

விடிகாலை வந்ததை உணர்த்துமாற் போலப் படகுவீட்டின் படுக்கையில் கண்ணயர்ந்த என்னை அந்த இருப்பின் சன்னல் சீலையை ஊடறுத்து வந்த சூரியவெளிச்சம் சுள்ளென்று சுட்டு எழுப்பியது. எழுந்து என்னைத் தயார்படுத்தி வெளியே வந்து பார்க்கின்றேன். சிஜீயும் நண்பர்களும் முன்னதாகவே எழும்பி ஆளுக்கொருவராகத் தம் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் தாமாகவே துடுப்பெடுத்து வலித்துப் போகின்றார்கள். இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பெரும்பாலும் தமக்கெனத் தனியான ஓடம் வைத்துத் தம் அலுவல்களைக் கவனிக்கின்றார்களாம்.


இந்தப் கடற்கழிப் பயணம் போகத் தீர்மானிப்பவர்களுக்கு ஒரு உப குறிப்பு.
பயணம் போகும் போது மறக்காது ஒரு கொழுவர்த்திச் சுருள், தீப்பெட்டி, போதுமான தண்ணீர்ப்போத்தல்கள், போன்றவற்றையும் மறக்காது எடுத்துச் செல்லுங்கள். மதுபானப் பிரியர்கள் என்றார் பியர் சப்ளை உண்டு, தனியாகக் கட்டணம் கொடுக்கவேண்டுமாம்.(இதைப் பற்றி அனுபவ பூர்வமாக ஒன்றும் என்னால் சொல்லமுடியாது.)


தூரத்தில் ஒற்றைப்படகில் வந்த இருவரில் ஒருவர் தன் கையில் இருந்த வலையொன்றைத் துளாவி வீசினார். பின்னர் படகை அப்படியே விட்டுவிட்டு இருவரும் ஏரிக்குள் பொத்தென்று குதித்தார்கள். அவர்களின் கழுத்தைத் தொட்டது அந்த நீர்மட்டம். நீரில் முக்கி எழுந்த அவர்களின் கைகளில் வலையோடு தென்பட்டன துடித்துக்கொண்டிருக்கும் பெரிய மீன்கள். வலையைப் படகில் வீசி அடித்துவிட்டு காக்காய்க் குளியலோடு மீண்டும் வந்தவழியே பயணப்பட்டார்கள் அவர்கள்.
சிஜியின் நளபாகத்தில் முட்டைப்பொரியல் அணிவகுக்க பாண், ஜாம், அன்னாசி நறுக்கல்களோடு கிடைத்தது. உடன் வழக்கம் போல் மசாலா ரீ ஒன்று.
மலையாள இளம் நடிகர் குஞ்சக்கோபோபன் ( காதலுக்கு மரியாதை மலையாளப்பதிப்பில் நடித்தவர்) ஆலப்புழாவில் சொந்தமாக உதயம் ஸ்ரூடியோ வைத்திருக்கிறாராம், தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களின் படப்பிடிப்பு எப்போதும் நடக்குமாம்.
ஒருவர் காலை இறக்கிய தென்னங் கள் முட்டியுடன் படகில் பயணப்படுகின்றார்.
ஊதுபத்தி கொழுத்திப் பக்திபூர்வமாக மீண்டும் படகுச்சேவை ஆரம்பமாகத் தொடங்கியபோது, வானம் சடுதியாகக் தன் மழைக்கர்ப்பத்தைப் பிரசவித்தது.
கரையோர வீடுகளின் முற்றத்தில் நின்ற ஆண்களும் பெண்களும் விறு விறுவென்று தம் வீடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டார்கள். தொடர்ந்த அடைமழையால் காலை 8.30 இற்குப் பயணப்படவேண்டிய படகு தாமதித்து 10 மணியளவில் தான் தூறல் மழையோடு தன் பயணத்தை ஆரம்பித்தது.
முந்தய தினம் எங்களோடு பயணப்பட்ட மற்றும் சில படகு வீடுகள் இரவுப் பொழுதில் வேறு இடத்தில் தரித்திருந்தாலும் காலைப் பயணத்தில் ஒன்றாகக் கூடவே சங்கமித்தன.
கரையோரமாய் சருவச்சட்டியால் தலையை மறைத்த பெண்ணும், குடைக்குள் இருவராக நடைபோடும் ஆண்களும் தென்படுகின்றார்கள். வாழைத்தோப்பையும், இலக்கம் பொறிக்கப்பட்ட கமுகு மரங்களையும் கடந்து படகு பயணப்படுகின்றது.


யூன் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை இருக்கும் மொன்சூன் பருவகாலத்தில் வரக்கூடிய அதீத மழையால் சிலவேளை படகுப்பயணங்களும் ரத்துச் செய்யப்பட்டுவிடுமாம்.
துவாயால் தன்னை மறைத்த குழந்தையொன்று நடுமுற்றத்தில் நின்று கடலைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கின்றது. சிறு பையன் ஒருவன் மூதாட்டி ஒருவர் படகில் இருக்க துடுப்பு வலித்துக்கொண்டு போகின்றான்.படகு வீட்டிலிருந்து எட்டிப் பார்த்த என்னைக் கண்டதும் கொஞ்சம் வெட்கத்தோடு தலைசாய்த்துத் தன் பணியை அவன் தொடர்ந்தான்.


காலை 10.20 இற்கு கரையைத் தொடுகின்றது நம் படகுவீடு. ஈரமான படகின் மரப்படிகளில் கவனமாகத் தாவி வெளியே வந்து, பழையபடி சந்துக்குள்ளால் நடைபோட்டுப் பிரதான வீதியை வந்தடைந்து பின் வாடகைக்கார் மூலம் கெளரி ரெசிடென்ஸ் வந்தடைகின்றேன்.
பயணம் எப்படியிருந்து என்று அன்பாக விசாரிக்கின்றார் கெளரி ரெசிடென்ஸ் முகாமையாளரான அந்த இளைஞன். பெரும் திருப்தியைத் தந்த அந்தப் பயணம் பற்றி வாயாரப் புகழ்ந்து ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.ஆலப்புழாப் படகுப் பயணத்துக்காக அன்றைய காலையில் கூடி நிற்கின்றார்கள் புதிய யாத்ரீகர்கள்.
கெளரி ரெசிடென்ஸ் இலிருந்து அவர்கள் ஒழுங்கு செய்த வாடகைக் கார் மூலம் கொச்சின் நோக்கிப் பயணப்பட ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். ஆலப்புழாவிலிருந்து கொச்சினுக்கு வாடகைக்கார் ரூ 900 வரை முடிகிறது, ஏனெனில் திரும்பிவரும்போது வண்டி வெறுமையாக வரவேண்டியதால் தான் இந்த இரட்டைக்கட்டணம். நான் மேலதிகமாக 5 மணி நேரம் கொச்சினைச் சுற்றிப்பார்க்கவும் இதே காரைப் பாவிக்கலாமேயென்று மொத்தமாக 1500 ரூபா செலவில் கார் ஒழுங்கு செய்யப்பட்டது.
காரில் அமர்கின்றேன். கொச்சின் ஹனீபாவைத்தவிர (பாசப்பறவைகள் இயக்குனர், நடிகர்) வேறொன்றுமே கொச்சின் பற்றி அறியாத எனக்கு, அந்தப் புது உலகம் தேடி என் மனம் ஆலாய்ப் பறக்கப் பயணப்படுகிறது கார் கொச்சின் நோக்கி.
வீண்டும் காணாம்.....
















இந்தியாவிற்கு ஒவ்வொரு தடவை நான் பயணிக்கும் போதும் என் பெரும்பாலான நாட்கள் பெங்களூரில் தான் கழிந்திருக்கின்றது. Garden City என்ற நிலை மாறி Concrete Ciyஆக மாறிவிட்ட பெங்களூரின் நிலை கேரளாவிற்கும் ஏற்படாதிருக்கக் கடவது, வெளிநாட்டுக்கம்பனிகளையும் கேரளாவைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள் வெள்ளைக்காரன்களை விடமாட்டார்கள் என்று மனதார நினைத்துக்கொண்டேன். இருக்காதா பின்னே, இவ்வளவு அழகான பசுமைப்புரட்சி பூமி யூ எஸ் கரன்சி பட்டு நாசமாகப் போகவேண்டுமா? 
என் படகுப்பயண உலாத்தலில் கடந்துபோகும் நாளாந்தப் பயணிகள் போக்குவரத்துப் படகுகளில் இருக்கும் பயணிகள் வயது வேறுபாடின்றிக் கையெத்தி ஆரவாரிக்கின்றார்கள். ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கும், ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குமாக பயணிகளை உப்புமூட்டை காவிக்கொண்டு போகின்றன படகுகள்.
நன்றாக வயிறுமுட்டச் சாப்பிட்டு நடக்கமுடியாமல் நடப்பவன் போல மெல்ல மெல்ல ஊர்ந்தே போகின்றது என் படகு.


அக்கரையில் தென்படும் வீடுகளில் ஆட்டுக்குட்டிகள் தென்பட்டன. எங்கே சிஜியைக் காணவில்லை என்று பார்த்தால் சாயங்காலப் பரிமாறல் செய்ய அடுக்களை போய்விட்டார். சில மணித்துளிகளில் வந்த சிஜி மேஜையில் ஏற்கனவே கொசுக்கள் சல்லாபித்துக் க கூடைக்குள் இருந்த கதலிப்பழங்களை ஒருபுறம் வைத்துவிட்டு சாப்பாட்டு மேஜையில் விரிப்பை அகற்றிப் புதிய விரிப்பைப் போட்டு அழகுபடுத்தினார்.



வயிறுமுட்டசாப்பிட்டவனைப் போல ஆடி அசைந்து மெதுவாகப் பயணப்படுகின்றது படகு வீடு. மெதுவான இப்பயணம் ஆங்காங்கு காணும் காட்சிகளை உள்வாங்கவும் வசதியாக இருக்கின்றது. கரைமருங்கில் அசோகா மரங்களும் கண்ணுக்குத் தப்பவில்லை. வாழைமரங்கள் கூட உள்ளேன் ஐயா என்கின்றன. கல் வீடுகளும், குடிசைகளுமாக மாறி மாறித் தென்பட்டது கடலுக்கும் வர்க்க ஏறத்தாழ்வு இருப்பதைக் காட்டியது.இந்த நீரோட்டம் நடுவே கொல்லம் 83KM சம்புக்குளம் 13 KM என்று தூரவழிகாட்டிகள் காட்டிநிற்கின்றன. 
ஒருபக்கக் கரையைப் பார்க்கின்றேன். அக்கரையில் கடலை மறித்து நெற்பாசனம் செய்யப்படுகின்றது. மறுபுறத்தே விரிந்த பரப்பில் இயற்கையாக அமைந்த ஆயிரம் தாமரை மொட்டுகளோடு தடாகப் பரப்பு.
கடலோரம் வாங்கிய காற்றும், படகு அலைச்சலும் இயல்பாகவே வயிற்றைக் கிளற்ப் பசியை வா என்று சொல்லும் வேளை அது. சிஜியின் கைவண்ணத்தில் மணம் குணம் நிறைந்த மீன்பொரியல் குண்டு குண்டாய் வெள்ளைச் சோறு, நறுக்கிய வெண்டைக்காய்த் துவையல், தக்காளிச்சாலட், என்று பெருவிருந்தே படைக்கப்படுகின்றது. வெள்ளை முத்துக்களாய் நம்மூர் அரிசியின் நான்கு மடங்கு பருமனில் குண்டு குண்டாய் அரிசிச்சோறு கோப்பையை நிறைத்திருந்தது. வகையான காய்கறிகளின் சேர்க்கையில் ரஜினி வாய்ஸ் கொடுத்தபோது இருந்த தி.மு.க, த.மா.க கூட்டணி போல அமர்க்களமாக இருந்தது. எனக்கும் பேச்சுக்கொடுத்துத் திறமையான சமையலையும் செய்து முடித்த சிஜியை வாயாரப் புகழ்ந்தேன் மீன் பொரியலைச் சுவைத்தவாறே.
மதிய உணவின் பின்னர் ஒருமணி நேர ஓய்வு. கிடைத்த அந்த நேரத்தில் கடலோடி நண்பர்கள் தரை விரிப்பை விரித்து மதியத்தூக்கம் கொள்கின்றார்கள். நானும் என் படுக்கை சென்றமர்ந்து "ஆச்சி பயணம் போகிறாள்" நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கின்றேன். ஒரு மணி நேர ஓய்வு கழிகின்றது. இப்பொது மழையும் ஒதுங்கிக்கொண்டது. அரை வட்டமடித்தது போன்ற நீர்ப்பரப்பில் மீண்டும் பயணப்படுகின்றது படகுவீடு. 


குறுகலான சந்துக்குள்ளால் பயணப்பட்டுப் பின் ஒரு வேலிப் பொட்டுக்கு முன்னால் ஜீப் நின்றது. என் படகுவீட்டுக்குப் பொறுப்பான கடலோடி நண்பர்கள் எனக்காகக் காத்திருக்கின்றார்கள். கொட்டும் மழைச் சாரல் வழிந்தோடும் தம் முகத்தைப் புறங்கையால் துடைத்து எறிந்துகொண்டே வாயெல்லாம் பல்லாக வரவேற்கின்றார்கள், இவர்களில் ஒரு கிழவனார், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு இளைஞன் அடக்கம். 
ஒருவாறு படகுத்துறையை வந்தடைந்தோம், இதற்கு ஐந்து நிமிட நேரமும் பிடித்திருக்காது. ஆலப்புழாவின் பிரசித்திபெற்ற அந்தத்துறையில் பரந்த கரையெங்கணும் படகு வீடுகள், போருக்குத் தயாராகக் காத்து அணிவகுத்து நிற்கும் வீரர்கள் போலக் கம்பீரமாக நிற்கின்றன. எல்லாப்படகுகளுமே மதியம் 12 மணிக்குத் தான் புறப்படுமாம். உங்களின் வசதிக்கேற்ப அரை நாள் அல்லது முழு நாள் வாடகைக்கு இவற்றை நீங்கள் ஒழுங்கு செய்யலாம். அரை நாள் வாடகைக்குக் கட்டணமும் பார்க்கும் இடங்களும் குறைவு. நான் ஒரு நாள் வாடகையாக இப்படகுவீட்டை ஒழுங்கு செய்திருந்தேன். அதாவது முதல் நாள் நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த நாட் காலை 10 மணி வரை. இப்படகு வீடுகள் அழகான நேர்த்தியான கைவேலைப்பாடுகளுடன் உள்ளன. நடுத்தர வயதுக்காரர் எட்டிப் பாய்ந்து படகினுள் ஏறிவிட்டு என்னைக் கை தூக்கி உள்ளே அனுப்புகின்றார்.
நான் ஒப்பந்தம் செய்த படகு வீடு காதலர்களும் புதிதாகக் கல்யாணமாகித் தேனிலவு வருபவர்களும் விரும்பித் தேர்தெடுப்பதாம். படகு வீட்டு இளைஞன் இதைச் சரளமாக ஆங்கிலத்தில் சொல்லியவாறேப் படகின் அருமை பெருமைகளை அள்ளிவிட்டான், இங்கு சமையல் செய்பவரும் கூட இவன் தான். சுத்தமான ஒற்றைப் படுக்கையும், கழிப்பறையும் கொண்டதாக இருந்தது என் புகலிடம். ஹோர்ண் அடித்துச் சல்யூட் செய்தவாறே பக்கத்துப் படகுக்காரர்களும் இணையப் பயணம் ஆரம்பமாகின்றது. இளைஞர்கள் சைக்கிள்களில் சம பயணத்தில் இரட்டைச் சவாரி செய்வது போல இருக்கிறது. உற்சாகமும் மகிழ்ச்சியும் எனக்குள் பரவ, ஒரு குழந்தை போல எட்டிக் கடலைப் பார்க்கின்றேன். அரைகுறை ஆடை பூண்டு இருக்கும் காட்டு ராணிகள் போலக் கடற் தாவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதக்கின்றன. கரையெங்கணும் தென்னை, விலாட் மா மரங்கள், வாழை, பூவரச மரங்கள் சாமரம் வீசுவதுபோல நிரையாக நிற்கின்றன. 
அட... கடந்து போன கடலை ஒட்டிய குட்டிச்சுவர்களைக் கூட அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் நிரப்பியிருக்கின்றன. பாலத்துறை பொலிஸ் ஸ்டேசன் B டிவிஷன் தெரிகின்றது. கரைப் பாதையில் எழுந்து நிற்கும் மின்சாரத்தூண்கள் இந்தக் கடற்கழிப் பிரதேசத்திலும் மின்சாரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இந்தக் கடற்கழிப் பரப்பு நன்னீர் ஓடையாக உள்ளதாம். சந்தன நிற வேட்டிகளோடு தூரத்தே புள்ளிகளாகக் கேரளத்துச் சேட்டன்கள். கரையை ஒட்டிய வீட்டு முற்றங்களை சுங்க இலாகா அதிகாரிகள் போலச் சல்லடை போடுகின்றன அவர்களின் வளர்ப்புப் பிராணிகளான வாத்துகளும் கோழிகளும். கடற்கழியை ஒட்டிய கிராம வாழ்க்கையைக் கைபிடித்துக் கொண்டு காட்டும் சுற்றுலா வழிகாட்டி போலப் படகும் மெதுவாகத் தள்ளாடியவாறே அமைதியாகப் பயணிக்கின்றது.