Social Icons

Pages

Friday, June 30, 2006

தங்குமிடம் தந்த சுகம்

மே 27, மாலை 5.00 (இந்திய நேரம்)

கெளரி ரெசிடென்ஸ் (Gorwri Residence), இது தான் நான் ஆலப்புழாவில் இருக்கும் வேளை தங்குவதற்காகத் தேர்ந்தெடுத்த இடம். இணையம் மூலமாக இந்தத் தங்குமிடம் பற்றி அறிந்து, அதில் கொடுக்கப்பட்ட தொலைபேசி மூலமாக நான் அவுஸ்திரேலியாவில் இருந்து புறப்பட முன்னதாகவே முற்பதிவு செய்துவிட்டேன்.

ஒரு அறை தனிப்பாவனைக்கான நவீன வசதிகொண்ட கழிப்பறை குழியலறை ஆகியவற்றோடு சேர்த்து ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? வெறும் 500 இந்திய ரூபாய் மட்டுமே. இவ்வளவு மலிவாகக் கிடைக்கிறதே ஏதேனும் கோளாறு இருக்குமோ என்று தான் இந்தத் தங்குமிடம் போகும்வரை சந்தேகத்துடன் இருந்தேன். ஆனால் கிடைத்ததோ ஒரு இன்ப அதிர்ச்சி.

துடிப்பான நாலைந்து இளைஞர்களின் பராமரிப்பில், சுத்தமான, அப்பழுக்கற்ற நல்ல தங்குமிடமாக கெளரி ரெசிடென்ஸ் இருந்தது. எப்போது பார்த்தாலும் சிரித்தமுகத்தோடு உதவி தரும் அந்த இளைஞர்கள் 24 மணி நேரமும் அடுப்பெரித்து நளபாகம் செய்து தரவும் தயாராக இருக்கிறார்கள். சாப்பாடு தனிக்கட்டணம்.

ஒரு முன்மாதிரியான கேரளப் பண்பாட்டில் அமைந்த பெரிய வீடு அது. 24 இன்ரநெற் வசதியும் உண்டு. கட்டணம் வெறும் 40 ருபா. அந்தப்பெரிய வீட்டில் பகுதி பகுதியாக 2, 3 அறைகளாகப் பிரித்து தனி வாசலும், பிரத்தியோக நவீன வசதி செய்யப்பட்ட கழிப்பறையுடன் கூடிய குழியல் அறையும் உண்டு. அவுஸ்திரேலியாவிலிருந்து சில வெள்ளையர்களும் வந்து தங்கியிருந்தார்கள். மிகச்சுத்தமாகச் சுற்றாடல் இருக்கின்றது. நான் தங்கியது அந்த வீட்டின் பின்னே கட்டப்பட்ட தனிஅறையுடன் கூடிய வசதிகள். வீட்டின் முகப்பில் கிடுகால் அமைந்த பாதுகாப்புக் கொட்டிலின் முதிய காவலாளி இருக்கிறார். ஓய்வில் இருக்க வசதியாக முன்முகப்பில் தனிக்கொட்டகை அமைந்திருக்கிறது. பக்கத்து மாமரத்தில் ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கிறது. பகலில் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் அதில் விளையாடி மகிழ்கிறார்கள். பின் வளவில் பல தென்னை மரங்கள் இருக்கின்றன.

காலையில் இந்தத் தென்னை மரங்களில் ஏறிக் கள் இறக்கிக் கொண்டுபோகிறார் ஒரு வாலிபர். கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது, ஈரம் படிந்த அந்தத் தென்னைமரங்களில் சரசரவென ஏறி அவர் செய்யும் கள் இறக்கும் ஜாலத்தைப் பார்க்கவேண்டும் நீங்கள். ஒவ்வொரு மரமாக ஏறிச் சேர்த்த கள்ளைத் கொண்டுவந்த பீப்பாயில் நிறைத்தவாறே நகர்கிறார் அவர்.

இந்தத் தங்குமிடம் அமைந்த காணியே நம் கலாச்சார நூதனசாலையோ என எண்ணுமளவிற்கு, தற்போது பயன்பாட்டில் அருகிப் போகும், ஆட்டுக்கால், கப்பிக்கிணறு, துளசிமாடம், பழைய சாய்மனைக்கதிரை, நுணுக்கமான வேலைப்பாடமைந்த கதிரைகள், இருக்கைகள், அலுமாரிகள்,1900 ஆம் ஆண்டுகாலப் புகைப்படங்கள், இலாந்தர் விளக்கு என்று இந்த வீட்டில் அணிசெய்கின்றன. நல்ல சித்திரத் தொகுப்புக்களும், சிலைகளும் கூட இங்கிருக்கின்றன.


காற்சட்டை போட்ட இருபதின் விளிம்பில் இருக்கும் பையன், விருந்தினர் மனம்கோணாதபடி தன் உதவிகளைச் செய்கின்றார்.
இங்குள்ள முகாமையாளராக இருக்கும் முப்பத்து வயதுக்குள் இருக்கும் இளைஞன், நான் முன் சொன்ன உடன்படிக்கையோடு ஒத்து மலையாளத்தில் சில ஆங்கிலச் சொல்லத் தூவியவாறே சொன்னர். " துபாயில் இருக்கும் முதலாளியின் ஆசை, விருந்தினராக இங்கு வரும் யாரும் நிறைவான சந்தோஷத்துடனே போகவேண்டும், பணம் இரண்டாம் பட்சம் தான்"
உண்மை, அந்த முதலாளி காணும் கனவை நனவாக்குகிறார்கள் இந்த இளைஞர்கள்.

இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களில் யாராதல் ஆலப்புழா சென்றால் தங்குவதற்கு நான் 100% சிபார்சு செய்வேன் இந்த கெளரி ரெசிடென்ஸ் ஐ. எத்தனையோ ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருந்தும் கிடைக்காத திருப்தி இங்கு எனக்குக் கிடைத்தது.

கெளரி ரெசிடென்ஸ் இன் இணைய முகவரி இதோ.
http://www.gowriresidence.com/

இன்றுவரை எனக்கிருக்கும் கேள்வி இதுதான்.
"துபாய்வாசியாகிப் போய்விட்ட கெளரி ரெசிடென்ஸ் உரிமையாளரே! இந்த அழகான வீட்டையும், நல்ல இடத்தையும் விட்டுப் போக எப்படி மனசு வந்தது உங்களுக்கு?"


பின்ன பறயான்.......

8 comments:

சின்னக்குட்டி said...

எதையோ தொலைத்துட்டு தொலைத்தது என்னவென்று தெரியாமால் எங்கையோ தேடும் வாழ்க்கையில் வாழும் எங்களுக்கு உப்பிடியான தங்குமிட வசதிகளில் தங்குபோது பழைய நினைவுகளை கட்டாயம் கொண்டு வரும்...... அந்த துபாய்க்காரன் மாதிரி தான் அநேகமானவர்கள்...... இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞான தங்கமே......

கானா பிரபா said...

// சின்னக்குட்டி said...
எதையோ தொலைத்துட்டு தொலைத்தது என்னவென்று தெரியாமால் எங்கையோ தேடும் வாழ்க்கையில் வாழும் எங்களுக்கு உப்பிடியான தங்குமிட வசதிகளில் தங்குபோது பழைய நினைவுகளை கட்டாயம் கொண்டு வரும்//

உண்மைதான் சின்னக்குட்டியர்

Anonymous said...

நல்ல மழைக்காலத்திலை தான் உலாத்தியிருக்கிறியள்.

எப்படி மலையாளத் தென்னங்கள்ளு? ஊர்க் கள்ளைப்போல வருமோ?:-)

கானா பிரபா said...

வணக்கம் சிறீ அண்ணா,

தென்னங்கள்ளு நல்லாயிருக்கும் போல, ஆனால் அருந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை:-)

G.Ragavan said...

ஆகா...........கௌரி ரெசிடெண்ஸ்.....ஆலப்புழா போகும் ஆசையத் தூண்டி விட்டுருச்சே.......போகனுமே..போகனுமே.

கானா பிரபா said...

ராகவன்

உங்கள் ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேற என் வாழ்த்துக்கள்

Anonymous said...

பிரபா!
இந்த விடுதி எப்படி?இருந்தாலும்;இந்தப் பலா;ஆட்டுரல்; லாந்தர்-அதுவும் எக்கோணமிக் பல்ப்புடன் கலக்கலாக ,பழைய ஊர் ஞாபகம்; தோசை எனக்குப் பிடிக்கும்; அம்மாவுக்கு அரைச்சும் கொடுத்துள்ளேன்.
யோகன் பாரிஸ்

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

நான் பதிவில் குறிப்பிட்டதுபோல் அருமையான சுகாதாரமான விடுதி இது. குடும்பத்துடன் தங்கவும் ஏற்றது.

உங்களைப் போலவே தோசைக்கு என் அம்மா மா அரைக்கும் போது ஆட்டுக்கல்லை வெறித்துப் பார்த்தபடியே நான் குந்தியிருந்தது ஞாபகம் வருகுது.