Pages

Saturday, April 07, 2007

கொச்சினில் கண்ட யூத ஆலயம்

மே 29, 2006 மதியம் 3.00 மணி (இந்திய நேரம்)


கொச்சின் துறைமுகத்தை ரசித்துவிட்டு அடுத்து நான் பார்க்கச் சென்றது Jewish Town. கொச்சினில் இருக்கும் யூத மக்களின் குடியேற்றங்களின்எஞ்சிய சுவடுகளாய் இருக்கும் அந்த நகரப்பகுதியின் குறுகலான சந்துகளின் இரு மருங்கிலும் பண்டைய கலைப்பொருட்களைக் குவித்து வைத்து விற்கும் கடைகள் இருந்தன.


பண்டைய கலைப்பொருட்கள், வாசனைத்திரவியங்களை நிறைத்த கடைகளின் சங்கமம் அது. கடைகளைக் கடந்து போவோர் வருவோரைக் கூவிக் கூவி அழைத்துப் பொருட்களை வாங்குமாறு அன்புத் தொல்லை கொடுத்தார்கள் அவ்வியாபாரிகள். அவர்களையும் கடந்து போனால் வருவது Jewish Pardesi Synagogue என்ற யூதர்களின் வழிபாட்டிடம்.




கேரளாவில் யூதர்களின் குடியேற்றத்தையும் அவர்களின் வழிபாட்டு ஸ்தலத்தையும் முதன் முதலில் அறிந்த, கண்ட பிரமிப்பு விலகாமல் அவ்விடத்தின் உள்ளே நுளைந்தேன். இந்த புனித ஸ்தலம் காலை 10 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரையும், மாலை 3 மணி தொடக்கம் 5 மணி வரையுமே திறந்திருக்கும். சனிக்கிழமைகள் மற்றும் யூதர்களின் உத்தியோக பூர்வ விடுமுறை நாட்களிலும் இது பூட்டப்பட்டிருக்கும்.ஆலயத்தின் உள்ளே வீடியோ படம் எடுக்க அனுமதி கிடையாது. அரைக்காற்சட்டை போட்ட அல்லது அரைகுறையாக உடுத்திய பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. உள்ளே போகமுடியாது. வாசலில் நின்று கொண்டு புலம்பிக்கொண்டிருந்த அரைக்காற்சட்டை வெள்ளை இனப்பெண் அதற்குச் சாட்சியாக இருந்தாள்.




நுளைவு வாசலில் 1344 ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட சுவரில் யூத மொழியான ஹீப்ரு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் இருந்தன.இந்த ஆலயம் 1568 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதுவே பொதுநலவாய நாடுகளில் (Commonwealth countries)இருக்கும் Jewish Synagogue இல் மிகப் பழைமையானதாக விளங்குகின்றது. முன்னர் நான் தந்திருந்த மத்தன்சேரி பலேஸ் இற்கு அண்மையில் தான் இந்த இடமும் இருக்கிறது. நடை தூரத்தில் வந்து விடலாம். முன்னர் யூத மக்களின் பரம்பல் அதிகமாக இப்பிரதேசத்தில் இருந்ததற்கு இத் தலத்தில் தொன்மைச் சிறப்பு சான்று பகிருகின்றது. தொடந்த அரசியல் மாற்றங்களால் பல குடும்பங்கள் மீளவும் இஸ்ரேலுக்குச் சென்றுவிடமும் இப்போது 17 யூதர்கள் மட்டுமே இங்கே இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆலய வாசலில் ஒழுங்கு மற்றும் அனுமதி வேலைகளைக் கவனிக்கும் ஒரு யூதப் பெண்மணியைக் காணக்கூடியதாக இருந்தது. இந்த மத்தன்சேரி பிரதேசம் தவிர கேரளாவின் கொல்லம் பகுதியிலும் யூதக் குடியேற்றம் முன்னர் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

இந்த புனிதஸ்தலம் 1662 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டுப் பின்னர் 2 வருடங்களின் பின்னர் டச்சுக்காரர்கள் கொச்சினைக் கைப்பற்றியபோது மீள நிறுவப்பட்டது. கைச்சித்திர வேலைப்பாடுகளுடன் 18 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சலவைக்கல் (Marble) பதிப்புக்களும், பல வண்ண நிறக் கண்ணாடி விளக்குகளும் அலங்கரிக்கின்றன.


1760 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மணிக்கூட்டுச் சட்டமும் இன்னும் அசையாமல் நிற்கின்றது.

உள்ளே நுளைந்ததும் மேற் படிக்கட்டுக்களுக்கு அப்பால் சென்று பெண்கள் மட்டும் பிரார்த்தனை செய்யும் விசேட அனுமதியும் உண்டு. Orthodox முறையிலானது இத்தலம்.

தேவாலயப் பராமரிப்பாளரிடம் சென்று உரையாற்றியபோது நிறைய விஷயங்களைச் சொன்னார். 14 ஆம் நூற்றாண்டில் கொச்சினில் யூதர்கள் வருகையின் பின்னர் தொடர்ந்த அரசியல் மாற்றங்கள் இந்த ஸ்தலத்தின் முகப்புக் கட்டடமொன்றில் ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. இவை பற்றிய முழுமையான விபரங்கள், படங்கள், ஆவணங்களை இத்தொடருக்காகச் சேகரித்துக் கொண்டேன். அவற்றில் பொருத்தமான பகுதிகளை எடுத்து அடுத்த பதிவில் தருகின்றேன்.

வரட்டே....


(பதிவின் மேல் இரண்டு படங்களும் என் கமராவில் புகுந்தவை அல்ல, வலையில் சுட்டது)