Social Icons

Pages

Sunday, October 11, 2009

தாய்லாந்து உலாத்தல் ஆரம்பம்

"போகணும்னு மட்டும் தான் தோண்றது ஆனா எங்கே போகிறதுன்னு தெரியலையே" என்று கெளரவம் சிவாஜி மாதிரி பேச வேண்டும் போலத் தோன்றியது இம்முறை உலாத்தலை ஆரம்பித்தபோது. இறுதியில் 2 நாள் அவகாசத்தில் திடீர் திட்டமிடலோடு போகவேண்டும் என்று நான் தீர்மானித்த இடம் "தாய்லாந்து". ஏற்கனவே தாய்லாந்தின் அண்மித்த நாடான கம்போடியாவுக்கு கடந்த வருடம் பயணித்த பின்னர் ஆசிய நாடுகள் எல்லாவற்றையும் பார்த்து விடவேண்டும் என்ற ஆசை இன்னும் தீவிரமாக ஏற்பட்ட நிலையில் தாய்லாந்து தான் இம்முறை பொருத்தமான இடமாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஏழு வருடங்களுக்கு முன்னர் வேலை நிமித்தம் தாய்லாந்துக்கு 1 வாரம் போகவேண்டி இருந்தது. வேலைப்பழு காரணமாக உலாத்தலுக்கு அப்போது அவகாசம் கிட்டவில்லை. ஆனால் ஒரு நாள் இரவு உணவுக்குப் பின் டாக்சியில் பயணிக்கும் போது வீதியின் மருங்கிலே திடீர் என்று எதிர்ப்பட்ட இந்து ஆலயம் ஒன்றைக் கண்டு யுரேக்கா யுரேக்கா என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் கத்தாமல் டாக்சிக்காரரை ஓரமாக வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு சென்ற அந்த ஆலயம், சிறீ மாரியம்மன் கோவில். அப்போது நவராத்திரி காலம் கூடவே கோயிலின் மகோற்சவ காலம் என்பதால் ஆலயச் சூழல் படு அமர்க்களமாக இருந்தது. மாரியம்மன் கோயில் தரிசனத்தோடு மட்டும் என் அன்றைய தாய்லாந்து சுற்றுலா ஓய்ந்து போனது.


இம்முறை என் பயணம் முழுமையான சுற்றுலா, குறிப்பாக தாய்லாந்து நாட்டின் வரலாற்று விழுமியங்களைத் தேடிப் பார்த்து விடவேண்டும் என்பதே அதில் முனைப்பாக இருந்தது. தாய்லாந்து நாட்டில் இந்து மதத்தின் பரவலையும் அறிய வேண்டும் என்ற அவாவும் கூடவே இருந்தது.


வழக்கம் போல பயண ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக Lonely Planet இன் "தாய்லாந்து வழிகாட்டி" நூலை வாங்கி முதற்கட்டமாக நான் தங்குவதற்கு ஏற்ற தங்குமிடத்தைத் தேடினேன். இருப்பவற்றுள் Lamphu Tree House என்ற தங்குமிடம் சிறப்பான வசதிகளோடு இருப்பதாகப் பட்டது. இணையத்திலும் அந்த ஹோட்டலின் இணையப்பக்கத்தையும் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டேன். இங்கே ஒரு சுற்றுலா டிப்ஸ் சொல்லி வைக்க வேண்டும். பொதுவாக சுற்றுலாவுக்குப் போகும் போது பெரும் நட்சத்திர ஹோட்டல்களை விட நடுத்தர (mid range) நிலையில் உள்ள ஹோட்டல்களை நான் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் தங்கும் கட்டணம் நியாயமானது என்பது மட்டுமல்ல, இப்படியான நடுத்தர நிலையில் உள்ள ஹோட்டல்களில் இருக்கும் பணியாளர்களில் இருந்து முகாமையாளர் வரை விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். சுற்றுலாப் பயணம் செல்ல வேண்டிய இடங்கள், மேலதிக தகவல்கள் போன்றவற்றைத் தேடித் தருவதோடு தனிப்பட்ட அல்லது குழுவாகப் பயணம் செய்யக் கூடிய ஸ்தல யாத்திரைகளையும் ஒழுங்கு செய்து தருவார்கள் என்பதே முக்கியமான காரணம். அந்த வகையில் முன்னர் நான் சென்ற கம்போடியாப் பயண அனுபவத்தில் Lamphu Tree House என்ற தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் இல் உள்ள தங்குமிடத்தை இணையம் மூலம் முற்பதிவு செய்து உறுதிப் படுத்திக் கொண்டேன். ஆனால் இந்த ஹோட்டல் மூலம் வந்த வம்பை பின்னர் சொல்கிறேன் ;)

அடுத்த நாள் பயணம், அதற்கு முதல் நாள் சிட்னியில் இருக்கும் அவுஸ்திரேலியாவிற்கான தாய்லாந்து நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு போன் இட்டு,
"நான் தாய்லாந்து நாட்டுக்குப் பயணிக்க இருப்பதாகவும் அங்கே தாய்லாந்து சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏதாவது சுற்றுலாப் நிகழ்ச்சித் திட்டங்களை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பாடு செய்து தருகின்றதா?" என்று கேள்விக் குறியிட்டேன்.
மறுமுனையில் தாய் வாடையில் ஆங்கிலம் பேசிய மாது "எமது சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணி தாய்லாந்து நாட்டுக்கு வாருங்கள் என்று பிரச்சாரப்படுத்தும் நோக்கம் மட்டும் தான், நீங்கள் தாய்லாந்து போய்த்தான் சுற்றுலா முகவரைத் தேடவேண்டும்" என்று சொல்லி தன் கடன் பணி செய்து முடித்தார்.

எனது விமானச் சீட்டை ஒழுங்கு செய்த பயண முகவரிடம் "தாய்லாந்துக்கு விசா தேவையா" என்று மூன்றாவது முறையும் கேட்டு வைத்தேன், தேவை இல்லை" என்று அவர் நாலாவது முறை சொல்லி மனதுக்குள் அலுத்திருப்பார். நான் சந்தேகப் பிராணியாக இப்படி நடந்து கொண்டதற்கு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில் ஏழு வருடங்களுக்கு முன்னர் நான் அவுஸ்திரேலிய பாஸ்போர்ட் உடன் தாய்லாந்துக்குப் பயணிக்க வேண்டி இருந்த போது தாய்லாந்து விசா எடுக்க வேண்டியது அன்று அவசியமாக இருந்தது.



சிட்னியில் இருந்து முதலில் சிங்கப்பூர் போகும் Singapore Airlines இன் காலை நேர விமானத்தில் ஏறியாற்று. வழக்கம் போல விமானத்தின் டிவி திரையில் காண்பிக்கப்போகும் திரைப்படங்கள் பட்டியலை நோண்டினேன். வழக்கம் போல யாரோ ஒரு ரசனையின் உச்சம் கொண்டவர் பரிந்துரைத்த "வில்லு" என்ற காவியமும் "அபியும் நானும்" என்ற த்ரிஷா நடித்த தொலைக்காட்சி நாடகமும் இருந்தது. கூடவே ஆடியோ பகுதியில் "வசூல்" என்ற படத்தின் பாடல்கள் இருந்தன. அந்தப் படம் எடுத்தவருக்கே தெரியுமோ தெரியாது இந்தப் படத்தின் பாடல்கள் வந்திருக்கும் என்று.

சிங்கையில் இறங்கி ஒரு மணி நேர இடைவெளியின் பின் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொங் போகும் விமானத்தில் ஏறி இருந்தாயிற்று. தாய்லாந்து நாட்டுக்கு உள்நுளைவோர் பதியும் சிட்டையை விமானப் பெண் தந்தாள். அதை வாங்கி நிரப்ப ஆரம்பித்தால் ஒரு பகுதியில் விசா இலக்கம் என்ன என்ற கேள்வி இருந்தது. அடிவயிற்றில் யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல இருந்தது.

தாய்லாந்தில் என்ன நடக்கப் போகுது => அடுத்த பதிவில்
0000000000000000000000000000000000000000000000

மலேசிய உலாத்தல் ஆரம்பித்த வேளை சரியில்லைப் போல. பயணத் தொடரின் முதல் பதிவு போட்டதில் இருந்து மாதங்கள் கடந்தும் சில பல காரணங்களால்/வேலைப்பழுவால் அதைத் தொடராமல் போய் விட்டது. இடையில் தாய்லாந்துக்கும் போய் உலாத்தி விட்டு வந்தாயிற்று. எனவே மலேசிய உலாத்தலை ஒரு பக்கம் நிறுத்தி வைத்து விட்டு தாய்லாந்து உலாத்தலை முழுமூச்சோடு எழுதி முடிக்கக் கங்கணம் கட்டி இறங்கியிருக்கிறேன்.

Thursday, September 24, 2009

சிங்கப்பூரில் நடந்த திடீர் பதிவர்சந்திப்புக்கள் ;-)

நான்கு மாச இடைவெளியில் சிங்கப்பூரில் இன்னொரு பதிவர் சந்திப்பில் இணைந்தது நானாக மட்டும் இருக்குமோ ;-) . தாய்லாந்துக்கு திடீர் உலாத்தலை மேற்கொண்டு மீண்டும் சிட்னி வரும் வழியில் சிங்கப்பூரையும் பார்த்து வராவிட்டால் பொச்சம் தீராது என்று இடையில் இரண்டு நாட்கள் அங்கே டேரா போட்டேன். இந்த முறை பாசக்காரப் புள்ள இராம் முகம் நினைவுக்கு வந்ததால் Hotel 81 இல் தங்காமல் செரங்கூன் வீதியில் முஸ்தபா கடை வளாகத்துக்கு முன்னே இருந்த Claremont hotel இல் தங்கினேன். ஒரு ஹோட்டலுக்கு உரிய எல்லா அடையாளங்களும் அற்று விதவைக்கோலத்தில் இருந்தது தங்கிய அறை. இணையத்தில் படம் எடுக்கும் போது மட்டும் வெள்ளை அடித்துப் படம் எடுத்தார்களோ என்னவோ :(

கடந்த பதிவர் சந்திப்பில் நாம் சந்திக்க முடியவில்லையே என்று சகோதரன் ஜோசப் பால்ராஜ் குற்றம் "சாட்டி"யதால் இம்முறை அவரையாவது சந்திப்போம், இன்னொரு பதிவர் சந்திப்புக்கு கூப்பாடு போட்டு சிங்கை நண்பர்களின் விசனத்துக்கு ஆளாகக் கூடாது என்று பார்த்தால், பயபுள்ள ஊரையே கூட்டி விட்டார். முஸ்தபாவுக்கு எதிரில் உள்ள அஞ்சப்பருக்கு முன்னே வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு காத்திருங்கள், வருகிறோம் என்று பால்ராஜ் சொல்லியிருந்தார். அன்றைய சிங்கை தமிழ் முரசு பத்திரிகையை வாசித்துக் கொண்டே அடிக்கடி வீதியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று எதிர்ப்பட்டார் நண்பர் பாஸ்கரன். அவரோடு அறிமுகம் பாராட்டி விட்டு பேசிக்கொண்டிருக்கும் போது பால்ராஜும் மோட்டார் சைக்கிளில் வந்தார். எல்லாரும் "குடைக்கடைக்கு" போயிட்டாங்க வாங்கன்னு அவர் அழைக்க பொடி நடை போட்டோம் நானும் பாஸ்கரனும்.

குடைக்கடைக்கு வந்தோம். அட பக்கத்தில் Hotel 81 (அவ்வ்வ்வ்). ஏற்கனவே பதிவர் குழு வந்து சேர்ந்திருந்தது. கடந்த முறை இடம்பெற்ற பதிவர் சந்திப்பை விட நீண்ட நேரம் சம்பாஷிக்கக் கூடிய விதத்தில் அமைந்ததோடு புதிதாக இது நாள் வரை சந்திக்காத உறவுகளையும் கண்டது பெருமகிழ்ச்சியாக இருந்தது. உலக அரசியலில் இருந்து இலக்கியம், சினிமா, வலையுலகம் வரை கலவையாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

உடல் நலம் குன்றி அன்றைய சந்திப்புக்கு வரமுடியாது உள்ளது என்று மெயிலிட்ட சகோதரர் கோவி.கண்ணன் மக்களைக் காணவேண்டும் என்ற ஆசையில் காய்ச்சலை காற்றில் எறிந்து விட்டு வந்தது நெகிழ வைத்தது.

தம்பி டொன் லீ, சகோதரன் ஜோதிபாரதி, பங்காளி நிஜம்ஸ் ஆயில்ஸ் வழி நட்பான சந்துரு, சுரேஷ் போன்ற ஏற்கனவே சந்தித்தவர்களோடு ஜெகதீசன், முகவை ராம், ஞானப்பித்தன் விஜய், விஜய் ஆனந்த், பித்தன் சுதாகர் என்று புதிய நண்பர்களையும் கண்டு பேசக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி மனதுக்கு நிறைவான மாலைப் பொழுதாக இருந்தது. தோசை, இட்லி படையலோடு இரவு உணவு களை கட்டி நிறைவேறியது பதிவர் சந்திப்பு.

அடுத்தது என்ன, "ஈரம்" போலாம் (படம் பேரப்பா) என்றார் ஒருவர், பால்ராஜ் "நினைத்தாலே இனிக்கும்" போகலாம் (நாமளும் யுத்து தான் ;-) என்றார். இறுதியில் வென்றது "உன்னைப் போல் ஒருவன்". பீச் ரோட் வரை நானும் முகவை ராமும் நடை ராஜாவில் பயணித்து கோல்டன் சினிமாவுக்கு போகவும், அங்கே எமக்காக முன் கூட்டியே சென்று டிக்கெட் எடுத்துக் காத்திருக்கிறார்கள் பால்ராஜும், ஞானப்பித்தன் விஜய்யும்.
படம் முடிந்து மற்றைய நண்பர்கள் விடை பெற டாக்சியில் வழித்துணையாக முகவை ராமும் வர வந்து சேர்ந்தேன் ஹோட்டலுக்கு. இரவு 12 மணியைத் தொட்டது. வெளியே இருக்கும் இணையச் சேவை நிலையத்தில் வலை அளந்து முடிக்க அதிகாலை 2.30 ஐ தொட்டது. முஸ்தபா பக்கம் இருக்கும் ஒரு தேனீர் கடையில் ஒரு சாயா குடித்து விட்டு அந்தத் தெம்போடு கட்டிலில் சாய்ந்தேன்.














00000000000000000000000000000000000000

அடுத்த நாள் கடும் மழை. இணையச் சேவை நிலையத்தில் வலை மேய்ந்து கொண்டிருந்தால் அடிப்பாதத்தில் குளிர்ந்தது. கீழே பார்த்தால் மழை வெள்ளம் வரவா போகவா என்று ஹலோ சொல்லிக் கொண்டிருந்தது. மதியம் ஒரு மணி வாக்கில் நண்பர் குழலில் வந்தார். அஞ்சப்பர் போய் மதிய உணவை வெட்டினோம். மீண்டும் ஹோட்டலுக்கு வந்து பேசிக் கொண்டிருக்கும் போது முகவை ராமும் வந்து சேர்ந்தார். மூவரும் ஒரு சந்துக் கடைக்குப் போய் நமது சம்பாஷணையைத் தொடர்ந்தோம், இங்கேயும், உலகம், இலக்கியம், ஈழம், சினிமா தாவித் தாவிப் போனது பேச்சாடல். கூடவே சகோதரன் விசாகன் (கதியால் வலைப்பதிவை எழுதுபவர்) வந்து சேர்ந்தார். இடையில் கடைப்பக்கம் வந்த கோவி.கண்ணன் எதேச்சையாக சந்தித்தது சுவாரஸ்யம். மதியம் 1.30 க்கு ஆரம்பித்த நமது பேச்சுக்கச்சேரி முடியும் போது இரவு 7.30.

இருக்கும் அந்த ஒரு நாள் இராத்திரி லிட்டில் இந்தியாவை ஒரு ரவுண்ட் அடித்தேன். வரப்போகும் தீபாவளிக்கு கட்டியம் கூற வண்ண விளக்குகள் அலங்காரம் அந்த ஊரையே கலர்புல்லாக்கியது. கூடவே தீபாவளிச் சந்தையும். கொஞ்சமாவது ஊர் நினைப்பைக் கொண்டு வரும் இந்தச் சிங்காரச் சிங்கையை விட்டுப் போகிறோமே என்ற கவலையோடு ஹோட்டலுக்கு மீண்டேன்.







Tuesday, August 25, 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - ஓர் பின்பாட்டு

நமது தாயகத்திலே வலைப்பதிவர் சந்திப்பு வரப்போகிறது என்று நண்பன் வந்தி சொன்னபோது எவ்வளவு சந்தோஷப்பட்டேன் கூடவே பொறாமையும் கலந்து. தாயகத்தை விட்டு விலகி 14 ஆண்டுகளைக் கழித்தும் இன்றும் ஏதாவது படிவத்தில் Nationality என்ற பகுதிக்கு வரும்போது Australian என்பதை தயங்கித் தயங்கி வாயில் எச்சிலை மிண்டியபடி எழுதும் பண்பு மாறவில்லை. நாடு நல்ல சுகம் கண்ட பிறகு அங்கே வாழ்ந்து மடிய வேண்டும் என்பதும் என் பேராசைகளில் ஒன்று. இதைப் பதிவுக்கான வார்த்தை ஜாலமாக எல்லாம் எழுதவில்லை.

நான்கு ஆண்டுகளைத் தொடும் என் வலைப்பதிவு அனுபவத்தில், தாயகத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, இன்னும் சொல்லப்போனால் ஓராண்டாகத் தான் நம் உறவுகள் நிறையப்பேர் எழுத வந்திருக்கின்றார்கள். வலைப்பதிவு அனுபவத்தினூடே ஒரு புதியதொரு நட்பு வட்டத்தினைப் பெற்ற எனக்கு தாயத்தில் இருந்து வரும் உறவுகள் மீது இன்னும் ஒரு படி மேலான பரிவும் ஏற்படுகின்றது. என் போன்ற புலம்பெயர்ந்தவர்களின் எண்ணவோட்டங்களை அப்படியே பிரதிபலிப்பது போல இருக்கும் அவர்களின் நனைவிடைதோய்தல் போன்ற பதிவுகள். வந்தியத்தேவன் பதிவராக வரும் முன்பே, என்னுடைய "என் இனிய மாம்பழமே" பதிவினை வாசித்து விட்டு அதில் நான் கறுத்தக் கொழும்பான் வகை மாம்பழத்தைப் பற்றிச் சொன்னபோது அந்தப் பழத்தினைப் புகைப்படம் எடுத்து என் பதிவுக்காக அனுப்பியது தான் எனக்கும் என் தாயகத்து வலைப்பதிவர்களுக்கும் இடையிலான நேசத்தின் ஆரம்பம் என்பேன். எனக்கு மட்டும் தாயகம் போகும் சுதந்திரம் வாய்த்தால் ஒரு நாள் அவகாசத்திலேயே இந்த வலைப்பதிவர் சந்திப்புக்கும் போய் வந்திருப்பேன்.

வலைப்பதிவர் சந்திப்புக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே வந்தியத்தேவனுடைய பதிவு மூலமாக விடுத்த அழைப்புப் பதிவுக்கு அநானியாக யூ எஸ் இலிருந்து ஒருவர் (ஐ.பியும் சேமிக்கப்பட்டிருக்கிறது) கிண்டலாக "புலியை பாத்து பூனை சூடு போட்டுகொண்டதை போல நடத்துகிறீர்கள். மாபெரும் தோல்வியடைய வாழ்த்துக்கள்" என்று கேவலமாகப் பின்னூட்டியிருந்தாராம். வந்தியிடம் சொன்னேன் தயவு செய்து அதை வெளியிடவேண்டாம் என்று. அந்தப் பின்னூட்டத்தைப் படிக்கும் தாயக் வலைப்பதிவர்கள் இதனால் மனம் நொந்து அல்லது ஏன் வம்பு என்று ஒதுங்கக் கூடும் என்றேன். இப்படியெல்லாம் தான் அவர்கள் இந்தப் பதிவர் சந்திப்பை நடத்துவதற்கு முன் சில சங்கடங்களையும் எதிர் நோக்க வேண்டியிருந்தது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.

வலைப்பதிவர் சந்திப்புக்கு முதல் நாள் வந்தி மூலமாக இணைய வழி நேரடி ஒளிபரப்புக்கான இணைப்புக் கிடைத்தது. சிட்னி நேரம் மதியம் 12 மணிக்கே அந்த இணைப்பை போட்டு விட்டு ஏறக்குறைய மறந்தே விட்டிருந்தேன். மற்றைய அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்த எனக்கு திடீரென்று ஆட்கள் பலர் பேசுவதுபோலக் கேட்டது. பக்கத்து வீட்டுக்காரன் டிவியை சத்தமாக வைத்துப் பார்க்கிறானோ என்று சினந்து கொண்டே எழும்பிய போது தான் ஞாபகத்துக்கு வந்தது, அடடா பதிவர் சந்திப்பின் ஒலி அல்லவா அது என்று.
கணினியின் முன் உட்கார்ந்தேன்.

வலைப்பதிவர்கள் ஒவ்வொருவராகத் தம்மை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஆரம்பித்தது. வெற்று போட்டோவில் பார்த்த ஆட்களின் கற்பனை உருவ அமைப்பு கண்ணுக்கு முன்னே கணினித் திரையில் தெரியத் தெரிய உள்ளுரச் சந்தோஷம் தொற்றிக் கொண்டது. ஆனால் அது நீடிக்குமுன்னே ஒரு கவலைக்குரிய நிகழ்வு வந்து கஷ்டப்படுத்தியது. வீடியோ ஒளிபரப்போடு இணைந்த அரட்டைப் பெட்டியில் பத்தோடு பதினொன்றாக நின்ற என்னைப் போல இன்னொருவர் "இந்தியன்" என்ற ஒருவர் வந்து "துரோகி பிரபாகரன் ஒழிந்தான்" "வன்னியில் ஹிட்லரின் ஆட்சி ஓய்ந்தது" என்ற ரீதியில் தொடர்ந்து அந்த அரட்டைப் பெட்டியை படு கேவலமான வார்த்தைப் பிரயோகங்களினூடாகப் புண்படுத்த ஆரம்பித்தார். சிறீலங்கா ராணுவத்தளத்தில் இருந்து புலிகளைக் கொச்சையாக எழுதும் பாணியில் அது தொடர்ந்தது.

கனடாவில் இருந்து அந்த அதிகாலை வேளை இந்த இணைய ஒளிபரப்பைப் பார்க்க வந்த சினேகிதி என்னைப் போலவே ஆவலோடு இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டே அரட்டைப் பெட்டியில் மேலதிக தகவல்களை புதிதாக வருபவர்களுக்கும் கொடுத்துக் கொண்டே மறுமுனையில் பதிவர் சந்திப்பில் இருந்த கெளபாய் மது, பகீ போன்றோரிடம் அங்கே நடக்கும் விடயங்களைக் கேட்டுக் கொண்டே இருந்த அவரிடமும் அந்த "இந்தியன்" என்பவர் விட்டு வைக்கவில்லை. எச்சில் கோப்பை எல்லாம் கழுவி தொழிலை முடிச்சாச்சா (அதுதான் இலங்கையைச் சேர்ந்தவர்களின் தொழிலாம்), என்னுடைய எச்சில் பாத்திரத்தையும் கழுவித் தரமுடியுமா" என்று சீண்டினார். மறுமுனையில் ஜீ சாட்டில் இருந்து கொண்டு சினேகிதியிடம் "தங்கச்சி! தயவு செய்து அந்த ஆளுக்கு ஒரு பதிலும் போட வேண்டாம், அவரின் தொல்லை அதிகமாகும்" என்று நான் சொல்லி வைத்தேன். அந்த "இந்தியன்" அடுத்ததாக வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள் மீது நாரசமான கொமெண்டை அடிக்க ஆரம்பித்தார். அப்போது தான் எதிர்பாராத இன்னொரு விஷயமும் நடந்தது. இந்த "இந்தியன்" என்பவரோடு கூட்டுச் சேர்ந்து கொண்டே படு கேவலமான அரட்டையை ஆரம்பித்தார் இன்னொருவர். அவர் யாரென்று தேடிப்பார்த்தால் அவர் ஒரு இலங்கையில் இருந்து எழுதும் பதிவர் (அவர் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை) என்ற கவலையான பதிலை அவர் வலைப்பதிவு முகவரி சொல்லி வைத்தது.

"தயவு செய்து உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், இப்படி ஆபாசமாகப் பேசுவதை நிறுத்துங்கள்" என்றேன் இருவருக்கும். "இது எங்கள் கருத்துச் சுதந்திரம்" என்றார் ஒருவர். "அப்படியென்றால் உங்கள் அக்கா,தங்கச்சியைப் பற்றி மற்றவன் பேசினாலும் விடுவீர்களா" என்று நான் கேட்டேன். இந்த அரட்டையில் தாயகத்தில் நடக்கும் வலைப்பதிவு நிகழ்வில் லயிக்க முடியாத ஒரு கட்டமும் வந்தது. அப்போது என் துணைக்கு வந்தார்கள் அதுவரை இணைப்பில் இருந்த டோண்டு ராகவனும், மாயவரத்தானும். அவர்கள் இருவரும் இந்த "இந்தியன்" என்ற நபரை இந்த நாரசமான அரட்டையை விடும்படி கேட்க, அவரோ "டோண்டு பக்தன்", "சோ.ராமசாமி பக்தன்" என்று டோண்டு மீது தன் சேஷ்டையை ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கு மேல் இந்த தொல்லை நீடித்தது. மெல்ல மெல்ல பத்து இருபதாக அரட்டைப் பெட்டிக்குள் ஆட்கள் நுழைந்தார்கள். சுவிஸ் போன்ற ஐரோப்பா போன்ற நாடுகளில் அப்போது காலை வேளை ஆகி விட்டிருந்ததால் அங்கிருந்து நிறையப் பேர் வந்தார்கள் போல. அந்தக் கணத்தில் இருந்தூ "இந்தியன்" என்பவர் அதற்குப் பின் தன் ஆட்டத்தை விட்டு மாயமானார்.

சிங்கையில் இருந்து ஜோதிபாரதி போன்றவர்களும், இந்தியாவில் இருந்து டோண்டு ராகவன், சகோதரி முத்துலெட்சுமி, தமிழ் நெஞ்சம் தாய்லாந்திலிருந்து மாயவரத்தான், கனடாவில் இருந்து சினேகிதி, கீத் போறவர்களும், சுவிஸ் நாட்டில் இருந்து சயந்தன், சாத்திரி போன்றவர்களும் அவுஸ்திரேலியாவில் இருந்து நான், வசந்தன் போன்றவர்களும் இந்த நேரடி ஒளிபரப்பில் இணைந்தவர்களில் சிலர். அரட்டை அறையிலும் லோஷனைக் காட்டுங்கள் என்று தேடித்திரிந்தார்கள் ;)

தொடர்ந்து வலைப்பதிவர் சந்திப்பின் ஒளியோட்டத்தில் முழுமையாக ஈடுபட முடிந்தது. வலைப்பதிவர் சந்திப்பு பற்றி ஏற்கனவே சக உறவுகள் பலர் தங்கள் விரிவான பதிவுகள் மூலம் கொடுத்திருந்தார்கள். ஒரு பார்வையாளனாக இருந்து எனக்குப் பட்ட விஷயங்களைச் சொல்கின்றேன்.

இணைய வழி நேரடி ஒளிபரப்பு என்னும் இந்த விஷயத்தை எந்த விதமான தொழில்நுட்பச் சிக்கலும் இன்றி, ஒரு சில நிமிட ஒலித்தெளிவின்மை தவிர சாதித்துக் காட்டிவிட்டார்கள் சகோதரங்கள்.

சத்தியமாக அந்த பத்து வயசு சின்னப்பையனைப் பார்த்து யாரோ ஒரு பெண் பதிவரின் சகோதரன், இந்தப் பெண்ணின் பாதுகாப்புக்காக வந்திருக்கிறார் என்று நினைத்தேன். என் நினைப்பு அவ்வாறு இருந்ததில் தவறில்லை ஏனென்றால் எங்கள் சமூக அமைப்பு அப்படி ;)
பிறகு தான் தெரிந்தது அவரும் ஒரு பதிவர் என்று.

ஆரம்பத்திலேயே அறிமுகங்களைக் கொடுத்து விட்டதால் பின்னர் தனியாகப் பேசும் போது ஒரு சிலரை இனங்காண முடியவில்லை. "ஆர் இப்ப கதைக்கிறது" என்று அரட்டை அரங்கத்தில் இருந்த ஆட்கள் கேட்கக் கேட்க சலிக்காமல் அலுக்காமல் அங்கிருந்து பகீ அரட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்தார். ஒரே ஆளை 10 பேர் விசாரித்தாலும் கூட தனித்தனியாக ;-)

யாழ் என்ற பெயரைக் கேட்டாலே தேள் கொட்டியவன் போல சிலர் நடக்கும் பாங்கை கண்டு பலமுறை எரிச்சல் பட்டிருக்கிறேன். யாழ் தேவி என்பது யாரோ ஒருவர் ஆரம்பித்து வைத்த திரட்டி. யாழ் தேவி என்பது ஒரு இனத்தின் வாழ்வாதாரங்களோடு கூடவே வந்த ஒரு குறியீட்டுப் பொருள் மட்டுமே. அந்தத் திரட்டிச் சொந்தக்காரர் "யாழ்தேவி" என்று வைத்தது போல "உத்தரதேவி" என்று இன்னொருவர் ஆரம்பித்து விட்டுப் போகட்டுமே. ஒரு ஆரோக்கியமான முதலாவது சந்திப்பிலேயே இந்த யாழ்தேவி விடயத்தை ஆளாளுக்கு போஸ்ட்மாட்டம் பண்ணிய கொடுமையை உண்மையில் என்னால் சகிக்க முடியவில்லை. யாழ்ப்பாணத்தான் ரயில் , மட்டக்களப்பான் கிணறு என்று அடிபட்டுச் சாகும் கூத்து அடுத்த நூற்றாண்டிலும் ஓயாது போல. ஒன்று மட்டும் தெரிந்தது, இலவச ஆலோசனை செய்வதற்கு 24 மணி நேரமும் ஒலிவாங்கியைப் பிடிக்க நம்மவர்கள் தயார்.

ஈழத்தமிழப் பதிவர்கள் தம் பதிவுகளில எழுதும் தமிழகப் பேச்சு வழக்கு பற்றியும் பேச்சு வந்தது. தக்கன வாழும் தகாதன அழியும். இது பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் கூடப்பொருந்தும். எல்லாப் பதிவர்களும் ஜெயகாந்தன் மாதிரியோ, எஸ்.பொன்னுத்துரை மாதிரியோ எழுத்தாளனாக பிறப்பதில்லை. வலைப்பதிவு என்பதே ஒருவன் தன்னுடைய மன ஓட்டங்களைப் பதியும் ஒரு இணையவழி ஊடகமே. யாரோ ஒரு ஆங்கிலேயன் கண்டுபிடித்த விஷயங்களுக்கெல்லாம் வரைவிலக்கணம் போட்டு இதுதான் எழுது, இப்பிடித்தான் எழுது என்ற இணையச் சட்டாம்பி வேலைகள் தொடரும் இந்த வேளை என்பங்குக்கும் சொல்லி வைக்கிறேன் இதை. யார் எதை எழுத வேண்டும் என்பதை எழுதுபவனும், எதை யார் படிக்க வேண்டும் என்ற பூரண சுதந்திரம் படிக்கும் வாசகனுக்கும் இருக்கு. சதா சர்வகாலமும் யாரைப் பிடிச்சுத் தின்னலாம் என்று எல்லாப் பதிவுகளையும் மோந்து பார்த்து தேடித்தேடி இவர் என்ன எழுதுகிறார் என்று தேடித்திரிந்து கிண்டல் அடித்துப் பொழுது போக்குவதல்ல நல்ல வாசகனுக்குரிய/வழிகாட்டிக்குரிய அடையாளம். நான் ஈழத்தமிழ் சொற்களை வைத்து முழுமையாக எழுதிய பதிவுகளிலும், ஈழத்தமிழ் படைப்பாளிகள் போன்றோர் குறித்து எழுதிய பதிவுகளும் இப்படி "ஆலோசனை சொல்லும்" எத்தனை பேர் வந்து எட்டிப் பார்த்திருக்கிறார்கள் என்று போய்ப் பாருங்கள். நடிகமணி வைரமுத்து குறித்த பதிவுக்கு வந்து கருத்து சொன்னவர்கள் இரண்டெ இரண்டு பேர்.அதற்காக நான் கூட்டம் சேர்ப்பதற்காக பதிவு என்று சொல்ல வரவில்லை. இலவச ஆலோசனை செய்பவர்கள் எத்தனை பேர் அப்படியான செயற்பாடுகளை ஊக்குவிக்கிறார்கள் என்று சொல்ல வந்தேன். முப்பது பேர் வந்து பின்னூட்டம் போடுவதால் மூவாயிரம் டொலரா கிடைக்கப் போகுது? ஆலோசனைகள் தேவையானவை அவை முறையாக வருமிடத்து.

விடுபட்ட ஒன்ரையும் இப்போது சேர்க்கிறேன். வலைப்பதிவு ஆக்கங்களை எழுதியவர் சம்மதமின்றி வெளியிடும் பத்திரிகைகள் "நன்றி ‍ இணையம் " என்று போடுவது கொலைக் கொடுமை. இப்படியான நாகரீகத் திருட்டை வலைப்பதிவர் சந்திப்பில் மு.மயூரன் பேசியபோது உண்மையில் வீட்டில் இருந்து கைதட்டினேன் ;‍)இனியாவது இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இறுதியாக தமிழ் தட்டச்சும் முறை. "நீங்கள் எந்த கீ போர்ட் பாவிக்கிறீங்கள்" என்று கேட்டார் ஒருவர் என்னிடம். நான் அன்றிலிருந்து இன்று வரை Logitech தான் என்றேன் அவரிடம். பிறகு கேட்டார் "தமிழ் எழுதுவதற்கு எதப்பா", "நான் அன்றிலிருந்து இன்று வரை ஈழம் யூனிகோட் தட்டச்சு தான்" என்றேன். என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்து வந்தால் போதும், நாளைக்கு அதுவே தமிழ் பேச்சைக் கண்டுணர்ந்து திரையில் அடிக்கும் முறையாக (voice recognition software) வந்தால் என்ன எது தட்டச்சுபவனுக்கு இலகுவான முறையோ அதுவே போதம். இந்தக் கீபோர்ட் முறையால் தமிழ் அடிச்சால் தான் தமிழ் நீடு நிலைத்து, ரோபோ காதலிக்கும் காலத்திலும் வாழும் என்று சொன்னால் நான் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பேன், அது என் அறியாமை என்றே வைத்துக் கொள்ளுங்களேன். அப்படியே இருந்துட்டு போறன்.

நிறைவாக, இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு, ஆரம்பமே அமர்க்களம். இன்னும் பல சந்திப்புக்கள் நடக்க வேண்டும். நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக, நீங்கள் இருக்கிறீர்கள் எங்களுக்காக.

வலைப்பதிவர் சந்திப்பு படங்கள் நன்றி : வந்தியத்தேவன், நிமல்

Sunday, July 12, 2009

சிங்கப்பூரில் எஞ்சிய நாட்கள்

சென்ற பதிவு ஒரே சாப்பாடு ம(ண)யமாக அமைந்து விட்டது அதுவும் நல்லதுக்கு தான் போல. ஏனென்றால் புதிதாக சிங்கப்பூர் போகின்றவர்கள் தவிர சிங்கையில் இருப்போரிலும் உணவகம் பக்கம் திரும்பிப் பார்க்காதவர்களுக்கும் உபயோகப்படும் போல இருக்கின்றது.

மலேசியப் பயணம் பற்றிச் சொல்ல வந்து சிங்கப்பூர் புராணம் பேசிக் கொண்டிருக்கிறாரே என்று நீங்கள் சலிக்காமல் இருக்க இந்தப் பதிவோடு ஒரு முற்றுப் புள்ளி வைக்க இருக்கின்றேன்.


ஒவ்வொரு முறை சிங்கப்பூர் பயணம் சென்றாலும் ஈழநாதனை மட்டும் சந்தித்து விட்டு வரும் வழக்கம் இருந்தது. காரணம் முன்னேயெல்லாம் சிங்கைப் பதிவர்கள் குறித்த அறிமுகமும் கிடையாது அதே போல கோவி கண்ணன் போன்ற ஒரு சிலரைத் தவிர பரவலாக அங்கே பதிவர்கள் தோன்றாமல் இருந்தது இன்னொரு காரணம். ஆனால் இப்போது பார்க்கும் போது சிங்கப்பூர் பதிவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் இருந்து பதிவோரை முந்திச் சென்று விடும் போல இருக்கின்றது. அதை ஓரளவு உறுதிப்படுத்துமாற் போல அமைந்தது எனது சிங்கை வலைப்பதிவர் சந்திப்பு.

போகும் இடத்தில் அங்கிருப்போருக்கு எதற்குச் சிரமம் என்று இப்படியான வலைப்பதிவர் சந்திப்பை தவிர்ப்போம் என்று எண்ணினாலும், முகம் காணாமல் வலை மூலம் நேசத்தை ஏற்படுத்திய உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற அற்ப ஆசை மட்டும் மனதின் சின்ன மூலையில் ஒட்டிக்கொண்டிருந்தது. சிங்கை வந்து இரண்டாம் நாள் நம்ம நிஜமா நல்லவரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரோ சத்தமில்லாமல் ஜோதிபாரதி, கோவி கண்ணன் போன்றோருக்கு சொல்லவும் அவர்கள் சக வலைப்பதிவர்களை மே 14 ஆம் திகதி ஒன்று கூட்டி நான் தங்கியிருந்த லிட்டில் இந்தியா பகுதியில் இருக்கும் காளி அம்மன் கோயிலடிக்கு அழைத்து வந்தார்கள்.

மே 14 ஆம் திகதி வியாழன் மாலை ஏழு மணி வாக்கில் காளி அம்மன் கோயிலடிக்குப் போகின்றேன். அன்று என் பிறந்த நாள் வேறு. அங்கே வழி மேல் விழி வைத்தவாறு நிஜமா நல்லவன், டொன் லீ, மற்றும் சின்னப்பாண்டி ஆயில்யன் சார்பில் அவரின் நண்பர்களுமாக காத்திருந்தார்கள். மெல்ல மெல்ல பதிவர்கள் வருகை ஆரம்பித்தது. கிஷோர், ஜோதிபாரதி, வடுவூர் குமார், கிரி, சிங்கை நாதன், அதிரை ஜமால், இராம் என்று நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள், கோவி கண்ணனை தவிர. கோவியார் வரும் வரை இளநீர் பருகுவோம் என்று கூட்டம் இளநீர் கடையை முற்றுகையிட்டது. இளநீர்க்காரருக்கு நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும் இப்படியொரு கூட்டத்தின் திடீர் வருகையை எண்ணி.

எங்கே இரவு உணவைக் கழிக்கலாம் என்று ஆளாளுக்கு யோசித்த போது சிங்கை நாதன் Moghul Mahal Restaurant என்ற வட இந்திய உணவகத்துக்குச் செல்லலாம் என்ற போது அவரின் பின்னால் அணிவகுத்தது கூட்டம். அந்த உணவகத்தில் இவ்வளவு பேரையும் ஒரே மேசையில் இருத்த முடியாத ஒரு நிர்ப்பந்தம் வந்தபோது கூட்டம் வெளிநடப்பு செய்ய முயற்சித்தது. ஆனால் உணவக உபசரிப்பாளரோ இவனுகளை விடக்கூடாது என்று எண்ணி மேல் தளத்தில் இருக்கும் உபசரிப்புப் பகுதிக்கு அனுப்பினார். ஒருவாறு இடம்பிடித்து எல்லோரும் ஒரே பகுதியில் அமரவும் கோவி கண்ணன் வரவும் சரியாக இருந்தது.

வடுவூர் குமார் கையோடு கொண்டு வந்த இனிப்பு பொதியைத் தருகின்றார். ஆயில்யன் நண்பர்கள் மற்றும் நிஜமா நல்லவன் ஆகியோர் புத்தக பொதிகளை அன்புப் பரிசாக அளித்தனர். நான் தேடிக்கொண்டிருந்த உமர்கயாம் பாடல்கள், டாக்டர் கே.எஸ்.சுப்ரமணியன் எழுதிய "ஜெயகாந்தன் ஒரு பார்வை", பா.விஜய்யின் "வானவில் பூங்கா", பா.விஜய்யின் "நந்தவனத்து நாட்கள்", என்.ராமகிருஷ்ணன் எழுதிய "மார்க்ஸ் எனும் மனிதர்", தபூ சங்கரின் "சோலையோரப் பூங்கா", பசுமைக்குமார் எழுதிய "சார்லி சாப்ளின் 100, ஜெ.பிஸ்மி எழுதிய "களவுத் தொழிற்சாலை" என்று அவர்கள் அளித்த பரிசுகளை அன்போடு ஏற்றுக் கொண்டேன்.

உணவுப் பட்டியல் ஒரு கலைக்களஞ்சியம் ரேஞ்சில் பெரும் சைசில் இருந்ததால் ஆளாளுக்கு புரட்டி மேய்ந்ததில் அரை மணி நேரத்திற்கு மேல் கழிந்தது. அதிரை ஜமால் இவ்வளவு கனமான பெரிய சிலபஸில் என்னால் பரீட்சைக்கு படிக்க முடியாதுன்னு அடம்பிடிக்க ஆரம்பித்தார். உணவக உபசரிப்பாளர் அடிக்கடி சந்தேக கண்ணோடு வந்து முற்றுகையிடவும் சிங்கை நாதன் இரவு உணவுத் தேர்வை கலந்து பேசி தீர்மானித்து நிலமையை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார்.
உணவை வாய்க்குள் தள்ளிக் கொண்டே பதிவுலகம் பற்றிய அலசலை பேச ஆரம்பித்தோம். ஆயில்யன் நண்பர்களுக்கு இந்த பதிவுலக சமாச்சாரங்கள் புரிந்ததா தெரியவில்லை ஆனாலும் அவர்களிடமிருந்து ஆயில்யன் குறித்த இராணுவ ரகசியங்களைப் பெற்றுக் கொண்டேன். வர்களுக்கு சிரமம் ஏதாவது கொடுத்து விட்டோமோ, அலுவலக நாள் வேறு என்று மனதின் ஒரு மூலையில் குத்திக் கொண்டிருந்தது. ஆனால் இந்தத் திடீர்ச் சந்திப்பில் ஏதோ 10 வருஷப் பழக்கம் போல மிகவும் இயல்பாக எல்லா நண்பர்களும் பழகியது நெகிழ்வடையைச் செய்தது. உண்மையில் என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாக இது அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
சகோதரன் "டொன்" லீ இந்தச் சந்திப்பைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கின்றார் இங்கே.

தாயகத்தில் இருந்து என்னோடு வலைப்பதிவினூடக அறிமுகமாகி பின்னர் தற்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் சகோதரன் விசாகனின் சந்திப்பும், அவர் பழகிய விதமும் நாம் இருவரும் ஒரே அலைவரிசையில், ஒத்த ரசனையில் இயங்குவதை மேலும் உறுதிப்படுத்தியது.

தங்கச்சி துர்காவை அவரின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் உணவகத்தில் சந்தித்தேன்.
என்னதான் கூகுள் சாட்டில் ஆளாளுக்கு காலை வாரினாலும் நேரில் அண்ணனுக்கு மரியாதையான தங்கச்சியாக இருந்தார் :)

0000000000000000000000000000000000000000000000000000

சிங்கை லிட்டில் இந்தியாவில் மூலைக்கு மூலை இருக்கும் சிறு பெட்டிக்கடைகளில் தீராநதி, புதிய பார்வையில் இருந்து விகடன் குமுதம் சமாச்சாரங்கள் கிடைக்கின்றன. ஒரு கடையில் கிழக்குப் பதிப்பகத்தின் படைப்புக்களும் தென்பட்டது அவர்களின் வியாபாரப் பரம்பலின் வெற்றியைக் காட்டி நின்றது. சிங்கையில் இருந்த காலம் வரை தமிழ் முரசு பத்திரிகையை தினமும் வாங்கினேன். அப்போது அகோரமாக நடைபெற்று வந்த வன்னி முற்றுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுடச் சுட செய்திகளை வெளியிட்டதோடு இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளையும் சிறப்பு மாலைப்பதிப்பில் இடம்பெற வைத்தது சிங்கை தமிழ் முரசு பத்திரிகை. அளவான பக்கங்கள் என்றாலும் கச்சிதமாக செய்திகளை நிறையவே கொடுத்து வருகின்றது தமிழ் முரசு.

000000000000000000000000000000000000000000000000000000000000

சிங்கப்பூர் வந்து விட்டு முஸ்தபா சென்டர் போகாவிட்டால் கொலைக்குற்றம் போல :0 அங்கும் ஒரு எட்டு நடந்தேன். முஸ்தபாவின் எல்லா தளங்களையும் வலம் வந்தேன். மதிய நேர சாப்பாட்டுக் களைப்பில் துணிக்குவியலுக்கு மத்தியில் ஊழியர்கள் சிலர் கன்னத்தில் கைவைத்து சுகமான கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். சில பகுதிகளில் இருப்போர் வாங்கினால் வாங்கு இல்லாட்டி நகரு என்று பொறுப்புணர்ச்சியோடு தமது வாடிக்கையாளர் சேவையை ஏனோ தானோவென்று நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். புத்தகப் பகுதிகளில் தன்னம்பிக்கை தரும் நூல்கள் தான் இறைந்து கிடந்தன. சிங்கப்பூரர்களுக்கு தன்னம்பிகைக்கு மாத்திரை கூட செய்து விற்பார்கள் போல. சீடிப்பக்கம் தாவி சத்யன் அந்திக்காடு இளையராஜா கூட்டணியில் வந்த "விநோத யாத்ரா" டிவிடியையும் தென்கச்சி சுவாமி நாதனின் "இன்று ஒரு தகவல்" டிவிடியையும் வாங்கினேன். ஆயிரம் தான் இருந்தாலும் ஒரே கூரையின் கீழ் விதவிதமான தெரிவுகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் முஸ்தபாவை விட்டால் கதி ஏது?

000000000000000000000000000000000000000000

ஓவ்வொரு முறை சிங்கப்பூர் வந்தும் Sentosa Island பார்க்க வேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போனதை இந்த முறை மாற்ற வேண்டுமென்று எண்ணி அங்கும் ஒரு நாள் போனேன். கேபிள் காரிலோ, பஸ்ஸிலோ,போகலாம் என்ற போது நான் ஒரு முறையாவது பயணிக்காத கேபிள் காரைத் தேர்ந்தெடுத்தேன்.

Sentosa Island இல் உள்ள நீரடி உலகத்தையும் (Underwater World) 3D magic இல் படம் காட்டும் திரையரங்கத்தையும் சுற்றிப் பார்த்ததோடு இது போதும் என்று திரும்பினேன்.Underwater World மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களைக் காட்சிப்படுத்தியிருப்பது நிறைவாகவும் பயனுடையதாகவும் இருந்தது. இதயக்கோளாறு உள்ளவர்கள், மனசு பலவீனமானவர்கள் தவிர்க்கவும் என்று ஏகப்பட்ட பில்ட் அப் களோடு ஆரம்பித்த 3D magic படம் பெரிசாக பூச்சாண்டி காட்டவில்லையானாலும் சிறப்பானதொரு விருந்து தான்.
சிங்கையின் புகையிரத நிலையங்களில் உள்ள டிக்கட் மெஷின்கள் நாணயங்களை மட்டுமே வாங்குவேன் என்று நாணயமாக இருந்தது கடுப்பேற்றியது. டொலர் நோட்டுக்களை போட்டாலும் துப்பித் தள்ளியது.

00000000000000000000000000000000000000000000000
சிலோன் ரோட் பிள்ளையார் கோயிலுக்கு இரண்டாவது தடவை போக முடிவெடுத்தேன். அதுவும் என் பிறந்த நாளன்று காலை வானம் சிணுங்கிக் கண்ணீர் மழை பொழிய ஒரு வாடகை டாக்சியில் கோயிலை நோக்கிப் பயணித்தேன். கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்து அர்ச்சனை செய்யும் போது எங்களூர் தெய்வீகச் சூழ்நிலையை மீள நினைக்க வைத்தது ஆலய அமைவு. எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஆலயத்தின் நாதஸ்வர மற்றும் தவில் வித்துவான்களாக இருப்பதைக் கண்டு அவர்களிடம் சென்று நானாகவே அறிமுகம் செய்து பேசி மகிழ்ந்தேன்.

என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்தோ என்னவோ எங்கோ இருந்து வந்த கோயிலின் தர்மகர்த்தா "நீங்க சிங்கப்பூருக்கு புதுசா, எங்கிருந்து வரீங்க" என்று ஆரம்பித்தார். என்னைப் பற்றிச் சொல்லவும் உடனே பக்கத்தில் இருந்தவரை அழைத்து ஏதோ சொல்லவும், அவர் கையோடு ஆலயத்தின் சிறப்பு மலரையும், சின்னதாக ஒரு வெள்ளி விநாயகர் சிலையையும் கொண்டு வந்தார். "இந்த ஆலயத்துக்கு முதன் முதலாக வருவோருக்கு நாங்கள் கொடுக்கும் பரிசு இது" என்று அன்பாகச் சொல்லிக் கொண்டே ஆலயத் தர்மகர்த்தா நடந்து கொண்ட விதம் தமிழ் படங்களின் வில்லன் ரேஞ்சில் ஆலயத்தர்மகர்த்தாக்களை கற்பனை செய்யும் பாங்கை மாற்றியது. எனக்கும் குளிர் விட்டுப் போய்" உள்ளே படம் எடுக்கலாமா" என்று அவரிடம் கேட்டேன். "தாராளமா எடுங்க" என்று சொல்லி விடைபெற்றார் அவர். வரும் வெள்ளிக்கிழமை ஈழத்து ஆறுமுக நாவலர் குறித்த சொற்பொழிவு இருப்பதாக அறிவிப்புப் பலகையில் இட்டிருந்தது. நிச்சயம் வரவேண்டுமென்று நினைத்தும் அந்தச் சொற்பொழிவுக்கு போக முடியவில்லை.


தங்குமிடம் திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக இம்முறை வாய்த்த சீனத்து டாக்சிக்காரர் நிறையவே பேசிக்கொண்டு வந்தார். அடிப்படை மருத்துவ உதவிகளுக்குக் கூட பெருமளவில் அரசினை எதிர்பார்க்க முடியாது சாகும் வரை வேலை செய்தே வாழ்க்கை நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலையைப் பற்றியும், அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன் வருவாய் மூலம் பிற்காலத்தில் தம் வாழ்நாளின் இறுதிக்காலத்தைக் கழிக்கலாமே என்ற நினைப்பில் முதலீடு செய்து சமீபத்திய அமெரிக்க பொருளாதாரச் சரிவில் தனது முதலீட்டில் 60000 டொலர் இழப்பையும் பற்றி சொல்லி நொந்து கொண்டார் அந்த முதிய டாக்சிக்காரர். இப்படியான வாழ்க்கை முறை வாய்த்ததால் தான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வோர் தொகை வருஷா வருஷம் அதிகரிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. ஆக மொத்தத்தில் வாழ்வின் கடைசிப்புள்ளி வரை ஓடிக்கொண்டே இருப்பவருக்கே லாயக்கான திரிசங்கு சொர்க்கமாக சிங்கப்பூர் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

மலேசியா நோக்கிய பயணம் அடுத்த சில தினங்களுக்குப் பின்னர் ஆரம்பித்தது.

Sunday, July 05, 2009

சிங்கப்பூரில் தங்கியதும் வயிற்றில் தங்கியதும்

மலாக்கா, பினாங்கு உலாத்தலை ஆரம்பித்த நேரம் சரியில்லைப் போல, இழுபட்டு ஒரு மாதத்தைக் கடந்து இரண்டாவது பதிவோடு ஆரம்பிக்கின்றேன். இந்த இடைவேளை இனி வராமல் பார்த்துக் கொள்வோம் :0

சிங்கப்பூரில் சில நாட்கள் தங்கியிருத்து சொந்த வேலைகள் சிலவற்றையும் முடிக்க வேண்டும் அத்தோடு எப்போது சிங்கப்பூர் வந்தாலும் பரமசிவன் அண்ட் கோ வை பிள்ளையார் சுத்தி உலகத்தையே சுத்தியது போல நானும் முஸ்தபா செண்டருக்கு மட்டும் போய் இதுதான் சிங்கப்பூர் என்று திருப்திப்பட்ட வரலாற்றை இம்முறை மாற்றி எழுதவாயினும் ஒரு சில இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற வேட்கையுடன் சிங்கப்பூருக்குக் காலடி வைத்தேன்.

சிங்கப்பூருக்கு வந்த மூன்று தடவைகளும் மூன்று வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கிய அனுபவங்கள் மீண்டும் அதே ஹோட்டல் வாசலை மிதிக்காமல் பண்ணியிருந்தது. கடந்த முறை Hotel Selegi தங்கிய அனுபவம் கொடுமையின் உச்சமாக இருந்தது. படுக்கையில் என் உடம்பை அசைக்க முடியாத அளவுக்கு நெருக்கமான ஒரு அறையில் என் முழு உடம்பையும் மட்டுமே கவர் பண்ணும் படுக்கையும், ஏசி இருக்கு ஆனா இல்லை என்று என்று ஒரு வஸ்துவும் இருந்தது. எனவே இந்த முறையாவது ஏதாவது உருப்படியான ஹோட்டல் வாய்க்க வேண்டும், அதுவும் லிட்டில் இந்தியா பக்கமாக இருந்தால் காலாறக் கடைத்தெருவையும் சுற்றலாம், சாப்பாட்டு கவலையும் தீர்ந்து விடும் என்று தேடிய போது நண்பர் ஒருவர் சொன்னார் Dickson Road இல் இருக்கும் Hotel 81 இப்போது தான் திறந்திருக்கிறார்கள், அது அருமையான தெரிவு என்றார். இணையமூலம் இந்த ஹோட்டலுக்கு புக் பண்ண நினைத்தால் அது படுத்தியது. சிங்கையில் இருக்கும் இந்த ஹோட்டல் வரவேற்பாளினிக்கு அழைத்து புக் பண்ணச் சொன்னால் "இல்லை இணையம் மூலம் தான் புக் பண்ணுங்கள்" என்று அடம்பிடித்தாள். இரண்டு மூன்று தடவை விக்கிரமாதித்ததனமாக முயன்றும் பயனில்லாமல் போக, அவளோ "சரி ஒரு மின்னஞ்சல் போட்டு விடுங்கள், புக் பண்ணி விடுகின்றோம்" என்றாள். ஒருவாறு ஹோட்டல் சமாச்சாரமும் ஒழுங்கு செய்தாயிற்று. சிட்னியோடு ஒப்பிடும் போது சிங்கப்பூரில் நியாயமான கட்டணத்தில் அதே நேரம் தரமான ஹோட்டல் தேடுவது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது.

சிங்கப்பூருக்கும் வந்திறங்கியாற்று. சும்மா சொல்லக்கூடாது. இந்த ஹோட்டல் உண்மையிலேயே நல்ல தெரிவாகத் தான் இருந்தது. புத்தம் புது அறைகளும், பெயிண்ட் வாசனை மாறாத சுவர்களுமாக. ஆனா நம்ம இராம் தம்பி இந்த ஹோட்டல் குறித்து ஒரு அபிப்பிராயத்தை பதிவர் சந்திப்பில் சொன்னார். சொந்த பாதுகாப்புக் கருதி அதைத் தணிக்கை செய்கிறேன் ;0

லிட்டில் இந்தியா பக்கமாகவே ஹோட்டல் அமைந்திருந்ததால் பயணக் களைப்பை மறந்து மாலையில் காலாற நடக்கின்றேன். எத்தனை வருஷங்கள் கடந்தாலும் செராங்கூன் சாலையின் சூழ்நிலை மாறாது போல. ஆனந்த பவன் போய் ஒரு தேனீர் குடித்தால் தெம்பாகி விடும் என்று போய் ஓடர் கொடுத்தல் சீனி வேறு, வெறும் தேனீர் வேறு என்று வருகிறது கலக்கிறது நாங்களாம். அடுத்த நாளில் இருந்து கோமள விலாசுக்கு ஜாகா வாங்கிக் கொண்டேன். காலைச் சாப்பாட்டும், தேனீரும் கோமள விலாசில் தொடர்ந்தது. கோமள விலாஸ் இன்னொரு குட்டியை கோமளாஸ் என்ற பெயரில் திறந்திருந்தது, அவார்டு படம் ஓடும் தியேட்டர் கணக்காக அது தென்பட்டது.

தினமும் மதியத்துக்குத் தான் காரைக்குடி உணவகத்தில் இருந்து ஒவ்வொரு அசைவ உணவகத்தையும் டேஸ்ட் பார்த்தேன். பொலித்தீன் பைகளில் தேனீரை நிரப்பி Take Away ஆகக் கொடுக்கும் சமாச்சாரம் எல்லாம் எனக்குப் புது அனுபவங்கள். காரைக்குடி உணவகத்தில் வாழையிலை போட்டு மத்தியான சாப்பாடு சாப்பிடும் போது அந்த அனுபவமே தனி தான். சகுந்தலா ரெஸ்டாரண்ட் என்று ஒன்றை புதிதாகப் பிடித்தேன். சோதனை முயற்சியாக ஒரு நாள் மாலை கொத்துப் பரோட்டாவை சகுந்தலாவில் ஓடர் செய்தேன். சும்மா சொல்லக் கூடாது இந்த ரெஸ்டோரண்டில் நியாயமான விலையில் தரமான சுவையான உணவு கிடைக்கின்றது. சிங்கப்பூர் வரும்போதெல்லாம் ஒலி 96.8 இல் போகும் முத்தூஸ் தலைக்கறி விளம்பரத்தை இணையத்தில் கேட்டே வாயூறிப் போன எனக்கு இந்த முறையும் அங்கே போய் அனுபவிக்க கொடுப்பினை இல்லை. Selegi Road பக்கமாக இருந்த பீம விலாஸ் கடந்த முறை ஆட்டுக்கால் பாயாவோடு கொடுத்த விருந்தை இம்முறை அனுபவிக்கவில்லை. கடையையும், பாத்திரங்களையும் அப்படியே 20 வருஷப் பழமையோடு வச்சிருப்பது தான் ஏனென்று தெரியவில்லை. எட்டிப் பார்த்து விட்டு நகர்ந்து விட்டேன்.

Banana Leaf Restaurant சாப்பாடு கலக்கல் என்று ஒரு பட்சி சொல்லியிருந்தது. இடம் மாறி ஒரு நாள் போலியாக இருந்த இன்னொரு Banana Leaf Restaurant க்குப் போனேன். அது ஆந்திரக்காரன் ஹோட்டல் போல. சாதம் வைக்கவா என்று அடுத்த ரவுண்டில் கேட்கும் போது "இலையில் என்னிடம் நிறையவே இருக்கு உனக்குக் கொடுக்கவா" என்று கேட்கலாம் போல இருந்தது. என் சமையல் கூட எவ்வளவு உயர்வானது என்பதை உணர்ந்து கொண்ட தருணமது. Kaaraikudi Banana Leaf Restaurant என்ற உண்மையான ஆளை கடைசி நாளில் தான் சந்தித்தேன். அட இவ்வளவு நாளும் ஒரு அரிய உணவகத்தை மிஸ் பண்ணிட்டோமே என்று நினைக்க வைத்தது அது. பிரமாண்டமான உள்ளரங்கத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெரும் ஊர்களினை ஒவ்வொரு அறைக்கும் இட்டு உள்ளரங்கலாரத்திலும் தமிழகத் தொன்மை மிகு சிற்ப மற்றும் அணிவகைகளை இட்டது சிறப்போ சிறப்பு. அசைவ பட்சணியான எனக்கு Madras Woodlands ஹோட்டலும் சரவணபவனும் எட்டி நடக்கச் செய்தது. நண்பர் நிஜமா நல்லவன் முஸ்தபா பக்கமா ஏதோ ஹோட்டலுக்கு கூட்டிப் போக வேண்டும் என்று கொலைவெறியோடு அடிக்கடி சொல்லியிருந்தார், பெயர் மறந்திட்டேன். off line வந்து சொல்லுவார் என்று நினைக்கிறேன். அந்த பிரபல ஹோட்டல் அஞ்சப்பராம், அஞ்சப்பரை அடுத்த தபா வச்சுக்குவோம். ஹோட்டலுக்கு வட இந்தியச் சுவையோடு சிங்கை நாதனின் பரிந்துரைக்கமைய Moghul Mahal Restaurant இற்குபதிவர் சந்திப்பு நடந்த கதை தனியே சொல்ல வேண்டியது :)

சகுந்தலா உணவகம் படம் உதவி: www.streetdirectory.com
Kaaraikudi Banana Leaf Restaurant படம் உதவி : http://putri-berendam.blogspot.com/