Social Icons

Pages

Saturday, June 23, 2007

கேரளாவில் யூத சமூகம் - சில வரலாற்றுத் துளிகள்





கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேல் விடுபட்டுப் போன உலாத்தலைத் தொடர்கின்றேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.

கடந்த பதிவில் யூதர்களின் ஆலயம் குறித்த பகிர்வைத் தந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக யூதர்களின் இந்திய வருகை குறித்த சில அம்சங்களைப இப்பதிவில் பார்ப்போம்.

யூத ஆலயம் சூழவுள்ள பகுதி Jew Town என்றழைக்கப்படுகின்றது. இந்த பிரதேசம் கொச்சின் பிரதேசத்தின் வாசனைத்திரவிய வியாயாரத்தின் முக்கிய கேந்திரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இஞ்சி, கறுவா, உட்பட்ட வாசனைத் திரவியம் மணமணக்கும் கடைகளையும், யூத மொழியான ஹீப்ருவில் பொறிக்கப்பட்ட பெயர்களையும் காண்பது இங்கு சாதாரணம்.

கேரளாவில் யூதக்குடிகளின் பரம்பல் குறித்த Kerala & her Jews என்ற ஆங்கிலச் சிறுநூலை வாங்கிக்கொண்டேன். யூத ஆலயத்தின் முகப்பு அறையில் வெறும் சித்திரச்சுவராக கேரளாவில் யூதர் வருகை, மக்னா காட்டா உடன்படிக்கை கைச்சாத்திட்ட நிகழ்வு உட்பட்ட வரலாற்றுக் குறிப்புக்களை ஓவியங்களாகத்தீட்டியிருக்கின்றார்கள். அவற்றை வரிசைக்கிரமமாகப் பார்த்து வந்தால் பல வரலாற்று நிகழ்வுகளைக் கண்முன் கொண்டுவரமுடியும். 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Rabbi Nissim என்ற யூதக்கவிஞன் இப்படிச் சொல்கின்றார்,

"I Travelled from Spain
I had heard of the city of Shingly
I longed to see an Israel King
Him, I saw with my Own eyes"

Cranganore (கிரங்கனூர்), Muzhiris என்று கிரேக்கர்களாலும் Shingly என்று யூதர்களாலும் அழைக்கப்பட்ட ஒரு கடற்துறை, பண்டைய காலகட்டத்திலேயே மேற்குலகத்தாரால் அறியப்பட்ட இந்தியக் கடற்துறையும் கூட. இந்தக் கிரங்கனூர் நகர், திரிச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. யூதர்களின் இந்தியாவிற்கான குடியேற்றப் பரம்பல் கி.பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை அதிகம் செல்வாக்குச் செலுத்திய காலமாகும். Judeo-Malayalam என்பது காலப்போக்கில் மருவிவிட்ட ஹீப்ரூவும் (யூத மொழி) மலையாளக் கலப்புமான மொழியே இவர்களின் புழக்கத்தில் உள்ள மொழியாகும்.


கிரங்கனூரில் தம் குடியேற்றத்தை ஆரம்பித்த யூத இனம், உள்நாட்டு ஆட்சி மாற்றங்களின் போது துரத்தப்பட்டு கொச்சினில் இருந்த இந்து ராஜாவின் பாதுகாப்பில் அடைக்கலமானார்கள் என்கிறது வரலாறு. வாலில்லாக் குரங்கு (Ape), மற்றும் மயில் போன்ற தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஹீப்ரு மொழிவழக்கையும் வரலாற்றாசிரியர்கள் சுட்டுகின்றார்கள்.
பழந்தமிழ்ச் சொல்லான தகை (Takai) இதற்குப் பொருத்தமான சொல்லாக ஹீப்ரு மொழியில் உள்ள Tuki என்ற சொல் சுட்டப்படுகின்றது.
Moses de Paiva என்ற Dutch Jew, 70,000 இலிருந்து 80,000 வரையான யூதர்கள் 370 A.D இல் மலபார் கடற்கரையில் வந்திறங்கியதாகச் சொல்கின்றார். முதலாம் நூற்றாண்டில் (70 C.E) யூதர்களின் இரண்டாவது ஆலயம் ரோமானியர்களால் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பத்தாயிரம் வரையான யூதர்கள் இந்து ஆட்சியாளரின் கருணையினால் கேரளாவின் மற்றைய பாகங்களுக்கும் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.



Joseph Rabban என்ற யூத வியாபாரி 8 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மலபார் துறையில் காலடி வைத்தான். இவனுக்கு கொச்சின் யூதர்கள் மீதான நிர்வாக ஆளுமையை அப்போதிருந்த மலபாரின் சேர ஆட்சியாளர் இரண்டாம் பாக்ஷர ரவிவர்மன் (Bhaskara Ravivarman II )கொடுத்திருந்தார். இரண்டம் பாக்ஷர ரவிவர்மனை சேரமான் பெருமாள் என்றும் அழைப்பார்கள். இந்த நிர்வாக ஆளுமை கிரங்கனூர் என்ற பிரதேசத்தில் 72 இலவசக் குடியிருப்போடு, அஞ்சுவர்ணம் என்ற உடன்படிக்கையாக செப்புப் பட்டயம் பொறிக்கப்பட்ட சாசனத்தில் எழுதிக்கொடுக்கப்பட்டது. ஜோசப்பும் அவனைத் தொடந்த யூதத் தலைவர்களும் யூத சமூக நலனில் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டார்கள்.


போர்த்துக்கேயரின் காலத்தில் (AD 1500) அவர்களின் ஆட்சிமுறையினால் மிகுந்த அல்லற்பட்ட யூத சமூகம் AD 1662 இல் டச்சுக்காரர்களுக்கு உதவி போர்த்துக்கீசரை விரட்டியடிக்க உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்கள். AD 1662 இல் தோல்வியுற்ற டச்சுக்காரர்களின் முற்றுகை அடுத்த ஆண்டில் வெற்றியைத் தழுவியது. போர்த்துக்கேயர் விரட்டியடிக்கப்பட்டார்கள். கேரளாவில் டச்சுக்காரரின் ஆட்சிக்காலத்தை யூத சமூகத்தின் பொற்காலம் என்கின்றார்கள். 1687 இல் Amsterdam இல் இருந்து வந்த யூதப் பிரதிநிதி மூலம் "NOTSIAS DOS JUDEOS DE COCHIM" கொச்சின் யூத வரலாறு மீள் அச்சேறுகின்றது. போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட யூதர்களின் நூல்கள் மீள் அச்சேறுகின்றன. கொச்சினில் வாழும் யூத சமூகத்திற்கு டச்சு ஆட்சியாளர்களின் கருணைக் கண் சலுகைகளாகக் கிடைக்க உதவுகின்றது.

1795 இல் தொடந்த பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் கேரளாவின் குறிப்பாக கொச்சின் வாழ் யூத சமூகத்திற்கு சலுகைகளும், வசதிகளும் வாய்த்த நிறைவான காலமாக அமைந்துவிட்டது.


நல்லது நண்பர்களே, இந்தப் பதிவு கொஞ்சம் வரலாற்றுத் தகவல்களோடும் என் கமராவில் சுட்ட படங்களோடும் நிரம்பிவிட்டது.

உசாத்துணை: Kerala & her Jews மற்றும் சில வரலாற்றுத் தளங்கள்

வீண்டும் காணாம்......

18 comments:

குட்டிபிசாசு said...

அருமையான இடுகை!!

திரைபடத்தகவல் தான் தெரியும் என்று நினைத்தேன்! வரலாற்று தகவல்களையும் கொடுத்து அசத்திட்டிங்க!!

தொடர வாழ்த்துக்கள்!!

கானா பிரபா said...

உற்சாகப்படுத்தலுக்கு மிக்க நன்றிகள் நண்பரே

முபாரக் said...

//திரைபடத்தகவல் தான் தெரியும் என்று நினைத்தேன்! வரலாற்று தகவல்களையும் கொடுத்து அசத்திட்டிங்க!!//

எங்க தலயப் பத்தி என்ன நினைச்சீங்க???

தலைவா!,
இந்த ரேடியோவ ஆரம்பிச்சதும் போதும், உலாத்துறத விட்டுட்டீங்க :)

இன்னும் எழுதுங்க

G.Ragavan said...

நல்ல அருமையான தகவல்கள் பிரபா. கேரளத்தில் யூதர் வரலாறு என்பது வியப்பான ஒன்று. மிகப் பெரிய சமூகம் அங்கு இருக்கிறது. மலையாளிகளோடு கலந்து வாழ்கிறது. நல்ல தகவல்கள்.

// மேற்குலகத்தாரால் அன்றைய காலகட்டத்தில் அறியப்பட்ட ஒரே இந்தியக் கடற்துறையும் கூட. //

இது தவறு என்று நினைக்கிறேன். வின்செண்ட் ஸ்மித், ஸ்ரீநிவாச சாஸ்த்திரி போன்ற வரலாற்றாளர்கள் வேறு மாதிரி சொல்கிறார்கள். இன்றைய தமிழ்கத்துத் துறைமுகங்களும் அன்று பிரபலமாகவே இருந்திருக்கின்றன. குறிப்பாக கொற்கை. காவிரிப்பூம்பட்டிணம். இன்று இவையிரண்டுமே இல்லை.

Sud Gopal said...

பதிவுக்கும் தகவல்களுக்கும் நன்றிகள்.

தனது இருப்பினை வெளிப்படுத்தாத ஒரு வாசகனாய் இதுவரை இந்தப் பதிவுகளைப் படித்து வந்துள்ளேன்.இது தான் எனது முதல் பின்னூட்டம்.

கானா பிரபா said...

//முபாரக் said...

எங்க தலயப் பத்தி என்ன நினைச்சீங்க???//

பத்தவச்சிடீங்களே தல ;-)

//தலைவா!,
இந்த ரேடியோவ ஆரம்பிச்சதும் போதும், உலாத்துறத விட்டுட்டீங்க :)//

புதுசாப் பிறந்த பதிவுப்பயலுக்கு அதிகம் செல்லம் கொடுத்திட்டேன். இனிமேல் இப்படி நடக்காது ;-))

கானா பிரபா said...

// G.Ragavan said...
// மேற்குலகத்தாரால் அன்றைய காலகட்டத்தில் அறியப்பட்ட ஒரே இந்தியக் கடற்துறையும் கூட. //

இது தவறு என்று நினைக்கிறேன்.//

வணக்கம் ராகவன்

எனக்குக் கிடைத்த உசாத்துணைக்குறிப்புக்களினூடாக இதை எழுதினேன் என்றாலும், உங்களின் ஐயப்பாடே எனக்கும் அப்போது இருந்தது. எனவே குறித்த அந்த வரிகளில் மாற்றம் செய்திருக்கின்றேன். ஏனெனில் உறுதிப்படுத்தாத தகவல் குழப்பத்தை உண்டு பண்ணிவிடும் என்பதால்.
சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிகள்.

வெற்றி said...

கா.பி,
அறிந்திராத தகவல்கள். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

கானா பிரபா said...

வணக்கம் சுதர்சன் கோபால்

உங்களின் கருத்து மூலம் என் பயணக்களைப்பு நீங்குகின்றது, இன்னும் எழுத ஆவல் பிறக்கின்றது. மிக்க நன்றிகள்

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வெற்றி, கன நாளா ஆளைச் சிலமனில்லை, எங்க போனனியள்?

suratha yarlvanan said...

வணக்கம்
உங்களது இந்தப் பதிவு இந்த வார பூங்கா இதழுக்கான தமிழ்மண வாசிப்பில் என்னை கவர்ந்த பதிவுகளில் ஒன்றாக தெரிவுசெய்துள்ளேன்.
பாராட்டுக்களுடன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.
-suratha-

கானா பிரபா said...

வணக்கம் சுரதா

உங்களைப் போன்றவர்களின் உற்சாகப்படுத்தல் என்னை மேலும் எழுதத் தூண்டுகின்றது, மிக்க நன்றிகள்.

babu said...

kerala's social history is entirely different from other south indian states, now v know the reasons throu ur article, please bring out many socio historical anthropological documents like this
babu
bangalore

கானா பிரபா said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி பாபு, என்னால் முடிந்த அளவுக்கு இவை பற்றி மேலும் தருகின்றேன்.

Anonymous said...

/ மேற்குலகத்தாரால் அன்றைய காலகட்டத்தில் அறியப்பட்ட ஒரே இந்தியக் கடற்துறையும் கூட. //
http://news.bbc.co.uk/2/hi/south_asia/4970452.stm
எனக்கு இது புதிய செய்தியாக இருந்தது! சமீபத்தில்தான்
படித்து அறிந்த்தேன். பாண்டிய நாட்டில் துறைமுகங்கள்
இருந்ததாகப் படித்திருக்கிறேனே! அதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை!

கானா பிரபா said...

வணக்கம் நண்பரே

குறிப்பிட்ட இந்தத் தகவலை சில வரலாற்றுக்குறிப்புக்களின் உதவியுடன் தான் எழுதியிருந்தேன்.

இதற்கு முன் துறைமுகங்கள் பாண்டிய நாட்டில் இருந்தவை என்பது உண்மையே, அவை அந்தந்த கால கட்டத்து அரசர்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

இப்பதிவில் நான் சொல்லியிருப்பது மேற்குலக ஆட்சியர்கள் அமைத்த துறைமுகம் பற்றி.

Anonymous said...

முஜிரிஸ் பற்றிய விவரம் நான் கொடுத்த பிபிசி தொடுப்பில்
உள்ளது!

கானா பிரபா said...

தொடுப்பைத் தந்தமைக்கு நன்றி நண்பரே, அதை வாசித்து மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்கின்றேன்.