Social Icons

Pages

Sunday, February 15, 2009

கைமர் பேரரசு தோற்றம் பெற்ற Kulen மலையிலே

நான் முன்னர் சொன்னது போல நான்காம் நாட் பயணம் நானும், வாகனச்சாரதியும் மட்டுமே செல்லத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த வாகனச் சாரதி தான் என்னை விமான நிலையத்தில் இருந்து முதன் முதலில் தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்றவர். அவர் முன்னர் சிறிது காலம் சுற்றுலா வழிகாட்டியாகவும் இருந்தவராம். இப்போது சொந்தமாக கார் வைத்து இப்படியான பயணங்களுக்கு உதவியாக இருக்கின்றார். மிகவும் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதோடு, நட்போடு கம்போடியாவின் நாட்டு நடப்புக்களையும் சொல்லிக் கொண்டே இவர் செல்வது சிறப்பு. இனிவரும் காலத்தில் கம்போடியாவின் சியாம் ரீப் நகருக்குச் செல்ல இருப்பவர்களுக்காக இவரை நான் நம்பிக்கையோடு பரிந்துரைப்பேன்.

அன்று Phnom Kulen எனப்படும் மலைப்பிரதேசம் செல்வதாகத் தான் ஏற்பாடு. இந்த மலைப் பகுதிக்கு நண்பகல் 12 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி உண்டு. எனவே அதற்கு முன்னர் சென்று திரும்பினால் தான் உண்டு. அத்தோடு சியாம் ரீப் நகரில் இருந்து போக 50 கிலோ மீட்டர் தூரம் பிடிக்கும். எனவே சீக்கிரமாகவே நமது பயணத்தை ஆரம்பிக்க எண்ணி காலை ஏழு மணிக்கெல்லாம் Nokor Kok Thloek நட்சத்திர ஹோட்டலில் அமைந்திருந்த சுற்றுலாப் பணியகம் சென்று இந்த இடத்துக்குச் செல்வதற்கான 20 அமெரிக்க டொலர் செலவிலான ரிக்கெட் எடுத்து விட்டுப் பயணத்தை ஆரம்பித்தோம். வார நாள் என்பதால் அலுவலகத்துக்குப் பயணிப்போர் தொகை மெல்ல மெல்ல பெருந்தெருக்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. சியாம் ரீப்பில் இருக்கும் பெரும் பொது மருத்துவமனையான ஏழாம் ஜெயவர்மன் International Hospital ஐயும் கடந்து நம் பயணம் தொடர்ந்தது. நவீன பாலங்கள் எங்கணும் கூட ஐந்து தலை நாகங்களின் உருவத்தலைகளைப் பொறித்திருக்கின்றார்கள். மாமரங்களின் விளைச்சல் வீதியின் இருமருங்கும் தென்படுகின்றது.

மேலே படங்கள், காட்டுவழிப் பாதையில் எம் பயணம்

அதிகம் வெயிலற்ற கணச்சூட்டில் எமது கார் Kulen மலைப்பிராந்தியத்தில் தாவியது. திடீரென்று எம் காரை மறித்து கற்பூரச் சூடம் காட்டிப் பிரார்த்தித்தார்கள் வழியில் தென்பட்ட மக்கள். இன்று காலை நாம் தான் முதலில் மலைக்குப் பயணிக்கும் வாகனம் அதனால் தான் இப்படிச் சூடம் காட்டிப் பிரார்த்திக்கின்றார்கல். இது ஒவ்வொரு நாளும் தொடரும் வழக்கம் என்றார் சாரதி.

மேலே படத்தில் Kulen மலையில் இருக்கும் லிங்க வடிவங்கள்
இருபக்கமும் புதர் மண்டிய காட்டின் நடுவே ஒழுங்கற்ற பாதையினூடாக நீண்டதொரு பயணமாக அமைந்து மலை முகட்டைத் தொட்டோம். எமது காரை நிறுத்தியதும் தாமதம், பாசிமணி மாலைகள், கம்போடிய கைவினைப் பொருட்கள் சகிதம் வறுமைப்பட்ட கம்போடிய சிறுவர்கள் எம்மை மொய்த்தனர். அவர்களை ஒருவாறு சமாளித்து ஒரு புதர்ப் பக்கமாக என்னை சாரதி கூட்டிக் கொண்டு போனார். அங்கே தென்பட்டது சிறு ஓடை கலக்க மேடாக இருந்த பாறைகள் எங்கணும் தென்பட்ட லிங்க வடிவங்கள்.

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் ஜெயவர்மன் காலத்தில் தான் இந்த Kulen மலை ஆன்மீக மையமாக உருவாக்கப்பட்டது. இது ஆரம்பத்தில் இந்து மதத்துக்கான ஒரு இடமாகவே ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கோர் எனப்படும் 500 வருச கால வரலாற்றின் ஆரம்பம் இங்கேயே ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகின்றது. கி.பி 802 ஆம் ஆண்டளவில் இரண்டாம் ஜெயவர்மன் அரசனின் கடவுள் (God of the King) என்ற அர்த்தம் பொதிய இவ் இலிங்கச் சின்னங்களை இங்கே அமைத்து ஒரு முழுமையான கைமர் என்ற தேசிய அரசினை இவன் அமைத்துக் கொண்டான். இதற்கு முன்னர் ஜாவா நாட்டின் கட்டுப்பாட்டிலேயே கம்போடியா இருந்து வந்திருந்தது. இந்த Phnom Kulen பிரதேசத்தில் இருந்து பின்னர் Roluos என்ற பகுதிக்கு இவன் தலைநகர் பின்னர் மாற்றப்பட்டது.

நாம் முன்னர் பார்த்த பொல்பொட்டின் கைமரு படையணியின் 1979 இல் இறுதியாக எஞ்சியிருந்த பிரதேசமாக இது திகழ்ந்திருக்கின்றது. இந்த இடத்தில் என்னைத் தவிர வேற்று ஆட்கள் யாருமே இல்லை. முழுமையாக கம்போடியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இடமாக இருந்ததால் உள்ளுர எனக்கு இலேசான பயமும் இருந்தது. காரணம் முன்னர் சென்ற இடங்களில் எல்லாம் வேற்று நாட்டு சுற்றுலாப் பயணிகள் தான் குவிந்திருப்பார்கள். இங்கோ நிலைமை தலைகீழ். எப்படா மலையை விட்டுக் கீழே இறங்குவோம் என்றும் அப்போது யோசித்தேன்.

இலிங்கங்களைக் கண்டு விட்டு அவ்விடத்தை விட்டகன்று மலையுச்சியிலே விளங்கிய ஒரு பெரும் ஆலயம் நோக்கிச் சென்றோம்.

மேலே படத்தில் Preah Ang Thom இல் இருந்த லிங்கம்
இங்கே பார்க்கவேண்டிய இன்னொரு விஷயம் Preah Ang Thom எனப்படும் பெளத்த மையம். கி.பி 16 ஆம் நூற்றாண்டில் பெளத்த மதம் இங்கே செழுமையுடன் திகழ்ந்த வேளை அமைத்த 8 மீட்டர் நீளமான பரி நிர்வாண நிலை கொண்ட புத்த விக்கிரகம் உண்டு. இந்த ஆலயத்தைச் சூழவும் பெளத்த மடாலயங்களும், அத்தோடு பெரும் லிங்க விக்கிரகமுமாக இருந்தது.
இவற்றை எல்லாம் பார்த்து விட்டு சற்றுத் தள்ளி இருந்த நீர்வீழ்ச்சி நோக்கி நடந்தோம். குறுகலான தொங்கு பாதை ஒன்று இந்த நீர்வீழ்ச்சி போகும் வரை அமைக்கப்பட்டிருந்தாலும், அதில் போவதே சவாலாக இருந்தது. ஆனாலும் அந்த வேதனையும் கடந்து போனால் அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றின் இல்லையில்லை இரண்டு நீர்வீழ்ச்சிகள் தரிசனம் கிட்டும். ஒன்று நான்கிலிருந்து ஐந்து மீட்டர் உயரமும் 20 இலிருந்து 25 மீட்டர் குறுக்களவும் கொண்டது. இன்னொன்று 15 இலிருந்து 20 மீட்டர் நீளமும் 10 - 15 மீட்டர் அகலமும் கொண்டது.
இந்த இயற்கை எழிலை அள்ளிப் பருகிவிட்டு மீண்டும் பாறைகளில் தாவி வரும் போது ஒரு பாசிபடர்ந்த பாறை காலை வாரி விட்டது. சறுக்கிக் கொண்டே போய் விழுந்தேன். முன்னால் போன சாரதி திரும்பவும் பாய்ந்து வந்து கைலாகு கொடுத்து ஏற்றி விட்டார். அங்கேயிருந்த உணவுச் சாலை ஒன்றுக்குச் சென்றோம். எனக்கு கோக் மட்டும் போதுமாக இருந்தது ;). முழங்காலில் ஏற்பட்ட சிராய்ப்பு ரத்தத் திட்டுக்களாகத் தெறித்திருந்தது. வாகனச் சாரதி அந்த உணவுச் சாலையில் இருந்த பெண்ணை அழைத்து ஏதோ பேசினார். அவள் எங்கே போய் விட்டு வரும் போது இலையில் ஏதோ வெள்ளைக் களிம்புடன் வந்து என் காலில் இருந்த காயத்தின் மேல் களிம்பினைப் பரவ விட்டாள். அவளுக்கு நன்றி சொல்லி விட்டு கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து விட்டு நகர்ந்தோம்.


திரும்ப வரும் வழியெங்கும் அந்த மலைப்பிரதேசத்தில் விளையும் காய், கனிகள் மூலிகைகளாகக் கடைத் தொகுதிகள் நிரம்பியிருந்தன.



உசாத்துணை:
கம்போடிய சுற்றுலாக் கையேடு
விக்கிபீடியா

12 comments:

தமிழன்-கறுப்பி... said...

me the first!

தமிழன்-கறுப்பி... said...

back after read post...:)

தமிழன்-கறுப்பி... said...

முதல் படத்தை பாத்த உடனே கம்போடியாவையே பாத்த மாதிரி இந்ருதிச்சு அதனால கட்டுரையை படிக்க லேட்டாயிடுத்து...:)

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி அண்ணன்...

தமிழன்-கறுப்பி... said...

ஏழாம் ஜெயவர்மன்தான் கம்போடியா முழுக்க பிரபலமான ஆள்போல...

ஆமா கம்போடியாவை பாக்கணும்கிற எண்ணம் உங்களுக்கு எப்ப இருந்து ஆரம்பிச்சுது...

கானா பிரபா said...

வாங்கோ தமிழன்

அதென்ன முதல் படத்தை பார்த்து திகைச்சு போனீங்கள் ;). ஏழாம் ஜெயவர்மன் தான் இன்னும் அங்கே ஹீரோ. கம்போடியா போன்ற நாடுகளில் எமது இந்து சமயத்தின் பரம்பல் எப்படி இருக்கு என்ற ஆர்வக் கோளாறு தான் என் பயணத்தின் மூல காரணி.

சதங்கா (Sathanga) said...

வழக்கம் போல படங்களும் செய்திகளும் அருமை.

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சதங்கா

கோபிநாத் said...

\\எம் காரை மறித்து கற்பூரச் சூடம் காட்டிப் பிரார்த்தித்தார்கள் வழியில் தென்பட்ட மக்கள். இன்று காலை நாம் தான் முதலில் மலைக்குப் பயணிக்கும் வாகனம் அதனால் தான் இப்படிச் சூடம் காட்டிப் பிரார்த்திக்கின்றார்கல். இது ஒவ்வொரு நாளும் தொடரும் வழக்கம் என்றார் சாரதி.
\\

ஆகா இப்படி எல்லாம் கூட இருக்கா!!!

வழக்கம் போல படங்களும் பதிவும் கலக்கல் ;)

தல

இப்போ கால் எப்படி இருக்கு!!?? ;)

Anonymous said...

முதலாவது படத்தில் நிற்பவரது ரீ சேட்டில் டக்ளஸ் என எழுதப் பட்டிருக்கிறது. மேலதிக விளக்கம் கோரப் படுகிறது. :)

கானா பிரபா said...

//கோபிநாத் said...

தல

இப்போ கால் எப்படி இருக்கு!!?? ;)//

வாங்க தல, சுகம் விசாரிச்சுட்டு சிரிப்பான் போடுறீங்களே. இப்போ கால் ஒகே ;). வருகைக்கு நன்றி தல

கானா பிரபா said...

//கொழுவி said...

முதலாவது படத்தில் நிற்பவரது ரீ சேட்டில் டக்ளஸ் என எழுதப் பட்டிருக்கிறது. மேலதிக விளக்கம் கோரப் படுகிறது. :)//

யோய் கிழவி

எதுக்கு அந்த மனுசனை வம்புக்கிழுக்கிறீர் ;)