Social Icons

Pages

Tuesday, October 27, 2009

பாங்கொக் நகரத்துக் கோயில்கள்

பாங்கொக்கில் தங்கியிருந்த முதல் நாள் சுற்றுலாவுக்காக நான் ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த சுற்றுலாகப் பணியகத்தின் வழிகாட்டி வந்து என்னை அழைத்துப் போனாள், எனக்காக ஹோட்டலின் எதிர்த்திசையில் கார் காத்து நின்று கொண்டிருந்தது. முதலில் நாங்கள் போன இடம் Wat Pho என்ற புகழ்பெற்ற பெளத்த ஆலயம். இருநூறு வருடங்களுக்கு முற்பட்ட பழமையான இந்த ஆலயத்தில் மிக நீண்ட சயன நிலையில் இருக்கும் தங்க நிறத்துப் புத்தரைப் பார்க்க என்றும் கூட்டம் இருக்கும்.

நாங்கள் போன நாள் பெளத்தர்களுக்கு ஒரு விஷேட நாளாக இருந்ததால் உள்ளூர் மக்களின் கூட்டமும் திரண்டிருந்தது. 45 மீட்டர் நீளமும் 15 மீட்டர் உயரமுமான அந்தப் புத்தரைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றது. ஆலயத்தின் உள்ளரங்கத்தில் ஒரு ஓரமாக வரிசை ஒன்று நீண்டு கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது. இந்த ஆலயத்துக்கான தனித்துவமான வழிபாட்டினை மேற்கொள்ள உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரஜைகள் என்ற பேதமில்லாமல் இருக்கின்றது அந்த வரிசை. தாய்லாந்து நாட்டுக்கே உரிய பாரம்பரிய மசாஜ் இந்த ஆலயத்தில் இருந்து தான் தோற்றம் பெற்றது என்று சொல்கின்றார்கள்.



ஆலயச் சூழலில் வலம் வரும் போது பள்ளிச் சிறுவர் கூட்டம் தம் கலாச்சாரச் சுற்றுலாவுக்காகத் திரள்வது தெரிகின்றது. கூடவே இன்னொரு பகுதியில் சிறுவர்களுக்கு பெளத்தமதப் பிரசாரத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றார் ஒரு துறவி. நான்கு மன்னர்களுக்கான நினைவிடங்களும் இங்கே அமைக்கப்பட்டு பெருமைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.

தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தின் தந்தையான Hermit doctor (Ruesee) இன் உருவச் சிலையும் அவருக்கு முன்னே மருந்து தயாரிக்கப் பய்ன்படும் அம்மிக்குழவியும்

புத்தர் சிலையில் மினுமினுவென்று இருந்த தங்க மேற்பூச்சைச் சுரண்டித் தன் நெற்றியில் வைத்தாள் என்னுடன் வந்த வழிகாட்டி. அதை நெற்றியில் இடுவதால் புத்தரின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாம். பலர் இப்படிச் சுரண்டியதால் புத்தர் நிறமிழந்து போய்க் கொண்டிருக்கிறார்.

Grand Palace Complex

1782 இல் முதலாம் இராமா என்ற அரசரின் ஆளுக்கைப் பிரதேசமாக மாற்றப்பட்ட இந்தப் பகுதி 218,400 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அரச வாசஸ்தலத்தோடு, Emerald Buddha என்ற பெளத்த வழிபாட்டிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்துக்குப் போகும் போது இன்னொரு கட்டுப்பாடும் விதிக்கப்படுகின்றது. அதாவது ஆண்கள், பெண்கள் என்று எல்லோருமே அவர்களுக்கு கொடுக்கப்படும் தனித்துவமான முழுநீளக்கை கொண்ட ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் என்பது விதிவிலக்கற்ற விதிமுறை.




Temple of the Emerald Budda (Wat Phra Kaew)

கி.பி 14 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் சிலையைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் இது என்று கொள்ளப்படுகின்றது. தாய்லாந்து நாட்டுக்கே உரிய சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த, தங்க நிறத்தில் தகதகக்கும் இவ் ஆலயத்தின் உட்சுவரில் இராமாயணக் கதையைச் சித்திரமாகத் தீட்டியிருக்கின்றார்கள். கம்போடியா நாட்டின் புகழ்பெற்ற அங்கோர் வாட் ஆலயத்தின் மாதிரி அமைப்பை இங்கே உருவாக்கி இருக்கின்றார்கள்.



Temple of the Dawn (Wat Arun)

கைமர் மன்னர்களின் தனித்துவமான கட்டிட அமைப்பினைக் கொண்ட மிக நீண்ட ( கிட்டத்தட்ட 105 மீட்டர்) கூம்பு வடிவக் கூரையைக் கொண்ட இவ்வாலயத்தில் இந்து சமயக் கடவுளர்களின் சிலைகள் இருப்பது குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம். அந்த வகையில் சிவன், இந்திரன், பிரம்மா, சக்தி போன்ற கடவுளர்களின் உருவச் சிலைகள் காணக்கிடைக்கின்றன. ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா, இந்த Wat Arun என்ற ஆலயப் பெயரில் Arun என்பது இந்தியக் கடவுளரான அருணனைக் குறிக்கின்றது என்கிறார்கள்.
ஆமாம், உதயத்துக்கான ஆலயம் என்று சிறப்பிக்கப்படும் இக்கோயில் அருணன் என்று இன்னொரு பெயரால் அழைக்கபடும் சூரியனின் கோயிலாகவே கொள்ளப்படுகின்றது.






உசாத்துணை: தாய்லாந்து வழிகாட்டி, சுற்றுலா வழித்தகவல் குறிப்புக்கள்

Sunday, October 18, 2009

பாங்கொக்கில் காலடி வைத்தேன்

தாய்லாந்துக்கு விசா தேவையா இல்லையா என்ற குழப்பத்துடன் நான் இருக்க பாங்கொக்கின் ஸ்வர்ணபுரி விமான நிலையத்தில் தன் கால்களைப் பதித்து சிங்கப்பூர் விமான சேவையின் இயந்திரப் பருந்து. விமான நிலையத்துக்குள் புகும் போது குடிவரவுப் பகுதிக்குள் நுழைய முன்பே எல்லோரையும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கமரா கொண்டு படம் பிடிப்பது புதுமையாக இருக்கின்றது. குடிவரவுச் சீட்டில் உங்கள் வருஷ வருமானம் எவ்வளவு என்றெல்லாம் ஏன் கேட்கிறார்கள், கொழும்பில் கருணா குழு காட்டிய கப்பம் கைவரிசை மாதிரியா? என்றெல்லாம் ஆயிரம் கேள்விக்கணைகள் மனதில் தோன்றி மறையவும் குடிவரவு அதிகாரிக்கு பக்கம் வரவும் சரியாக இருந்தது. துண்டுச் சீட்டைப் பார்த்து விட்டு எல்லாம் சரி என்று விட்டு அவருக்குப் பக்கமாக இருக்கும் இன்னொரு கமரா மூலம் படம் பிடிக்கிறார். அட, மீண்டும் படமா? ஸ்ஸ்சப்பா

மேலே படங்கள் பாங்கொக் ஸ்வர்ணபுரி விமான நிலையத்தினுள் இருக்கும் " நடுவே கிருஷ்ண பரமாத்மா நிற்க தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் மந்தாரமலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலைக் கடையும் காட்சி

விமான நிலையத்திற்குள் சுற்றுலா ஏற்பாடுகளைச் செய்து தருவதற்கான முகவர்கள் கடை விரித்திருக்கிறார்கள். எட்டிப்பார்த்தேன், City & Temple tour ஒரு நாள் சுற்றுலா கண்ணில் தென்பட அதில் பதிவு செய்து கொண்டேன். பின்னர் தான் தெரிந்தது இப்படியான முகவர்களிடம் பதிவு செய்வது எவ்வளவு முட்டாள் தனம் என்று, அதை அடுத்த பதிவில் சொல்கின்றேன். Airport Taxi ஐ வாடகைக்கு அமர்த்தும் பகுதிக்குச் சென்று பதிவு செய்து துண்டுச் சீட்டை வாங்குறேன். நான் போகும் ஹோட்டலுக்கு 500 தாய் பாட் இற்கு மேல் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார்கள். நானும் சரி என்று விட்டு டாக்சியில் அமர்கின்றேன்.

டாக்சிக்காரர் பேச்சுக் கொடுத்தவாறே நட்புப்பாராட்டி வந்தவர் ஒரு பத்து நிமிடம் கழிந்த பயணத்தின் பின் 800 தாய் பாட் கட்டணமாக கொடுக்க வேண்டும் என்று பிட் ஐப் போட்டார். "இல்லையில்லை நான் விமான நிலையத்தில் வைத்து ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டேன். 500 பாட் இற்கு மேல் கொடுக்க வேண்டாம் என்றார்கள்" என்று சொல்லவும்
அவனோ "இன்று சரியான மழை வெள்ளம், கட்டணம் அதிகம்" என்றான். எனக்குப் புரியவில்லை. பெரும் நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருக்கிறோம், மழை வெள்ளத்தின் சுவடே இல்லை என்னடா இவன் என்னை வச்சு காமடி பண்றானே என்று எரிச்சலோடு, "500 பாட் இற்கு மேல் அதிகம் இல்லை" என்று பேச்சை வெட்டினேன். ஒருவாறு 550 பாட் இல் வந்து நின்றது பேரம். அன்று ஆரம்பித்த பேரம் பேசிப் பயணிக்கும் அனுபவங்கள் தாய்லாந்தில் இருந்து விடைபெறும் நாள் வரை தொடர்ந்தது. யோசித்துப் பார்த்தால் இந்தப் பேரம் பேசி குறைக்கும் தொகை வெளிநாட்டு செலாவணியோடு ஒப்பிடும் போது ஒரு டாலரும் கூட இருக்காது. ஆனால் ஏனோ ஆசிய நாடுகளுக்குப் போனால் இந்தப் பேரம் பேசும் வியாதி தானாக ஒட்டிக் கொண்டு விடுகிறது.

நான் முந்திய பதிவில் சொன்னது போல ஒரு நல்ல ஹோட்டலை தங்குமிடமாகத் தெரிவு செய்திருந்தாலும் அதன் அமைவிடம் தான் பெரும் சிக்கலைக் கொண்டு வந்திருந்தது. அதாவது அந்த ஹோட்டல் ஒரு சாலைக்குக் குறுக்காகப் போகும் சின்னச் சந்து வழியாகத் தான் தன்னுடைய நுழைவிடத்தை வைத்திருந்தது. ஆனால் தன் விலாசத்தை மட்டும் குறித்த சாலையாகக் காட்டி இருந்தது. விமான நிலையத்தில் இருந்து பயணித்த டாக்சிக்காரர் குழம்பிப் போய் ஒருவாறு இடத்தைப் பிடித்து டாக்சியை நிறுத்தினார். ஆனால் தொடந்த நாட்களில் இந்த ஹோட்டலுக்கு நான் பயணித்த டாக்சி ஒவ்வொன்றுக்கும் வழிகாட்டிக் களைத்தே போனேன்.

Lamphu Tree House இதுதான் நான் தேர்தெடுத்த தங்குமிடம். நடுத்தர கட்டணத்தில் 1,850 பாட் (55 US dollar ) இலிருந்து கிடைக்கின்றது தங்கும் அறைகள். தாய்லாந்தின் பாரம்பரிய மரவேலைப்பாடுகள் கொண்ட கட்டிட அமைப்பில் தங்குமிடச் சூழலிலும் அறைகளிலும் தாய்லாந்தின் மரவேலைப்பாடுகள் சிற்பங்களாக ஜொலிக்கின்றன. இணையப் பாவனைக்கு அரை மணி நேரத்திற்கு 30 பாட் ஐ அறவிடுகின்றார்கள். நீச்சல் அரங்கம் ஒன்று உண்டு.

இன்னொரு சிறப்பு காலை உணவு buffet முறையில் பாணில் ஆரம்பித்து தாய்லாந்தின் தனித்துவ உணவு வகைகள் சைவ அசைவங்களாக நிறைந்திருக்கும். காலை உணவுக்கான தனிக்கட்டணம் ஏதுமில்லை. அறை வாடகைக்குள் அடங்குகின்றது. விருந்தாளிகளாக அமெரிக்கர்களும் ஒரு சில அவுஸ்திரேலியர்களும் தென்பட்டார்கள். இந்தத் தங்குமிடத்தின் முகாமையாளர் கனிவான சுபாவம் கொண்டவராக , தனது ஹோட்டலில் தங்கி இருப்பவர்கள் கேட்கும் உதவிகளுக்கு அள்ளி அள்ளி ஆலோசனைகளைக் கொடுக்கின்றார். அவர்கள் போக வேண்டிய இடங்களைப் பரிந்துரை செய்கின்றார். கூடவே அங்கிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணிப்பதற்கு அண்ணளவாக எவ்வளவு செலவாகும் என்பதை விரல் நுனியில் வைத்திருந்து சொல்கின்றார். இதனால் ஒரு வாடகைக் காரையோ, ருக் ருக் இனையோ பிடித்துப் பேரம் பேச இலகுவாக அமைந்து விடுகின்றது.

அடுத்த நாட்காலை 9 மணிக்கு ஏற்கனவே விமான நிலையத்தில் ஒழுங்கு செய்த சுற்றுலாப் பணியகத்தின் வழிகாட்டி வர வேண்டும். காலை 8.30 மணிக்கே தயாராக இருக்கிறேன். மணி 9.05 ஐயும் தாண்டி 9.10 க்குள் நுழைகிறது. சலித்துப் போய் தங்கிருந்த ஹோட்டலில் வரவேற்புப் பகுதியில் இருக்கும் பெண்ணிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவள் அந்தச் சுற்றுலாப் பணியகத்தைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டு என்னிடம் "வழிகாட்டி வழி மாறி எங்கோ போய்விட்டாராம், இப்போது வருகிறாராம்" என்றாள்.

வழிகாட்டிக்காக காத்திருக்கிறேன்.