Social Icons

Pages

Friday, September 15, 2006

சாயங்காலச் சவாரி

மே 28, மதியம் 2.00 மணி (இந்திய நேரம்)
இந்தியாவிற்கு ஒவ்வொரு தடவை நான் பயணிக்கும் போதும் என் பெரும்பாலான நாட்கள் பெங்களூரில் தான் கழிந்திருக்கின்றது. Garden City என்ற நிலை மாறி Concrete Ciyஆக மாறிவிட்ட பெங்களூரின் நிலை கேரளாவிற்கும் ஏற்படாதிருக்கக் கடவது, வெளிநாட்டுக்கம்பனிகளையும் கேரளாவைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள் வெள்ளைக்காரன்களை விடமாட்டார்கள் என்று மனதார நினைத்துக்கொண்டேன். இருக்காதா பின்னே, இவ்வளவு அழகான பசுமைப்புரட்சி பூமி யூ எஸ் கரன்சி பட்டு நாசமாகப் போகவேண்டுமா? என் படகுப்பயண உலாத்தலில் கடந்துபோகும் நாளாந்தப் பயணிகள் போக்குவரத்துப் படகுகளில் இருக்கும் பயணிகள் வயது வேறுபாடின்றிக் கையெத்தி ஆரவாரிக்கின்றார்கள். ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கும், ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குமாக பயணிகளை உப்புமூட்டை காவிக்கொண்டு போகின்றன படகுகள். நன்றாக வயிறுமுட்டச் சாப்பிட்டு நடக்கமுடியாமல் நடப்பவன் போல மெல்ல மெல்ல ஊர்ந்தே போகின்றது என் படகு.

ஒரு கிறீஸ்தவத்தேவாலயம் கண்ணிற்படுகின்றது, நீர் முற்றம் கம்பளம் விரிக்க தேவாலயத்தின் அழகை நீங்களே படத்தில் பார்த்து இரசியுங்கள்.
எங்கள் படகுவீட்டு கரையை ஒட்டியதாகப் பயணப்படும்போது எட்டிப் பார்க்கின்றேன். கரைவழியில் நின்ற ஒரு சிறுவனும் சில சிறுமிகளும் எதையோ சொல்லிக்கொண்டு சமதூரத்தில் அக்கரையில் ஓடிவந்தார்கள். எனக்குப் புரியவில்லை, சிஜியைப் பார்த்தேன். பயணிகளைக் கண்டால் புதுப்பேனா கொடுக்கும் படி இப்படிக் கேட்பார்களாம் அந்தச் சிறுவர்கள். அவர்களைப் பொறுத்தவரை வெளிநாட்டவர்களிடம் பேனா கேட்டுப் பெறுவது புதையல் கிடைத்தமாதிரிப் போலும். என் கையில் இந்திய ரெனோல்ட் பேனாதான் இருந்தது.

எனது படகுவீட்டுப் படுக்கை அறை
நான் போன இந்தக் கடற்கழியெங்கும் நிறையமீன்கள் கிடைப்பதாகச் சிஜி சொன்னார். விஷப் பாம்பு, முதலை போன்ற வில்லன்களும் இல்லையாம். பயணப்பாதையில் எதிர்ப்படும் திருப்பங்களிலெ தன் மூங்கிற்கழியை இலாவகமாகச் சுழற்றி வலித்துப் படகைத் திசைதிருப்பினார் ஓட்டி. எதிர்ப்படும் நீர்வழிபாதைகளில் கரையோரமாய் வளர்ந்து தன் தலை (கிளை)பரப்பிப் படகின் மேலாகத் தொடுகின்றன மாமரங்களின் கிளைகள். மாம்பழ சீசனில் ஓசி மாம்பழம் கிடைக்க ஒரே வழி இந்த வழி தான் என்றார் சிஜி. அக்கரையில் தென்படும் வீடுகளில் ஆட்டுக்குட்டிகள் தென்பட்டன. எங்கே சிஜியைக் காணவில்லை என்று பார்த்தால் சாயங்காலப் பரிமாறல் செய்ய அடுக்களை போய்விட்டார். சில மணித்துளிகளில் வந்த சிஜி மேஜையில் ஏற்கனவே கொசுக்கள் சல்லாபித்துக் க கூடைக்குள் இருந்த கதலிப்பழங்களை ஒருபுறம் வைத்துவிட்டு சாப்பாட்டு மேஜையில் விரிப்பை அகற்றிப் புதிய விரிப்பைப் போட்டு அழகுபடுத்தினார்.

மழையில் தேங்கிய வெள்ள நீர் நிறத்தில் கடும் மசாலா சாயாப் பானமும், பயம்பிலி என்ற பண்டமும் சாயங்காலச் சிற்றுண்டியாகச் சிபியின் கைவண்ணத்தில் கிடைத்தது. பயம்பிலி என்றால் என்ன என்று முடியைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். வேறொன்றுமில்லை, நம்மூர் வாய்ப்பனின் மலையாளப் பதிப்புத்தான் அது. வாழைப்பழம் கலந்த அந்தப்பண்டம் நீட்டமான துண்டுகளாகசெய்யப்பட்டு மஞசள் வடிவில் பொரிக்கப்பட்டு இருந்தது,அவற்றை அழகான பரிமாறல் ஒழுங்கில் சாப்பாட்டுத் தட்டிலே வடிவமைத்திருந்தார். சுவையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.

வாய்ப்பனின் நினைப்பு வந்து தொடர்ந்து எழுதமுடியாமல் தொந்தரவு பண்ணுகின்றது, பொறுங்கள் பக்கத்தில் இருக்கும் இந்திய உணவகம் சென்று வாய்ப்பனைத் தேடிப் பார்த்துவிட்டுத் தொடருகின்றேன்.
நிங்கள் ஆகாரம் கழிச்சோ?

19 comments:

Unknown said...

அருமையான பொழுது போக்கு.

Unknown said...

அருமையான பொழுது போக்கு, தொடர்ந்து இப்படியான இனிய பதிவுகளைத் தர மறவாதீர்கள்.

சின்னக்குட்டி said...

//வெளிநாட்டுக்கம்பனிகளையும் கேரளாவைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள் வெள்ளைக்காரன்களை விடமாட்டார்கள் என்று மனதார நினைத்துக்கொண்டேன். இருக்காதா பின்னே, இவ்வளவு அழகான பசுமைப்புரட்சி பூமி யூ எஸ் கரன்சி பட்டு நாசமாகப் போகவேண்டுமா?//

வணக்கம் பிரபா பதிவுக்கு நன்றி.... உங்கள் ஆதங்கம் தான் எனக்கும்....

Deiva said...

Prabha,
Your style of writing is very good. Waiting for more blogs from you

-Deiva.

ஆவி அம்மணி said...

நல்ல படங்கள். நிறைய மரங்கள். எனக்கு பிடித்த சூழல்.

கானா பிரபா said...

//Ilackia said...
அருமையான பொழுது போக்கு, தொடர்ந்து இப்படியான இனிய பதிவுகளைத் தர மறவாதீர்கள். //


வணக்கம் இலக்கியா

தங்கள் அன்புப் பின்னூட்டலுக்கு என் நன்றிகள், நிச்சயமாக இன்னும் பல உலாத்தல்கள் தொடரும்.

கானா பிரபா said...

வணக்கம் சின்னக்குட்டியர்

தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.

கானா பிரபா said...

வணக்கம் தெய்வா

தங்கள் அன்பு மடலுக்கு என் நன்றிகள், உங்களைப் போன்றவர்களின் உற்சாகப்படுத்தல் தான் என்னை இன்னும் எழுத வைக்கின்றது.

கானா பிரபா said...

//அமானுஷ்ய ஆவி said...
நல்ல படங்கள். நிறைய மரங்கள். எனக்கு பிடித்த சூழல். //


நன்றிகள் ஆஆஆஆவி ( ஐயோ நடுங்குது)

துளசி கோபால் said...

பிரபா,

அது 'பழம் பொரி'

நேந்திரம் பழத்தை மைதா & அரிசி மாவில் முக்கி பஜ்ஜி போல பொரிச்சிருக்கும்.

நான் போன வாரம் இங்கே வீட்டில் செஞ்சேன்.

சிஜி எந்தொக்கையோ பரஞ்ஞு போயி இல்லே? போட்டே:-)

ரவி said...

பெங்களூர் படங்கள் எப்போ போடப்போறீங்க ?? :))

கானா பிரபா said...

வணக்கம் துளசிம்மா

தங்களின் தகவலுக்கு மிக்க நன்றிகள்.
சிஜியிடம் திரும்பவும் கேட்டு இந்தப் பண்டத்தின் பெயரை அப்போதே குறித்துவைத்துக் கொண்டேன். பழம் பொரி, பயம் பிலியாக அவரது பேச்சுவழக்கில் மாறிவிட்டதோ என்னவோ. நியூசிலாந்து பக்கம் தானே கொஞ்சம் பழம்பொரியை பார்சல் பண்ணி சிட்னிக்கு அனுப்பினாக் குறைஞ்சா போய்விடுவீங்க:-)

கேட்டோ?

கானா பிரபா said...

//செந்தழல் ரவி said...
பெங்களூர் படங்கள் எப்போ போடப்போறீங்க ?? :)) //


தலீவா

அது ஒங்க பொறுப்பு:-))

சும்மா அதிருதுல said...

நல்ல சவாரி

புகைபடங்கள் நன்றாக உள்ளது

முழுவதும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.

கானா பிரபா said...

வணக்கம் சின்னபுள்ள

வருகைக்கு நன்றிகள். வாசித்துவிட்டு உங்கள் கருத்தையும் தாருங்கள்

மலைநாடான் said...

உலாத்தல் சூப்பருங்கோ :))

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடரே

நூற்றில் ஒரு வார்த்தை சொல்லீட்டீங்க:-)

மலைநாடான் said...

அண்ணே!

நீலவர்ணம் எனக்கும் பிடிக்கும்தான். அதுக்காக...

கண்ணை உறுத்துகிறது. பின்னணி நிறத்தை தயவு செய்து மாத்துங்கோ

கானா பிரபா said...

கெளம்பீட்டாங்காங்கய்யா, கெளம்பீட்டாங்கய்யா:-))
இப்ப எப்பிடி, கொஞ்சம் மாத்தியாச்சு