Sunday, July 05, 2009

சிங்கப்பூரில் தங்கியதும் வயிற்றில் தங்கியதும்

மலாக்கா, பினாங்கு உலாத்தலை ஆரம்பித்த நேரம் சரியில்லைப் போல, இழுபட்டு ஒரு மாதத்தைக் கடந்து இரண்டாவது பதிவோடு ஆரம்பிக்கின்றேன். இந்த இடைவேளை இனி வராமல் பார்த்துக் கொள்வோம் :0

சிங்கப்பூரில் சில நாட்கள் தங்கியிருத்து சொந்த வேலைகள் சிலவற்றையும் முடிக்க வேண்டும் அத்தோடு எப்போது சிங்கப்பூர் வந்தாலும் பரமசிவன் அண்ட் கோ வை பிள்ளையார் சுத்தி உலகத்தையே சுத்தியது போல நானும் முஸ்தபா செண்டருக்கு மட்டும் போய் இதுதான் சிங்கப்பூர் என்று திருப்திப்பட்ட வரலாற்றை இம்முறை மாற்றி எழுதவாயினும் ஒரு சில இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற வேட்கையுடன் சிங்கப்பூருக்குக் காலடி வைத்தேன்.

சிங்கப்பூருக்கு வந்த மூன்று தடவைகளும் மூன்று வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கிய அனுபவங்கள் மீண்டும் அதே ஹோட்டல் வாசலை மிதிக்காமல் பண்ணியிருந்தது. கடந்த முறை Hotel Selegi தங்கிய அனுபவம் கொடுமையின் உச்சமாக இருந்தது. படுக்கையில் என் உடம்பை அசைக்க முடியாத அளவுக்கு நெருக்கமான ஒரு அறையில் என் முழு உடம்பையும் மட்டுமே கவர் பண்ணும் படுக்கையும், ஏசி இருக்கு ஆனா இல்லை என்று என்று ஒரு வஸ்துவும் இருந்தது. எனவே இந்த முறையாவது ஏதாவது உருப்படியான ஹோட்டல் வாய்க்க வேண்டும், அதுவும் லிட்டில் இந்தியா பக்கமாக இருந்தால் காலாறக் கடைத்தெருவையும் சுற்றலாம், சாப்பாட்டு கவலையும் தீர்ந்து விடும் என்று தேடிய போது நண்பர் ஒருவர் சொன்னார் Dickson Road இல் இருக்கும் Hotel 81 இப்போது தான் திறந்திருக்கிறார்கள், அது அருமையான தெரிவு என்றார். இணையமூலம் இந்த ஹோட்டலுக்கு புக் பண்ண நினைத்தால் அது படுத்தியது. சிங்கையில் இருக்கும் இந்த ஹோட்டல் வரவேற்பாளினிக்கு அழைத்து புக் பண்ணச் சொன்னால் "இல்லை இணையம் மூலம் தான் புக் பண்ணுங்கள்" என்று அடம்பிடித்தாள். இரண்டு மூன்று தடவை விக்கிரமாதித்ததனமாக முயன்றும் பயனில்லாமல் போக, அவளோ "சரி ஒரு மின்னஞ்சல் போட்டு விடுங்கள், புக் பண்ணி விடுகின்றோம்" என்றாள். ஒருவாறு ஹோட்டல் சமாச்சாரமும் ஒழுங்கு செய்தாயிற்று. சிட்னியோடு ஒப்பிடும் போது சிங்கப்பூரில் நியாயமான கட்டணத்தில் அதே நேரம் தரமான ஹோட்டல் தேடுவது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது.

சிங்கப்பூருக்கும் வந்திறங்கியாற்று. சும்மா சொல்லக்கூடாது. இந்த ஹோட்டல் உண்மையிலேயே நல்ல தெரிவாகத் தான் இருந்தது. புத்தம் புது அறைகளும், பெயிண்ட் வாசனை மாறாத சுவர்களுமாக. ஆனா நம்ம இராம் தம்பி இந்த ஹோட்டல் குறித்து ஒரு அபிப்பிராயத்தை பதிவர் சந்திப்பில் சொன்னார். சொந்த பாதுகாப்புக் கருதி அதைத் தணிக்கை செய்கிறேன் ;0

லிட்டில் இந்தியா பக்கமாகவே ஹோட்டல் அமைந்திருந்ததால் பயணக் களைப்பை மறந்து மாலையில் காலாற நடக்கின்றேன். எத்தனை வருஷங்கள் கடந்தாலும் செராங்கூன் சாலையின் சூழ்நிலை மாறாது போல. ஆனந்த பவன் போய் ஒரு தேனீர் குடித்தால் தெம்பாகி விடும் என்று போய் ஓடர் கொடுத்தல் சீனி வேறு, வெறும் தேனீர் வேறு என்று வருகிறது கலக்கிறது நாங்களாம். அடுத்த நாளில் இருந்து கோமள விலாசுக்கு ஜாகா வாங்கிக் கொண்டேன். காலைச் சாப்பாட்டும், தேனீரும் கோமள விலாசில் தொடர்ந்தது. கோமள விலாஸ் இன்னொரு குட்டியை கோமளாஸ் என்ற பெயரில் திறந்திருந்தது, அவார்டு படம் ஓடும் தியேட்டர் கணக்காக அது தென்பட்டது.

தினமும் மதியத்துக்குத் தான் காரைக்குடி உணவகத்தில் இருந்து ஒவ்வொரு அசைவ உணவகத்தையும் டேஸ்ட் பார்த்தேன். பொலித்தீன் பைகளில் தேனீரை நிரப்பி Take Away ஆகக் கொடுக்கும் சமாச்சாரம் எல்லாம் எனக்குப் புது அனுபவங்கள். காரைக்குடி உணவகத்தில் வாழையிலை போட்டு மத்தியான சாப்பாடு சாப்பிடும் போது அந்த அனுபவமே தனி தான். சகுந்தலா ரெஸ்டாரண்ட் என்று ஒன்றை புதிதாகப் பிடித்தேன். சோதனை முயற்சியாக ஒரு நாள் மாலை கொத்துப் பரோட்டாவை சகுந்தலாவில் ஓடர் செய்தேன். சும்மா சொல்லக் கூடாது இந்த ரெஸ்டோரண்டில் நியாயமான விலையில் தரமான சுவையான உணவு கிடைக்கின்றது. சிங்கப்பூர் வரும்போதெல்லாம் ஒலி 96.8 இல் போகும் முத்தூஸ் தலைக்கறி விளம்பரத்தை இணையத்தில் கேட்டே வாயூறிப் போன எனக்கு இந்த முறையும் அங்கே போய் அனுபவிக்க கொடுப்பினை இல்லை. Selegi Road பக்கமாக இருந்த பீம விலாஸ் கடந்த முறை ஆட்டுக்கால் பாயாவோடு கொடுத்த விருந்தை இம்முறை அனுபவிக்கவில்லை. கடையையும், பாத்திரங்களையும் அப்படியே 20 வருஷப் பழமையோடு வச்சிருப்பது தான் ஏனென்று தெரியவில்லை. எட்டிப் பார்த்து விட்டு நகர்ந்து விட்டேன்.

Banana Leaf Restaurant சாப்பாடு கலக்கல் என்று ஒரு பட்சி சொல்லியிருந்தது. இடம் மாறி ஒரு நாள் போலியாக இருந்த இன்னொரு Banana Leaf Restaurant க்குப் போனேன். அது ஆந்திரக்காரன் ஹோட்டல் போல. சாதம் வைக்கவா என்று அடுத்த ரவுண்டில் கேட்கும் போது "இலையில் என்னிடம் நிறையவே இருக்கு உனக்குக் கொடுக்கவா" என்று கேட்கலாம் போல இருந்தது. என் சமையல் கூட எவ்வளவு உயர்வானது என்பதை உணர்ந்து கொண்ட தருணமது. Kaaraikudi Banana Leaf Restaurant என்ற உண்மையான ஆளை கடைசி நாளில் தான் சந்தித்தேன். அட இவ்வளவு நாளும் ஒரு அரிய உணவகத்தை மிஸ் பண்ணிட்டோமே என்று நினைக்க வைத்தது அது. பிரமாண்டமான உள்ளரங்கத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெரும் ஊர்களினை ஒவ்வொரு அறைக்கும் இட்டு உள்ளரங்கலாரத்திலும் தமிழகத் தொன்மை மிகு சிற்ப மற்றும் அணிவகைகளை இட்டது சிறப்போ சிறப்பு. அசைவ பட்சணியான எனக்கு Madras Woodlands ஹோட்டலும் சரவணபவனும் எட்டி நடக்கச் செய்தது. நண்பர் நிஜமா நல்லவன் முஸ்தபா பக்கமா ஏதோ ஹோட்டலுக்கு கூட்டிப் போக வேண்டும் என்று கொலைவெறியோடு அடிக்கடி சொல்லியிருந்தார், பெயர் மறந்திட்டேன். off line வந்து சொல்லுவார் என்று நினைக்கிறேன். அந்த பிரபல ஹோட்டல் அஞ்சப்பராம், அஞ்சப்பரை அடுத்த தபா வச்சுக்குவோம். ஹோட்டலுக்கு வட இந்தியச் சுவையோடு சிங்கை நாதனின் பரிந்துரைக்கமைய Moghul Mahal Restaurant இற்குபதிவர் சந்திப்பு நடந்த கதை தனியே சொல்ல வேண்டியது :)

சகுந்தலா உணவகம் படம் உதவி: www.streetdirectory.com
Kaaraikudi Banana Leaf Restaurant படம் உதவி : http://putri-berendam.blogspot.com/

Comments on "சிங்கப்பூரில் தங்கியதும் வயிற்றில் தங்கியதும்"

 

said ... (Sunday, July 05, 2009 10:19:00 PM) : 

பாஸ் தின்னத மட்டுமே சொல்லியிருக்கீங்க வெரிகுட்! வெரிகுட்! நிறைய கடைகள் பேரு குறிச்சு வைச்சுக்கிட்டேன் ! ஒளிந்துக்கொண்டிருக்கும் நல்லவங்களை புடிச்சு ஒரு நாளைக்கு கொண்டு போய் உக்கார வைச்சு பாக்க பாக்க நான் திங்கணும் அதான் ஆசை ! :))

 

said ... (Sunday, July 05, 2009 10:19:00 PM) : 

//ஆனா நம்ம இராம் தம்பி இந்த ஹோட்டல் குறித்து ஒரு அபிப்பிராயத்தை பதிவர் சந்திப்பில் சொன்னார். சொந்த பாதுகாப்புக் கருதி அதைத் தணிக்கை செய்கிறேன் ;0
//

நீங்கள் ஹோட்டல் பெயரை சொல்லிட்டதால், விசயம் எல்லாருக்கும் தெரிந்து விட்டிருக்கும். :-)))

செராங்கூன் தெருவில் ஒரு உணவகத்தை கூட விடவில்லை போல் இருக்கே...? :-)))

 

said ... (Sunday, July 05, 2009 11:00:00 PM) : 

:)

 

said ... (Sunday, July 05, 2009 11:17:00 PM) : 

முதல் ஹோட்டலா?
ஒரு முறை நண்பர் ஒருவருக்கு அறை புக் செய்ய போன போது வரவேற்பாலினி எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் பங்களா ஜோடியிடம் 1 மணி நேரத்துக்கா? என்றார். கேட்டவுடன் அப்படியே விட்டேன் ஜூட்.அன்று தான் எனக்கு 1 மணி நேரத்துக்கெல்லாம் ரூம் கிடைக்கும் என்ற ரகசியம் தெரிந்தது. :-))

 

said ... (Sunday, July 05, 2009 11:28:00 PM) : 

நீங்கள் ஒரு சாப்பாட்டு ராமன். :))

 

said ... (Sunday, July 05, 2009 11:29:00 PM) : 

ஹோட்டல் 81......
கலக்கீருக்கீங்க போங்க....
:)

 

said ... (Sunday, July 05, 2009 11:33:00 PM) : 

\\ சாதம் வைக்கவா என்று அடுத்த ரவுண்டில் கேட்கும் போது "இலையில் என்னிடம் நிறையவே இருக்கு உனக்குக் கொடுக்கவா" என்று கேட்கலாம் போல இருந்தது.//
:)))

 

said ... (Monday, July 06, 2009 12:04:00 AM) : 

பார்க் ராயல் நல்லா இருக்கு பிரபா. கொஞ்சம் விலை கூடுதல்தான். ஆனா எல்லாத்துக்கும் ரொம்பப் பக்கம்.

 

said ... (Monday, July 06, 2009 12:52:00 AM) : 

தல,
காரைக்குடி, Banana leaf, அஞ்சப்பர் பத்தியெல்லாம் சொல்லி நாக்கூற வச்சிட்டிங்க.

அஞ்சப்பர் போய் அயிரை மீன் குழம்பு சாப்பிட்டீங்களா?

 

said ... (Monday, July 06, 2009 1:14:00 PM) : 

ஆயில்ஸ்

‍ நல்லவரின் பர்சை காலி பண்ணிடுங்க, அஞ்சப்பர் இருக்க அஞ்சேல் :0‍

// ’டொன்’ லீ said...


செராங்கூன் தெருவில் ஒரு உணவகத்தை கூட விடவில்லை போல் இருக்கே...? :-)))//


விடுவோமா, வித‌வித‌மான‌ உண‌வில்லையா :)

நிஜஸ்

ஒளிஞ்சிருஞ்சு என்ன சிரிப்பு

 

said ... (Monday, July 06, 2009 1:29:00 PM) : 

லிட்டில் இந்தியா பேருக்கேற்றாப்போல் சின்ன இந்தியாதான். எனக்கு வூட்லாண்ட்ஸ்சும் அண்ணாச்சியின் சரவணபவனும் தான் கைகொடுத்தது. பினாங்கு சுற்றுலாவை ஆரம்பியுங்கள் லங்காவி சென்றிருப்பீர்கள் என நினைக்கின்றேன்,

 

said ... (Monday, July 06, 2009 1:54:00 PM) : 

சிங்கையில் தான் இருக்கின்றேன்
நீங்கள் சொல்லும் உணவகத்தின்
பெயரையே உங்களின் இடுகையின் வாயிலாக தான் அறிந்துக் கொண்டேன்.

;)))))))))))))))))))

தலைப்பு அருமை


திகழ்

 

said ... (Monday, July 06, 2009 4:57:00 PM) : 

வாங்க வடுவூர் குமார்

இவ்வளவு கெடுபிடியுள்ள சிங்கப்பூரில் இந்த சமாச்சாரமா ;)

வாங்கோ வாசுகி
கடல், நிலம், வானம் இதிலை தெரியிறது ஒண்டையும் விட்டு வைக்க மாட்டோம் :)

ஜெகதீசன்

81 ரொம்பவே பிரபலம் போல :)

 

said ... (Monday, July 06, 2009 5:09:00 PM) : 

//ஆனா நம்ம இராம் தம்பி இந்த ஹோட்டல் குறித்து ஒரு அபிப்பிராயத்தை பதிவர் சந்திப்பில் சொன்னார். சொந்த பாதுகாப்புக் கருதி அதைத் தணிக்கை செய்கிறேன் ;0
//

ஹாஹா... அது சொல்லி தெரியுற விசயமா என்னா??? :))

குமார்ண்ணே வேற தெள்ள தெளிவா விம் பார் விளக்கம் கொடுத்துட்டாரு... :))))

 

said ... (Monday, July 06, 2009 5:25:00 PM) : 

\\சொந்த பாதுகாப்புக் கருதி அதைத் தணிக்கை செய்கிறேன் ;0\\

ஆகா!!!

\என் சமையல் கூட எவ்வளவு உயர்வானது என்பதை உணர்ந்து கொண்ட தருணமது.\\

ம்ம்ம்..தல நோட் பண்ணியாச்சி ;)))

இனி தொடர்ந்து பதிவு போடுங்கள் ;))

 

said ... (Monday, July 06, 2009 5:26:00 PM) : 

தல

இந்த பதிவு என்ன ஆயில்யன் அண்ணாச்சிக்கு சமர்பணம் செய்றிங்களா!!!..ஒரே சாப்பாடு மேட்டராக கீது ;))

 

said ... (Monday, July 06, 2009 5:41:00 PM) : 

வயிற்றில தங்கிட்டாம்.. என்று ஊரில ஒரு சொல்வழக்கு இருக்கெல்லோ :) .. நானும் அப்பிடியிப்பிடி சிங்கபூரில ஏதோ எசகு பிசகாக்கும் என்று விடுப்பறியிற ஆர்வத்தோடு வந்தேன்.

..சாப்பாடுதானா......

 

said ... (Monday, July 06, 2009 8:10:00 PM) : 

சயந்தன் சொன்னதைத்தான் நானும் முதலில் நினைச்சேன். பிரபாவுக்கு எப்படி.... இப்படி......ன்னு:-))))

 

said ... (Monday, July 06, 2009 11:21:00 PM) : 

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ சாதம் வைக்கவா என்று அடுத்த ரவுண்டில் கேட்கும் போது "இலையில் என்னிடம் நிறையவே இருக்கு உனக்குக் கொடுக்கவா" என்று கேட்கலாம் போல இருந்தது.//
:)))//

பின்னே என்னங்க, அவன் முதலில் போட்டதையே சாப்பிட முடியல புதுசா வேறையா :)

துளசிம்மா

பார்க் ராயல் குறிச்சு வச்சிட்டேன், நன்னி :)

Blogger நெல்லைக் கிறுக்கன் said...

தல,
காரைக்குடி, Banana leaf, அஞ்சப்பர் பத்தியெல்லாம் சொல்லி நாக்கூற வச்சிட்டிங்க.

அஞ்சப்பர் போய் அயிரை மீன் குழம்பு சாப்பிட்டீங்களா?//

வாங்க தல

அஞ்சப்பர் அடுத்த வாட்டி தான் கொடுப்பினை போல

 

said ... (Monday, July 06, 2009 11:24:00 PM) : 

வந்தி

நீங்கள் சைவக்காரர் போல, 2 பதிவுகளைத் தொடர்ந்து பினாங்க் வரும்.

Blogger திகழ்மிளிர் said...

சிங்கையில் தான் இருக்கின்றேன்
நீங்கள் சொல்லும் உணவகத்தின்
பெயரையே உங்களின் இடுகையின் வாயிலாக தான் அறிந்துக் கொண்டேன்.//

வாங்க திகழ்மிளிர்

இன்னும் சில சிங்கை நண்பர்கள் கூட இதையே சொன்னாங்க, எல்லாரும் வீட்டுச் சாப்பாடு போல :)

இராம் தம்பி

பத்த வச்சிட்டியே பரட்டை :0


தல கோபி

சின்னப்பாண்டி ஆயில்சுக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறோம்


சயந்தன் said...

வயிற்றில தங்கிட்டாம்.. என்று ஊரில ஒரு சொல்வழக்கு இருக்கெல்லோ :) .//

சயந்தன் குசும்பு :)

துளசிம்மா

:))

 

said ... (Tuesday, July 07, 2009 11:30:00 AM) : 

/வாங்க திகழ்மிளிர்

இன்னும் சில சிங்கை நண்பர்கள் கூட இதையே சொன்னாங்க, எல்லாரும் வீட்டுச் சாப்பாடு போல :)
/

அதே

 

said ... (Thursday, July 09, 2009 9:11:00 PM) : 

பிரபா,கனநாளைக்குப் பிறகு உங்கட பக்கம் வாறன்.சுகம்தானே...!

நான் போன வருஷம் அப்பா அம்மாவோடபோய் ....ஞாபகப்படுத்திப்போட்டீங்கள்.அப்பா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தது சிரிப்புச் சிரிப்பா வருது.மூண்டு கிழமையில கடைசி 2-3 நாளாத்தான் ஒரு நகைக்கடையில "யாழ்ப்பணத்து ஆக்கள் வந்தா அங்கதான் சாப்பிடுவினம்"எண்டு காரைக்குடி உணவகத்தை சொல்லித் தந்திச்சினம்.சாப்பாடு பரவாயில்ல.
ஒரு சாப்பாடு வாங்கினால் 2-3 பேர் சாப்பிடலாம். ஆனா கறிகளுக்காக நிறைய பிளாஸ்டிக் பைகளைப் பாவிக்கினம்.அவ்வளவும் குப்பைக்குள்ள...?தேத்தண்ணியும் அதேபோல.எனக்கு என்னவோ பக்கட்டில் குடிக்க அருவருப்பா இருந்தது.ஒரு இடத்தில வெறும் ஐஸை மலை போல ஒரு கோப்பையில குவிச்சு அதுக்கு மேல
5-6 பழங்களால அழகுபடுத்தி தந்ததையும் மறக்க ஏலாது.அது ஐஸ்கிறீமாம்...!

 

said ... (Thursday, July 09, 2009 9:25:00 PM) : 

வாங்கோ ஹேமா

சொந்த ஊருக்குப் போக வாய்ப்பில்லாத எங்களுக்கெல்லாம் இதெல்லாம் ஏறக்குறைய சொர்க்கம் தான் இல்லையா

 

post a comment

Links to "சிங்கப்பூரில் தங்கியதும் வயிற்றில் தங்கியதும்"

Create a Link