செய்திக் குறிப்புக்களுமாக முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நூதனசாலையில் இருக்கும் விடயங்கள் குறித்த பதிவைப் பின்னர் தருகின்றேன்.
எதிர்வரும் காலங்களில் கம்போடியாவுக்குப் பயணப்படுவோருக்கு ஒரு ஆலோசனை மட்டும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். உங்கள் பயணத்தின் முதல் நாளே இந்த அங்கோர் நூதனசாலைக்குச் (Angkor Museum) செல்லுங்கள். காரணம் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் நீங்கள் பார்க்கப் போகும் ஆலயங்கள், வரலாற்றுச் சுவடுகள் குறித்த முழுமையான பார்வையை இந்த நூதனசாலை கொடுக்கின்றது. எனவே இந்த நூதனசாலையில் நீங்கள் பெறும் அறிவையும், தகவல்களையும் வைத்துக் கொண்டு குறித்த ஆலயங்களைப் பார்க்கும் போது மிகவும் இலகுவான விளக்கத்தை அவை உங்களுக்குத் தானாகவே கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.

கம்போடியாவில் அமைந்த கைமர் பேரரசின் (Khmer Empire) முதல் மன்னனாய் முதலாம் ஜெயவர்மன் (Jayavarman I) கொள்ளப்படுகின்றான். இவன் கி.பி 657 இலிருந்து கி.பி.681 வரை ஆட்சி செய்ததாகவும், இரண்டாம் பாவவர்மன் (Bhavavarman II) இந்த ஜெயவர்மனுக்கு முற்பட்ட காலத்து அரசன் என்றும், முதலாம் ஜெயவர்மனைத் தொடர்ந்து ஜெயதேவி என்னும் மகாராணி ஆட்சிப் பீடம் ஏறியதாகவும் விக்கிபீடியாவின் வரலாற்றுக் குறிப்புக்கள் தகவல் பகிர்கின்றன.
ஆனால் அங்கோர் நூதனசாலையில் பொறித்திருக்கும் அரசர்கள் பட்டியலில் முன் குறிப்பிட்ட மன்னர்களைத் தொடர்ந்து ஆட்சிப்பீடம் ஏறியவர்களையே முக்கியத்துவப்படுத்தி, இந்த மன்னர்கள் குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு ஒரு காரணம் இந்த மன்னர்களின் திருப்பணியில் அமைந்த ஆலயங்களே இன்று முக்கியமான வரலாற்று ஆதாரங்களைத் தரும் சான்றாக அமைந்திருக்கின்றன.

எனவே தொடர்ந்து அங்கோர் நூதனசாலையில் எடுத்துக் கொண்ட குறிப்புக்களின் அடிப்படையில் கைமர் பேரரசில் (Khmer Empire) குறிப்பிடப்படும் முக்கியமான பல்லவமன்னர்களும், அவர்கள் தலைநகராகக் கொண்டு செயற்பட்ட இடங்கள், குறித்த மன்னர்கள் அமைத்த ஆலயங்கள் போன்ற விபரங்களைத் தருகின்றேன்.
இரண்டாம் ஜெயவர்மன் (Jayavarman II)ஆட்சிக்காலம்: கி.பி 802 - கி.பி. 850
இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடங்கள்:
இந்திரபுர (Indrapura) , ஹரிஹராலயா(Hariharalaya) , அமரேந்திரபுர (Amerendrapura), மகேந்திரபுர (Mahendrapura)
ஆலயங்களின் அமைப்பு முறை (Style):
KULEN Style

இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:
Damrie Krap, O Pong, Khting Slap, Rup Areak, Neak ta, Trong Khla, Khonum, Krus Prea, Aram Ring chon, Mahendra Parvatha (Kulen Mountain)
ஜாவா மன்னர்களை விரட்டியடித்து ஆட்சியமைத்த மன்னனாகக் கொள்ளப்படுகின்றான்.
இந்த இரண்டாம் ஜெயவர்மன் இறந்தபின் பிறீ பரமேஸ்வரா (Preah Parameswara)என்று பெயர்சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.
இந்திரவர்மன் (Indra varman I)ஆட்சிக்காலம்: கி.பி 877 - 889
இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:
ஹரிஹராலயா (Hariharalaya)
ஆலயங்களின் அமைப்பு முறை (Style):
PREAH KO Style

இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:
Preah Ko, Bakong, Baray Indiratata ka
இந்த நாட்டின் சமுதாய சமயப் பணிகளைச் செய்த முக்கிய மன்னர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றான். இவரின் புரோகிதர் சிவசோமாவின் (Sivasoma) வழிகாட்டலில் இவற்றைச் செய்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த முதலாம் இந்திரவர்மன் இறந்தபின் இஸ்வரலோகா/ஈஸ்வரலோகா (Iswaraloka) என்று பெயர்சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.
யசோவர்மன் (Yashovarman)
ஆட்சிக்காலம்: கி.பி 889 - 910
இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடங்கள்:
ஹரிஹராலயா (Hariharalaya), யசோதபுர/அங்கோர்(Yashodhapura/Angkor)
ஆலயங்களின் அமைப்பு முறை (Style):
BAKHEND Style

இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:
Loleu, Bakhong, Phom Khon, East Baray, Prea Vihear, Phom Bok, Phom Krom (Trimoorthy god)
முதலாம் இந்திரவர்மன் மகன் தான் இந்த யசோவர்மன் என்று சொல்லப்படுகின்றது.
இந்த யசோவர்மன் இறந்தபின் பரம சிவலோகா (Parama Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.
நான்காம் ஜெயவர்மன்(Jeyavarman IV)ஆட்சிக்காலம்: கி.பி 921 - 941
இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:
கோ கெர் (Koh Ker)
முன்னர் யசோவர்மனின் ஆட்சியில் தலைநகராக இருந்த அங்கோர் (Angkor) இருந்து இவன்(நான்காம் ஜெயவர்மன்) தன் தலைநகரை மாற்றிக் கொண்டான்.
ஆலயங்களின் அமைப்பு முறை (Style):
KOH KER Style

இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:
Koh Ker group, Neang KhMao, Choeung An
யசோவர்மனின் சகோதரி ஜெயதேவியை மகாராணியாக்கிக் கொண்டவனே இந்த நான்காம் ஜெயவர்மன் என்று சொல்லப்படுகின்றது.
இந்த நான்காம் ஜெயவர்மன் இறந்தபின் பரம சிவபாத (Parama Sivapada)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.
ராஜேந்திரவர்மன் (Rajendravarman)ஆட்சிக்காலம்: கி.பி 944 - 968
இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:
யசோதபுர/அங்கோர் (Yashodapura/Angkor)
ஆலயங்களின் அமைப்பு முறை (Style):
Pre Rup Style

இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:
Pre Rup, Prasad East Mebon, Bat Chum, Bantea Srei, Baksei, Chamkrong,
இந்த ராஜேந்திரவர்மன் என்ற மன்னன் மகேந்திரவர்மன், மகேந்திர தேவியின் மகனாகக் கொள்ளப்படுகின்றான். ராஜேந்திர வர்மனின் தளபதியாக இருந்த கவிந்திரவிமதன (Kavindravimathana) பெளத்த அமைச்சராகவும் கொள்ளப்பட்டிருக்கின்றான்.
இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.
இந்த கைமர் பேரரசின் மன்னர்கள் வரிசை நெடியது, எனவே அடுத்ததும் நிறைவானதுமான தொகுதி மன்னர்களை அடுத்த பகுதியில் தருகின்றேன். இங்கே ஒவ்வொரு மன்னர்கள் அமைத்த ஆலயங்களில் பெரும்பாலானவற்றைக் கண்டு தரிசிக்கும் வாய்ப்பும் எனக்கு இருந்ததால் பதிவில் குறிப்பிட்ட ஆலயங்களைத் தனித்தனியாகப் பின்னர் பார்ப்போம்.